இரான் போர் பிரிக்ஸ் நாடுகளின் உறவுகளை மறுவடிவமைத்தாலும் வெளிப்பட்டுள்ள பிளவுகள் என்ன?

பட மூலாதாரம், Reuters
- எழுதியவர், அசாதே மோஷிரி
- பதவி, தெற்காசிய செய்தியாளர்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
இந்த வார இறுதியில், உலகின் மிகவும் சக்திவாய்ந்த சில தலைவர்கள் டெல்லியில் ஒரு மாநாட்டில் ஒன்று கூடினர்.
இந்திய பிரதமர் நரேந்திர மோதி, தமக்கு அருகில் அமர்ந்திருந்த தலைவர்கள் இனி அதிகளவில் "விதிகளை ஏற்றுக்கொள்பவர்களாக" அல்லாமல், "விதிகளை உருவாக்குபவர்களாக" மாற வேண்டும் என்று அறிவித்தார்.
அங்கு இருந்தவர்களில், பிரிக்ஸ் குழு உறுப்பினர்களான சீன அதிபர் ஷி ஜின்பிங், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், இரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான், அபுதாபியின் பட்டத்து இளவரசர் ஷேக் காலித் பின் முகமது பின் சயீத் அல் நஹ்யான் மற்றும் தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசா ஆகியோரும் அடங்குவர்.
இவர்கள் இயல்பான கூட்டாளிகள் என்று கூறிவிட முடியாது. இவர்களுக்கு இடையே எல்லைப் பிரச்னைகள் மட்டுமின்றி, ராணுவ மோதல்கள் கூட நிகழ்ந்துள்ளன.
2020-ஆம் ஆண்டு, இந்தியாவும் சீனாவும் சர்ச்சைக்குரிய தங்களது எல்லைப் பகுதியில் உயிரிழப்புகளை ஏற்படுத்திய மோதலில் ஈடுபட்டன.
மத்திய கிழக்கில் நடைபெற்ற போரில் இரானும் ஐக்கிய அரபு எமிரேட்ஸும் எதிரெதிர் தரப்புகளில் இருந்தன. இந்த மோதல் உலகப் பொருளாதாரங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், பிரிக்ஸ் அமைப்பின் மற்றொரு உறுப்பினரான ஐக்கிய அரபு எமிரேட்ஸை நோக்கி இரான் ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை ஏவியது.
இந்த தலைவர்களை நேரில் ஒன்றாகக் கூட்டி வருவதில் இந்தியா வெற்றி பெற்றதே ஒரு சாதனையாகும்.
இது இந்தியாவின் தூதரக ரீதியிலான செல்வாக்கிற்கும் சான்றாக அமைந்துள்ளது. இரான் போரை கருத்தில் கொண்டு, இந்த வார இறுதி சந்திப்பு நாடுகளுக்கு இடையிலான உறவுகளை மறுமதிப்பீடு செய்வதற்கான ஒரு தளத்தையும் வழங்கியது.
ஆனால், புதிய உலக ஒழுங்கு எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து ஒருமித்த கருத்தை எட்டுவதும், தெளிவான மற்றும் உறுதியான முடிவுகளைப் பெறுவதும் மிகவும் கடினமான பணியாக இருந்தது.
இந்த பதற்றமே கடந்த வார இறுதியில் நடைபெற்ற உச்சி மாநாடு முழுவதும் நிலவியது.
மேற்கத்திய செல்வாக்கிற்கு ஒரு எதிர்சக்தி
சீனா, ரஷ்யா மற்றும் இரான் போன்ற நாடுகளுக்கு, அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பாவின் செல்வாக்கைக் குறைப்பதற்கான ஒரு வழிமுறையாக பிரிக்ஸ் அமைப்பு உள்ளது.
ஆனால், பிரிக்ஸ் அமைப்பை மேற்கத்திய நாடுகளுக்கு எதிரான கூட்டமைப்பாக முன்னிறுத்த இந்தியா தயக்கம் காட்டி வருகிறது. உச்சி மாநாட்டில் பேசிய பிரதமர் மோதியே, இந்தக் குழு "யாருக்கும் எதிரானது அல்ல" என்று கூறினார்.
ஒருவருக்கொருவர் முரண்பட்ட நிலையில் இருக்கும் நாடுகளுடனான தனது உறவுகளைத் தொடர்ந்து பாதுகாக்க விரும்பும் இந்தியாவுக்கு , இந்த வேறுபாடு முக்கியமானதாகும்.
"இந்த குழுவில், இது மேற்கத்திய நாடுகளுக்கு எதிரானதாக மாற வேண்டும் என்று விரும்பும் நாடுகள் உள்ளன. ஆனால், இது அப்படியானது அல்ல" என்று அனுபவமிக்க இந்திய தூதரக அதிகாரியும் முன்னாள் தூதருமான அனில் திரிகுணாயத் கூறுகிறார்.
அவரது பார்வையில், இந்தியா சாதித்திருப்பது "போர் நிறைந்த காலகட்டத்தில் உத்தி சுயாட்சிக்கான'' முன்னெடுப்பையும், "தங்களுக்குள் அதிகளவிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான" முயற்சிகளையும் ஆகும்.

பட மூலாதாரம், Getty Images
கூட்டு அறிக்கை
உறுப்பு நாடுகளுக்கு இடையிலான கருத்து வேறுபாடுகள் எப்போதும் இல்லாத அளவுக்கு வெளிப்படையாக இருந்த நிலையில், இந்த உச்சி மாநாடு கூட்டு அறிக்கையை வெளியிடுவதில் வெற்றி பெற்றது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் இரண்டு முறை, பிரிக்ஸ் அமைச்சர்களுக்கு இடையிலான கூட்டங்கள் கூட்டு அறிக்கையை வெளியிடத் தவறின. இந்த முறை ஒருமித்த கருத்து எட்டப்பட்டது.
ஆனால், உறுப்பு நாடுகள் கடுமையாக முரண்படும் விவகாரங்களைத் தவிர்த்து, சில தீர்வுகளுடன் ஒருமித்த கருத்து எட்டப்பட்டது.
உச்சி மாநாட்டின் முதல் நாளிலேயே "புதுடெல்லி பிரகடனம்" ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால், அதில் இடம்பெறாத விஷயங்கள் தான் கவனிக்கத்தக்கதாக உள்ளன.
மத்திய கிழக்கில் நடைபெறும் போர் குறித்து, இந்தப் பிரகடனம் "அதிகபட்ச கட்டுப்பாட்டுடன்" செயல்படுமாறு வலியுறுத்துகிறது.
பொதுமக்களின் உள்கட்டமைப்புகள் மற்றும் ராணுவமற்ற நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் அணுசக்தி நிலையங்கள் மீதான "தாக்குதல்களையும்" கண்டிக்கிறது. ஆனால், இதற்கு யார் காரணம் என்பதை குறிப்பிடவில்லை.
இரு நாடுகள் தீர்வுக்கான ஆதரவை மீண்டும் வலியுறுத்துவதுடன், பாலத்தீனியர்களை வலுக்கட்டாயமாக இடம்பெயரச் செய்வதையும் அல்லது "ஆக்கிரமிப்பை சட்டபூர்வமாக்கும் அல்லது நீடிக்கச் செய்யும்" நடவடிக்கைகளையும் எதிர்க்கிறது.
ஏற்கனவே உள்ள ஐ.நா. தீர்மானங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த நிலைப்பாடு கவனமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
ரஷ்யா யுக்ரேனில் நடத்தி வரும் போர் குறித்து இதில் எந்தக் குறிப்பும் இல்லை. முந்தைய பிரிக்ஸ் பிரகடனங்களில் இருந்து இது மாறுபட்டதாகும்.
வர்த்தக விவகாரத்திலும் இதேபோன்ற எச்சரிக்கையான அணுகுமுறை உள்ளது.
"பாகுபாடின்றி அதிகரித்து வரும் வரிகள்" குறித்த கவலைகளை அது பட்டியலிடுகிறது. ஒருதலைப்பட்சமான தடைகளையும் கண்டிக்கிறது. ஆனால், அமெரிக்காவின் பெயரை குறிப்பிடுவதைத் தவிர்க்கிறது. இதனால் அமெரிக்காவின் கோபத்தைத் தவிர்க்கும் வாய்ப்புள்ளது.
பல பிரிக்ஸ் உறுப்பு நாடுகள், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கோபத்தைத் தூண்ட விரும்பாமல் இருந்திருக்கும்.
ஏனெனில், எல்லை தாண்டிய வர்த்தகத்திற்காக மத்திய வங்கிகளின் டிஜிட்டல் நாணயங்களை இணைப்பது உள்ளிட்ட குழுவின் முன்மொழிவுகளை டிரம்ப் ஏற்கனவே "அமெரிக்காவுக்கு எதிரானவை" என்று கூறியுள்ளார்.
"மத்திய கிழக்கில் நடைபெறும் மோதலை அவர்கள் கண்டித்தபோதிலும், எந்த ஒரு நாட்டின் பெயரையும் குறிப்பிடாமல் இருப்பது இந்தியாவின் அணுகுமுறையின் அடையாளமாகும்" என்று சர்வதேச நெருக்கடி குழுமத்தின் மூத்த ஆய்வாளர் பிரவீன் டோந்தி கூறுகிறார்.
"வரிகள் குறித்து வலுவான குறிப்பு இடம்பெற்றிருந்தது எனக்கு மகிழ்ச்சியான ஆச்சரியத்தை அளித்தது. இந்தியா இதுகுறித்து குறைவான நேரடி நிலைப்பாட்டை எடுத்திருக்கலாம். ஆனால், தங்களது அதிருப்தியை வெளிப்படுத்த இது ஒரு வாய்ப்பாக இருந்திருக்கலாம்" என்றும் அவர் கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
உச்சி மாநாட்டுக்கு அப்பால்
டிரம்பின் வர்த்தக அச்சுறுத்தல்கள் மற்றும் மத்திய கிழக்கில் ஏற்பட்ட போரின் அதிர்ச்சியைத் தொடர்ந்து, உலகளாவிய ஒழுங்கை மறுவடிவமைப்பது பல உறுப்பு நாடுகளின் பொருளாதாரங்களுக்கு அத்தியாவசியத் தேவையாக மாறியுள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாத சந்திப்புகளுக்கான ஒரு தளத்தை இந்த உச்சி மாநாடு வழங்கியது.
இரான் அதிபர் பெசெஷ்கியான் மற்றும் அபுதாபியின் பட்டத்து இளவரசர் ஆகியோர் ஒன்றாக அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர். போர் தொடங்கியதிலிருந்து இரு நாடுகளுக்கும் இடையே நடைபெற்றதாக அறியப்படும் மிக உயர்மட்ட நேருக்கு நேர் சந்திப்பு இதுவாகும்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ராணுவத் தாக்குதல்கள் மற்றும் பொருளாதார அழுத்தங்களுக்கு மத்தியில் இரான் தனித்து நிற்கவில்லை என்பதை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பை இந்த வார இறுதி மாநாடு இரானுக்கு வழங்கியது.
அமெரிக்கத் தடைகள், அமெரிக்காவின் துறைமுகங்கள் மீதான கடற்படை முற்றுகை ஆகியவற்றை இரான் எதிர்கொள்ள முயற்சித்து வரும் நிலையில், மலேசியா, இந்தியா மற்றும் எத்தியோப்பியா உள்ளிட்ட பிரிக்ஸ் உறுப்பு நாடுகளுடனான ஆழமான பொருளாதார உறவுகளை ஏற்படுத்த பெசெஷ்கியான் வலியுறுத்தினார்.
சீனாவைப் பொறுத்தவரை, அதிபர் ஷி டெல்லிக்கு வருவது ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு இதுவே முதல் முறையாகும்.
2020-ஆம் ஆண்டு எல்லைப் பிரச்னைக்குப் பிறகு சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே ஆழமான அவநம்பிக்கை நிலவி வந்தது. ஆனால், அந்தப் பதற்றங்கள் தணிந்துள்ளன.
இரு நாடுகளுக்கும் இடையே பெரிய அளவிலான வர்த்தக ஏற்றத்தாழ்வும் உள்ளது. இதில் சீனாவுக்கு சாதகமாக வர்த்தகப் பற்றாக்குறை பெருமளவில் உள்ளது.
ஷிக்கும் மோதிக்கும் இடையே அன்பான கைகுலுக்கல் இடம்பெற்றது. ஆனால், மோதி வழக்கமாக அன்பாக அணைக்கும் நிகழ்வு நடைபெறவில்லை.
சனிக்கிழமை இரவு மோதி ஏற்பாடு செய்திருந்த விருந்திலும் பங்கேற்காமல், ஷி 24 மணி நேரத்திற்கும் குறைவாகவே டெல்லியில் தங்கினார்.
ஆனால், மிகவும் கடினமான உறவைக் கொண்டுள்ள இந்த இரு நாடுகளுக்கும் இந்த வார இறுதி சந்திப்பு இன்னும் ஒரு முக்கியமான தருணமாக அமைந்தது.
அதிகாரப்பூர்வ அறிக்கைகளின்படி, இரு தலைவர்களும் வர்த்தக உறவுகள் மற்றும் போக்குவரத்து இணைப்புகளை வலுப்படுத்தவும், வர்த்தகத்திற்கான தடைகளை அகற்றவும் ஒப்புக்கொண்டனர்.
சமீபத்திய ஆண்டுகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் படிப்படியாக மேம்பட்டு வருவதன் ஒரு பகுதியாகவே இதை பார்க்க வேண்டும் என்றும், இரு தரப்பிலும் இணைந்து செயல்படுவதற்கான விருப்பம் இருப்பதாகவும் திரிகுணாயத் நம்புகிறார்.
ஆனால், இது குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்துமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
"நாம் நம்ப வேண்டும், ஆனால் முதலில் சரிபார்க்க வேண்டும் என்று நான் எப்போதும் கூறுவேன்" என்று அவர் கூறுகிறார்.
அடுத்து என்ன நடக்கும்?
மேற்கத்திய நாடுகளின் ஆதிக்கம் கொண்ட அமைப்புகளுக்கு வெளியே, போட்டி மனப்பான்மை கொண்ட நாடுகள் பேச்சுவார்த்தை நடத்தவும், தங்களது நிலைப்பாடுகளை முன்னெடுக்கவும் பிரிக்ஸ் அமைப்பால் ஒரு வாய்ப்பை உருவாக்க முடியும் என்பதை இந்த உச்சி மாநாடு வெளிப்படுத்தியது.
அடுத்து என்ன நடக்கும் என்பதே மிகவும் கடினமான கேள்வி.
முன்னெப்போதையும் விட தங்களுக்கு ஒரு புதிய உலக ஒழுங்கு தேவை என்பதில் உறுப்பு நாடுகள் உடன்படுகின்றன என்பது தெளிவாகிறது. ஆனால், அதற்குப் பதிலாக எதை கொண்டு வருவது, அதை எவ்வாறு நடைமுறைக்கு கொண்டு வருவது என்பதற்கான பதிலைக் கண்டறிவது மிகவும் சவாலானதாக உள்ளது.
கூடுதல் தகவல்கள்: சார்லட் ஸ்கார்
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































