கைலாய யாத்திரை சென்ற தமிழர்களுக்கு வழிகாட்டியாக சென்ற இஸ்லாமியர் - தந்தையுடன் கடைசியாக என்ன பேசினார்?

பட மூலாதாரம், PRAKASH MATHEMA/AFP via Getty Images
"எனக்கு வரும் எல்லா அழைப்புகளையும் எடுக்கிறேன். சிலர் என்னை அழைத்து திட்டுகின்றனர். ஆனாலும் அவற்றை நான் எடுக்க காரணம், ஏதேனும் ஒரு அழைப்பிலாவது எனது மகன் உமர் ஃபாரூக்கின் குரல் கேட்டுவிடாதா என்பதற்காக தான்" என்கிறார் சையது சாதிக்.
கும்பகோணத்தைச் சேர்ந்த ஒரு தனியார் சுற்றுலா நிறுவனத்தின் சார்பாக கைலாய யாத்திரைக்காக சென்ற 57 பேரில், 21 பேர் பத்திரமாக வீடு திரும்பிவிட்டனர். ஆனால், அந்நிறுவனத்தின் உரிமையாளர் சையது சாதிக்கின் மகனும், யாத்ரீகர்களுக்கு வழிகாட்டியாகச் சென்றவருமான உமர் ஃபாரூக் இன்னும் வீடு திரும்பவில்லை. அதேபோல, மீதமுள்ளவர்களின் நிலையும் இன்னும் கேள்விக்குறியாக உள்ளது.
காரணம், நேபாளத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் 26-ஆம் தேதி ஏற்பட்ட பெரு வெள்ளம்.
அதில் இதுவரை 600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், 2400க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை என நேபாள அரசு கூறுகிறது.
தற்போது, தனது சகோதரர் உமர் ஃபாரூக் உள்ளிட்ட 36 பேரின் நிலை குறித்து அறிய, சையது சாதிக்கின் தம்பி மகனான உசைனும் நேபாளம் வந்துள்ளார்.
'25 வருடங்களுக்கும் மேலாக கைலாய யாத்திரை'
கும்பகோணத்தைச் சேர்ந்த சையது சாதிக் தனது நிறுவனம் மூலம் கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக சுற்றுலா பயணிகளை கைலாய யாத்திரைக்கு அனுப்பி வருவதாகக் கூறுகிறார்.
"இது போல ஒருமுறையும் நடந்ததில்லை. கடவுளை தரிசிக்க அவர்கள் செல்கிறார்கள் என்பதால் மிகுந்த கவனத்துடன் தான் ஒவ்வொரு கட்டத்தையும் திட்டமிடுவோம்" என்கிறார் அவர்.
இந்த யாத்திரை தொடங்கியது கடந்த ஆகஸ்ட் 23-ஆம் தேதி (ஞாயிறு). அன்று யாத்திரிகர்கள் சென்னையிலிருந்து டெல்லிக்கு விமானம் மூலம் சென்றனர் பின்னர், திங்கள்கிழமை டெல்லியிலிருந்து விமானம் மூலம் நேபாளத்தின் காத்மாண்டுவை அடைந்தனர்.
"பின்னர் அந்த 57 பேரும் காத்மாண்டுவிலிருந்து நேபாளம் - சீனா எல்லையில் உள்ள சியாபுருபேசி பகுதியை 3 பேருந்துகளில் அடைந்து அங்கே தங்கினார்கள். அடுத்த நாள் (ஆகஸ்ட் 26, புதன்கிழமை) சியாபுருபேசியிலிருந்து 17 கி.மீ. பயணித்து சீனா எல்லையை அடைந்து, பாஸ்போர்ட் பரிசீலனைக்காக செல்லும்போதுதான் இந்த துயரச் சம்பவம் நடந்தது" என்கிறார் சையது சாதிக்.
செவ்வாய்க்கிழமை இரவு தனது மகனிடம் பேசும்போது, சியாபுருபேசியை அடைந்துவிட்டதாகவும், எல்லாம் சரியாக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார் என்கிறார் அவர்.

பட மூலாதாரம், Reuters
"அதுதான் அவனிடம் நான் கடைசியாக பேசியது"
கேதார்நாத் யாத்திரைகளையும் பல ஆண்டுகளாக ஒருங்கிணைத்து வருவதாகக் கூறும் சையது சாதிக், "2013-ஆம் ஆண்டு கேதார்நாத் பெருவெள்ளத்தின்போதுகூட நான் ஒரு குழுவுக்கு வழிகாட்டியாகச் சென்றிருந்தேன். அப்போது, என்னால் முடிந்தவரை சரியாகத் திட்டமிட்டு, எனது குழுவில் இருந்த அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்தேன். எனது மகனும் தன்னால் முடிந்தவரை போராடியிருப்பான் என நம்புகிறேன்," என்றார்.
"எனது மகன் உட்பட 36 பேரின் நிலை குறித்து இன்னும் தெரியவில்லை" என்றும் அவர் கூறினார்.
உசேன் கூறியது என்ன?

பட மூலாதாரம், Getty Images
பிபிசி தமிழின் குழுவினர் இன்று (ஆகஸ்ட் 29) அதிகாலை நேபாளத்தின் காத்மாண்டுவை சென்றடைந்தோம். அதன் பின்னர் நேபாளம் வந்துள்ள உசேனை தொடர்புகொண்டு பேசினோம்.
"நான் இப்போது திரிசூலி நதிக்கரைப் பகுதியில் உள்ள ஒரு முகாமுக்கு செல்கிறேன்" என்று அவர் கூறினார்.
"அங்கு சில தமிழர்கள் உள்ளனர் என்ற தகவல் கிடைத்துள்ளது, எப்படியாவது எனது சகோதரனும், 35 பேரும் பத்திரமாக இருப்பார்கள் என நம்புகிறேன்" என்று அவர் கூறினார்.
திரிசூலி பகுதி காத்மாண்டுவில் சுமார் 83 கி.மீ தொலைவில் உள்ளது. அங்கு செல்ல சுமார் 4 மணிநேரங்கள் சாலை வழியாக பயணம் செய்ய வேண்டும். இந்த பெருவெள்ளத்தில் மீட்கப்பட்ட பலர் திரிசூலி முகாமிற்கு கொண்டுவரப்பட்டு, பின்னர் தலைநகர் காத்மாண்டுவுக்கு அழைத்து வரப்படுகிறார்கள்.
அப்படித்தான், நேபாளத் தலைநகர் காத்மாண்டுவிலிருந்து வெள்ளிக்கிழமை இரவு 21 தமிழர்கள் சென்னை வந்தடைந்தனர்.
சென்னை, கடலூர், மயிலாடுதுறை, கிருஷ்ணகிரி, திருச்சி ஆகிய பகுதிகளை சேர்ந்த 21 பேர் தமிழகம் திரும்பியுள்ள நிலையில் தமிழ்நாட்டிலிருந்து சுமார் 400க்கும் மேற்பட்டோர் நேபாளத்துக்கு சென்றிருப்பதாகவும் அதில் 90 பேரை இன்னும் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் வெள்ளிக்கிழமை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்திருந்தார்.
இன்று தமிழக அரசின் அயலக நலத்துறையிடம் பிபிசி தமிழ் பேசியபோதும், இதுவரை அந்த 36 பேர் குறித்து எந்தத் தகவலும் கிடைக்கவில்லை என்றே குறிப்பிட்டிருந்தனர்.
ஆனால், உசேனின் பதிலுக்காக காத்திருப்பதாகக் கூறுகிறார் சையது சாதிக்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































