கோவையில் நகைத் திருட்டு வழக்கில் 2 எம்.பி.ஏ மாணவர்கள் கைது - மாணவர்கள் குற்றங்களில் ஈடுபடக் காரணம் என்ன?

பட மூலாதாரம், Getty Images
கோவையில் தனியார் கல்லூரியில் எம்.பி.ஏ. படித்து வரும் மாணவர் ஒருவரும், மாணவி ஒருவரும் சேர்ந்து மூதாட்டி ஒருவரிடம் நகை பறித்ததாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெற்றோர் அனுப்பிய பணத்தைச் செலவழித்துவிட்டதால், கல்லூரி கட்டணம் செலுத்துவதற்காக இந்தச் செயலில் ஈடுபட்டதாக விசாரணையில் அவர்கள் தெரிவித்ததாக காவல்துறையினர் கூறுகின்றனர்.
கல்லூரி மாணவர் மீதான இந்த நகைப் பறிப்பு வழக்கு சமூக ஊடகங்களில் பெரும் விவாதத்திற்கு வித்திட்டுள்ளது.
கல்லூரி மாணவர்கள் சிலர் குற்றங்களில் ஈடுபட என்ன காரணம்?
என்ன நடந்தது?
கோவை வெள்ளலூரில் உள்ள கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் மேலாளராகப் பணியாற்றி வரும் கோவிந்தராஜ், கடந்த 30ஆம் தேதி போத்தனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
கோவிந்தராஜ் கூற்றுப்படி, அவரது வீட்டருகே பக்கத்து வீட்டுப் பெண்களுடன் அவரது தாயார் சரஸ்வதி பேசிக் கொண்டிருந்தபோது, முகமூடி அணிந்த இளைஞர் ஒருவர் பேச்சு கொடுப்பது போல அருகில் வந்து அவரது கழுத்தில் இருந்த 4 சவரன் நகையை பறித்துச் சென்றுள்ளார்.
அவரது புகாரின் அடிப்படையில் போத்தனூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. முதல் தகவல் அறிக்கைப்படி, ஆகஸ்ட் 30 அன்று மாலை 4:30 மணிக்கு இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அப்போது சற்று தூரத்தில் தலைக்கவசம் மற்றும் முகமூடி அணிந்து ஸ்கூட்டரில் ஒரு பெண் நின்று கொண்டிருந்ததாகவும், சங்கிலியைப் பறித்த இளைஞர் அந்த வண்டியில் ஏறிச் சென்றதாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது.
சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், வாகனத்தின் பின்புற நம்பர் பிளேட்டில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருந்ததால் வாகன எண்ணைக் கண்டுபிடிப்பதில் தாமதம் ஏற்பட்டதாகவும், பின்னர் மேலதிக காட்சிகள் மூலம் வாகனத்தின் பதிவு எண் கண்டறியப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
பல்வேறு விசாரணைகளுக்குப் பிறகு மூதாட்டியிடம் தங்கச் சங்கிலியைப் பறித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட நபர், கோவையில் தனியார் கல்லூரியில் எம்.பி.ஏ. படிக்கும் திருப்பூரைச் சேர்ந்த 21 வயது மாணவர் என்றும், அவருடன் இணைந்து இந்தத் திருட்டில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள பெண், அதே கல்லூரியில் படிக்கும் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையைச் சேர்ந்த 21 வயது மாணவி என்றும் காவல்துறை கூறுகிறது.
காவல்துறையினரின் கூற்றுப்படி, "இருவரும் விசாரணையில் தங்கள் மீதான குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டுள்ளனர். இதைத் தொடர்ந்து, இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்."

பட மூலாதாரம், Getty Images
காவல்துறை கூறுவது என்ன?
பிபிசியிடம் பேசிய கோவை மாநகர காவல் [தெற்கு] துணை ஆணையர் கார்த்திகேயன், இந்த இரு மாணவர்களும் ஒன்றாகப் படிப்பதாகவும், சாதாரண குடும்ப பின்னணியில் இருந்து வந்தவர்கள் என்றும் கூறினார்.
அவரது கூற்றுப்படி, "கல்விக் கட்டணத்திற்காக வீட்டிலிருந்து அனுப்பப்பட்ட பணத்தை மாணவர் செலவழித்துவிட்டதாகவும், சிலரிடம் கடன் வாங்கியிருந்ததாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது."
"கல்விக் கட்டணம் செலுத்த வேண்டிய மற்றும் கடனை திருப்பிச் செலுத்த வேண்டிய நிர்பந்தம் காரணமாக இந்தச் செயலில் ஈடுபட்டதாக விசாரணையில் மாணவர் கூறியதாக" கார்த்திகேயன் தெரிவித்தார்.
"விலையுயர்ந்த செல்போன் மற்றும் வாகனம் வாங்குவது போன்ற ஆடம்பரத் தேவைகளுக்காகவும் இந்தத் திருட்டில் ஈடுபட்டதாக விசாரணையில் தெரிய வந்ததாகவும்" அவர் கூறினார்.
ஏற்கெனவே நாகப்பட்டினத்திலும், மற்றொரு முறை பேருந்திலும் நகைத் திருட்டில் ஈடுபட முயன்றதாகவும், அது முடியாததால் இந்தப் பகுதியில் அந்த நபர் நோட்டமிட்டு திட்டத்தை நிறைவேற்றியிருப்பதாகவும் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.
இந்த வழக்கில் 4 சவரன் தங்கச் சங்கிலி, 2 ஆன்ட்ராய்டு போன்கள், ஒரு ஐபோன், இரு சக்கர வாகனம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
மாணவர்கள் குற்றங்களில் ஈடுபடுவது ஏன்?
எம்.பி.ஏ. படிக்கும் மாணவர்கள் நகைப் பறிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டதாக வெளியான செய்தி சமூக ஊடகங்களில் பெரும் விவாதத்திற்கு வித்திட்டுள்ளது. இப்போதெல்லாம் கல்லூரியில் எம்பிஏ போன்ற உயர் படிப்புகளை படிக்கும் மாணவர்கள் கூட இதுபோன்ற குற்றங்களில் ஈடுபட தொடங்கிவிட்டனர் என்கிற வகையில் ஒருசிலர் கருத்துகளை பகிர்ந்தனர்.

சமூகவியல் ஆய்வாளரும் பேராசிரியருமான இந்திரா பிரியதர்ஷிணி பிபிசியிடம் இதுகுறித்து பேசுகையில், மாணவர்களை மட்டும் தனிப்பட்ட முறையில் குறைகூற முடியாது என்றார். அவரது கூற்றுப்படி, மாணவர்கள் குற்றங்களில் ஈடுபடுவதை மூன்று பொதுவான காரணிகளின் அடிப்படையில் பார்க்க வேண்டும்.
அதில், "முதலில் இளையவர்களை வழி நடத்தக்கூடிய ரெகுலேஷன் மெக்கானிசம் குறைபாடுடன் இருந்தால் அதாவது குற்றங்களைத் தடுக்க வேண்டிய அதிகார அமைப்புகளான அரசு, காவல்துறை, நீதித்துறை போன்றவை குறைபாடுடன் இருந்தால் இத்தகைய தவறுகள் அதிகமாகும். நமது ரெகுலேஷன் மெக்கானிசம் காலாவதியானதாகவும் பலவீனமாகவும் இருக்கிறது.
அடுத்ததாக ஒரு குழந்தையை வழி நடத்த வேண்டிய குடும்பத்தினர், சமூகம், கல்வி நிறுவனங்கள், கல்வி முறை ஆகியவை குறைகளுடன் இருந்தாலும் இந்த தவறுகள் நடக்கும். மூன்றாவதாக குற்றம் புரியக் கூடிய மாணவர்களுடனான குடும்பத்தினரின் பந்தம், பிணைப்பு இதில் முக்கியப்பங்கு வகிக்கும்.'' என்றார் இந்திரா பிரியதர்ஷினி.
"இன்றைய மாணவர்களிடம் பொருளாதார முன்னேற்றத்திற்கான அழுத்தம் அதிகரித்து இருப்பதாகவும், இதுகுறித்து பரந்த அளவிலான ஆய்வுகள் தேவை" என்றும் அவர் கூறினார்.
மேலும் அவர், "இது இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இரு மாணவர்கள் குறித்த தனிப்பட்ட மதிப்பீடு அல்ல, பொதுவான சமூகப் போக்கு குறித்தானது" என்றும் தெளிவுபடுத்தினார்.
குற்றங்கள் அதிகரித்துள்ளனவா?

பட மூலாதாரம், dr.c.sylendrababu_ips/IG
கல்லூரி மாணவர்கள் இப்போதுதான் இத்தகைய தவறுகளில் ஈடுபடுகிறார்கள் என்ற குற்றச்சாட்டை மறுக்கிறார் முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு. பிபிசி தமிழிடம் பேசிய அவர், ஊடகங்களின் பெருக்கம் மற்றும் சமூக ஊடகங்களின் தாக்கத்தால் இவை அதிகம் விவாதிக்கப்படுவதாக கூறினார்.
''அந்த காலத்திலேயே கல்லூரிகளில் குற்றங்கள் நடந்துள்ளன. இப்படி ஒரு சம்பவம் நடக்கும்போது அதுபற்றி அதிகம் பேசுவதும், அதன்பின்பு சில நாட்களில் மறந்துபோவதும் வழக்கமாகவுள்ளது. ஒவ்வொரு சம்பவத்திலும் அதற்கான ஆணிவேர் என்ன என்பதை ஆய்ந்தறிவது அவசியம்.'' என்றார் அவர்.
''ஒரு மாணவனை வழி நடத்துகிற பொறுப்பு, அரசு, சமூகம், குடும்பம், நட்பு வட்டம் என எல்லோருக்கும் இருக்கிறது. மாணவர்களை உளவியல் ரீதியாக அணுகி உரிய முறையில் வழி நடத்தினால் அவர்கள் குற்றங்களில் ஈடுபடாமல் தடுக்க முடியும். ஐரோப்பிய நாடுகளில் மாணவர்களுக்காக இத்தகைய உளவியல் ரீதியான பயிற்சி முறைகள் கடைபிடிக்கப்படுகின்றன.'' என்றும் முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு கூறினார்.
ஆடம்பரமான வாழ்க்கையை விரும்பி சில மாணவர்கள் குற்றங்களில் ஈடுபடுவதை மறுப்பதற்கில்லை என்று கூறிய அவர், ''சூதாட்டம், ஆன்லைன் மோசடிகளில் பணத்தை முதலீடு செய்யவும் இதுபோன்ற குற்றங்களில் சிலர் ஈடுபடுகின்றனர்.'' என்றும் தெரிவித்தார்.
"குற்றங்களில் ஈடுபடும் மாணவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு"
இந்த கருத்தை ஒப்புக் கொள்ளும் ஓய்வு பெற்ற கல்லூரி மாணவர் நல ஆலோசகர் ஆக்னெஸ், ''சில மாணவர்கள் விளைவுகளை பற்றி சிந்திக்காமல் ரிஸ்க் எடுக்கின்றனர். தங்கள் குழந்தைகளை எப்படிக் கையாள்வதென்றே தெரியவில்லை என்று என்னிடம் பல பெற்றோர்கள் வருந்தி கண்ணீர் விட்டுள்ளனர். ஆனால் குற்றங்களில் ஈடுபடும் மாணவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவுதான்.'' என்றார்.
''மாணவர்களிடம் அதீத கட்டுப்பாட்டுடன் இருப்பதும் தவறு. அசாத்திய சுதந்திரம் தருவதும் கூடாது. சமதூரத்தில் நின்று அவர்களைக் கண்காணிக்க வேண்டும். முக்கியமாக கல்லூரி விடுதிகளை விட்டு வெளியே இருக்கும் மாணவர்களை பெற்றோர் கண்காணிப்பது மிக முக்கியம். பெற்றோருக்கு அடுத்து கல்லூரி நிர்வாகங்களுக்கே பொறுப்பு அதிகம். மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப மாணவர் ஆலோசகர்களை எல்லா இடங்களிலும் நியமிப்பது அவசியம்.'' என்றார் ஆக்னெஸ்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































