You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
உத்தவ் தாக்கரேவின் சிவசேனாவில் பிளவா? எம்.பிக்களுக்கு பல கோடி ரூபாய் வழங்கப்படுவதாக விமர்சனம்
மகாராஷ்டிராவின் முன்னாள் முதலமைச்சரும், சிவசேனா (உத்தவ் பாலசாஹேப் தாக்கரே) தலைவருமான உத்தவ் தாக்கரே மீண்டும் ஒருமுறை கட்சியில் பிளவை சந்திக்க நேரிடலாம்.
சிவசேனாவின் 9 எம்பிக்களில் 6 முதல் 7 எம்பிக்கள் துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனாவில் இணையலாம் அல்லது தனிக்குழுவை உருவாக்கலாம் என்று செய்திகள் வெளியாகி வருகின்றன.
இதற்கிடையில் சிவசேனா (உத்தவ் தாக்கரே) கட்சியின் தெற்கு மும்பை எம்.பி. அரவிந்த் சாவந்த், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். இந்தக் கடிதம் 'எம்.பிக்களின் பிளவை' பற்றிய செய்திகளுக்கு மேலும் வலுசேர்த்துள்ளதாகக் கருதப்படுகிறது.
மாநிலங்களவை எம்பியும், சிவசேனா (உத்தவ் தாக்கரே) செய்தித் தொடர்பாளருமான சஞ்சய் ராவத் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவும் கட்சியில் பிளவு ஏற்படலாம் என்ற தகவல்கள் முற்றிலும் ஆதாரமற்றவை அல்ல என்பதைக் காட்டுகிறது. சிறிது நேரத்துக்கு முன்பு சிவசேனா (யுபிடி) எம்.பி. அனில் தேசாய் கட்சியின் அனைத்து எம்பிக்களின் கூட்டத்தை டெல்லியில் நடத்த அழைப்பு விடுத்துள்ளார்.
ஜூன் 14 அதாவது ஞாயிற்றுக்கிழமையன்று உத்தவ் தாக்கரே தனது இல்லமான 'மாதோஸ்ரீ'யில் கட்சி எம்பிக்களின் கூட்டத்தைக் கூட்டியிருந்தார். இருப்பினும், இந்தக் கூட்டத்தில் ஐந்து எம்.பிக்கள் நேரில் கலந்து கொள்ளவில்லை, அவர்கள் ஆன்லைன் மூலம் தங்களது வருகையைப் பதிவு செய்திருந்தனர். அன்றிலிருந்து தான் உண்மையில் 'எம்.பிக்களின் பிளவு' குறித்த விவாதங்கள் தொடங்கின.
இவர்களில் யவத்மால் எம்.பி. சஞ்சய் தேஷ்முக், பர்பானி எம்.பி. சஞ்சய் ஜாதவ், ஹிங்கோலி எம்.பி. நாகேஷ் பாட்டீல், ஷீரடி எம்.பி. பாவுசாஹேப் வாக் சௌரே மற்றும் தாராஷிவ் எம்.பி. ஓம்ராஜே நிம்பால்கர் ஆகியோர் நேரில் கலந்து கொள்ளவில்லை.
அதே நேரத்தில், தெற்கு மும்பை எம்.பி. அரவிந்த் சாவந்த், தெற்கு-மத்திய மும்பை எம்.பி. அனில் தேசாய், வடகிழக்கு மும்பை எம்.பி. சஞ்சய் தீனா பாட்டீல் மற்றும் நாசிக் எம்.பி. ராஜாபாவ் வாஜே ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
அனைத்து எம்.பிக்கள் கூட்டத்தைக் கூட்டிய தாக்கரேவின் சிவசேனா
சிவசேனா (உத்தவ் தாக்கரே) எம்.பி. அனில் தேசாய் கடிதம் வெளியிட்டு கட்சியின் அனைத்து எம்.பிக்களின் கூட்டத்தைக் கூட்டியுள்ளார். இந்தக் கூட்டம் நாளை அதாவது ஜூன் 18 காலை 11 மணிக்கு நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெறும்.
இந்தக் கடிதத்தின் மூலம் அனைத்து எம்.பிக்களின் வருகையும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
சஞ்சய் ராவத்தின் பதிவு
நேற்று (ஜூன் 16) பிற்பகலுக்குப் பிறகு திடீரென சிவசேனா (உத்தவ் தாக்கரே) எம்.பிக்கள் உடைவது குறித்த செய்திகள் வேகம் எடுத்தன. இதையடுத்து பல்வேறு ஊகங்களும் விவாதங்களும் எழுந்தன. எத்தனை எம்பிக்கள் வெளியேறுவார்கள், அவர்கள் யார் என்பன போன்ற செய்திகள் ஊடகங்களில் வரத் தொடங்கின.
இதையடுத்து இரவு 11 மணியளவில் எம்.பி. சஞ்சய் ராவத் சமூக ஊடகங்களில் ஒரு பதிவைப் பகிர்ந்துகொண்டார், இது இந்த செய்திகளுக்கு ஓரளவு மேலும் வலு சேர்த்தது.
சஞ்சய் ராவத் கூறுகையில், "மகாராஷ்டிரா எம்.பிக்களை வாங்குவதற்காக இன்று இரவு ஒவ்வொரு எம்.பிக்கும் 15 கோடி ரூபாய் முன்தொகை வழங்கப்படுகிறது. இந்தத் தகவல் அதிர்ச்சியளிப்பதாகவும், அருவருப்பானதாகவும் இருக்கிறது!" என்றார்.
சஞ்சய் ராவத்தின் சமூக ஊடகப் பதிவுக்கு திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா பதிலளித்துப் பேசுகையில், "வெறும் 15 கோடியா? ஏன் இவ்வளவு மலிவான விலைக்குப் போகிறீர்கள்? எங்களது கட்சியின் அதிருப்தி தலைவர்களுக்கு 4 கோடி ரூபாய் கிடைத்தது மற்றும் அடுத்த 36 மாத பதவிக் காலத்தில் ஒவ்வொரு மாதமும் 1 கோடி ரூபாய் கிடைக்கப் போகிறது. ஹனி பிளஸ் மனி." என்றார்.
திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 28 எம்.பிக்களில் 20 பேர் சமீபத்தில் கட்சியிலிருந்து வெளியேறியுள்ளனர். மஹுவா மொய்த்ரா இந்தச் சூழலில்தான் இந்த பதிவை வெளியிட்டுள்ளார்.
மஹுவா மொய்த்ராவின் இந்த பதிலுக்கு சஞ்சய் ராவத் இன்று (ஜூன் 17) காலை பதிலளித்தார். அதில் அவர், "இல்லை இல்லை, மஹுவா ஜி, ஒவ்வொரு எம்.பியின் குறைந்தபட்ச அடிப்படை விலை 50 கோடி ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 15 கோடி ரூபாய் என்பது வெறும் முன்தொகை தான்." என்றார்.
அவர் மேலும் கூறுகையில், "அவர்களின் விலை அதிகரித்துள்ளது, ஏனெனில் சிவசேனா மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் ஆகியவை தனக்கென அடையாளம் கொண்ட கட்சிகள்." என்றார்.
அரவிந்த் சாவந்த் மக்களவை சபாநாயகருக்கு எழுதிய கடிதம்
சிவசேனா (உத்தவ் தாக்கரே) மக்களவை சபாநாயகரிடம் அதிகாரப்பூர்வ கடிதத்தை சமர்ப்பித்துள்ளது. அதில் சிவசேனா (உத்தவ் தாக்கரே) கட்சியை நாடாளுமன்றத்தில் ஒரே அதிகாரப்பூர்வ அரசியல் கட்சியாக தொடர்ந்து அங்கீகரிக்க வேண்டும் என்று கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
எந்தவொரு தனிக்குழு, அதிருப்திக் குழு அல்லது சுயேச்சைக் குழுவுக்கும் எந்தவொரு அங்கீகாரமும், அந்தஸ்தும், வசதியும் அல்லது சலுகையும் வழங்கக் கூடாது என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இத்தகைய கோரிக்கைகள் குறித்து எந்தவொரு முடிவையும் எடுப்பதற்கு முன்பு உத்தவ் தாக்கரே குழுவுக்கு தனது தரப்பு வாதத்தை முன்வைக்க வாய்ப்பளிக்க வேண்டும் என்றும் அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் பத்தாவது அட்டவணையின் (கட்சித் தாவல் தடைச் சட்டம்) கீழ் உள்ள விதிகளைப் பயன்படுத்துவதற்கான உரிமையை கட்சி தக்கவைத்துக் கொள்கிறது என்றும் அது தெளிவுபடுத்தியுள்ளது.
இந்தக் கடிதத்தை சிவசேனா (உத்தவ் தாக்கரே) நாடாளுமன்றக் கட்சித் தலைவரும் எம்பியுமான அரவிந்த் சாவந்த் அனுப்பியுள்ளார்.
இதற்கு முன்பு, ஜூன் 16 காலை அரவிந்த் சாவந்த் ஊடகங்களிடம் பேசுகையில், "அறுவை சிகிச்சை செய்வதற்கு புலியிடம் பற்கள் இருக்க வேண்டும். நாட்டின் முன்னால் உள்ள பல பிரச்னைகளைப் பற்றி பேசுவதற்குப் பதிலாக அரசுக்கு ஆதரவான ஊடகங்கள் வெறும் பற்கள் இல்லாத போலி புலிகள் என்று அழைக்கப்படுபவர்களைப் பற்றி மட்டுமே விவாதிக்கிறது. ஜனநாயகத்தின் மீது நடத்தப்படும் தாக்குதல் இதைவிட மிகவும் தீவிரமான விஷயம்." என்றார்.
சுஷ்மா அந்தாரே என்ன சொன்னார்?
உத்தவ் தாக்கரே குழுவின் தலைவர் சுஷ்மா அந்தாரே கூறுகையில், மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸின் பாதையில் தடையை ஏற்படுத்துவதற்காகவே இந்த இந்த அரசியல் நகர்வு மேற்கொள்ளப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.
அவர், "தேவேந்திர ஃபட்னாவிஸின் டெல்லிக்குச் செல்ல வேண்டும் என்ற லட்சியம் யாரிடமிருந்தும் மறைக்கப்படவில்லை. தேவேந்திர ஃபட்னாவிஸ் டெல்லியை அடையக் கூடாது என்பதற்காக ஃபட்னாவிஸின் சொந்தக் கட்சியின் டெல்லி தலைவர்கள் டெல்லியிலிருந்து நர்மதா வரை ஒரு நீண்ட வேகத்தடையை அமைக்கத் தயாராகி வருகின்றனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஃபட்னாவிஸ் ஜி, நீங்கள் எப்படி தப்பிப்பீர்கள்?
"இது தாக்கரேவின் தலைமை பற்றிய கேள்வி அல்ல. திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளில் கூட பிளவு ஏற்பட்டுள்ளது. இது அனைத்துக் கட்சிகளுக்கும் நடந்து கொண்டிருக்கிறது, ஏனெனில் தொகுதி மறுவரையறை மசோதாவுக்குப் பிறகு பாஜக பழிவாங்கும் உணர்ச்சியால் நிறைந்துள்ளது. அவர்கள் எந்த எல்லைக்கும் செல்லத் தயாராக இருக்கிறார்கள்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் தேவேந்திர ஃபட்னாவிஸ்ஜி, உங்களது லட்சியம் என்னவாகும்? எங்களைப் பற்றிய கவலையை விட்டுவிடுங்கள். நாங்கள் ஏற்கெனவே அதிகாரம் இல்லாமல் இருக்க முடிவு செய்துவிட்டோம். நாங்கள் போராட்டப் பாதையைத் தேர்ந்தெடுத்து, புதிய பெயர் மற்றும் புதிய தேர்தல் சின்னத்துடன் ஒன்பது எம்.பிக்களையும் 20 எம்எல்ஏக்களையும் தேர்ந்தெடுத்தோம்.
உண்மையான விவசாயி விதைத்துக் கொண்டே தான் இருப்பார். யாரிடம் அந்த கலை இல்லையோ, அவர்கள் திருடுகிறார்கள். இப்போது நீங்கள் யோசியுங்கள் உங்களுக்கு என்ன நடக்கப் போகிறது என்று?" என்றார்.
ஷிண்டேயின் சிவசேனா எம்.பி. நரேஷ் மஸ்கே என்ன சொன்னார்?
ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனா எம்.பி. நரேஷ் மஸ்கே, "உத்தவ் தாக்கரே குழுவின் எம்.பிக்கள் உத்தவ் தாக்கரே மீது அதிருப்தியுடன் உள்ளனர். எம்.பிக்கள் மட்டுமல்ல, அவர்களின் எம்எல்ஏக்களும் நகராட்சி உறுப்பினர்களும் கூட அதிருப்தியில் உள்ளனர். ஒவ்வொரு தொண்டரும் அதிருப்தியில் உள்ளனர். அனைவரும் அவர்களை விட்டுச் சென்று கொண்டிருக்கிறார்கள்.
இதற்கான காரணத்தை எங்களிடம் கேட்பதற்குப் பதிலாக அவர்கள் தங்களுக்குள்ளேயே தேடியிருக்க வேண்டும். அவர்கள் பாலசாஹேபின் இந்துத்துவா கொள்கைகளைக் கைவிட்டனர். அவர்கள் காங்கிரஸுடன் கைகோர்த்துக் கொண்டனர்." என்றார்.
"சிவசேனாவின் சித்தாந்தம் இந்துத்துவாவாகும், அது ஒருபோதும் காங்கிரஸுடன் செல்லாது. எனவே, ஏக்நாத் ஷிண்டே இந்துத்துவா சித்தாந்தத்தின் அடிப்படையில் பணியாற்றினால், 24 மணி நேரமும் பணியாற்றினால், ஒவ்வொரு தொண்டருக்காகவும் பணியாற்றினால் மற்றும் மக்கள் எங்களுடன் வந்தால், அதில் எங்களது தவறு என்ன?" என்றார்.
'ஆபரேஷன் டைகர்'
கடந்த சில நாட்களாக 'ஆபரேஷன் டைகர்' என்ற வார்த்தை ஊடகங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. உத்தவ் தாக்கரேவின் சிவசேனாவின் ஒன்பது எம்.பிக்களில் ஏழு எம்.பிக்கள் கட்சியை விட்டு வெளியேறக்கூடும் என்று விவாதிக்கப்படுகிறது. இந்த எம்பிக்கள் விரைவில் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனாவில் இணைவார்கள் என்று கூறப்படுகிறது.
இது தொடர்பாக எம்.பி. சஞ்சய் ராவத்திடம் 'ஆபரேஷன் டைகர்' குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அவர் தனது பாணியில் இந்த விவாதத்தை நிராகரித்தார்.
ஆனால், அடுத்த 48 மணி நேரத்துக்குள்ளேயே எம்.பி. சஞ்சய் ராவத்தின் கூற்றிலும் மாற்றம் காணப்பட்டது.
ஜூன் 16 அன்று டெல்லிக்குச் சென்ற சஞ்சய் ராவத்திடம் இந்த விவகாரம் குறித்து மீண்டும் கேள்வி கேட்கப்பட்டது. அவர், "சிவசேனாவில் இதற்கு முன்பும் இப்படி நடந்துள்ளது. இதையும் மீறி கட்சி நிமிர்ந்து நிற்கிறது. எங்களது கட்சிக்கு போராட்டத்தின் பெரிய அனுபவம் உள்ளது. கடந்த 60 ஆண்டுகளில் நாங்கள் பல அதிர்ச்சிகளைக் கண்டுள்ளோம்.
எங்களது கட்சி வெறும் எம்.பிக்கள் மற்றும் எம்எல்ஏக்களின் கட்சி மட்டுமல்ல. இது ஒரு தொண்டர்கள் அடிப்படையிலான கட்சி. எம்.பிக்களும் எம்எல்ஏக்களும் வந்து போய்க் கொண்டிருப்பார்கள். எங்களது கட்சி தொண்டர்களின் கட்சி." என்றார்.
ஏழு எம்.பிக்கள் செல்ல முடியுமா என்ற கேள்விக்கு அவர், "எங்கள் முன்னால் அப்படிப்பட்ட எந்தத் தகவல் அல்லது விவகாரம் வரவில்லை. எங்களுக்கும் வாய்ப்பு வரும்." என்றார்.
இதற்கு முன்பு சஞ்சய் ராவத் கூறுகையில், எந்தவொரு எம்.பியும் எங்கும் செல்லவில்லை என்று கூறியிருந்தார். டெல்லியில் ஊடகங்களிடம் பேசிய அவர், கட்சியின் கூட்டத்தில் எம்.பிக்கள் சத்தியப்பிரமாணம் கூட எடுத்தனர் என்று கூறியிருந்தார்.
அவர், "எங்களிடம் அப்படிப்பட்ட எந்தத் தகவலும் இல்லை. உத்தவ் தாக்கரேவால் கூட்டப்பட்ட கூட்டத்தில் அனைத்து எம்.பிக்களும் கலந்து கொண்டனர். சில எம்.பிக்கள் ஆன்லைனில் கலந்துகொண்டனர். இந்த எம்.பிக்களில் சிலர் உத்தவ் தாக்கரேவின் தலைமை மீது நம்பிக்கை தெரிவித்தனர். சிலர் கடவுள் மீது சத்தியம் செய்தனர், சிலர் சாய்பாபா மீது சத்தியம் செய்தனர், சிலர் தங்களது மகன் மீது சத்தியம் செய்து இறுதி வரை கட்சியுடன் இருப்பதாகக் கூறினர்." என்றார்.
கூட்டத்தில் ஆன்லைன் மூலம் கலந்துகொண்ட சில எம்.பிக்களைத் தொடர்புகொள்ள பிபிசி மராத்தி பலமுறை முயற்சி செய்தது, ஆனால் அவர்களைத் தொடர்புகொள்ள முடியவில்லை. அவர்களின் பதில் கிடைக்கும்போது இச்செய்தி புதுப்பிக்கப்படும்.
ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனாவின் பதில்?
சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே பிரிவின்) மூத்த தலைவர் கிருபால் துமானே, 'ஆபரேஷன் டைகர்' இறுதி கட்டத்தில் இருப்பதாகக் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி, அவரது கூற்றுப்படி 16 எம்எல்ஏக்கள் மற்றும் 7 எம்.பிக்களின் கட்சித் தாவல் குறித்த இறுதிப் பேச்சுவார்த்தை முடிவடைந்துவிட்டது என்றும், இப்போது கட்சியில் இணையும் தேதி மட்டுமே முடிவாக வேண்டியுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
உத்தவ் தாக்கரே குழுவின் 16 எம்எல்ஏக்களின் 'ஆபரேஷன் டைகர்' பருவமழை கூட்டத்தொடருக்குப் பிறகு நடைபெறும் என்றும் கிருபால் துமானே கூறினார்.
இருப்பினும், அமைச்சர் உதய சாமந்த் இதுபோன்ற எந்தவொரு கலகக் கூற்றையும் அல்லது தாக்கரே குழுவின் எம்.பிக்கள் ஏக்நாத் ஷிண்டேயை சந்தித்ததாகக் கூறப்படுவதையும் மறுத்துள்ளார்.
"எத்தனை எம்பிக்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர், எத்தனை பேர் கலந்து கொள்ளவில்லை என்பது ஊடகங்கள் மூலமாகவே எங்களுக்குத் தெரியவருகிறது. சிவசேனாவுக்கு எம்.பிக்களுக்குள் பிளவு ஏற்படுத்த வேண்டிய தேவை இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை.
உத்தவ் தாக்கரே பிரிவு எம்.பிக்கள் தொடர்பாக எங்களுக்கும் யாருக்கும் எந்தத் தொடர்பும் ஏற்படவில்லை. 'ஆபரேஷன் டைகர்' தொடர்பாக எப்படிப்பட்ட சூழல் உருவாக்கப்படுகிறதோ, அப்படிப்பட்ட உத்தவ் தாக்கரே பிரிவின் எம்.பிக்களின் எந்தவொரு கூட்டமும் நடைபெறவில்லை.
நான் ஷீரடியில் இருந்தபோது, எம்.பி வாக் சௌரே எனக்கு அருகில் தான் இருந்தார். எனக்கு அவருடன் எந்தச் சந்திப்பும் நடக்கவில்லை. ஏக்நாத் ஷிண்டேயும் உத்தவ் தாக்கரே பிரிவின் எந்தவொரு எம்பியையும் சந்திக்கவில்லை." என உதய சாமந்த் கூறினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு