நேபாள வெள்ளம் இந்தியாவுக்கு ஓர் எச்சரிக்கையாக கருதப்படுவது ஏன்? 7 முக்கிய விஷயங்கள்

திபெத்திய எல்லைப் பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தால் நேபாளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,200-ஐ தாண்டியுள்ளது.

பட மூலாதாரம், AFP via Getty Image

படக்குறிப்பு, திபெத்திய எல்லைப் பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தால் நேபாளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,200-ஐ தாண்டியுள்ளது.
    • எழுதியவர், சௌதிக் பிஸ்வாஸ்
    • பதவி, பிபிசி செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள்

நேபாளத்தில் பேரழிவை ஏற்படுத்திய வெள்ளம், அதன் எல்லைகளுடன் நின்றுவிடாத ஓர் அச்சுறுத்தலை வெளிப்படுத்தியுள்ளது.

இந்தியாவும் நேபாளமும் இமயமலையில் தோன்றும் ஆறுகளைப் பகிர்ந்து கொள்கின்றன. ஆனால், நேபாளத்தில் ஏற்படும் வெள்ளத்துக்கும் இந்தியாவில் ஏற்படும் பேரிடர்களுக்கும் இடையேயான தொடர்பு, நீரின் ஓட்டத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்ட எளிமையான கதையை விட மிகவும் சிக்கலானது என நிபுணர்கள் கூறுகின்றனர்.

சில வெள்ளங்கள் மலைகளிலிருந்து வேகமாகப் பெருக்கெடுத்து வருகின்றன. அவை அதிக அளவிலான சேறு, பாறைகள் மற்றும் கட்டடக் கழிவுகளையும் அடித்துக் கொண்டு வருகின்றன. மற்ற சில வெள்ளங்கள் சமவெளிகளை அடையும் நேரத்தில் தங்களது வேகத்தை இழந்து, வெறும் வெள்ளநீராக மட்டுமே மாறுகின்றன.

அந்த நீர் இந்தியாவில் பேரழிவை ஏற்படுத்துமா என்பது நேபாளத்தில் பெய்யும் மழையின் அளவை மட்டுமே சார்ந்தது அல்ல. இந்தியாவில் பெய்யும் மழை, ஆறுகளின் நீர்மட்டம், கரைகள், வடிகால் அமைப்பு மற்றும் வளர்ச்சிப் பணிகள் ஆகியவையும் அதனைத் தீர்மானிக்கின்றன.

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளம், இந்தியாவுக்கு ஓர் எச்சரிக்கையாகும். இந்த எச்சரிக்கை, நீர் எல்லையைக் கடந்து தெற்கே பாய்வதால் மட்டுமல்ல. இரு நாடுகளும் மிகப்பெரியதும், தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையற்ற தன்மையைக் கொண்டதுமான இமயமலை நதி அமைப்பைப் பகிர்ந்து கொள்வதாலும் முக்கியத்துவம் பெறுகிறது.

1. நேபாளத்தின் எத்தனை ஆறுகள் இந்தியாவில் கலக்கின்றன?

ஆறுக்கும் மேற்பட்ட ஆறுகள் நேபாளத்திலிருந்து இந்திய சமவெளிகளுக்குள் பாய்கின்றன

பட மூலாதாரம், Universal Images Group via Getty Images

படக்குறிப்பு, ஆறுகள் நேபாளத்திலிருந்து இந்திய சமவெளிகளுக்குள் பாய்கின்றன, மேலும் இந்த ஆறுகளே இந்தியாவில் வெள்ளப்பெருக்குகளுக்குக் காரணமாக அமைகின்றன.

நேபாளத்தில் 6,000-க்கும் அதிகமான ஆறுகள் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை தெற்கு நோக்கிப் பாய்ந்து இந்தியாவுக்குள் நுழைந்து கங்கை ஆற்றுடன் கலக்கின்றன.

இங்கு மூன்று முக்கிய நீர் அமைப்புகள் ஆதிக்கம் செலுத்துகின்றன. கிழக்கில் கோசி, மத்திய பகுதியில் கண்டகி (இந்தியாவில் கண்டக ஆறு), மேற்கில் கர்னாலி (இந்தியாவில் காக்ரா) ஆகியவை உள்ளன. அதேவேளையில், மகாகாளி (ஷார்தா) ஆறு மேற்குப் பகுதியில் உள்ள எல்லையை ஒட்டி பாய்கிறது.

பாக்மதி, கமலா, ராப்தி மற்றும் பாபாய் உள்ளிட்ட சிவாலிக் மற்றும் சுரே மலைத்தொடர்களில் இருந்து உருவாகும் சிறிய ஆறுகள், அவற்றின் சிறிய மற்றும் செங்குத்தான நீர்ப்பிடிப்புப் பகுதிகளால் எதிர்பாராத வெள்ளத்தை ஏற்படுத்தக்கூடும்.

ஒருங்கிணைந்த மலை வளர்ச்சிக்கான சர்வதேச மையத்தைச் சேர்ந்த (ICIMOD) நீரியல் நிபுணர் மணீஷ் ஷ்ரேஷ்தாவின் கூற்றுப்படி, நேபாளத்தில் இருந்து ஏழு முதல் ஒன்பது முக்கிய ஆறுகள் இந்திய சமவெளிப் பகுதிகளுக்குள் பாய்கின்றன. இந்தியாவில் ஏற்படும் வெள்ளத்துக்கு இந்த ஆறுகளே காரணமாக உள்ளன.

இந்தியாவின் மத்திய நீர் ஆணையம், கோசி, கண்டக், பாக்மதி மற்றும் காக்ரா ஆகியவற்றை சில முக்கிய எல்லை தாண்டிய ஆறுகளாக அடையாளம் கண்டுள்ளது.

2. இந்தியாவில் எந்த மாநிலங்கள் அதிக ஆபத்தில் உள்ளன?

இந்தியாவின் மத்திய நீர் ஆணையம், கோசி, கண்டக், பாக்மதி மற்றும் காக்ரா ஆகியவற்றை சில முக்கிய எல்லை தாண்டிய ஆறுகளாக அடையாளம் கண்டுள்ளது.

பட மூலாதாரம், AFP via Getty Images

படக்குறிப்பு, பிகார் இந்தியாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாகும்.
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

இந்தியாவில் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்படும் மாநிலமாக பிகார் உள்ளது. வடக்கு பிகாரின் கிட்டத்தட்ட முக்கால் பங்கு இடங்கள், அதிகாரப்பூர்வமாக வெள்ள அபாயப் பகுதியாகக் குறிக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தில் வெள்ளத்தை ஏற்படுத்தும் பெரும்பாலான முக்கிய ஆறுகள் நேபாளத்தில் உருவாகின்றன. அவற்றில் கோசி ஆறு மிகவும் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியதாக உள்ளது.

இது "பிகாரின் துயரம்" என்று அழைக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து கண்டக், பாக்மதி மற்றும் கமலா ஆறுகள் உள்ளன.

ஆனால், இந்த ஆபத்து பிகாருக்கு மட்டும் உரியதல்ல.

உத்தரப் பிரதேசத்தின் கிழக்குப் பகுதிகளான காக்ரா, ராப்தி மற்றும் கண்டக் ஆறுகளால் பாதிக்கப்படுகின்றன. கோரக்பூர், பஹ்ரைச், லக்கிம்பூர் கேரி மற்றும் ஷ்ராவஸ்தி போன்ற மாவட்டங்கள் தொடர்ந்து பாதிக்கப்படுகின்றன.

உத்தரகாண்ட் மாநிலம் மகாகாளி-ஷார்தா ஆறுகளைப் பகிர்ந்து கொள்கிறது. வடக்கு வங்காளம் மெச்சி மற்றும் மகாநந்தா ஆறுகளின் நீரைப் பெறுகிறது.

"எண்ணிக்கை அடிப்படையில் பிகார் தான் முன்னிலையில் உள்ளது. உத்தரப் பிரதேசம் இரண்டாவது இடத்தில் உள்ளது. ஆனால், அது குறித்த செய்திகள் பெரும்பாலும் போதுமான அளவில் வெளியாகவில்லை," என்கிறார் ஐசிஐஎம்ஓடி (ICIMOD) அமைப்பின் நீரியல் நிபுணர் பிரதீப் மான் டாங்கோல்.

பிகார் மிகப்பெரிய சுமையை எதிர்கொள்கிறது. உத்தரப் பிரதேசமும் இந்த அபாயத்தின் முக்கியமான, பெரும்பாலும் கவனிக்கப்படாத பகுதியாக உள்ளது.

3. நேபாளத்தில் வெள்ளம் ஏற்படும்போது, ​​இந்தியாவின் சூழலை யார் தீர்மானிப்பார்கள்?

பிகார் மிகப்பெரிய சுமையை எதிர்கொள்கிறது. ஆனால், உத்தரப் பிரதேசமும் இந்த அபாயத்தின் முக்கியமான, பெரும்பாலும் கவனிக்கப்படாத பகுதியாக உள்ளது.

பட மூலாதாரம், AFP via Getty Images

படக்குறிப்பு, 2008-இல் பிகாரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டத்தின் ஒரு காட்சி

நீரியல் நிபுணர்கள் இதை மூன்று பகுதிகளாகப் பிரித்துப் பார்க்கலாம் என்று கூறுகின்றனர்.

முதலில், மழை

அது எங்கு பெய்கிறது, எவ்வளவு தீவிரமாகப் பெய்கிறது என்பது முக்கியம்.

இந்தியாவை அடையும் வெள்ளப்பெருக்கின் உச்சநிலை பெரும்பாலும் உயரமான இமயமலைப் பகுதிகளில் உருவாவதில்லை. மாறாக, சிவாலிக், சுரே மற்றும் தெராய் பகுதிகளின் கீழ்நிலைப் பகுதிகளில் உருவாகிறது. இங்கு தீவிரமான பருவமழை, செங்குத்தான சரிவுகளைக் கொண்ட சிறிய நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்யக்கூடும்.

இரண்டாவதாக, ஆறு

நேபாளத்தின் ஆறுகள் மலைத்தொடரின் முன்பகுதியில் உள்ள ஒரு கூர்மையான பிரிவைக் கடந்து, தங்களுடன் கொண்டுவரும் வண்டல் மண்ணை கொட்டிவிட்டு, பின்னர் சமவெளிகளில் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தும், வளைந்தும் செல்லும் நீரோடைகளாகப் பரவுகின்றன.

மூன்றாவது, இந்தியாவிலிருந்து நீர் வரும் சூழல்

வெள்ளத்தின் தீவிரம், அந்த நீர் எதிர்கொள்ளும் காரணிகளைப் பொறுத்து அமைகிறது. இந்தியப் பகுதியில் பெய்யும் மழையின் அளவு, கங்கையின் நீர்மட்டம், கரைகள் மற்றும் தடுப்பணைகள், அத்துடன் வெள்ளச் சமவெளியில் உள்ள சாலைகள், ரயில்வே மற்றும் குடியிருப்புகளால் தடைபடும் வடிகால் அமைப்பு ஆகியவை இதில் அடங்கும்.

எனவே, எல்லையைக் கடந்து பாயும் நீரின் அதிகபட்ச அளவு பெரும்பாலும் நேபாளத்தில் பெய்யும் மழையைப் பொறுத்தே அமைகிறது. ஆனால், வெள்ளத்தின் தீவிரம் குறைந்தபட்சம் அதே அளவுக்கு இந்தியாவின் நிலைமைகளையும் சார்ந்துள்ளது.

2008-ஆம் ஆண்டு கோசி பேரழிவு, ஆற்றின் நீரோட்டம் கரையின் கொள்ளளவை விட மிகவும் குறைவாகவே இருந்தது என்பதைத் தெளிவுபடுத்தியது. இந்தப் பேரழிவு அசாதாரணமான வெள்ளத்தால் ஏற்படவில்லை. மாறாக, கரையில் ஏற்பட்ட உடைப்பினாலேயே ஏற்பட்டது.

ஐசிஐஎம்ஓடி அமைப்பைச் சேர்ந்த ஷாஷ்வத் சன்யால் கூறுகையில், எல்லையை அடையும் அதிகபட்ச நீரோட்டத்துக்கு நேபாளத்தின் மழையே முதன்மையான காரணமாக உள்ளது.

ஆனால், அந்த நீர் எல்லையை அடைந்த பிறகு, வெள்ளத்தின் தீவிரத்துக்கு இந்தியாவின் நிலைமைகளும் குறைந்தபட்சம் அதே அளவுக்கு காரணமாகின்றன என்கிறார்.

4. நேபாளத்தில் பெய்யும் மழை எப்படி இந்தியாவில் வெள்ள அச்சுறுத்தலை ஏற்படுத்தும்?

2008-ஆம் ஆண்டு கோசி பேரழிவு இதற்கு ஒரு வலுவான உதாரணமாகும்.

நேபாளத்தில் கோசி ஆற்றின் கரை உடைந்ததைத் தொடர்ந்து, பிகாரில் சுமார் 400 பேர் உயிரிழந்தனர். ஆனால், ஆச்சரியமாக, இது வழக்கத்திற்கு மாறாக அதிக அளவில் ஆற்றில் நீரோட்டம் ஏற்பட்டதால் நிகழ்ந்தது அல்ல.

ஐஐடி கான்பூரின் புவியியல் பேராசிரியர் ராஜீவ் சின்ஹா கூறுகையில், ஆற்றின் நீரோட்டம் அதன் கொள்ளளவில் சுமார் பத்தில் ஒரு பங்கு மட்டுமே இருந்தது. பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு, போதிய அளவில் பராமரிக்கப்படாமல் இருந்த கரையில் ஏற்பட்ட உடைப்பே இந்தப் பேரழிவுக்குக் காரணமாக இருந்தது.

"1950கள் மற்றும் 1960களில் கட்டப்பட்ட கரைகள் முறையாகப் பராமரிக்கப்படவில்லை. அவை அரிக்கப்பட்டு, இறுதியில் பலவீனமான பகுதிகள் உருவாகின. இந்தப் பலவீனமான பகுதிகளின் வழியாக ஆறு அணையை உடைத்துக்கொண்டு, சுமார் 100 ஆண்டுகளாக வெள்ளத்தைச் சந்திக்காத இந்தியாவின் சில பகுதிகளுக்குள் நுழைந்தது," என்கிறார் சின்ஹா.

இந்தத் தோல்வி கட்டமைப்பு ரீதியானது என்று சன்யால் கூறுகிறார்.

5. நேபாளத்திடமிருந்து இந்தியாவிற்கு எவ்வளவு எச்சரிக்கை கிடைக்கும்?

சன்யாலின் கூற்றுப்படி, வழக்கமான பருவமழை வெள்ளத்தின்போது, "நீரோட்டம் எந்த வேகத்தில் கீழ்நோக்கிப் பாய்கிறது என்பதைப் பொறுத்து, இந்தியாவுக்கு சுமார் 12 மணி நேரம் முதல் இரண்டு நாட்கள் முன்பு வரை முன்னெச்சரிக்கை கிடைக்கக்கூடும்."

நேபாளத்தின் மலைப்பகுதியில் இருந்து கோசி மற்றும் கண்டக ஆறுகள் வழியாக பிகாரின் சமவெளிப் பகுதிகளை நீர் சென்றடைய சுமார் ஒரு நாள் ஆகலாம். காக்ரா ஆறு வழியாகச் செல்லும்போது அதைவிட சற்று அதிக நேரம் ஆகலாம்.

சுரே ஆற்றில் திடீர் வெள்ளம் ஏற்பட்டால், அது சில மணி நேரங்களுக்குள் ஏற்படக்கூடும்.

நிலச்சரிவு, அணை உடைதல் அல்லது வண்டல் மற்றும் பாறைக் குவியல்களுடன் கூடிய நீரோட்டம் போன்ற நிகழ்வுகள் இன்னும் தீவிரமானதாக இருக்கக்கூடும்.

தற்போதைய வெள்ளத்தில், ராசுவாவிலிருந்து ஏற்பட்ட அதிகபட்ச நீரோட்டம் இந்திய எல்லைக்கு அருகிலுள்ள திரிவேணியை சுமார் ஏழரை மணி நேரத்தில் சென்றடைந்தது.

இந்தியாவும் நேபாளமும் பல்வேறு கண்காணிப்பு நிலையங்களைக் கொண்ட வலையமைப்பிலிருந்து நிகழ்நேர மழைப்பொழிவு மற்றும் ஆற்றின் நீர்மட்டத் தரவுகளைப் பகிர்ந்து கொள்கின்றன.

நேபாளத்தின் நீரியல் மற்றும் வானிலைத் துறை, மழைப்பொழிவு மற்றும் ஆற்றின் நீர்மட்டத் தரவுகளை இந்திய மத்திய நீர் ஆணையத்துக்கு அனுப்புகிறது. இந்தத் தரவுகள் வெள்ள முன்னறிவிப்புக்குப் பயன்படுத்தப்படுகின்றன.

ஆனால், இதில் குறிப்பிடத்தக்க குறைபாடுகள் இன்னும் இருப்பதாக சன்யால் கூறுகிறார்.

அவற்றில் ஒன்று, மிக வேகமாக நீரோட்டம் பாயும் சுரே ஆற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் நிகழ்நேரக் கண்காணிப்பு நிலையங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதாகும்.

இரு நாடுகளுக்கும் இடையே பகிரப்பட்ட வெள்ள முன்னறிவிப்பு மாதிரி எதுவும் இல்லை. கரைகளின் நிலை, ஆற்றின் போக்கில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் வண்டல் மண் தொடர்பான வழக்கமான தகவல் பகிர்வும் குறைவாகவே உள்ளது.

அதன்பிறகு, மிக முக்கியமாக, இறுதிக்கட்டம் வருகிறது.

ஒரு மாவட்ட அலுவலகத்துக்கு எச்சரிக்கை அனுப்புவது என்பது, ஆபத்தில் இருக்கும் ஒரு குடும்பத்துக்கு அதே எச்சரிக்கையை அனுப்புவதற்கு சமமானதல்ல.

இந்த எல்லை தாண்டிப் பாயும் ஆறுகளைப் பொறுத்தவரை, "முன்கூட்டியே எச்சரிக்கும் அமைப்புகள் தொடர்பான தகவல் பகிர்வும் ஒத்துழைப்பும் மிகவும் முக்கியமானவை. பனிப்பாறை ஏரிகள், அவற்றிலிருந்து வெளியேறும் நீரின் அளவு மற்றும் காலப்போக்கில் அவற்றில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவற்றை விரைவாகவும் தொடர்ந்து கண்காணிக்கவும் வேண்டியது அவசியம்." என்கிறார் சின்ஹா.

6. நேபாளம் மற்றும் இந்தியாவில் ஏற்படும் வெள்ளம் குறித்து நிலவும் தவறான கருத்து என்ன?

மேலும், இரு நாடுகளுக்கும் இடையே பகிரப்பட்ட வெள்ள முன்னறிவிப்பு மாதிரி எதுவும் இல்லை. கரை மேடுகளின் நிலை, ஆற்றின் போக்கில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் வண்டல் மண் தொடர்பான வழக்கமான தகவல் பகிர்வும் குறைவாகவே உள்ளது.

பட மூலாதாரம், AFP via Getty Images

படக்குறிப்பு, இந்தியாவின் சாமோலி மாவட்டத்தில் தௌலிகங்கா மற்றும் ரிஷிகங்கா ஆறுகள் சங்கமிக்கும் இடம்.

நேபாளம் இந்தியாவுக்குத் தண்ணீரைத் திறந்துவிடுகிறது என்பது பொதுவாக நிலவும் தவறான புரிதல் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இதைச் செய்யக்கூடிய அளவுக்கு பெரிய நீர்த்தேக்கங்கள் நேபாளத்தில் இல்லை. அதன் முக்கிய நீர்த்தேக்க அணையான குலேகானி, ஒரு கன கிலோமீட்டரில் பத்தில் ஒரு பங்குக்கும் குறைவான அளவே தண்ணீரைச் சேமித்து வைக்கக்கூடியது.

"அதனால், திறந்துவிடுவதற்கு அங்கு தண்ணீரே இல்லை" என்கிறார் சன்யால்.

கோசி மற்றும் கண்டக் அணைகளை இந்தியா இயக்குகிறது. வெள்ளநீர் எல்லையை அடையும்போது, அதற்கு முக்கியக் காரணம் மேல்பகுதிகளில் பெய்யும் கனமழையே தவிர, நேபாளம் அணைகளைத் திறப்பது அல்ல.

ஆனால், இதற்குப் பின்னால் ஒரு முக்கியமான காரணம் உள்ளது. வடக்கு பிகார் மற்றும் கிழக்கு உத்தரப் பிரதேசத்தில் ஏற்படும் வெள்ளத்தின் பெரும்பகுதி நேபாளத்தில் பெய்யும் மழையால் ஏற்படுகிறது.

எனவே, நேபாளத்தில் பெய்யும் மழையின் அளவும் இந்தியாவில் ஏற்படும் வெள்ளத்தின் தீவிரத்தைப் பாதிக்கிறது.

கங்கை ஆற்றின் சராசரி ஆண்டு நீரோட்டத்தில் சுமார் 40 சதவீதத்தை நேபாளம் வழங்குகிறது. வறண்ட காலத்தில் இந்தப் பங்கு இன்னும் அதிகமாக உள்ளது. இதனால், நேபாளத்தின் நீரியல் அமைப்பு இந்தியாவுக்கு முக்கியமானதாக உள்ளது.

"இதை காரணம் மற்றும் விளைவு என்ற எளிய கதையாகப் பார்ப்பது சரியாக இருக்காது. மழை என்பது ஒரு முடிவு அல்ல" என்கிறார் சன்யால்.

ஒரு குறிப்பிட்ட நீரோடையின் அழிவுத் தன்மை, இந்தியா மற்றும் நேபாளம் ஆகிய இரு நாடுகளிலும் உள்ள நிலைமைகளைப் பொறுத்தே அமைகிறது. கங்கையின் நீர்மட்டம், இந்தியாவில் பெய்யும் மழை, கரை மேடுகளின் வலிமை, வடிகால் அமைப்பு மற்றும் வண்டல் மண் ஆகியவை இதில் அடங்கும்.

"இதன் தாக்கங்கள் இரு வழிகளிலும் உள்ளன," என்கிறார் சன்யால்.

தொடர்ந்து பேசிய அவர், "இந்தியாவைப் பாதுகாப்பதற்காகக் கட்டப்பட்ட கரை மேடுகள் மற்றும் அணைகள், நேபாளத்தின் தெராய் பகுதியில் நீர்மட்டத்தை உயர்த்தி, வெள்ளத்தை ஏற்படுத்தியுள்ளன. இது நேபாளத்தின் நீண்டகால கவலையாக இருந்து வருகிறது." என்கிறார்.

நேபாளமும் இந்தியாவும் ஒரே ஆற்றுத் தொகுப்பைப் பகிர்ந்து கொள்கின்றன. இதில் ஒரு நாடு மேல் பகுதியிலும், மற்றொரு நாடு கீழ் பகுதியிலும் அமைந்துள்ளன.

எனவே, தீர்வு பழியைச் சுமத்துவதில் இல்லை. மாறாக, இரு நாடுகளுக்கும் இடையேயான தரவுப் பகிர்வு, வெள்ள முன்னறிவிப்பு மற்றும் நதிநீர் மேலாண்மை ஆகியவற்றை மேம்படுத்துவதில் தான் உள்ளது.

7. இந்தியா எதைப் பற்றி மிகவும் கவலைப்பட வேண்டும்?

எனவே, தீர்வு பழியைச் சுமத்துவதில் இல்லை; மாறாக, இரு நாடுகளுக்கும் இடையேயான தரவுப் பகிர்வு, வெள்ள முன்னறிவிப்பு மற்றும் ஆற்று மேலாண்மை ஆகியவற்றை மேம்படுத்துவதில்தான் உள்ளது.

பட மூலாதாரம், Anadolu via Getty Images

படக்குறிப்பு, 2025-இல் இந்தியாவின் தராலியில் ஏற்பட்ட மேகவெடிப்பு, கனமழை மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தியது.

"இந்தியா கவலைப்பட வேண்டும், அதற்குக் காரணம் நேபாளத்தின் கோசி ஆறாக இருக்க வேண்டிய அவசியமில்லை" என்கிறார் ராஜீவ் சின்ஹா.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இமயமலைப் பகுதிகளில் என்ன நடக்கிறது என்பதையும், நீர், பாறை, பனி மற்றும் மிகப்பெரிய அளவிலான வண்டல் மண் ஆகியவை திடீரென ஒன்றாகக் கலக்கும்போது என்ன நிகழ்கிறது என்பதையும் பற்றியது தான் உண்மையான எச்சரிக்கை என நிபுணர்கள் கூறுகின்றனர்.

சமீபத்தில் நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவு, கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட்ட பல பேரழிவுச் சம்பவங்களைப் போன்றது என்கிறார் சின்ஹா.

அவற்றில் 2021-ஆம் ஆண்டு சாமோலி பேரழிவும், 2025-ஆம் ஆண்டு உத்தராகண்டில் ஏற்பட்ட தராலி பேரழிவும் அடங்கும். நேபாளத்தில் நிகழ்ந்த சம்பவம் "அநேகமாக ஐந்து முதல் பத்து மடங்கு பெரிதாக இருந்திருக்கலாம்," என்கிறார் அவர்.

"முக்கியமான விஷயம் என்னவென்றால், இவை வழக்கமான வெள்ளங்கள் அல்ல," என்கிறார் சின்ஹா.

ஒரு வழக்கமான வெள்ளத்தில் பெரும்பாலும் தண்ணீரே இருக்கும். ஆனால், கனமழை, பனி உருகுதல் அல்லது திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக வரும் நீர், அதிக அளவிலான வண்டல் மண்ணுடன் கலக்கும்போது, அதன் பாதையில் உள்ள கிட்டத்தட்ட எதையும் அழிக்கக்கூடிய அடர்த்தியான, அதிக ஆற்றல் கொண்ட சேறுக் கலவையை உருவாக்க முடியும்.

2021-ஆம் ஆண்டு சாமோலி பேரழிவில் இதுதான் தெரியவந்தது.

அப்போது வட இந்தியாவின் சாமோலி பள்ளத்தாக்கில் இமயமலையின் ஒரு பெரிய பனிப்பாறைப் பகுதி இடிந்து விழுந்தது. இதனால் குப்பைகள் மற்றும் நீர் கலந்த பெருவெள்ளம் கீழ்நோக்கிப் பாய்ந்து, 200 பேரை பலி வாங்கியதுடன் நீர்மின் உள்கட்டமைப்புகளையும் சேதப்படுத்தியது.

2025-ஆம் ஆண்டு உத்தராகண்டின் தராலியிலும் இதே நிலை காணப்பட்டது. அப்போது கனமழையால் திடீர் வெள்ளப்பெருக்கும், குப்பைகள் மற்றும் வண்டலுடன் கூடிய நீரோட்டமும் ஏற்பட்டதில், கிராமத்தின் சில பகுதிகள் பல மீட்டர் உயரத்துக்கு குப்பைகளுக்குள் புதைந்தன.

இதனுடன் காலநிலை மாற்றமும் உள்ளது.

மழையின் தீவிரம் அதிகரித்து வருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். உலகின் மற்ற பகுதிகளைவிட இந்தப் பகுதி வேகமாக வெப்பமடைந்து வருகிறது.

வெப்பமான வளிமண்டலம் அதிக ஈரப்பதத்தைத் தக்கவைத்துக்கொள்ளும். பருவமழையும் குறுகிய காலத்தில் அதிக மழையைக் கொண்டு வருகிறது.

அதேநேரத்தில், மழையின் தீவிரமும் அதிகரித்து வருகிறது.

உயரமான மலைப்பகுதிகளில் ஏற்படும் அபாயங்களும் அதிகரித்து வருகின்றன. உருகி வரும் நிரந்தர உறைபனி, பனிப்பாறை ஏரிகள் உடைந்து திடீரென நீர் வெளியேறும் சம்பவங்களையும், பனிச்சரிவுகளையும் அதிகரிக்கக்கூடும்.

இதனால் கணிக்க கடினமான, திடீரென அதிக வேகத்தில் பாயும் குப்பை மற்றும் வண்டல் வெள்ளங்கள் ஏற்படக்கூடும்.

பேரழிவுகள் அதிகரிக்கும்போது, நிலச்சரிவுகளும் அதிகரிக்கும். இதனால் ஆறுகளில் வண்டல் மண் படிந்து, ஆற்றுப்படுகைகள் உயர்ந்து, அவற்றின் நீரைச் சுமந்து செல்லும் திறன் குறையும். இது எல்லையின் இருபுறங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

இந்த நிகழ்வுகள் அனைத்தும் இமயமலைப் பகுதியில் அதிகரித்து வரும் பேரழிவு அபாயத்தின் ஒரு பகுதியாகும். இதனால் இந்தியாவுக்கான ஆபத்து கணிசமாக அதிகரிக்கிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு