'ஸ்வெட்டரை மாட்டிக் கொண்டு புடவையை கழற்றி கீழே நீட்டினார்' - நேபாளத்தில் உயிர் தப்பிய சென்னை தம்பதி

'ஸ்வெட்டரை மாட்டிக் கொண்டு புடவையை கழற்றி கீழே நீட்டினார்' - நேபாளத்தில் உயிர் தப்பிய சென்னை தம்பதி
படக்குறிப்பு, நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்திலிருந்து உயிர் தப்பிய சென்னையைச் சேர்ந்த நாவு கபீர் தாஸ் மற்றும் அவரது மனைவி விஜய புவனேஸ்வரி
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி உயிர் தப்பிய வேளச்சேரி முருகு நகரைச் சேர்ந்த தம்பதியினர் தாங்கள் மறுஜென்மம் எடுத்து வந்தது போல் இருக்கிறது என்று தெரிவித்தனர்.

நேபாளத் தலைநகர் காத்மாண்டுவிலிருந்து வெள்ளி இரவு சென்னை வந்தடைந்த 21 பேரில் நாவு கபீர்தாஸ் மற்றும் அவரது மனைவி விஜய புவனேஸ்வரி ஆகியோரும் அடங்குவர்.

வெள்ளம் ஏற்பட்ட ராசுவா பகுதியில், கும்பகோணத்தில் உள்ள ஏஜென்சி மூலமாக சென்ற 57 பேர் மூன்று பேருந்துகளில் சென்றுக் கொண்டிருந்தனர். இரு மலைகளுக்கு இடையில் கீழே ஆறு ஓடிக் கொண்டிருக்க, ஒரு வளைவான பாதையில் இயற்கை காட்சிகளை ரசித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென ஒரு பெரிய சத்தம், விழ தொடங்கிய கற்கள், பாறைகள், பாய்ந்து வந்த வெள்ளம் ஒட்டிக் கொண்டு வந்த சேறும் சகதியும் என ராசுவா சில நொடிகளில் பேரிடர் பகுதியாக மாறியது.

 நேபாள வெள்ளப்பெருக்கு

பட மூலாதாரம், Vijaya Buvaneswari

படக்குறிப்பு, நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கிய 21 பேர் வெள்ளிக்கிழமை இரவு தமிழகம் திரும்பினர்.

'பின்னால் இருந்த பேருந்து சாய்ந்தது'

மூன்று பேருந்துகளில் இரண்டாவது சென்றுக் கொண்டிருந்த பேருந்து மட்டும் வெள்ளத்தில் சிக்கிக் கொள்ளாமல் தப்பியது.

"எங்களுக்கு சில நிமிடங்கள் வரை என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. பின்னால் இருந்த பேருந்து சாய்ந்ததை பார்த்தேன். அதற்கு மேல் என்னால் அந்தக் காட்சியை பார்க்க முடியவில்லை. அப்போதுதான் நிலைமையின் தீவிரம் புரிந்தது" என்கிறார் விஜய புவனேஸ்வரி.

"திடீரென குண்டு வெடிப்பு போன்ற பெரிய சத்தம் கேட்டது, கற்கள் வந்து வேன் மீது விழ தொடங்கின. பிறகு அணையை திறந்தது போல வெள்ள நீர் பாய்ந்து வந்தது." என்று அந்த தருணத்தை விளக்குகிறார் நாவு கபீர் தாஸ்.

'20 மாடி உயரத்துக்கு ஒத்தையடி பாதையில் ஏறினோம்'

பட மூலாதாரம், Getty Images

"வாகனம் தடைபட்டதால் தப்பித்தோம்"

வெள்ளம் ஏற்படும் முன், அந்த பகுதிக்கு வரும் வழியில் அவர்களது பேருந்து சேற்றில் சிக்கி சிறிது நேரம் பழுது பார்க்க நின்றது. "அந்த சில நிமிடங்கள் தான் எங்கள் உயிரை காப்பாற்றியிருக்கிறது" என்கிறார் விஜய புவனேஸ்வரி.

அவர்களது வாகன ஓட்டி ஒரு நேபாளி, உள்ளூர்காரர். மண்சரிவுகளும், பனிச்சரிவுகளும் அடிக்கடி நிகழக் கூடிய மலைப்பகுதி அது. வெள்ளத்தை பார்த்த உடன் ஆபத்தை புரிந்து கொண்டார்.

"வேனிலிருந்து எல்லாரும் தப்பி ஓடிவிடுமாறும், மேலே செல்வதுதான் பாதுகாப்பானது என்றும் கூறிவிட்டு அவர் வேனிலிருந்து தப்பித்து ஓடிவிட்டார். அவர் சென்ற வழியில்தான், நாங்கள் சென்றோம். அந்த நேரத்தில் எங்கள் பிள்ளைகள் மட்டும்தான் நினைவுக்கு வந்தனர்" என்று விவரிக்கிறார் விஜய புவனேஸ்வரி.

 நேபாள வெள்ளப்பெருக்கு

பட மூலாதாரம், Vijaya Buvaneswari

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

ஒரு மாடி அளவுக்கு மேடான இடத்தில் ஏறி தான் அங்கிருந்து தப்பிக்க வேண்டும். உயிர் தப்பிய 21 பேரில் ஒரு சிலரை தவிர மற்றவர்கள் 50 வயதை கடந்தவர்கள். உயிர் தப்பிக்க சேரும், சகதியுமாக இருந்த மண் மேட்டில் எப்படியாவது ஏறியாக வேண்டும்.

" நானும் மற்றொரு பெண்ணும் ஏறி, பாதி வழியில் சறுக்கி விழுந்துவிட்டோம். இரண்டு முறை நான் சறுக்கி விழுந்தேன். கால் முழுவதும் சேறு. பிடிமானம் இல்லை" என்று கூறிய விஜயபுவனேஸ்வரி, மேலே சென்றடைந்திருந்த மற்றொரு பெண் தன்னுடைய புடவையை கழற்றி நீட்ட அதை இறுகப் பற்றிக் கொண்டு மேலே வந்துள்ளார்.

"எனது உறவினர் பூங்கொடி மேலே சென்றுவிட்டார். அவர் மட்டும் தான் அன்று புடவை அணிந்திருந்தார். அவர் ஸ்வட்டரை மாட்டிக் கொண்டு, தனது புடவையை கழற்றி எங்களுக்காக கீழே நீட்டினார். அதையும் அங்கிருந்த கேபிள் ஒன்றையும் இறுகப்பற்றி மேலே வந்தோம்" என்கிறார் அவர்.

தொடர்ந்து பேசிய அவர், "ஒரு மாடி அளவு இருந்த மண் மேட்டை நாங்கள் அனைவரும் ஏறி செல்ல ஒன்றரை மணி நேரம் ஆகியிருக்கும். ஒரு இடத்தில் மரக்கிளையை பிடித்த போது அது உடைந்து விட்டது. பிறகு மரங்கள் பிடிக்காமல் புடவையை பிடித்து ஏறினோம். கடைசியாக ஒரு பெண் மட்டும் மேலே வர முடியாமல் இருந்தார். புடவையை அவரது இடுப்பில் கட்டிக்கொள்ள சொல்லி, அதை பிடித்து எங்கள் குழுவில் வந்தவர்கள் அப்படியே அவரை மேலே தூக்கினர்" என்றார்.

நேபாள வெள்ளப்பெருக்கு

பட மூலாதாரம், Vijaya Buvaneswari

படக்குறிப்பு, உயிர் தப்பித்த 21 பேர் பயணித்த பேருந்து.

மேலே ஏறி அவர்கள் பார்த்தது ஒரு பேரிடர் மீட்பு மையத்தை.

அங்கிருந்தவர்கள் சிலர் அவர்களுக்கு தண்ணீர், பிஸ்கட் கொடுத்து ஆசுவாசப்படுத்தியுள்ளனர். செல்போனில் சிக்னல் கிடைத்தவர்கள் மூலமாக தாங்கள் பத்திரமாக இருக்கிறோம் என்ற தகவலை தமிழகத்துக்கு அனுப்பினர்.

"எங்கள் குழுவில் வந்தவர் ஒருவரின் உறவினர் தலைமை செயலகத்தில் பணிபுரிகிறார். அவர் மூலமாக அரசை தொடர்பு கொள்ள முடிந்தது. நாங்கள் பத்திரமாக இருக்கிறோம் என்பதற்கு சாட்சியாக புகைப்படம் ஒன்றை அனுப்பினோம்" என்று விஜய புவனேஸ்வரி கூறினார்.

அவர்கள் மேலே ஏறும் போது மண்ணில் சிக்கிய ஒருவர் தனது கைகளை ஆட்டி ஆட்டி காண்பித்துள்ளார். "அவரை பார்த்த பிறகு, எங்களால் ஏறவும் முடியவில்லை, அங்கே இருக்கவும் முடியவில்லை" என்று கூறும் போதே விஜய புவனேஸ்வரி அழ தொடங்கிவிட்டார். பின்பு மீட்புப் படையினரிடம் தகவல் தெரிவித்து பின்பு அவர் மீட்கப்பட்டுள்ளார்.

"மேலே ஏறிய பிறகு தான் நாங்கள் வந்த பேருந்து எங்குள்ளது என்று பார்த்தோம். எங்கள் பேருந்தை மட்டும் தான் பார்க்க முடிந்தது. அதற்கு முன்னால் சில வாகனங்கள் புரண்டு கிடந்தன. ஒரு வாகனத்தின் டயர் மட்டும் வெளியே தெரிந்தது. அப்போது தான் எவ்வளவு தூரத்துக்கு சேற்று மண் கிடந்தது என்று உணர்ந்தோம்." என்கிறார் அவர்.

நேபாள வெள்ளப்பெருக்கு

பட மூலாதாரம், Getty Images

'20 மாடி உயரத்துக்கு ஒத்தையடி பாதையில் ஏறினோம்'

பேரிடர் மீட்பு மையத்தில் ஒன்றரை நாட்கள் தங்கியிருந்தனர். அவர்களது இன்னல்கள் அத்துடன் முடியவில்லை. ஒரு மாடி அளவு உயரம் கொண்ட மண்மேட்டை ஏறி கடந்த அவர்கள், தற்போது 20 மாடி அளவு உயரம் கொண்ட மலைபாங்கான இடத்தை ஏறி கடக்க வேண்டும்.

"அது ஒத்தை அடி பாதை போன்றது. எப்படி ஏறினோம் என்றே தெரியவில்லை. இருபுறமும் செடி கொடிகள் இருந்தன. உயிர் பிழைக்க வேண்டும் என்ற மன தைரியத்தில் ஏறிவிட்டோம்" என்கிறார் நாவு கபீர்தாஸ்.

யாருக்கும் மலையேறிய அனுபவம் இல்லாததால் அந்த பயணம் மிகவும் கடினமானதாக இருந்ததாக அவர் கூறுகிறார். "சேறும் சகதியும் நிறைந்திருந்ததால், அடிக்கடி வழுக்கியது, தவறினால் 50 அடி ஆழத்தில் விழ வேண்டும்.

"ஒரு இடத்தில் தவறாக போய்விட்டோம். நேபாளி ஒருவர் தான் வழிகாட்டினார். கீழே இறங்கி, பிறகு வேறு திசையில் மேலே செல்ல வேண்டும். மேலே ஏறுவதை விட கீழே இறங்குவது கடினமாக இருந்தது. நான் உட்கார்ந்து உட்கார்ந்துதான் இறங்கினேன்"

நேபாள் பெருவெள்ளம்

பட மூலாதாரம், Vijaya Buvaneswari

மூன்று மணி நேரங்கள் கழித்து ஹெலிகாப்டர்கள் அழைத்துச் செல்லும் இடத்துக்கு வந்தனர். அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் பாதுகாப்பான இடத்துக்கு வந்தனர். நேபாளத்தில் உள்ள இந்திய தூதரகத்தினருடன் தொடர்பு கொண்டு பிறகு சொந்த ஊர் திரும்பினர்.

சென்னை, கடலூர், மயிலாடுதுறை, கிருஷ்ணகிரி, திருச்சி ஆகிய பகுதிகளை சேர்ந்த 21 பேர் தமிழகம் திரும்பியுள்ள நிலையில் தமிழ்நாட்டிலிருந்து சுமார் 400க்கும் மேற்பட்டோர் நேபாளத்துக்கு சென்றிருப்பதாகவும் அதில் 90 பேரை இன்னும் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் வெள்ளிக்கிழமை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்திருந்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு