இரான் போர்: டிரம்பை கண்டிக்கும் விதமாக தீர்மானம் நிறைவேற்றிய அமெரிக்க நாடாளுமன்றம்

    • எழுதியவர், சரீன் ஹபெஷியன்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இரானில் நடக்கும் போரை நிறுத்த வேண்டும் அல்லது ராணுவ நடவடிக்கையைத் தொடர்வதற்கு முன்பு நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்று உத்தரவிடும் ஒரு நடவடிக்கைக்குக் குடியரசுக் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள அமெரிக்க செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது.

செவ்வாய்க்கிழமையன்று நடந்த 50-48 என்ற கணக்கிலான வாக்கெடுப்பில் குடியரசுக் கட்சியினர் சிலர் ஜனநாயகக் கட்சியினருடன் இணைந்து வாக்களித்தனர், இது இந்த மோதல் மற்றும் ஏப்ரல் மாதத்தில் எட்டப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்த இருதரப்பு கவலையைக் காட்டுகிறது.

இதே போன்ற ஒரு நடவடிக்கை ஜூன் மாதத்தில் அமெரிக்க பிரதிநிதிகள் சபையாலும் நிறைவேற்றப்பட்டது, குடியரசுக் கட்சியை சேர்ந்த 4 உறுப்பினர்கள் ஜனநாயகக் கட்சியினருடனும் இணைந்து 215-208 என்ற வாக்கெடுப்பில் இதற்கு ஒப்புதல் அளித்தனர்.

ஆனால் இந்தத் தீர்மானம் பெரும்பாலும் அடையாளப்பூர்வமானது மட்டுமே, ஏனென்றால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட பிறகும், இது டொனால்ட் டிரம்பின் பரிசீலனைக்கு அனுப்பப்படாது என்பதுடன் சட்டத்தின் அதிகாரத்தைக் கொண்டிருக்காது.

1973-ஆம் ஆண்டின் போர் அதிகாரங்கள் தீர்மானம் இயற்றப்பட்ட பிறகு, ஒரு அதிபர் ராணுவ நடவடிக்கையை முடிவுக்குக் கொண்டு வர உத்தரவிடும் இணைத் தீர்மானத்துக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒப்புதல் அளிப்பது இதுவே முதல் முறையாகும்.

ஒரு இணைத் தீர்மானம் என்பது நாடாளுமன்றத்தின் உணர்வையோ அல்லது விருப்பத்தையோ வெளிப்படுத்துகிறது, இது அதிபரின் கையொப்பத்தைப் பெற்றுச் சட்டமாக மாறும் மற்ற சட்ட வடிவங்களுக்கு மாறானது. 2019 ஆம் ஆண்டில், ஏமன் உள்நாட்டுப் போரின் மோதல்களில் இருந்து ஆயுதப் படைகளை அகற்றுமாறு கோரிய ஒரு கூட்டுத் தீர்மானத்தை டொனால்ட் டிரம்ப் வீட்டோ அதிகாரம் மூலம் ரத்து செய்தார்.

பெட்ரோல் விலைகள் உயர்ந்துள்ளதாலும், போருக்குப் பொதுமக்களின் எதிர்ப்பு அதிகரித்துள்ளதாலும், இரான் போருக்கு ஒரு முடிவைக் காண வெள்ளை மாளிகை எதிர்கொள்ளும் அழுத்தத்தை இது அதிகரிப்பதால், இந்த கூட்டுத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது.

ஆனால், ஏப்ரல் 7-ஆம் தேதி போர்நிறுத்தம் ஒப்புக்கொள்ளப்பட்டதன் மூலம், அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெறுவதற்கான எந்தவொரு விரோதப் போக்கும் அங்கு இல்லை என்று வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

மிட்ச் மெக்கானல் மற்றும் டேவ் மெக்கார்மிக் ஆகிய குடியரசுக் கட்சி செனட் உற்ப்பினர்கள் இரண்டு பேர் வராததால்தான் இந்த நடவடிக்கை நிறைவேற்றப்பட்டது என்றும் அந்த அதிகாரி கூறினார்.

ராண்ட் பால், லிசா முர்கோவ்ஸ்கி, சூசன் காலின்ஸ் மற்றும் பில் காசிடி. ஆகிய குடியரசுக் கட்சி செனட் உறுப்பினர்கள் நான்கு பேர் இந்தத் தீர்மானத்துக்கு ஆதரவாக ஜனநாயகக் கட்சியினருடன் இணைந்து வாக்களித்தனர்.

ஜனநாயகக் கட்சி செனட் உறுப்பினர் ஜான் ஃபெட்டர்மேன் மட்டுமே தனது கட்சியில் இருந்து இதற்கு எதிராக வாக்களித்த ஒரே உறுப்பினர் ஆவார்.

நவம்பரில் நடக்கவிருக்கும் இடைக்காலத் தேர்தலுக்கு முன்னதாக, டொனால்ட் டிரம்ப்பின் சக குடியரசுக் கட்சியினரிடையே நிலவும் பிளவின் சமீபத்திய அறிகுறியாக இது இருந்தது. இந்தத் தேர்தல் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கட்சி தனது மெல்லிய பெரும்பான்மையைத் தக்க வைத்துக் கொள்ள முடியுமா என்பதைத் தீர்மானிக்கும்.

1.8 பில்லியன் டாலர் (1.3 பில்லியன் பவுண்டு) "ஆயுத எதிர்ப்பு" நிதியை உருவாக்குவதற்கான அவரது திட்டங்களை நிராகரிப்பது, யுக்ரேன் உதவிக்கு ஒப்புதல் அளிப்பது உள்ளிட்டவற்றில் குடியரசுக் கட்சியினர் சிலர் சமீபத்தில் அதிபரை எதிர்த்துள்ளனர்.

போர் தொடங்கியதில் இருந்து செனட் ஜனநாயகக் கட்சியினர் போர் அதிகாரங்கள் மீதான வாக்கெடுப்பைக் கட்டாயப்படுத்துவது செவ்வாய்க்கிழமை நடந்த வாக்கெடுப்புடன் சேர்த்து 10-ஆவது முறையாகும்.

பெரும்பாலும் இரானுடனான போருக்கான செலவை ஈடுசெய்வதற்காக பாதுகாப்பு துறை நாடாளுமன்றத்திடம் சுமார் 80 பில்லியன் டாலர்களைக் கேட்ட அதே நாளில் இது நிகழ்ந்தது,

ராணுவ நடவடிக்கைகளை 60 நாட்களுக்கு மேல் தொடர நாடாளுமன்றத்தின் ஒப்புதல் தேவை என்று கூட்டாட்சி சட்டம் கூறுகிறது. இரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதல்கள் பிப்ரவரி 28 அன்று தொடங்கின, இருப்பினும் ஏப்ரல் மாத போர்நிறுத்தம் கால அவகாசத்தை மீண்டும் பூஜ்ஜியத்திலிருந்து தொடங்கியுள்ளதாக டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் வாதிட்டது.

தேசியப் பாதுகாப்பைக் காரணம் காட்டி, வெள்ளை மாளிகை இந்த காலக்கெடுவை மேலும் 30 நாட்களுக்கு நீட்டிக்க முடியும்.

தற்போது, அமெரிக்காவும் இரானும் போர்நிறுத்தத்தைத் தொடர ஒப்புக்கொண்டுள்ளன, மேலும் கடந்த வாரம் இரு நாடுகளின் அதிபர்களும் கையெழுத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் மோதல்களை முடிவுக்குக் கொண்டுவரப் பணியாற்றி வருகின்றன.

அந்த ஒப்பந்தத்தின் கீழ், இரானின் அணுசக்தி திட்டத்தை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்த பரந்த ஒப்பந்தத்தைப் பேச்சுவார்த்தை மூலம் முடிவு செய்ய அமெரிக்கா மற்றும் இரானுக்கு 60 நாட்கள் அவகாசம் உள்ளது.

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு