You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
"முகத்தில் ரத்தத்தை பூசி உயிர் பிழைத்தேன்" - எவரெஸ்டில் ஏறிய முதல் ஆப்கானிய பெண் கூறுவது என்ன?
- எழுதியவர், நவீன் சிங் கட்கா
- பதவி, பிபிசி சுற்றுச்சூழல் செய்தியாளர்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்
மலையேறும் வீராங்கனையான ஜகியா அகமது, எவரெஸ்ட் சிகரத்தின் மீது ஏறிய முதல் ஆப்கானிய பெண்மணி என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
ஆஸ்திரேலியாவில் புலம்பெயர்ந்து வாழ்ந்து வந்த 30 வயதான ஜகியா, மே 21 அன்று 8,848 மீட்டர் உயரமுள்ள எவரெஸ்ட் சிகரத்தில் கால் பதித்து வரலாறு படைத்தார்.
தற்போது ரிவர் அகமது என்று அழைக்கப்படும் மலையேறும் வீராங்கனையான ஜகியா அகமது, தனது அனுபவத்தைப் பற்றி பிபிசியிடம் கூறுகையில், "உலகின் கூரை போல் தோன்றிய இந்த சிகரத்தில் ஏறும் போது நான் மிகவும் சக்திவாய்ந்தவளாக உணர்ந்தேன்" என்றார்.
தனது வெற்றியின் மூலம், வரலாற்றின் மிக இருண்ட காலத்தையும் தாண்டி அவர்கள் வருவார்கள் என்ற செய்தியைத் தனது நாட்டுப் பெண்களுக்குச் சொல்லவேண்டும் என அவர் விரும்புகிறார்.
ரிவர் அகமது இரண்டாவது தாலிபன் ஆட்சியின் போது தப்பித்து, பின்னர் இந்தியாவுக்கும், அதன் பிறகு ஆஸ்திரேலியாவுக்கும் சென்றார்.
அவர் இதற்கு முன்பு ஆப்கானிஸ்தானில் பல்கலைக்கழக மாணவியாக இருந்தார், ஆனால் அங்கு விதிக்கப்பட்ட தடைகள் அவருக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தின.
பின்னர், ஆஸ்திரேலியாவிற்குக் குடிபெயர்ந்தபோது, அவரது சகோதரனின் திடீர் மரணம் அவருக்கு இரண்டாவது பேரிடியாக அமைந்தது.
இந்த காலகட்டத்தில், நதிகள் அவரைத் தொடர்ந்து முன்னேறத் தூண்டின. இதனால், ஜகியா அகமது என்பதில் இருந்து அவர் ரிவர் அகமது என்று தனது பெயரை மாற்றிக்கொண்டார்.
தனது மலையேற்றத்திற்கு முன்பு, "நான் ஒரு நோக்கத்திற்காக மலையேறுகிறேன்... சுதந்திரத்திற்காகவும் கல்விக்காகவும் மலையேறுகிறேன்" என்று ரிவர் அகமது கூறியிருந்தார்.
' உலகின் கவனத்தை ஈர்ப்பதே நோக்கம்'
தனது சாதனையின் மூலம், 2021-இல் தாலிபன்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு, 12 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான கல்விக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தானின் சூழ்நிலையை உலக நாடுகளின் கவனத்திற்குக் கொண்டு வர ரிவர் அகமது விரும்புகிறார்.
இந்த பயணத்தின் போது , நாங்கள் அவரை பேஸ் கேம்பில் சந்தித்தோம். இந்த பாதையில் 7,950 மீட்டர் உயரத்தில் உள்ள கேம்ப் ஃபோர் தான் மிக உயர்ந்த முகாம் ஆகும்.
மேலும் இங்கிருந்து சிகரத்தை (8,849 மீட்டர்) நோக்கிய பயணம் ஒரு "மரண மண்டலத்தின்" வழியாகக் கடந்து செல்கிறது, அங்கு ஆக்ஸிஜன் அளவு கடல் மட்டத்தில் இருப்பதை விட வெறும் 30%-ஆகக் குறைந்துவிடுகிறது.
ரிவர் அகமது கூறுகையில், "இந்த கடினமான மலை ஏற்றத்தின் போது, அவரை முன்னேறச் செய்தது அவரது வாழ்க்கை அனுபவங்களின் நினைவுகள் தான். அந்த நினைவுகள், தாலிபன் தாக்குதலிலிருந்து எப்படியோ தப்பித்தது பற்றியவையாக இருந்தாலும், அல்லது ஆஸ்திரேலியாவுக்குச் சென்று புதிய கலாச்சாரத்துக்கு பழகிக்கொண்டதாக இருந்தாலும் , அந்த நினைவுகள் தான் அங்கு சென்றடைய அவருக்கு ஊக்கமளித்துள்ளன".
இறந்தது போல் நடித்த ரிவர் அகமது
ரிவர் அகமது இதற்கு முன்பு ஆப்கானிஸ்தானில் பல்கலைக்கழக மாணவியாக இருந்தார், ஆனால் அங்கிருந்த கட்டுப்பாடுகள் அவரை கடுமையாகப் பாதித்தன.
தாலிபன்களின் முதலாவது ஆட்சிக் காலத்தில், பெண் கல்விக்கு இன்னும் கடுமையான கட்டுப்பாடுகள் இருந்தபோது ரிவர் அகமது பிறந்தார்.
ஆனால் 2001-இல் அமெரிக்கா தலைமையிலான படையெடுப்பிற்குப் பிறகு, தாலிபன்கள் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டனர். இது சிறுமிகள் மீண்டும் பள்ளிக்குத் திரும்ப வழிவகுத்ததுடன், பெண்கள் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பைப் பெறுவதற்கான வாய்ப்புகளையும் அதிகரித்தது.
ஆப்கானிஸ்தானின் தென்கிழக்கில், இந்து குஷ் மலைகளுக்கு தெற்கே அமைந்துள்ள கசினியில் தான் வளர்ந்ததாக அகமது கூறுகிறார்.
"ஒவ்வொரு நாளும் எனது பள்ளி வகுப்பை அடைவதற்காக, ஆழமான பனியின் வழியே மலையில் ஏறியும் இறங்கியும் நான்கு மணி நேரம் நான் நடப்பேன்" என்கிறார் ரிவர் அகமது.
மேலும், 2014-ஆம் ஆண்டில், காபூலில் உள்ள பல்கலைக்கழகத்தில் பயில்வதற்குத் தனது குடும்பத்தினரை அவர் சம்மதிக்க வைத்ததாக அவர் கூறினார்.
தாலிபன் போராளிகள் ஒரு பேருந்தை நிறுத்தி துப்பாக்கிச் சூடு நடத்தியபோது, அந்தப் பேருந்தில் இருந்த ஒரே பெண் அவர்தான்.
அந்தச் சம்பவம் தனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருந்த நேரத்தில் நடந்ததாகவும், அவர் விரைவாகத் தனது முகத்தில் சிறிதளவு ரத்தத்தைப் பூசிக்கொண்டதாகவும் ரிவர் அகமது குறிப்பிட்டார்.
தாக்குதல் நடத்தியவர்கள் அவர் இறந்துவிட்டதாக நினைத்து அவரை விட்டுச் செல்லும் வரை, அவர் அமைதியாகப் படுத்துக் கிடந்ததாகக் கூறுகிறார்.
அதன்பின்னர் அவரது குடும்பம் காபூலுக்குக் குடிபெயர்ந்தது.
அங்கு இதழியல் பயின்ற ரிவர் அகமது, ஒரு புனைப்பெயரில் வானொலி பத்திரிகையாளராகப் பணியாற்றினார். பின்னர் 2019-இல் இந்தியாவுக்குத் திரும்பிய அவர், மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவுக்குச் சென்றார்.
அங்கே, ஆங்கிலம் கற்றுக்கொண்டு ஒரு ஃபர்னிச்சர் நிறுவனத்தில் பணியாற்றினார்.
பத்திரிகையாளராக இருந்து மலையேறுபவராக மாறியது எப்படி ?
ஒரு துயரச் சம்பவத்திற்குப் பிறகுதான் ரிவர் அகமதுவுக்கு மலை ஏறுவதில் ஆர்வம் ஏற்பட்டது.
ஆஸ்திரேலியா வந்த ஆறே மாதங்களில், அவரது 20 வயது சகோதரர் தற்கொலை செய்து கொண்டார். தான் முற்றிலும் தொலைந்துபோனதாகவும், உடைந்துபோனதாகவும் உணர்ந்ததாக அவர் கூறுகிறார்.
இந்த காலகட்டத்தில் தான், ஆஸ்திரேலியாவின் நதிகளால் ஈர்க்கப்பட்டு, தனது முதல் பெயரை ஜகியா என்பதில் இருந்து ரிவர் என்று மாற்ற அவர் முடிவு செய்தார்.
"நதிகள் தூய்மையானவை, யாராலும் தடுக்க முடியாதவை; என்ன நடந்தாலும் அவை ஓடிக்கொண்டே இருக்கும். நானும் அதுபோலவே இருக்க வேண்டும் என்று நினைத்தேன்"என்கிறார் ரிவர் அகமது.
அதன் பிறகு, சிட்னி ஹார்பர் பாலத்தில் ஒரு குழு மலையேற்றப் பயணத்தில் சேரவும் அகமது முடிவு செய்தார்.
"வானத்தில் உயரத்தில் இருக்கும்போது நான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதைக் கண்டறிந்தேன், அப்போது தான் நான் மலையேற்றத்தை முயற்சி செய்ய வேண்டும் என நினைத்தேன்" என்று அவர் கூறுகிறார்.
அதனைத் தொடர்ந்து, பயிற்சியைத் தொடங்கி, உடற்பயிற்சி கூடத்தில் சேர்ந்தார் அகமது .
பின்னர் மெல்போர்னைச் சுற்றியுள்ள மலைகளில் ஏறினார். அதே நேரத்தில் தனது பயணத்திற்குத் தேவையான 85,000 டாலர்களைத் திரட்டவும் முயன்றார்.
இந்தத் தொகையில் நான்கில் ஒரு பங்கைத் தனது சொந்தச் சேமிப்பிலிருந்து வழங்கியதாகவும், மீதமுள்ள தொகையை ஒரு அறக்கட்டளையிடமிருந்து கடனாகப் பெற்றதாகவும் ரிவர் அகமது கூறுகிறார்.
"நிதி திரட்டுவது மிகவும் கடினமானது. இந்த பிரச்சாரத்திற்கு என்னால் எந்த ஒரு ஸ்பான்சரையும் கண்டறிய முடியவில்லை" என்று அவர் கூறுகிறார்.
இருப்பினும், இந்த வெற்றி எதிர்கால பிரச்சாரங்களுக்கு அதிக ஆதரவை வழிவகுக்கும் என்று ரிவர் அகமது நம்புகிறார்.
மலையேற்றத்தில் உள்ள சவால்
இந்த ஆண்டு எவரெஸ்ட் சிகரத்தின் மீது ஏற அனுமதி பெற்ற சுமார் 500 மலை ஏறுபவர்களில் ரிவர் அகமதுவும் ஒருவர். நேபாள அரசு இந்த ஆண்டு அதிகமானோருக்கு அனுமதிகளை வழங்கியுள்ளது.
இந்த அதிக எண்ணிக்கையானது கூடுதல் சவால்களையும் கொண்டுவருகிறது என்று அவர் கூறுகிறார்.
இந்த ஆண்டு மார்ச் மாதம் எவரெஸ்ட் பகுதியை அடைந்த பிறகு, ரிவர் அகமது 6,000 மீட்டருக்கும் அதிகமான உயரம் கொண்ட இரண்டு மலைகளில் ஏறியதுடன் பல வாரங்களாக அங்குள்ள காலநிலைக்கேற்ப தன்னை பழக்கப்படுத்தும் பயிற்சிகளையும் மேற்கொண்டார்.
மலை ஏறும் ஒவ்வொரு நபருடனும் உதவிக்கு குறைந்தபட்சம் மலை ஏறும் இன்னொரு நபர் செல்வார், அதாவது, 1,000-க்கும் மேற்பட்ட மக்கள் சிகரத்தை அடைய முயற்சி செய்கிறார்கள் என்று அவர் விளக்குகிறார்.
மலை ஏறுபவர்களுக்கு உதவியாக மலை ஏறுபவர்களில் பெரும்பாலானோர் நேபாளத்தின் ஷெர்பா சமூகத்தைச் சேர்ந்தவர்கள் .
மறுபுறம், இந்த ஆண்டு திபெத்திலிருந்து சீனா செல்லும் பாதை மலை ஏறும் வெளிநாட்டவர்களுக்கு மூடப்பட்டதால், நேபாள பாதையின் மீதான அழுத்தம் மேலும் அதிகரித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும், எவரெஸ்ட் சிகரத்தை அடைவதற்கு சாதகமான வானிலை நிலவும் காலம் மிகவும் குறுகியதாகும். இந்த காலம் வழக்கமாக மே மாதத்தின் இரண்டாம் பாதியில் அமையும்.
வானிலை சாதகமாக இருந்த அந்த ஒருசில நாட்களில், மலை ஏறுவதற்காக நீண்ட வரிசைகள் உருவானதாக ரிவர் அகமது கூறுகிறார்.
வெப்பநிலை வழக்கமாக மைனஸ் 25 டிகிரி செல்சியஸுக்கும் குறைவாக இருக்கும் சிகரத்திற்கு அருகில், அவரும் அவரது இரண்டு ஷெர்பா வழிகாட்டிகளும் நான்கு மணி நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது என்று ரிவர்ஸ் கூறுகிறார்.
"அந்த போக்குவரத்து நெரிசல் பயங்கரமாக இருந்தது. நான் மிகவும் பயந்துவிட்டேன்"என்று அவர் கூறுகிறார்.
இந்தக் காத்திருப்பு தனது மலை ஏறும் பயணத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்று தான் பயந்ததாகவும் ரிவர் அகமது தெரிவித்தார்.
ஆபத்தான நெரிசல்கள்
போதுமான அளவு ஆக்ஸிஜனைக் கொண்டு செல்லாத மலை ஏறுபவர்களுக்கு, இதுபோன்ற வரிசைகள் உயிருக்கே ஆபத்தான ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
மேலும், இத்தகைய தீவிரமான சூழ்நிலைகளில் நீண்ட நேரம் செலவிடுவது, பனிப்புண் மற்றும் பனியால் ஏற்படும் பார்வைத் திறன் இழப்பு ஆகியவற்றின் அபாயத்தை அதிகரிக்கிறது.
ஒரே நாளில் மிகப்பெரிய அளவில் 274 பேர் சிகரத்தை அடைந்ததாக அகமது கூறுகிறார். அதற்கு அடுத்த நாளில், அனுமதி தேவைப்படாத நேபாள உதவி ஊழியர்கள் உட்பட 160 பேர் சிகரத்தை அடைந்தனர்.
மறுநாளில், கீழே இறங்கும்போது, இந்தியாவைச் சேர்ந்த, மலையேற்றத்தில் ஈடுபட்ட இருவர் உயிரிழந்தனர்.
எவரெஸ்ட் பாதையில் அதிகப்படியான கூட்டம் இருப்பது குறித்த கவலைகளுக்கு மத்தியில், நேபாள அரசு சமீபத்திய ஆண்டுகளில் அனுமதிக் கட்டணத்தை உயர்த்தியுள்ளதுடன், விண்ணப்பதாரர்களுக்கான விதிகளையும் கடுமையாக்கி வருகிறது.
அதிகாரிகள் சிகரத்தை அடைவதற்கான முயற்சிகளை அடுத்தடுத்து முறைப்படுத்தி பிரிக்க பயண மேலாளர்களுடன் இணைந்து பணியாற்ற முயன்றனர், இருப்பினும் இது பயனுள்ளதாக நிரூபிக்கப்படவில்லை.
பூமியின் மிக உயர்ந்த புள்ளியில் இருந்து இயற்கையைக் காணும் ஒரு அனுபவமாக இது இருந்ததால், சிகரத்தை அடைந்ததும் அங்கிருந்து கீழே இறங்கியதும் தனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது என்று அகமது கூறுகிறார்.
முன்னாள் ஆப்கானிஸ்தான் அதிபரின் வாழ்த்து
இந்த சாதனைக்கு ஆப்கானியர்களிடையே ஒரு "அற்புதமான" வரவேற்பு கிடைத்துள்ளதாகவும், முன்னாள் அதிபர் ஹமித் கர்சாய் ஆப்கானிய பெண்களின் சாதனையாக இதனைப் பாராட்டியுள்ளார் என்றும் ரிவர் அகமது கூறுகிறார்.
"எங்களால் (ஆப்கானிய பெண்கள்) மிகவும் கடினமான பணிகளையும் செய்ய முடியும் என்ற செய்தியை இது மக்களுக்கு அனுப்பியுள்ளது"என்று அவர் கூறுகிறார்.
ஆனால் அவரது முக்கிய செய்தி மலை ஏறுவதையும் தாண்டி வெகுதூரம் செல்கிறது.
"இன்றும் கூட, மில்லியன் கணக்கான ஆப்கானிய சிறுமிகள் கல்விக்கான அடிப்படை உரிமையை இழந்துள்ளனர், நாம் அந்த மலையையும் ஏற வேண்டும்" என்று ரிவர் அகமது கூறுகிறார்.
மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு, தாலிபன் அரசாங்கம், பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான இடைநிலைக் கல்வி மற்றும் உயர்கல்வி மீதான தடை தற்காலிகமானது என்று கூறியது என்பது குறிப்பிடத்தக்கது. பாதுகாப்பு குறித்த கவலைகளைக் காரணம் காட்டி, அவர்கள் இந்த "தற்காலிக" தடையை விதித்தனர்.
சமீபத்தில், பிபிசி இந்த பிரச்னை குறித்து அரசாங்கத்தின் துணை செய்தித் தொடர்பாளரிடம் கேட்டபோது, அவர் இந்தக் கேள்வியைக் கல்வி அமைச்சகத்திற்குப் பரிந்துரைத்தார். அங்கிருந்தும் எந்தப் பதிலும் வரவில்லை.
ஆப்கானிஸ்தானில் உள்ள பெண்களுக்கு ஆதரவாக நிதி திரட்ட திட்டமிட்டுள்ளதாக ரிவர் அகமது கூறுகிறார்.
மேலும்,"மன உறுதியுடன் இருங்கள். நமது வரலாற்றின் இந்த இருண்ட காலத்தை உங்களால் கடக்க முடியும் என்று உங்களை நீங்களே நம்புங்கள். நம்மால் இதைச் செய்ய முடியும்"என்று தனது நாட்டுப் பெண்களிடம் கூற வேண்டுமென விரும்புகிறார் ரிவர் அகமது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு