அமெரிக்கா - இரான் ஒப்பந்தத்தால் இந்தியாவுக்கு என்ன பலன்? 4 முக்கிய விஷயங்கள்

அமெரிக்கா - இரான் ஒப்பந்தம், இந்தியா, கச்சா எண்ணெய் விலை, மத்திய கிழக்கு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மத்திய கிழக்கில் போருக்குப் பிறகு இந்தியாவில் எண்ணெய் விலையில் பெரும் உயர்வு ஏற்பட்டுள்ளது
    • எழுதியவர், முகம்மது ஷாஹித்
    • பதவி, பிபிசி செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

மத்திய கிழக்கில் பிப்ரவரி இறுதியிலிருந்து நடந்து வரும் போர் முடிவுக்கு வரும் என்ற எதிர்பார்ப்புகள் இறுதியாக இப்போது நிறைவேறுவது போல் தோன்றுகிறது.

பாகிஸ்தானின் மத்தியஸ்தத்தில் அமெரிக்காவும் இரானும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை எட்டியுள்ளதாக அறிவித்துள்ளன. வெள்ளிக்கிழமை சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் துல்லியமான வரைவு இதுவரை பகிரங்கப்படுத்தப்படவில்லை.

இருப்பினும், இந்த ஒப்பந்தத்தின் நிபந்தனைகளில் தடைகளை நீக்குவது, இரான் அணு ஆயுதங்களை உருவாக்கக் கூடாது என்ற வாக்குறுதி மற்றும் 30 நாட்களுக்குள் ஹோர்மூஸ் நீரிணையை மீண்டும் திறப்பது ஆகியவை அடங்கும் என்று இரான் அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இரான் துணை வெளியுறவு அமைச்சர் காசெம் கரிபாபாடி, 60 நாட்களுக்குப் பிறகு இறுதி ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடக்கும் என்றும், அங்கு இரான் "பல விஷயங்களைக் கவனிக்க வேண்டியுள்ளது" என்றும் தெரிவித்துள்ளார்.

லெபனான் விவகாரத்தில், அமெரிக்கா மற்றும் இரான் ஆகிய இரு நாடுகளும் "இராணுவ நடவடிக்கைகளை உடனடியாகவும் நிரந்தரமாகவும் நிறுத்துவதாக" அறிவித்துள்ளதாக மத்தியஸ்தம் செய்யும் பாகிஸ்தான் கூறுகிறது.

அதே நேரத்தில், லெபனான் அதிபர் ஜோசப் அவூன், தங்கள் நாட்டு மக்கள் "இந்த வன்முறைச் சுழற்சியை என்றென்றும் முடிவுக்குக் கொண்டுவரும் நடைமுறைகளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்" என்று கூறினார்.

இந்த வரைவு நிபந்தனைகளை இஸ்ரேலும் இரான் ஆதரவு பெற்ற ஆயுதமேந்திய அரசியல் அமைப்பான ஹெஸ்பொலாவும் பின்பற்றுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் தனது இராணுவம் லெபனானில் தொடர்ந்து இருக்கும் என்று கூறுகிறார். அதே நேரத்தில் இரான் அனைத்து இராணுவ நடவடிக்கைகளையும் "முழுமையாக நிறுத்த வேண்டும்" என்று கோரியுள்ளது.

பிரதமர் மோதி வரவேற்பு

அமெரிக்கா - இரான் ஒப்பந்தம், இந்தியா, கச்சா எண்ணெய் விலை, மத்திய கிழக்கு

பட மூலாதாரம், Getty Images

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

அமெரிக்கா மற்றும் இரான் இடையேயான ஒப்பந்த உடன்பாட்டிற்கு உலகெங்கிலும் இருந்து எதிர்வினைகள் வந்துள்ளன.

பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் இத்தாலி நாட்டுத் தலைவர்கள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், அமெரிக்கா, இரான் மற்றும் பிராந்திய கூட்டாளிகளுடன் இணைந்து 'இந்த வாய்ப்பை நல்வழியில் பயன்படுத்த' பாடுபடுவோம் என்று தெரிவித்துள்ளனர்.

வெள்ளிக்கிழமை ஒப்பந்தம் கையெழுத்தானதும் "எண்ணெய் போக்குவரத்து மீண்டும் எந்தத் தடையுமின்றி தொடங்கும்" என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறினார்.

இந்த ஒப்பந்தத்திற்கு மத்தியஸ்தராகச் செயல்பட்ட பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் எக்ஸ் தளத்தில், "நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு, அமெரிக்கா மற்றும் இரான் இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது என்பதை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இரு தரப்பினரும் லெபனான் உட்பட அனைத்து முனைகளிலும் இராணுவ நடவடிக்கைகளை உடனடியாகவும் நிரந்தரமாகவும் நிறுத்துவதாக அறிவித்துள்ளனர்" என்று எழுதியுள்ளார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியும் இந்த அறிவிப்புக்குத் தனது எதிர்வினையைத் தெரிவித்துள்ளார். அவர் எக்ஸ் தளத்தில், "மேற்கு ஆசியாவில் மோதல்களை முடிவுக்குக் கொண்டு வருவது தொடர்பாக அமெரிக்கா மற்றும் இரான் இடையே எட்டப்பட்ட உடன்பாட்டை நான் வரவேற்கிறேன். இந்த மோதலின் காரணமாக உலகளவில் கடுமையான பொருளாதாரத் தடங்கல்கள் ஏற்பட்டன மற்றும் பல நாடுகளில் மக்களின் உயிர்கள் பறிபோயின" என்று எழுதியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோதி மேலும் கூறுகையில், "இந்த உடன்பாட்டை அமல்படுத்துவதன் மூலம் இப்பகுதியில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்க உதவும் என்றும், கப்பல் போக்குவரத்து மற்றும் வர்த்தக சுதந்திரம் உறுதி செய்யப்படும் என்றும் இந்தியா நம்புகிறது" என்றார்.

இதுதவிர, 'மீதமுள்ள விஷயங்களிலும்' நடக்கவிருக்கும் பேச்சுவார்த்தை 'ஒரு நிலையான மற்றும் இறுதி ஒப்பந்தத்தை' எட்டும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்தியாவுக்கு என்ன பலன்?

மத்திய கிழக்கில் வெடித்த மோதல் காரணமாக உலகளவில் எண்ணெய், எரிவாயு விலைகள் மற்றும் விநியோகத்தில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது, இதிலிருந்து இந்தியாவும் தப்பவில்லை.

இந்தியாவின் எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் பாதிக்கப்பட்டதுடன், அதன் விலையிலும் பெரும் உயர்வு காணப்பட்டது. இந்தியாவின் உள்நாட்டுப் பயன்பாட்டிற்கான எண்ணெய் மற்றும் எரிவாயு தேவையில் 90 சதவீதம் இறக்குமதி செய்யப்படுகிறது, இதில் கச்சா எண்ணெய் இறக்குமதியின் 60 சதவீதத்திற்கும் அதிகமான பகுதி வளைகுடா நாடுகளில் இருந்து வருகிறது. இதில் இராக், செளதி அரேபியா, குவைத் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவை அடங்கும்.

இதிலும் பாதி எண்ணெய் ஹோர்மூஸ் நீரிணை வழியாகவே வருகிறது. தற்போதைய மோதல் காரணமாக ஹோர்மூஸில் கப்பல் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த காரணத்தினாலும் இந்தியாவுக்கு இந்த போரால் கடுமையான அழுத்தம் உள்ளது.

இந்த ஒப்பந்தம் அமல்படுத்தப்பட்டால் எண்ணெய் விலையில் வீழ்ச்சி ஏற்படுவது உறுதி, ஆனால் இந்தியாவிற்கு வேறு என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? இந்தக் கேள்விக்கு, எரிசக்தி விவகார நிபுணர் நரேந்திர தனேஜா பதிலளிக்கையில், ஒட்டுமொத்த வளைகுடா பிராந்தியமும் இந்தியாவிற்கு மூன்று காரணங்களுக்காக முக்கியத்துவம் வாய்ந்தது என்கிறார்.

"நாம் அங்கிருந்து அதிக அளவில் எண்ணெய் மற்றும் எரிவாயுவை வாங்குகிறோம். இந்த பகுதி நமது நாட்டிற்கு அருகில் இருப்பதால் கப்பல் போக்குவரத்து நேரம் மிகக் குறைவு. ஐந்து-ஆறு நாட்களுக்குள் கப்பல் இங்கு வந்துவிடும். இதனால் அதன் செலவும் குறைகிறது. காப்பீடு (Insurance) போன்றவற்றின் செலவுகளும் குறைந்துவிடுகின்றன," என்று அவர் கூறுகிறார்,

"இரண்டாவது காரணம், சுமார் ஒரு கோடி இந்தியர்கள் அந்தப் பிராந்தியத்திற்குள் வேலை செய்கிறார்கள். இவர்களில் நமது தொழிலாளர்கள் மற்றும் திறனுள்ள தொழிலாளர்கள் அடங்குவர். மூன்றாவது காரணம், இது இந்தியாவிற்கு மிக அருகில் இருப்பதும், அங்கு பாகிஸ்தான்-சீனாவின் அதிகரித்து வரும் செல்வாக்கும் ஆகும். அங்கு சீனாவின் அல்லது பாகிஸ்தானின் தலையீடு அதிகரிக்கும்படியான சூழ்நிலையை இந்தியா விரும்பவில்லை."

இந்த ஒப்பந்தம் அமல்படுத்தப்பட்ட பிறகு மோதல்கள் நின்றுவிடும், ஆனால் அமைதி திரும்புமா இல்லையா என்று சொல்வது அவசரப்பட்டு சொல்வதாகும் என்று நரேந்திர தனேஜா நம்புகிறார்.

அதே நேரத்தில், மிடில் ஈஸ்ட் இன்சைட்ஸ் தளத்தின் நிறுவனர் சுபதா சௌத்ரி, வெள்ளிக்கிழமை இந்த ஒப்பந்தம் அமல்படுத்தப்படுவதற்கான வாய்ப்பு மிகக் குறைவு என்று நம்புகிறார்.

"இந்த ஒப்பந்தம் நடக்கும் என்று நான் நம்பவில்லை, இதற்குப் பல காரணங்கள் உள்ளன. முதலாவதாக, இரானின் முடக்கப்பட்ட 300 பில்லியன் டாலர்களைத் திருப்பித் தருவோம் என்று அமெரிக்கா கூறுகிறது, ஆனால் அது எப்படி நடக்கும்? இரண்டாவதாக, ஏமன் மற்றும் லெபனான் குறித்து பேசப்படவில்லை. இஸ்ரேலின் தாக்குதல் எந்த அளவிற்குத் தணியும்? இது குறித்து எந்தப் பேச்சும் இல்லை" என அவர் கூறுகிறார்,

"மூன்றாவது விஷயம் என்னவென்றால், இந்த ஒப்பந்தம் நடந்தாலும், இதில் யார் கையெழுத்திடுவார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை, ஏனெனில் அதி உயர் தலைவர் மொஜ்தபா காமனெயி பற்றி எதுவும் தெரியவில்லை. இரானின் உச்ச கவுன்சில், நேஷனல் கவுன்சில் மற்றும் ஐஆர்ஜிசி ஆகியவற்றின் பங்கு இப்போது என்ன என்பது தெளிவாக இல்லை."

இது வெறும் மூன்று நாடுகளுக்கு இடையிலான சண்டை அல்ல, மாறாக இரண்டு உலகளாவிய ஒழுங்குகளுக்கு இடையிலான சண்டை என்று சுபதா சௌத்ரி கூறுகிறார்.

"ஒருபுறம் இஸ்ரேல், பிரிட்டன், அமெரிக்கா மற்றும் பல மேற்கு ஐரோப்பிய நாடுகள் உள்ளன. மறுபுறம் வடகொரியா, சீனா, ரஷ்யா மற்றும் இரான் ஆகியவை உள்ளன. இது பெட்ரோடாலர் மற்றும் பெட்ரோயுவான் இடையிலான சண்டை." என அவர் கூறுகிறார்,

இருப்பினும், ஒப்பந்தம் ஏற்பட்டால் இந்தியாவிற்கு நான்கு விஷயங்களில் நன்மை கிடைக்கும் என்று சுபதா கூறுகிறார்.

"முதல் நன்மை இரான் எண்ணெய் சார்ந்தது, இது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அல்லது செளதி எண்ணெயை விடச் சிறந்தது, ஏனெனில் அதில் கந்தகத்தின் அளவு குறைவாக இருக்கும். இரண்டாவது நன்மை உரங்கள் மற்றும் எரிவாயு சார்ந்தது, ஏனெனில் நாம் பெரும்பாலான எரிவாயு மற்றும் உரங்களை அங்கிருந்தே வாங்குகிறோம். மூன்றாவது ரெமிட்டன்ஸ் (Remittance-பணப் பரிமாற்றம்) நன்மை, ஏனெனில் பெருமளவிலான இந்தியர்கள் அங்கு வேலை செய்கிறார்கள். நான்காவது நன்மை இந்தியர்களின் பாதுகாப்பு மற்றும் கச்சா எண்ணெய் விலை குறைவதாகும்." என அவர் கூறுகிறார்.

அமெரிக்கா - இரான் ஒப்பந்தம், இந்தியா, கச்சா எண்ணெய் விலை, மத்திய கிழக்கு

பட மூலாதாரம், Getty Images

இரானில் உள்ள இந்தியத் திட்டங்களுக்கு என்ன ஆகும்?

உலகெங்கிலும் உள்ள மொத்த எண்ணெயில் சுமார் 20 சதவீதப் போக்குவரத்து ஹோர்மூஸ் நீரிணை வழியாகவே நடைபெறுகிறது.

ஹோர்மூஸ் நீரிணை யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கும், இதற்கு சுங்கக் கட்டணம் விதிக்கப்படுமா இல்லையா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று நரேந்திர தனேஜா கூறுகிறார்.

ஹோர்மூஸ் நீரிணையில் சுங்கக் கட்டணம் விதிக்கப்பட்டால், அது இந்தியா உட்பட சீனா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளுக்குப் பெரிய சிக்கலை ஏற்படுத்தும் என்று அவர் கூறுகிறார்.

இருப்பினும், ஒப்பந்தம் அமல்படுத்தப்படுவதால் ஹோர்மூஸ் நீரிணையில் சிக்கியுள்ள கப்பல்களும், அதில் இருக்கும் இந்திய மாலுமிகளும் பாதுகாப்பாக இருப்பார்கள் என்றும், அங்கு வாழும் ஒரு கோடி இந்தியர்களுக்கு இது ஸ்திரத்தன்மையைத் தரும் என்றும் நரேந்திர தனேஜா கூறுகிறார்.

"போர் நின்றுவிட்டால் எண்ணெய் விலை குறையும், இது இந்தியப் பொருளாதாரத்திற்குப் மிகச் சிறந்த செய்தியாகும். அங்கிருந்து வரும் பணப்பரிமாற்றங்களும் மற்ற அனைத்து நடைமுறைகளும் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பும்." என அவர் கூறுகிறார்.

இதனுடன் நரேந்திர தனேஜா ஒரு பெரிய கேள்வியையும் எழுப்புகிறார். எதிர்காலத்தில் இந்தியா எண்ணெய் மற்றும் எரிவாயுவிற்காக வளைகுடா நாடுகளைச் சார்ந்திருப்பதை இதே அளவில் வைத்திருக்குமா அல்லது அதைக் குறைத்துக் கொள்ளுமா என்று அவர் கேட்கிறார்.

அதே நேரத்தில், இந்த ஒப்பந்தம் அமல்படுத்தப்பட்ட பிறகு அந்தப் பிராந்தியத்தில் இரானின் ஆதிக்கம் அதிகரிக்கும் என்றும், அதன் எதிரியான செளதி அரேபியா, அமெரிக்காவைத் தவிர மற்ற நாடுகளைச் சார்ந்திருப்பது அதிகரிக்கும் என்றும் அவர் நம்புகிறார்.

இரான் நாட்டின் சாபஹார் மற்றும் பந்தர் அப்பாஸ் துறைமுகங்களில் இந்தியா கணிசமாக முதலீடு செய்திருந்தது. இந்த போருக்குப் பிறகு அந்தத் திட்டங்களுக்கு இந்தியாவின் தடை ஏற்பட்டது.

சர்வதேச வடக்கு தெற்கு போக்குவரத்து காரிடார் திட்டத்தில் இரான் இந்தியாவிற்கு மிகவும் முக்கியமானது என்றும், அத்துடன் சாபஹாரில் 20 ஆண்டுகளுக்கான முதலீடு செய்யப்பட்டுள்ளது என்றும், இவை அனைத்தின் நன்மைகளும் இந்தியாவிற்குத் தாராளமாகக் கிடைக்கும் என்றும் சுபதா சௌத்ரி கூறுகிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு