குவைத் விமான நிலையம் மீது டிரோன் தாக்குதல் - இந்தியர் ஒருவர் உயிரிழப்பு

குவைத், பஹ்ரைன், இரான், அமெரிக்கா

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, குவைத் சர்வதேச விமான நிலையம் இரானிய டிரோன்களால் தாக்கப்பட்டதாக குவைத் ராணுவம் தெரிவித்துள்ளது.
    • எழுதியவர், ஜரோஸ்லாவ் லுகிவ்
    • எழுதியவர், டோபி மேன்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

குவைத்தின் விமான நிலையம் மீது நடந்த தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ள நிலையில் 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

புதன்கிழமை நடைபெற்ற தாக்குதல்களை "இரானின் கிரிமினல் அத்துமீறல்" என குவைத்தின் பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்ட நிலையில் தூதரகங்கள் சேதமடைந்துள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

விமான நிலைய தாக்குதலுக்கு பொறுப்பேற்க மறுத்த இரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (ஐஆர்ஜிசி), அமெரிக்க ஏவுகணை இடைமறிக்கும் அமைப்பில் ஏற்பட்ட பிழையால் சேதங்கள் ஏற்பட்டிருக்கும் என்றும் தெரிவிக்கிறது.

இந்தக் கூற்றை தவறு எனக் கூறிய அமெரிக்க ராணுவத்தின் மத்திய கட்டளை மையம் (சென்ட்காம்), விமான நிலையத்தை "வேண்டுமென்றே, திட்டமிட்டு, நியாயமற்ற முறையில்" இரான் தாக்கியதாகவும் கூறுகிறது.

இரானிய எண்ணெய் கப்பல் மற்றும் கெஷ்ம் தீவு மீதான அமெரிக்காவின் தாக்குதல்களுக்குப் பதிலடியாக வளைகுடாவில் உள்ள அமெரிக்க தளங்களை இலக்கு வைத்ததாக புரட்சிகர காவல்படை முன்னர் தெரிவித்திருந்தது.

இரான் மீது தற்காப்பு தாக்குதல்களை நடத்தியதாக கூறும் அமெரிக்கா குவைத் மற்றும் பஹ்ரைனை நோக்கி வந்த இரானிய ஏவுகணைகளை இடைமறித்து சுட்டு வீழ்த்தியதாகவும் தெரிவிக்கிறது.

அதோடு புதன்கிழமை ஓமன் வளைகுடாவில் உள்ள அமெரிக்க கடற்படை கப்பலை இலக்கு வைத்ததாக இரான் தெரிவித்த நிலையில் சென்ட்காம் அதனை மறுத்துள்ளது.

சமீபத்திய மோதல்கள் ஏற்கெனவே தடுமாறிக் கொண்டிருக்கும் அமெரிக்கா - இரான் போர்நிறுத்தத்தை அச்சுறுத்துகிறது.

குவைத், பஹ்ரைன், இரான், அமெரிக்கா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப் படம்
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

இந்த நிலையில் குவைத் விமான நிலையம் மீதான இரானிய தாக்குதலில் உயிரிழந்தவர் இந்தியக் குடிமகன் என்பது பின்னர் தெரியவந்தது.

இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் இந்த தாக்குதலைக் கண்டித்துள்ளது. மேலும் பல இந்தியக் குடிமகன்கள் காயமடைந்துள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது.

"இத்தகைய தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என அனைத்து தரப்பினரையும் மீண்டும் கேட்டுக் கொள்கிறோம்," என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதல்களைத் தொடர்ந்து இரானிய ராஜதந்திரிகள் இருவர் 24 மணி நேரத்தில் நாட்டைவிட்டு வெளியேறுமாறு குவைத் வெளியுறவு அமைச்சகம் உத்தரவிட்டுள்ள நிலையில் இரான் தூதருக்கும் சம்மன் அனுப்பியுள்ளது.

முன்னதாக, கெஷ்ம் தீவு மற்றும் ஹோர்மூஸ் நீரிணையில் தான் மேற்கொண்ட நள்ளிரவு தாக்குதல்கள் "மத்திய கிழக்கில் இரான் மேற்கொண்ட தாக்குதல் முயற்சிகளுக்குப் பதிலடி" என்று தெரிவித்தது. மேலும் இந்தத் தாக்குதல்கள் இரானிய ராணுவத்தின் தரைக் கட்டுப்பாட்டு நிலையத்தை இலக்கு வைத்தது என்றும் குறிப்பிட்டிருந்தது.

மேலும் "பிராந்திய கடற்பகுதியை முறையாக கடந்து வந்த சிவிலியன் மரைனர்களை" நோக்கி இரான் செலுத்திய மூன்று தாக்குதல் டிரோன்களை சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்கா தெரிவிக்கிறது.

குவைத்தை நோக்கி இரண்டு ஏவுகணைகளையும் பஹ்ரைனை நோக்கி மூன்று ஏவுகணைகளையும் இரான் செலுத்தியதாக கூறும் சென்ட்காம் அவை அனைத்தும் சுட்டுவீழ்த்தப்பட்டது அல்லது இடைமறிக்கப்பட்டதாகக் கூறுகிறது.

ஒரு "பிராந்திய நாட்டில்" ஏவுகணைகள் மற்றும் டிரோன்களைப் பயன்படுத்தி மேற்கொண்ட பதிலடி தாக்குதலில் அமெரிக்க தளங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களை தாக்கியதாக இரான் தெரிவிக்கிறது.

முன்னதாக, ஏப்ரல் 13-ஆம் தேதி தொடங்கிய ஹோர்மூஸ் நீரிணையின் மீதான அமெரிக்க முற்றுகையின் ஒரு பகுதியாக இரானை நோக்கிச் சென்று கொண்டிருந்த சரக்கு ஏற்றப்படாத எண்ணெய் கப்பலை தான் தாக்கி செயலிழக்கச் செய்தததாக சென்ட்காம் கூறியிருந்தது.

போட்ஸ்வானா கொடி ஏந்திய எம்/டி கப்பல் குழுவினர் "அடுத்தடுத்த எச்சரிக்கையை புறக்கணித்ததால்" அந்தக் கப்பலின் என்ஜின் அறையை நோக்கி ஹெல்ஃபயர் ஏவுகணையை ஓர் அமெரிக்க விமானம் செலுத்தியதாகவும் சென்ட்காம் தெரிவித்தது.

இதற்குப் பதிலடி கொடுக்கப்படும் என உடனடியாக எதிர்வினையாற்றிய ஐஆர்ஜிசி, "ஹோர்மூஸ் நீரிணையின் பாதுகாப்பை பாதிப்பது அமெரிக்க ராணுவத்திற்கு மிகப்பெரிய விலையைக் கொடுக்கும்." என்று தெரிவித்தது.

ஏஎஃப்பி செய்தி முகமை வெளியிட்ட செய்தியின்படி, இரான் மீது நடத்தப்பட்ட இரவு நேர தாக்குதலுக்கான நேரடி மற்றும் மன்னிக்க முடியாத பொறுப்பு குவைத் மற்றும் பஹ்ரைனின் தலைவர்களுக்கும் இருக்கிறது என இரான் வெளியுறவு அமைச்சகம் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க ராணுவ தளங்கள் அமைந்துள்ள பஹ்ரைன் மற்றும் குவைத் மீது இரான் தொடர்ந்து இலக்குகளைத் தாக்கியுள்ளது.

அமெரிக்கா மற்றும் இரான் இடையே போர்நிறுத்த பேச்சுவார்த்தைகள் முடங்கி போரை நிறுத்துவதற்கான ஒப்பந்தம் ஏற்படாத நிலையில் இந்த தாக்குதல்கள் நிகழ்ந்துள்ளது.

குவைத், பஹ்ரைன், இரான், அமெரிக்கா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்தப் பேச்சுவார்த்தைகளில் இரானின் அதி உயர் தலைவர் மொஜ்தபா காமனெயியும் சம்பந்தப்பட்டு இருப்பதாகவும் டிரம்ப் கூறினார். (கோப்புப் படம்)

தன்னுடைய விமர்சகர்கள் அமர்ந்து ஓய்வெடுக்க வேண்டும் எனக் கூறிய டிரம்ப், இரான் ஒப்பந்தம் மேற்கொள்ள விரும்புவதாகவும் அது அமெரிக்காவுக்குச் சிறந்த ஒன்றாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.

முன்னதாக, போர்நிறுத்தத்தை நீட்டிப்பது தொடர்பாக விவாதிக்க மூத்த அதிகாரிகளைச் சந்தித்த பிறகு, சாத்தியமான அமைதி ஒப்பந்தத்தின் விதிமுறைகளில் திருத்தங்களை மேற்கொள்ளுமாறு டிரம்ப் கோரியதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவிதன.

இந்த மாற்றங்கள் ஹோர்முஸ் நீரிணை, அதிகம் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை நீக்குவது மற்றும் இரானின் அணுசக்தி திட்டம் மீதான பேச்சுவார்த்தைகளை மீண்டு தொடங்குவதற்கான கட்டமைப்பை உருவாக்குவது ஆகியவற்றுடன் தொடர்புடையது என்று பிபிசியின் அமெரிக்க கூட்டு செய்தி நிறுவனமான சிபிஎஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

திங்கட்கிழமை இது தொடர்பாக பேசிய இரானின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்லாயில் பாகேய், இவை விவாதிக்கப்பட்டது என்கிற செய்தியை மறுத்துள்ளார்.

மேலும் அமெரிக்க "தனது பார்வை தொடர்ந்து மாற்றி வருகிறது என்றும் புதிய அல்லது முரணான கோரிக்கைகளை முன்வைக்கிறது" என்றும் தெரிவித்தார்.

புதன்கிழமை வெளியான நேர்காணல் ஒன்றில் பேசிய டிரம்ப், "அணு ஆயுதம் வைத்துக் கொள்ளப்போவதில்லை என இரான் ஏற்கெனவே ஒப்புக்கொண்டு விட்டதாக தெரிவித்திருந்தார்.

இந்தப் பேச்சுவார்த்தைகளில் இரானின் அதி உயர் தலைவர் மொஜ்தபா காமனெயியும் சம்பந்தப்பட்டு இருப்பதாகவும் டிரம்ப் கூறினார்.

"நாங்கள் இருவரும் நன்றாகப் பழகி வருகிறோம் போலிருக்கிறது," என்றார் டிரம்ப்.

குவைத், பஹ்ரைன், இரான், அமெரிக்கா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ செவ்வாய்கிழமை நாடாளுமன்றத்தில் பேசினார்.

மொத்ஜபா காமனெயியைச் சந்திப்பீர்களா என்கிற கேள்விக்குப் பதிலளித்த டிரம்ப், "நான் அவரைச் சந்திக்க ஆசைப்படுகிறேன். எல்லாம் எப்படி அமைகிறது என்பதைப் பொறுத்து, நாங்கள் ஒருவேளை எப்போதாவது சந்திப்போம்." என்றார்.

செவ்வாய்கிழமை நாடாளுமன்றத்தில் பேசிய அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ, பேச்சுவார்த்தை நடத்துபவர்கள் ஹோர்மூஸ் நீரிணையைத் திறப்பதற்குப் பதிலாக இரானுக்கு பொருளாதார தடைகளில் இருந்து நிவாரணம் அளிக்கவில்லை எனத் தெரிவித்திருந்தார்.

"தற்போது அவர்களிடம் விவாதிக்கப்படுவதெல்லாம், பொருளாதார தடைகளில் அளிக்கப்படும் விலக்குகள் அனைத்தும் நிபந்தனைகளைப் பொருத்தது தான். அவை அந்தப் பொருளாதார தடைகள் எதனால் முதலில் விதிக்கப்பட்டன என்கிற காரணத்துக்கு மாற்றாகவே அவை அமைய முடியும். அந்தக் காரணம் அவர்களின் அணுசக்தி திட்டம் தான்," என்கிறார் மார்கோ ரூபியோ.

மோதலை முடிவுக்கு கொண்டு வருவதற்கான அமெரிக்காவின் உத்தி பற்றி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், "போர் முடிந்துவிட்டது." என்று தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு