சுமார் ஒன்றரை லட்சம் மக்களே வாழும் குட்டித் தீவான 'குராசோவா' உலகக்கோப்பைக்கு முன்னேறிய வரலாறு

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், எம்லின் பெக்லி
- பதவி, ஹூஸ்டனில் உள்ள பிபிசி ஸ்போர்ட் செய்தியாளர்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
மிகவும் அழகான ஒரு சிறிய கரீபியன் தீவு, டச்சுக்காரர்களின் பெரும் தாக்கத்தைக் கொண்டிருந்தாலும் தங்களது சொந்த பாரம்பரியத்தைப் பற்றிப் பெருமிதம் கொள்ளும் ஒரு நாடு - குராசோவா. இதுவரை அநேகமாக அதே பெயரைக் கொண்ட மதுபானத்திற்காகத்தான் அது மிகவும் பிரபலமாக இருந்திருக்கலாம்.
ஆனால், உலகக் கோப்பையில் பங்கேற்கும் பரப்பளவிலும் மக்கள் தொகையிலும் மிகச்சிறிய நாடு என்ற வரலாற்றைப் படைக்க அவர்கள் தயாராகி வருவதால், அது இப்போது முற்றிலும் மாறப்போகிறது.
1,58,000 மக்கள் தொகையைக் கொண்ட இந்நாடு பிரிட்டனின் 40 நகரங்களை விடக் குறைவு. அவர்கள் முழுமையான இறையாண்மை கொண்ட நாடு கூட அல்ல, நெதர்லாந்து ராஜ்யத்தின் ஒரு பகுதியாகவே அவர்கள் இருக்கிறார்கள்.
"இது இந்தத் தீவுக்கு விவரிக்க முடியாத அளவுக்குப் பெருமகிழ்ச்சியையும் பெருமையையும் தருகிறது. தீவு முழுவதுமே நீல நிறமாக மாறிவருகிறது," என்று குராசோவா கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் கில்பர்ட் மார்டினா பிபிசி ஸ்போர்ட்டிடம் தெரிவித்தார்.
அவர்களது உலகக் கோப்பை அணியில் இருக்கும் வீரர்களில் டஹித் சோங் மட்டும்தான் இந்தத் தீவில் பிறந்தவர் - மற்ற 25 வீரர்களும் நெதர்லாந்தில் இருந்து வந்தவர்கள்.
நெதர்லாந்தில் பிறந்த வீரர்கள் குராசோவாவுக்கு ஆட முன்வந்தது ஏன்?
இந்த அணியில் உள்ள சுமார் 18 வீரர்கள் இளையோர் பிரிவில் நெதர்லாந்து அணிக்காக விளையாடியுள்ளனர், அதில் ரிச்செட்லி பாசூர் மற்றும் ஜோசுவா ப்ரினெட் ஆகிய இருவர் சீனியர் அணிக்காகவும் விளையாடியுள்ளனர்.
குராசோth தேசிய அணி, உள்ளூர் அமெச்சூர் வீரர்களிடமிருந்து மாறி, வெளிநாடுகளில் வாழும் தங்களது வம்சாவளி வீரர்களைச் சேர்க்கத் தொடங்கியது, அவர்கள் டச்சு மேலாளர்களை வேலைக்கு அமர்த்தியதில் இருந்துதான் ஆரம்பித்தது. இது 2015 இல் பேட்ரிக் க்ளுய்வெர்ட் உடன் தொடங்கியது.
மயாமி எஃப்சி கிளப்பின் 37 வயது கோல்கீப்பர் எலோய் ரூம்தான் அந்த ஆண்டில் குராசோவாவிற்காக விளையாடிய இந்த அணியின் முதல் வீரர் ஆவார். அவரைத் தொடர்ந்து 2016 இல் ஆஸ்டன் வில்லா மற்றும் கார்டிஃப் அணியின் முன்னாள் மிட்ஃபீல்டர் லியான்ட்ரோ பகுனாவும் இதில் இணைந்தார்.
"நாங்கள் குராசோவாவிற்காக மிகவும் சிறப்பான ஒன்றைச் செய்திருக்கிறோம். நான் இந்தப் பயணத்தை 10 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கினேன், குராசோவா மக்களைப் பெருமைப்படுத்த விரும்பினேன்," என பகுனா கூறினார்.
"நாங்கள் இன்னும் எங்கள் இலக்கை முடிக்கவில்லை என்று மேலாளர் தொடர்ந்து கூறிக்கொண்டே இருக்கிறார். நாங்கள் எவ்வளவு சிறியவர்களாக இருந்தாலும், எங்களுக்குப் பெரிய இதயம் இருக்கிறது என்பதை மக்களுக்குக் காட்ட விரும்புகிறோம். உங்களுக்குப் பெரிய இதயம் இருந்தால், உங்களால் வெகுதூரம் செல்ல முடியும் என்று நான் நம்புகிறேன்."
ஹடர்ஸ்ஃபீல்ட், ரேஞ்சர்ஸ் மற்றும் பர்மிங்காம் அணிகளுக்காக விளையாடிய அவரது சகோதரர் ஜுனின்ஹோ, 2019 இல் இவர்களைப் பின்தொடர்ந்தார்.
28 வயதான அவர் பிபிசியிடம்: "இது நாங்கள் எப்போதும் ஆசைப்பட்ட ஒரு விஷயம் - நாங்கள் குழந்தைகளாக இருந்தபோது ஒரே மைதானத்தில் ஒரே அணியில் ஒன்றாக விளையாட வேண்டும் என்று கனவு கண்டோம்." என்று கூறினார்.
"அதனால்தான் நான் அவருடன் ஒரே அணியில் இருக்கவும், என் பெற்றோரைப் பெருமைப்படுத்தவும், இந்தத் தீவைப் பெருமைப்படுத்தவும் குராசோவாவிற்காக விளையாட ஆரம்பத்திலேயே முடிவு செய்தேன்."
நெதர்லாந்தில் பிறந்த திறமையாளர்களின் மிகப்பெரிய வருகை மிகச் சமீபத்தில்தான் நடந்துள்ளது, இந்த அணியில் உள்ள 15 வீரர்கள் 2023-க்குப் பிறகே அறிமுகமாகியுள்ளனர்.
கடந்த ஆண்டு குராசோவாவிற்கு மாறுவதற்கு முன்பு, 21 வயதுக்குட்பட்டோர் பிரிவு வரை நெதர்லாந்தை பிரதிநிதித்துவப்படுத்திய சோங்கும் இதில் அடங்குவார்.
"நெதர்லாந்தில் விளையாடிக் கொண்டிருந்த பல வீரர்கள் எங்களிடம் உள்ளனர், அவர்கள் குராசோவாவிற்காக விளையாடுவோம் என்று நினைத்துக் கூடப் பார்த்ததில்லை," என்று தொடர்ந்தார் ஜுனின்ஹோ பகுனா.
"ஆனால் அவர்களிடம் உள்ள இதயம், நம்பிக்கை மற்றும் குராசோவாவுடன் அவர்களுக்கு இருக்கும் தொடர்பை உங்களால் பார்க்க முடிகிறது.
"அவர்கள் மக்களின் அன்பை உணர்கிறார்கள், தீவின் அனைத்தையும் உணர்கிறார்கள், அதனால் அவர்களுக்கான தொடர்பு மேலும் மேலும் வலுவடைந்தது."
மற்ற நாடுகளில், உள்ளூர் வீரர்களை அதிகம் அழைக்காமல் இருப்பது ஒரு பெரிய பிரச்னையாக இருக்கலாம்.
ஆனால் நெதர்லாந்தில் வாழும் குராசோவாவின் வம்சாவளியினருக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் (இது தோராயமாக இந்தத் தீவின் மக்கள் தொகைக்குச் சமம்) இதை வித்தியாசப்படுத்துகிறது.
"இது ஒரு பிரச்னையே இல்லை என்று நான் நினைக்கிறேன்," என்று எஃப்எஃப்கே-வின் (FFK) டிஜிட்டல் பார்ட்னர்களான ப்ரோஃபவுண்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் குராசோவைச் சேர்ந்தவருமான பௌடினோ டி ஜாங் கூறினார்.
"எங்கள் வம்சாவளியினர் தீவுக்கு வெளியேயும் இருப்பதற்கு நாங்கள் மிகவும் பழகிவிட்டோம். எனவே எங்களை நாங்கள் அடையாளப்படுத்திக் கொள்வதில் அது ஒரு முக்கியக் காரணியாக இருக்க வேண்டிய அவசியமில்லை. ஒரு வீரர் இங்கு பிறக்காவிட்டாலும், அவர்கள் ஒரு தீவிரமான தொடர்பை உணர்கிறார்கள் மற்றும் தங்களைக் குராசோவாவாசிகள் என்றே அடையாளப்படுத்துகிறார்கள்."
'பெரிய இதயம் கொண்ட சிறிய தீவு'
உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்ற, முழுமையான சுதந்திரம் இல்லாத 6 நாடுகளில் குராசோவும் ஒன்று.
ஏனென்றால், அவர்கள் தங்களது அண்டை நாடுகளான அருபா மற்றும் சின்ட் மார்டன் ஆகியவற்றுடன் சேர்ந்து நெதர்லாந்து ராஜ்யத்தின் ஒரு பகுதியாகவே இன்னும் இருக்கிறார்கள்.
மற்ற நாடுகள் பிரிட்டனின் ஒரு பகுதியாக இருக்கும் இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்து - மற்றும் 1938 இல் தகுதி பெற்ற டச்சு கிழக்கு இந்தியத் தீவுகள் (இப்போது இந்தோனேசியா).
குராசோவாவில் பிறந்த அனைவரும் டச்சு பாஸ்போர்ட் வைத்துள்ளனர். 2010 வரை இது கரீபியன் தீவுகளின் கூட்டமைப்பான நெதர்லாந்து அண்டிலிஸின் ஒரு பகுதியாக இருந்தது.
அதற்குப் பிறகுதான் குராசோவாவிற்கு என்று சொந்தமாகத் தேசிய அணி உருவானது. இந்த அணி டச்சு அண்டிலிஸின் தொடர்ச்சியாகவே பார்க்கப்படுகிறது.
"இவ்வளவு பெரிய மேடையில் நாங்கள் குராசோவாவை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு முன்பு, பல தசாப்தங்களாக எங்களில் பெரும் பகுதியினர் டச்சு அணியின் தீவிர ரசிகர்களாக இருந்தனர்," என்று டி ஜாங் கூறினார். "ஆனால் இப்போது நாங்கள் குராசோவாவிற்குத்தான் முதலிடம் கொடுக்கிறோம்."
நாக் அவுட் சுற்றில் நெதர்லாந்தைச் சந்தித்தால் அது எதைக் குறிக்கும்?
கடந்த சீசனை வோலெண்டம் கிளப்பில் விளையாடி முடித்த ஜுனின்ஹோ பகுனா கூறுகையில்"அது நடந்தால், நான் 100 அல்ல, 200 அல்ல, நான் எப்போதும் கொடுப்பதை விட 1000% அதிகமாக என் உழைப்பைக் கொடுப்பேன்." என்றார்.
"நாங்கள் ஒரு சிறிய தீவுதான், ஆனால் எங்களிடம் பெரிய இதயம், நம்பிக்கை மற்றும் நிறைய திறமைகள் உள்ளன என்பதை உலகிற்குக் காட்ட விரும்புகிறோம்."
குராசோவாவை உலகக்கோப்பைக்கு அழைத்து வந்த அட்வகாட் 'அலை விளைவு'
குராசோவாவின் எஃப்ஏ தலைவர் மார்டினா தங்களது வெற்றிக்கு "இரண்டு விஷயங்களை" காரணமாகக் கூறுகிறார். அவை 2024-இல் புகழ்பெற்ற அட்வகாட்டின் வருகை மற்றும் அணிக்குச் சரியாக நிதியளிக்க முடிந்தது ஆகியவை ஆகும்.
"டிக் அட்வகாட் போன்ற ஒரு உயர்தர பயிற்சியாளர், ஒரு அலை போன்ற விளைவை உருவாக்குகிறார், அது ஒரு நம்பிக்கையை உருவாக்குகிறது," என்று அவர் கூறுகிறார்.
"ஜாலிக்காக விளையாடுவதற்குப் பதிலாக, வெற்றிக்கான முடிவுகளுக்காக விளையாட பழக வேண்டும் என்ற மனநிலையை அவர் உருவாக்கினார்."
48 அணிகள் பங்கேற்கும் இந்த உலகக் கோப்பைக்கு கான்காகாஃப் (Concacaf) பிரிவில் இருந்து முன்பை விட அதிகமான நாடுகள் தகுதி பெற்றாலும் (மெக்சிகோ, அமெரிக்கா மற்றும் கனடா ஆகியவை இணை நடத்துநர்களாக நேரடியாகத் தகுதி பெற்றன) குராசோவா தகுதிச் சுற்றில் 7 வெற்றிகள் மற்றும் 3 டிராக்களுடன் தோல்வியே அடையாமல் முன்னேறியது.
ஆனால் அட்வகாட் தங்களது தகுதியை உறுதி செய்த போட்டியான (ஜமைக்காவுக்கு எதிரான கோல் இல்லாத டிராவான ஆட்டம்) குடும்பக் காரணங்களால் தவறவிட்டார்.
ஹடர்ஸ்ஃபீல்ட், பார்ன்ஸ்லி மற்றும் பிளாக்பூல் அணிகளுக்காக விளையாடிய உதவி பயிற்சியாளர் டீன் கோர் அந்தப் போட்டிக்காக குராசோவா அணியை வழிநடத்தினார்.
"அழுத்தம் மிகவும் அதிகமாக உள்ளது, ஏனென்றால் திடீரென்று தீவு மக்கள் அனைவரும் உற்றுநோக்கும் ஒரு விஷயத்திற்கு நீங்கள் பொறுப்பேற்கிறீர்கள். நாங்கள் தோற்றிருந்தால், அது என் மேல் பழி வந்திருக்கும், அதுதான் மிகப்பெரிய அழுத்தம்." என அவர் பிபிசி வேர்ல்ட் சர்வீஸிடம் கூறினார்.
ஸ்வான்சீ அணியின் முன்னாள் வீரரான கென்ஜி கோர், டீன் கோரின் மகன் ஆவார். அவர் குராசோவா அணியில் ஒரு வீரராகவும் இருக்கிறார்.
பிரிட்டனில் வளர்ந்த 31 வயதான அவர், "குராசோவா வரலாற்றின் மிகப்பெரிய போட்டியை அவர் வழிநடத்துவதைப் பார்ப்பது, அதை அவருடன் வாழ்வது மற்றும் அவர் பயிற்சியாளராக இருக்கும்போது நான் மைதானத்தில் விளையாடுவது என்பது ஒரு தனித்துவமான சூழ்நிலை." என்றார்.
ஜுனினோ பகுனா மேலும் கூறுகையில் "டிக் அட்வகாட் எங்களுக்காகச் செய்த எல்லாவற்றிற்கும் நான் அவருக்குப் பெருமை சேர்க்கிறேன், ஏனென்றால் அவர் மைதானத்திற்கு உள்ளேயும் வெளியேயும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினார். ஆனால் இறுதியில், நாம் இப்போது இருக்கும் இடத்திற்கு வருவதற்கு பல ஆண்டுகளாக உழைத்தவர்கள் இந்த வீரர்கள்தான்."
தனது நோய்வாய்ப்பட்ட மகளைக் கவனித்துக் கொள்வதற்காக அட்வகாட் பிப்ரவரி மாதம் பணியில் இருந்து விலகினார்.
அனுபவம் வாய்ந்த டச்சுக்காரரான ஃப்ரெட் ரட்டன் அவருக்குப் பதிலாக வந்தார். ஆனால் மார்ச் மாதத்தில் நடந்த இரண்டு போட்டிகளிலும் குராசோவா தோற்றதால் அட்வகாட்டை மீண்டும் கொண்டு வர வீரர்கள் மற்றும் ஸ்பான்சர்களிடமிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
கடந்த மாதம் ரட்டன் பதவியிறங்கிய போது அந்தப் பிரச்னைகளை ஒப்புக்கொண்டார். அதன்பின் அட்வகாட் மீண்டும் திரும்பினார்.அவரது குடும்ப சூழ்நிலை இப்போது மேம்பட்டிருப்பதாகக் கருதப்படுகிறது.
பின்னர் அந்த அணி ஹாம்டன் பூங்காவில் (Hampden Park) ஸ்காட்லாந்திடம் 4-1 என்ற கணக்கில் தோற்றனர். ஆனால் பின்னர் தங்களது உலகக் கோப்பை பயிற்சிப் போட்டியில் அண்டை நாடான அருபாவை 4-0 என்ற கணக்கில் தோற்கடித்தனர்.
"தொடக்கத்திலிருந்தே, இந்த போட்டிகளில், அவர்தான் தலைவராக இருந்துள்ளார்," என்று அவரது உதவியாளர் கோர் கூறினார்.
"வீரர்கள் அவரது குரலுக்கும், அவரது பாணிக்கும் பழகிவிட்டனர், மேலும் அவருடன் ஒரு சிறப்பு வழியில் ஒன்றாக வளர்ந்துள்ளனர்."
தீவு நீல நிறமாக மாறுகிறது'

பட மூலாதாரம், Getty Images
டி ஜாங் அவர்களின் தகுதியை "இந்தத் தீவின் வரலாற்றிலேயே மிக முக்கியமான ஒரு விஷயம்" என்று அழைத்தார். இது மேலும் சுற்றுலாவையும் முதலீட்டையும் கொண்டு வரும் என்று அவர்கள் எதிர்பார்ப்பதாக அவர் கூறினார்.
"நாங்கள் உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்ற அந்த கடைசிப் போட்டியின் தாக்கத்தை நான் பார்த்தேன்," என்று அவர் கூறினார்.
"போக்குவரத்து அப்படியே நின்றுவிட்டது. அனைத்து கார்களும் சாலையில் நிறுத்தப்பட்டன, அனைவரும் தங்கள் காரில் இருந்து வெளியே வந்தனர். தேசிய அளவில் இவ்வளவு பெரிய ஒட்டுமொத்தக் கொண்டாட்டத்தை நான் பார்த்ததே இல்லை.
"வரவிருக்கும் போட்டிகளில் நாம் பார்க்கப் போவதற்கெல்லாம் இது ஒரு ஆரம்பம் என்று நான் நினைக்கிறேன். இங்குள்ள அனைத்து குராசோவாவாசிகளுடனும் சேர்ந்து போட்டிகளை அனுபவிக்க வேண்டும் என்பதற்காகவே பலர் இந்தத் தீவுக்கு வருகிறார்கள் என்று எனக்குத் தெரியும்."
"கட்டடங்களில் நீல அலை அலங்காரங்களை உங்களால் பார்க்க முடிகிறது. கொடிகளுடன் கூடிய கார்களைப் பார்க்க முடிகிறது, நீல நிறத்தில் சுற்றப்பட்ட கார்களைப் பார்க்க முடிகிறது. எனவே இது பெருமைக்கும் தேசத்தை உருவாக்குவதற்கும் ஒரு மிகப்பெரிய தூண்டுதலாகும்," என எஃப்எஃப்கே தலைவர் மார்டினா கூறினார்.
சிறந்த மூன்றாவது இடத்தைப் பிடிக்கும் அணிகளில் இருந்து நாக் அவுட் சுற்றுக்கு முன்னேற முயற்சிப்பதே தங்களது இலக்கு என்றும் அவர் மேலும் கூறினார்.
உலகக் கோப்பையில் விளையாடுவது தனது குடும்பத்திற்கும் தேசத்திற்கும் எவ்வளவு பெருமையைத் தரும் என்பதைப் பற்றி ஜுனினோ பகுனா பேசியுள்ளார்.
"நான் குராசோவாவிற்காக விளையாட முடிவு செய்த நாளில், என் அம்மாவும் அப்பாவும் குராசோவாவைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் பெருமைப்பட்டனர்," என்று அவர் கூறினார்.
"நாங்கள் உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்றபோது, அவர்கள் வாயடைத்துப் போயினர். தங்களது இரு மகன்களும் தாங்கள் பிறந்த தீவுக்காகக் கால்பந்தின் மிகப்பெரிய மேடையில் விளையாடுவதை அவர்களால் பார்க்க முடிந்தது."
"இது கோர் குடும்பத்திலும், குராசோவா உலகிலும் தலைமுறை தலைமுறையாகத் தொடரும் கதையாக இருக்கும்."
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



























