'ரூ. 2.47 லட்சம் கோடி கடன்' - மின்வாரியம் வெளியிட்ட வெள்ளை அறிக்கையில் என்ன உள்ளது?

  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

தமிழ்நாடு மின்வாரியத்தின் தற்போதைய நிலை குறித்த வெள்ளை அறிக்கையை வியாழக்கிழமையன்று (ஜூன் 25) மின்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் வெளியிட்டார்.

2001 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை மின்வாரியம் கடந்து வந்த பாதையை விவரித்த அமைச்சர், மின்துறைக்கு 2.47 லட்சம் கோடி ரூபாய் கடன் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலுக்குப் பிறகு ஆட்சிப் பொறுப்பேற்ற த.வெ.க அரசு, நிதி நிலைமை தொடர்பான வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என அறிவித்தது.

அதன்படி, கடந்த 16 ஆம் தேதியன்று அரசின் நிதி நிலைமை குறித்த வெள்ளை அறிக்கையை நிதித்துறை அமைச்சர் மரியவில்சன் வெளியிட்டார். தொடர்ந்து, 'மின்சார வாரியத்தின் நிலை குறித்த வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்' என, துறையின் அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் கூறியிருந்தார்.

'25 ஆண்டுகளில் மோசமான நிலை'

இதனைத் தொடர்ந்து சென்னையில் வியாழக்கிழமையன்று வெள்ளை அறிக்கையை மின்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் வெளியிட்டார். கடந்த 2001 முதல் தற்போது வரையில் மின்வாரியம் கடந்து வந்த பாதையை இது வெளிக்காட்டுவதாக அவர் குறிப்பிட்டார்.

அமைச்சர் பேசும்போது, "தமிழ்நாட்டின் உயிர்நாடியாக மின்சார வாரியம் இருக்கிறது. கடந்த 25 ஆண்டுகளில் கடன் மற்றும் மோசமான நிலைக்கு இந்தத் துறை சென்றுள்ளது" எனக் கூறினார்.

மின்துறையை த.வெ.க அரசு எவ்வாறு வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லப் போகிறது என்பதை வெளிக்காட்டுவதற்காகவே வெள்ளை அறிக்கை வெளியிடப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

தமிழ்நாடு மின்சார வாரியம் 1957 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 2010 ஆம் ஆண்டு இரண்டாக பிரிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு நான்கு நிறுவனங்களாக மாற்றப்பட்டது.

கடந்த 25 ஆண்டுகளில் வருவாய், செலவீனம், காலிப் பணியிடம், உபகரணக் கட்டமைப்பு, ஒப்பந்தப் பணியாளர் முறை ஆகியவற்றை உள்ளடக்கியதாக வெள்ளை அறிக்கை அமைந்திருந்தது.

மின்வாரியத்தின் வருவாய் குறித்துப் பேசிய அமைச்சர், " 2001–2006 ஆம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சியில் வருவாய் 59,084 கோடி ரூபாயாக இருந்தது. ஆனால், செலவு 67,439 கோடி ரூபாயாக இருந்தது. இதில் 8,355 கோடி ரூபாய் வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டது" எனக் குறிப்பிட்டார்.

'கட்டண உயர்வால் வருவாய் அதிகரிப்பு..ஆனால்?'

2006–2011 ஆம் ஆண்டு தி.மு.க ஆட்சியில் வருவாய் 92,737 கோடியாகவும் செலவீனம் 1,28,200 கோடி ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. 2011–2016 அ.தி.மு.க ஆட்சியில் வருவாய் 1,92,971 கோடி ரூபாயாகவும் செலவீனம் 2,49,332 கோடியாகவும் அதிகரித்துள்ளது.

2016–2021 ஆம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சியில் வருவாய் 3,20,140 கோடி ரூபாயாகவும் செலவீனம் 3,78,674 கோடி ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. கடந்த 2021–2026 தி.மு.க ஆட்சியில் வருவாய் 4,97,996 கோடியாகவும் செலவீனம் 5,32,443 ரூபாயாகவும் இருந்துள்ளது.

2011-2016 மற்றும் 2016- 2021 வரையிலான அ.தி.மு.க ஆட்சியில் 56,361 கோடி ரூபாய் மற்றும் 58,534 கோடி ரூபாய் என பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதுவே, 2021-26 தி.மு.க ஆட்சியில் 34,447 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.

இதனைக் குறிப்பிட்டுப் பேசிய அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார், "2022ம் ஆண்டு மின் கட்டணம் உயர்வால் 100 சதவிகிதம் அளவுக்கு புதிதாக வருவாய் வந்துள்ளது" எனக் குறிப்பிட்டார்.

"ஆனால், புதிதாக மின்மாற்றிகளோ, திட்டங்களோ, காலிப் பணியிடங்களோ நிரப்பப்படவில்லை" எனக் கூறிய அவர், "மின்வாரியம் நஷ்டத்தில் இருந்ததால் கட்டணம் மாற்றியமைக்கப்பட்டது. இதில் செலவீனம் ஏன் கூடியது என்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயங்களாக உள்ளன" என்கிறார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர், "வருவாய் அதிகரித்தும் மின்வாரியத்துக்கு எந்தப் பலனும் இல்லை. மின் கட்டண உயர்வால் பொதுமக்கள் தான் கஷ்டப்பட்டுள்ளனர்" எனத் தெரிவித்தார்

கடன் அளவு 2,47,130 கோடி ரூபாய்

கடந்த ஐந்து ஆண்டுகளில் மின்வாரியத்துக்கு அதிக வருவாய் வந்துள்ளதாகக் குறிப்பிட்ட அமைச்சர், "2021 முதல் 2026 வரையில் 87,399 கோடி ரூபாய் கடன் வாங்கப்பட்டுள்ளது. அதேநேரம் செலவீனம் அதிகரித்துள்ளது" என்கிறார்.

மின்வாரியத்தின் கடன் அதிகரித்தது குறித்த விவரங்களும் வெள்ளை அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. கடந்த 2001 ஆம் ஆண்டு 6,492 கோடி ரூபாயாக இருந்த கடன், 2006 ஆம் ஆண்டில் 2,831 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.

அதுவே, 2006-11 ஆம் ஆண்டு தி.மு.க ஆட்சியில் 26,552 கோடி ரூபாயாகவும் 2011-16 அ.தி.மு.க ஆட்சியில் 56,204 கோடி ரூபாயாகவும் அடுத்து வந்த அ.தி.மு.க ஆட்சியில் 67,652 கோடியாகவும் உயர்ந்துள்ளது. 2021-26 தி.மு.க ஆட்சியில் 87,399 உயர்ந்து தற்போது கடன் அளவு 2,47,130 கோடியாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மின் கொள்முதல் குறித்த விவரங்களும் வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் அதிகப்படியான மின் நுகர்வு 21,307 மெகாவாட்டாக இருந்ததாக அமைச்சர் நிர்மல்குமார் குறிப்பிட்டார்.

மின்வாரியம் மூலமாக எண்ணூர் அனல்மின் நிலையம், மேட்டூர் அனல்மின் நிலையம் ஆகியவற்றில் இருந்து 3499 மெகாவாட் மின்சாரத்தைத் தயாரிப்பதாகக் கூறிய அவர், "உள் மாநிலங்கள் மற்றும் மத்திய தொகுப்பில் இருந்து 13,566 மெகாவாட் பெறப்பட்டது" எனத் தெரிவித்தார்.

ஒரு சில காலங்களில் யூனிட் மின்சாரத்தை 21 ரூபாய்க்கெல்லாம் வாங்கியுள்ளதாகக் கூறிய அவர், " கடந்த ஒரு மாதத்தில் சிறிய கசிவுகளை (Leak) சரிசெய்வதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளோம். இதன்மூலம் மாதம் 215 கோடி ரூபாய் மிச்சப்படுத்த முடியும்" எனக் குறிப்பிட்டார்.

அடுத்து, மின்வாரியங்களில் உள்ள காலிப் பணியிடங்கள் குறித்த விவரங்கள் அரசின் வெள்ளை அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

'27 ஆயிரம் பேர் ஓய்வு... 343 பேர் தேர்வு'

"ஒவ்வொரு துணை மின்நிலையங்களுக்குக்கீழ் 300 முதல் 400 கிராமங்கள் உள்ளன. இங்கெல்லாம் எவ்வளவு ஊழியர்கள் பணியில் உள்ளனர் என்பது முக்கியமானது" என்கிறார் அமைச்சர் நிர்மல்குமார்.

"மின்வாரியத்தில் 1,40,635 ஊழியர்கள் தேவைப்படுகின்றனர். இவர்களில் 74,714 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். 65,921 பணியிடங்கள் காலியாக உள்ளன. கடந்த 10 வருடங்களில் 20,240 பேர் ஓய்வு பெற்றுள்ளனர். இது எச்சரிக்கையுடன் கவனிக்கப்பட வேண்டிய விஷயம்" என அவர் குறிப்பிட்டார்.

'மறைமுகமாக லாபம் சம்பாதித்தனர்'

"மின்துறையில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக துணை மின்நிலையங்களைப் பயன்படுத்த முடியாது" எனக் கூறிய அவர், "இதே நிலைமை தான் மின்மாற்றிகளுக்கும் பொருந்தும்" என்கிறார்.

184 துணை மின்நிலையங்கள் 25 ஆண்டுகளைக் கடந்துவிட்டதாகவும் 42 ஆயிரம் மின்மாற்றிகள் 25 ஆண்டுகளைக் கடந்துவிட்டதாகவும் தனது பேச்சில் அவர் குறிப்பிட்டார்.

"இந்த ஆண்டில் பழைய துணை மின்நிலையங்களை சரிசெய்யும் பணிகள் தொடங்கப்பட உள்ளன. அதற்கான 8,318 கோடி ரூபாய் செலவுக்கு முதலமைச்சரிடம் ஒப்புதல் வாங்கிவிட்டோம்" என்கிறார் அவர்.

"21,512 கோடி ரூபாயில் உள்கட்டமைப்பை மேம்படுத்த உள்ளோம். அடுத்த நான்கு ஆண்டுகளில் 238 துணை மின்நிலையங்களை உருவாக்க உள்ளோம். இதனைக் கடன் மூலம் மேற்கொள்ளவிருக்கிறோம். இதைச் செய்தால் தான் நுகர்வோருக்கு பலன்களைக் கொண்டு சேர்க்க முடியும்" என அமைச்சர் குறிப்பிட்டார்.

"இந்த ஆண்டு மின்கட்டண உயர்வு இல்லை" எனக் கூறிய அமைச்சர், "அதற்கான கையெழுத்தைப் போடப்போவது இல்லை" என்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு