You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ராஜேந்திர சோழன் தனது ராஜகுருவுக்காக என்ன செய்தார்? ஒரு வரலாற்றுப் பார்வை
- எழுதியவர், மாயகிருஷ்ணன் கண்ணன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்
தமிழ்நாடு முதலமைச்சரின் விஜயின் சிறப்பு அலுவலராக தவெகவைச் சேர்ந்த ரிக்கி ராதன் பண்டிட் நியமனம் செய்யப்பட்டு பின்னர் ரத்து செய்யப்பட்டது பேசுபொருளானது.
அவரது நியமனத்தை விமர்சித்து சட்டப்பேரவையில் பேசிய தே.மு.தி.க பொதுச் செயலாளரும் எம்.எல்.ஏவுமான பிரேமலதா விஜயகாந்த், "முதலமைச்சரின் ராஜகுருவாக இருந்தால் தனிப்பட்ட முறையில் வைத்திருக்கலாம். அரசுப் பணியில் வைக்கக்கூடாது. இதன் மூலம் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?" எனக் கேள்வி எழுப்பினார். இதன் தொடர்ச்சியாக, ரிக்கி ராதன் பண்டிட் நியமனத்தை தமிழக அரசு திரும்பப் பெற்றது.
என்றாலும், பிரேமலதா குறிப்பிட்ட ராஜகுரு என்ற பதம் சமூக ஊடகங்களில் தொடர்ந்து பேசுபொருளாகவே இருந்தது. அதுபோன்ற பதவி வரலாற்றில் இருந்துள்ளதா? அதன் முக்கியத்துவம் என்ன? அவர்களின் பணி என்ன என்பது குறித்து இந்தக் கட்டுரையில் காண்போம்.
மன்னராட்சி காலத்தில் ராஜகுருக்களாக செயல்பட்டவர்கள் எல்லா காலங்களிலும் எல்லா சமூகத்திலும் உயர்ந்த இடத்தில் வைத்து போற்றப்பட்டு வந்துள்ளனர் என்கிறார், இந்திய தொல்லியல் துறையின் தமிழ் கல்வெட்டுகள் துறைத் தலைவரும், துணை கண்காணிப்பாளருமான முனைவர் வஞ்சியூர் க.பன்னீர்செல்வம்.
"ராஜராஜனைப் போலவே அவரது மகன் ராஜேந்திர சோழனும் சர்வசிவ பண்டிதர் என்ற ஆன்மீகப் பெரியோரை தனக்கு குருவாக ஏற்றுக்கொண்டார். தஞ்சாவூரில் உள்ள இவரது 19 -ஆம் ஆட்சியாண்டு கல்வெட்டு இவருக்கு 'ஆச்சார்ய போகம்' வழங்கியதை குறிப்பிடுகின்றது.
இவரும் இவருக்கு பின் பரம்பரையாக வரும் மத்ய கவுடா தேசத்தை சேர்ந்த இவர்களது சீடர்களும் இவ்வாச்சாரியா போகத்தை அனுபவிக்க கடவர் என்று இந்த கல்வெட்டு தெரிவிக்கின்றது. இவர் ராஜேந்திர சோழனுக்கு நல்வழிகாட்டியாகவும் இருந்துள்ளார் என்பதற்கு இதுவே மிகப்பெரிய சான்றாகும்" என்கிறார் வஞ்சியூர் பன்னீர்செல்வம்.
எசாலம் செப்பேடு
1987-ஆம் ஆண்டு விழுப்புரம் மாவட்டம் செஞ்சிக்கு அருகில் எசாலம் கிராமத்தில் உள்ள சிவன் (திருராமிஸ்வரர்) கோவிலை குடமுழுக்கு செய்வதற்காக வேலைகள் நடந்து கொண்டிருந்த போது முதலாம் ராஜேந்திர சோழனின் செப்பேடுகள் கிடைத்தன.
இந்த செப்பேடுகளுடன் 23 செப்பு திருமேனிகளும், சில பூஜை பாத்திரங்களும் கிடைத்தன. அவற்றில் அனைத்தும் தெய்வ உருவங்களாக இருந்தபோதும் ஒரு சிலை மட்டும் மனித உருவில் இருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.
65 சென்டிமீட்டர் உயரத்துடன் நின்ற நிலையில் இரு கரங்களுடன் இருந்த இந்த உருவம் கோவணம் மட்டுமே அணிந்து எவ்வித அணிகலன்களும் இன்றி காணப்பட்டது. வலது கரம் சின் முத்திரையுடனும், இடக்கரம் சிம்மகரண முத்திரையுடன் செதுக்கப்பட்டு இருந்தது.
தலையில் மெல்லிய துணி போர்த்தியது போன்ற வடிவத்தில், நீண்டு வடிந்த காதுகளுடன் பத்ரபீடத்தில் இடக்காலை ஊன்றி வலக்காலை சிறிது தளர்த்தி நிறுத்திய நிலையில் இந்த உருவம் காணப்பட்டது.
நம் உடையார்
சிவன் கோவில் (திருராமிஸ்வரம் உடையார் கோவில்) முதலாம் ராஜேந்திரனின் அரச குருவான சர்வ சிவ பண்டிதரால் கட்டப்பட்டது என்பதும் இந்த கோவிலுக்கு அளித்த தேவதானத்தை குறிக்கும் ஆவணமே இந்த செப்பேடு என்கிறார், விழுப்புரம் பேரறிஞர் அண்ணா கலை கல்லூரி வரலாற்று துறை பேராசிரியர் ரமேஷ்.
"அந்த செப்பேட்டில் ராஜராஜனுக்கு ராஜேந்திர சோழன் பிறந்தான் என்றும் இந்த அரசனுக்கு சர்வ சிவ பண்டிதர் என்பவர் குருவாக இருந்தார். சர்வ சிவபண்டிதருக்கு பொன்னும் மணியும் கொடுத்தான் அரசன் அன்றியும் ஜெயங் கொண்ட சோழமண்டலத்தில் ராஜராஜ சதுர் வேதி மங்களம் என்ற கிராமத்தில் சிவ ஆலயத்தை நிர்மாணித்து சர்வசிவ பண்டிதர் பூஜிக்கும் படியும் செய்தான் என்றும் சொல்லியிருக்கின்றது," என்று விளக்கினார் பேராசிரியர் ரமேஷ்.
மேலும் "நம் உடையார் சர்வசிவ பண்டிதர் எடுப்பித்தருளிய திருக்கற்றளி..." என்று செப்பேட்டில் 4- இடங்களில் சர்வ சிவ பண்டிதரை அரசன் பெருமைப்படுத்தும் விதமாக குறித்துள்ளான்." என்கிறார் பேராசிரியர் ரமேஷ்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு