You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை - 50 நாட்களில் விசாரணையை முடித்து மரண தண்டனை விதித்த நீதிமன்றம்
- எழுதியவர், பிராச்சி பிரதிபா ஷிரிஷ்
- பதவி, பிபிசி மராத்தி
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்
(இந்தச் செய்தியில் இடம்பெற்றுள்ள சில விவரங்கள் உங்களுக்கு சங்கடம் தரலாம்)
புனே மாவட்டத்தில் 3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட வழக்கில், 65 வயதான பீம்ராவ் பிரபாகர் காம்ப்ளே என்பவரைக் குற்றவாளி என அறிவித்து சிறப்பு நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்துள்ளது.
சிறப்பு நீதிபதி எஸ்.ஆர்.சாலுங்கே இந்தத் தீர்ப்பை வழங்கினார்.
இந்த வழக்கின் விசாரணை ஜூன் 25 அன்று நிறைவடைந்தது. அப்போது, குற்றம் சாட்டப்பட்டவர் குற்றவாளி என்று நீதிமன்றம் அறிவித்தது.
குற்றம் சாட்டப்பட்டவர் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை ஆகிய இரண்டு குற்றங்களையும் செய்துள்ளார் என்று புனே சிறப்பு நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.
அதனையடுத்து, மாநிலத்தில் மிக விரைவாக விசாரணை நடத்தப்பட்டு தீர்க்கப்பட்ட வழக்குகளில் ஒன்றாக இந்தத் தீர்ப்பு மாறியுள்ளது.
நீதிமன்றம் என்ன கூறியது?
தீர்ப்பை வாசித்த நீதிபதி சாலுங்கே கூறுகையில், "தண்டனை குறித்த இருதரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு, தண்டனையை குறைக்கும் சூழ்நிலைகளையும் நீதிமன்றம் பரிசீலித்தது. இந்த வழக்கில் மரண தண்டனை விதிக்கப்படலாம் என்று வழக்கறிஞர் அஜய் மிசார் வாதிட்டார். இதற்காக, பல்வேறு வழக்குகளிலிருந்து 12 நீதித்துறை சான்றுகளை அவர் வழங்கினார்" என்றார்.
மரண தண்டனைக்கு பதிலாக ஆயுள் தண்டனை விதித்த சங்கர் காடே வழக்கின் உச்ச நீதிமன்ற தீர்ப்பையும் இந்த நீதிமன்றம் மேற்கோள் காட்டியது.
"மரண தண்டனை விதிக்கும் போது பரிசீலிக்கப்பட வேண்டிய சில அளவுகோல்களை உச்ச நீதிமன்றம் வகுத்துள்ளது."
"குற்றம் மிகவும் கொடூரமானதாக இருப்பது, குற்றம் நீதித்துறையின் மனசாட்சியை உலுக்குவதாக இருப்பது, குற்றம் சாட்டப்பட்டவர் சமூகத்திற்கு நிரந்தர அச்சுறுத்தலாக இருப்பது, பாதிக்கப்பட்டவர் முற்றிலும் உதவியற்ற நிலையில் இருப்பது மற்றும் எந்த ஒரு தூண்டுதலும் இல்லாமல் குற்றம் புரிந்துள்ளது ஆகியவை இதில் அடங்கும். இந்த அளவுகோல்கள் அனைத்தும் இந்த வழக்கிற்குப் பொருந்தும்"என நீதிமன்றம் கூறியது.
"குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஆதரவாக, தண்டனையைக் குறைக்கக் கோருவதற்கு எந்த ஒரு வாதமும் இல்லை. அப்படி இருந்திருந்தால், மரண தண்டனையை குறைத்திருக்கலாம். இந்த வழக்கு 'அரிதினும் அரிதான' வழக்கு என்ற அடிப்படையில் பரிசீலிக்கப்பட வேண்டும்" என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.
மேலும், "வாதி தரப்பில் அரசுக்கு உதவிய வழக்கறிஞர் விபுல் துஷிங் இரண்டு தீர்ப்புகளை சுட்டிக்காட்டினார்" என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
முதல் தீர்ப்பு, வசந்த் துபாரே எதிர் மகாராஷ்டிர மாநில அரசு வழக்காகும், இதில் 47 வயது நபர் ஒருவர் நான்கு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்திருந்தார்.
இரண்டாவது சான்று, 'ஹிம்மத்ராவ் சூர்யவன்ஷி' வழக்கைக் குறிப்பிட்டு வழங்கப்பட்டது.
இந்த வழக்கில், ஒரு மைனர் சிறுவன் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டான். குற்றம் சாட்டப்பட்டவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இருப்பினும், உச்ச நீதிமன்றம் குற்றத்தை உறுதி செய்து, மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தது.
ஆனால், சூர்யவன்ஷி வழக்கின் தீர்ப்பு இங்கு பொருந்தாது என்று நீதிமன்றம் கூறியது, ஏனெனில் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் சிறுமியுடன் காணப்பட்டார், மேலும் அதற்கான திருப்திகரமான விளக்கத்தை அவரால் அளிக்க முடியவில்லை.
நீதிமன்றம் என்னென்ன காரணங்களை முன்வைத்தது?
முன்பு சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்டவர் மட்டுமே குற்றத்தைச் செய்துள்ளார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை என்று நீதிமன்றம் கூறியது.
போக்சோ சட்டத்தில் 'கொடூரமான குற்றம்' என்பதற்குத் தனி வரையறை இல்லை என்றாலும், ஏழு ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் தண்டனை விதிக்கக்கூடிய குற்றங்கள் கொடூரமானவையாகக் கருதப்படுகின்றன என்று நீதிமன்றம் தெரிவித்தது.
மூன்று வயது மட்டுமே ஆன சிறுமிக்கு எதிராக இந்தக் குற்றம் இழைக்கப்பட்டுள்ளதால், குற்றத்தின் தீவிரம் மேலும் அதிகரிக்கிறது என்று நீதிமன்றம் கூறியது.
பிரேதப் பரிசோதனை அறிக்கை இந்த குற்றத்தின் கொடூரத்தை தெளிவாகக் காட்டுகிறது. மேலும், குற்றம் சாட்டப்பட்டவர் மரண தண்டனைக்கான தகுதிகளுக்கு உட்பட்டவர் என்பதையும் இது நிரூபிக்கிறது.
காம இச்சையைத் தீர்த்துக் கொள்வதே இந்தக் குற்றத்தின் பின்னணியில் உள்ள நோக்கம் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பிரேதப் பரிசோதனை அறிக்கையும், 'கடைசியாக காணப்பட்ட' ஆதாரமும், குற்றத்தின் தீவிரத்தை நிரூபிக்கப் போதுமானவையாக உள்ளன.
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மூன்று வயதே ஆகியிருந்ததாலும், அந்தச் சிறுமிக்கு உயிர் பிழைப்பதற்கான எந்த ஒரு வாய்ப்பையும் குற்றம் சாட்டப்பட்டவர் விட்டு வைக்காததாலும், இந்த அளவுகோலும் பூர்த்தியாகிறது.
நீதிமன்றம் மேலும் இரண்டு கேள்விகளை எழுப்பியது.
முதலாவதாக, ஆயுள் தண்டனை போதாது என்று கருதும் அளவுக்கு இந்த வழக்கில் விதிவிலக்கான சூழ்நிலைகள் ஏதேனும் உள்ளதா?
இதற்குப் பதிலளிக்கும் விதமாக, இந்தக் குற்றத்தில் பல அசாதாரணமான மற்றும் தீவிரமான சூழ்நிலைகள் உள்ளதாக நீதிமன்றம் தெரிவித்தது.
மேலும்,சிறுமியின் இறப்பிற்குப் பிறகும் குற்றம் சாட்டப்பட்டவர் அச்சிறுமியைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியுள்ளார் என்றும் நீதிமன்றம் கூறியது.
அதனைத் தொடர்ந்து, மரண தண்டனையைத் தவிர வேறு ஏதேனும் வழி இருக்கிறதா என்பது இரண்டாவது கேள்வியாக உள்ளது.
தண்டனையைக் குறைக்கக்கூடிய எந்த ஒரு சூழ்நிலையும் குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஆதரவாக முன்வைக்கப்படவில்லை என்று நீதிமன்றம் கூறியது.
நீதிமன்றத்தால் பல வாய்ப்புகள் வழங்கப்பட்ட போதிலும், குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பில் அத்தகைய ஆதாரங்கள் எதுவும் சமர்ப்பிக்கப்படவில்லை.
குற்றம் சாட்டப்பட்டவரின் குடும்ப உறுப்பினர்கள் கூட அவருக்கு ஆதரவாக எந்த ஒரு கருத்தையும் கூற முன்வரவில்லை.
சங்கர் காடே வழக்கில் வகுக்கப்பட்ட இறுதி அளவுகோல்களும் இந்த வழக்கிற்குப் பொருந்தும் என்று நீதிமன்றம் கூறியது.
இந்தக் குற்றம் மிகவும் கொடூரமான தன்மையைக் கொண்டது மற்றும் சமூகத்தில் ஆழமான கோபத்தையும் வெறுப்பையும் உருவாக்கியுள்ளது.
இந்தக் குற்றம் நீதிமன்றத்தின் மனசாட்சியையும் உலுக்கியுள்ளதுடன், குற்றம் சாட்டப்பட்டவர் சமூகத்திற்கு ஒரு ஆபத்தான நபர் என்பதையும் நிரூபிக்கிறது.
எவ்விதத் தூண்டுதலும் இன்றி இந்தக் குற்றம் இழைக்கப்பட்டதாக நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
தண்டனையைத் தீர்மானிக்கும் போது, குற்றம் சாட்டப்பட்டவரின் கடந்தகால வரலாறும் பரிசீலிக்கப்பட்டது.
ஒரு பழைய வழக்கில், அரசுத் தரப்பு விசாரணையில் இருந்த குறைபாடுகள் காரணமாகக் குற்றம் சாட்டப்பட்டவர் விடுவிக்கப்பட்டிருந்தார்.
இது தவிர, 1996 ஆம் ஆண்டில் குற்றம் சாட்டப்பட்டவர் ஒரு ஆட்டுடன் உடலுறவு கொள்ள முயன்றதாக முதியவர் ஒருவர் சாட்சியமளித்திருந்தார்.
குற்றம் சாட்டப்பட்டவர் தனது செயல்களுக்காக எந்த வருத்தத்தையும் வெளிப்படுத்தவில்லை என்பதையும் நீதிமன்றம் குறிப்பிட்டது.
'நீதிமன்றம் பொதுமக்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும், ஆனால்…'
"நிர்பயா வழக்கிற்குப் பிறகு, இதுபோன்ற குற்றங்கள் தொடர்பான வழக்குகள் விரைவாகத் தீர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் உண்மையில் அப்படி நடக்கவில்லை" என்று நீதிமன்றம் கூறியது.
இதற்குப் பிறகு கதுவா மற்றும் உன்னாவ் போன்ற சம்பவங்களும் நடந்ததாக நீதிமன்றம் தெரிவித்தது.
இந்தச் சம்பவங்களின் பின்னணியில், சட்டமன்றம் 2018 ஆம் ஆண்டில் குற்றவியல் சட்ட (திருத்த) சட்டத்தை இயற்றியது.
நீதிமன்றம் கூறுகையில், "நீதிமன்றம் பொதுமக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். ஆனால் பொதுமக்களின் உணர்வுகள் நீதிமன்றத்தின் முடிவெடுக்கும் செயல்பாட்டில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடாது" என்றது.
"எந்தவொரு நபருக்கும் சட்டப்படியான உரிய நடைமுறை மறுக்கப்படக் கூடாது."
விசாரணையில் ஏற்படும் தாமதம் அல்லது போதிய ஆதாரங்கள் இல்லாததே பொதுமக்களின் கோபத்திற்கு முக்கியக் காரணமாக மாறி வருகிறது என்று நீதிமன்றம் கூறியது.
இதுகுறித்து நீதிமன்றம் கூறுகையில், "பெரும்பாலான வழக்குகளில், நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பிறகு, தங்களின் பொறுப்பு முடிந்துவிட்டதாக விசாரணை முகமைகள் கருதுகின்றன" என்றது.
"குற்றப்பத்திரிகை மீதான விசாரணை தொடங்குவதற்குள், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஏற்கனவே இடமாற்றம் செய்யப்பட்டு விடுகிறார்கள்."
"இதற்கிடையில், சில சாட்சிகள் இறந்து விடுகிறார்கள், மற்றவர்கள் தங்களின் சொந்த நினைவாற்றலையே நம்பியிருக்க வேண்டியுள்ளது."
"ஆனால் காலப்போக்கில் நினைவாற்றலும் பலவீனமடைகிறது."
நீதிமன்றம் கூறுகையில், "மக்கள் சட்டத்தைத் தங்கள் கைகளில் எடுக்கத் தொடங்கினால், அது அராஜகத்தின் தொடக்கமாகும்" என்றது.
சட்ட அமலாக்க முகமைகள் தங்களின் விசாரணைப் பொறுப்புகளைத் திறம்பட நிறைவேற்றுவதில்லை என்ற எண்ணம் மக்களிடையே அதிகரித்து வருவதாக நீதிமன்றம் தெரிவித்தது.
இருப்பினும், இந்த வழக்கு ஒருவேளை இதற்கு விதிவிலக்காக இருக்கலாம் என்று நீதிமன்றம் கூறியது.
மேலும், "இந்த வழக்கில், விசாரணை முகமை குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்து, இந்த வழக்கை மிகுந்த தீவிரத்துடன் நடத்தியது" என்று நீதிமன்றம் தெரிவித்தது.
கோடைக்கால விடுமுறை காரணமாக, நீதிமன்றத்திற்கு இந்த விஷயத்தில் போதிய நேரம் கிடைத்தது.
இதனால், விசாரணைக்கு முந்தைய செயல்முறை சரியான நேரத்தில் நிறைவடைந்தது. விசாரணைக்குப் பிந்தைய செயல்முறையும் விரைவாக நிறைவடைந்தது.
விசாரணை தொடங்கிய ஒரே மாதத்திற்குள் தீர்ப்பு வழங்கப்பட்டதாக நீதிமன்றம் தெரிவித்தது.
அதுகுறித்து நீதிமன்றம் கூறுகையில், "இது ஒவ்வொரு வழக்கிலும் நடக்க வேண்டும், ஆனால் துரதிர்ஷ்டவசமாக அப்படி நடப்பதில்லை" என்றது.
குற்றம் சாட்டப்பட்டவரைக் குற்றவாளி என்று அறிவிக்கும் போது, அவரது நடத்தை மிகவும் தீவிரமான தன்மையைக் கொண்டது என்பது இந்த வழக்கிலிருந்து தெளிவாகிறது என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.
இந்த வழக்கில் 'கடைசியாக ஒன்றாகக் காணப்பட்ட ஆதாரம்' மற்றும் சூழ்நிலை ஆதாரம் ஆகிய இரண்டும் மிகவும் முக்கியமான அம்சங்களாகும் என்று நீதிமன்றம் தெரிவித்தது.
அரசுத் தரப்பு இந்த இரண்டு ஆதாரங்களையும் வெற்றிகரமாக நிரூபித்துள்ளது, இது குற்றம் சாட்டப்பட்டவரின் ஈடுபாட்டைத் தெளிவாக உறுதிப்படுத்துகிறது.
குற்றம் சாட்டப்பட்டவர் தனது கடந்தகால நடத்தை அல்லது குற்றப் பின்னணியில் இருந்து எந்தப் பாடமும் கற்றுக் கொள்ளவில்லை என்று நீதிமன்றம் கூறியது.
இந்தக் கொடூரமான குற்றத்தின் தன்மையைக் கருத்தில் கொண்டு, நீதிமன்றம் அனைத்து தணிக்கும் சூழ்நிலைகளையும் பரிசீலிக்க வேண்டும்.
மேலும், "குற்றம் சாட்டப்பட்டவர் இரண்டு பழைய வழக்குகளில் விடுவிக்கப்பட்டுள்ளார். ஆனால் அவர் அவற்றிலிருந்து எந்தப் பாடமும் கற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை" என நீதிமன்றம் தெரிவித்தது.
"அவர் இன்னும் சமூகத்திற்கு ஆபத்தானவராகவே இருக்கக்கூடும்."
"அவரிடம் எவ்வித வருத்தத்திற்கான அறிகுறியும் இல்லை, திருந்துவதற்கான சாத்தியக்கூறுகளும் இல்லை. அவர் திருந்தும் நிலையைத் தாண்டிவிட்டார்."
சிறப்பு அரசு வழக்கறிஞர்கள் தங்களின் வாதத்தை வலுப்படுத்துவதற்காக 12 முக்கியமான நீதித்துறை தீர்ப்புகளைச் சுட்டிக்காட்டினர்.
குற்றம் சாட்டப்பட்டவருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று அரசுத் தரப்பு கோரியிருந்தது.
வழக்கின் பின்னணி என்ன?
2026 ஆம் ஆண்டு மே 1 ஆம் தேதி அன்று, மூன்றரை வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டார்.
சமீபத்தில் அங்கு குடியேறியிருந்த அந்தச் சிறுமியை, குற்றம் சாட்டப்பட்டவர் அருகில் இருந்த ஒரு மாட்டுத் தொழுவத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு அவர் அந்தச் சிறுமியை சித்திரவதை செய்து கொலை செய்தார்.
சிறுமியைக் காணாததால், அவரது குடும்பத்தினர் அவரைத் தேடத் தொடங்கினர்.
பின்னர் அவரது உடல் அருகில் உள்ள ஒரு தொழுவத்தில் கண்டெடுக்கப்பட்டது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதோடு, கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு போராட்டம் நடத்தினர்.
இது புனேயிலும் போராட்டங்களுக்கு வழிவகுத்தது, போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டப்பட்டவருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று கோரினர்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுத்தனர். அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளில், குற்றம் சாட்டப்பட்டவர் சிறுமியை அழைத்துச் செல்வது தெரிந்தது.
தேடுதல் வேட்டைக்குப் பிறகு, போலீசார் ஒன்றரை மணி நேரத்திற்குள் குற்றம் சாட்டப்பட்டவரைக் கைது செய்தனர்.
குற்றம் சாட்டப்பட்டவர் மீது போக்சோ சட்டம் உள்ளிட்ட பல கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
விசாரணையின் போது, குற்றம் சாட்டப்பட்டவர் மீது ஏற்கனவே இது போன்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்ததும், ஆனால் அவர் விடுவிக்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது.
குற்றம் சாட்டப்பட்டவரின் குடும்பத்தினரின் எதிர்வினையும் ஊடகங்களில் வெளியானது. தாங்கள் அவரது முகத்தைக் கூட பார்க்க விரும்பவில்லை என்று குடும்பத்தினர் தெரிவித்தனர்.
நாட்டில் மிக விரைவாக விசாரணை நடத்தப்பட்ட வழக்குகளில் இதுவும் ஒன்றாகும். இதற்கு முன்பு, பிஹாரில் 2021 ஆம் ஆண்டு நடந்த ஒரு வழக்கில், நீதிமன்றம் ஒரே நாளில் முழு விசாரணையையும் நடத்தி தீர்ப்பையும் வழங்கியது.
2021 ஜூலையில், 8 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். இச்சம்பவம் நடந்த அடுத்த நாள் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அக்டோபர் மாதத்தில், நீதிமன்றம் ஒரே நாளில் விசாரணையை முடித்து, குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஆயுள் தண்டனை விதித்தது.
இருப்பினும், வழக்குப்பதிவு செய்ததில் இருந்து தீர்ப்பு வருவதற்கு கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் ஆனது.
வாஷியில் நடந்த ஒரு போக்சோ வழக்கில், 45 நாட்களுக்குள் விசாரணை முடிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணை செயல்முறைகள் சுமார் 50 நாட்களில் நிறைவடைந்துள்ளது.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு