ஒபெக் அமைப்பிலிருந்து வெளியேறும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் - இது இந்தியாவின் நலன்களுக்கு சாதகமா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஷுபாங்கி மிஸ்ரா
- பதவி, பிபிசி செய்தியாளர்
- வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் இரான் இடையிலான மோதல் காரணமாக சர்வதேச எரிபொருள் சந்தையில் நிச்சயமற்ற நிலை அதிகரித்து வருகிறது. இந்தச் சூழலில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மே 1ஆம் தேதி பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பான ஒபெக்-இல் இருந்து விலகுவதாக செவ்வாய்க்கிழமை அறிவித்தது.
ஒபெக் என்பது 12 முக்கிய எண்ணெய் உற்பத்தி நாடுகளின் கூட்டமைப்பாகும். இந்தக் கூட்டமைப்பு, ஒதுக்கீடுகள் எனப்படும் வரம்புகளை நிர்ணயிப்பதன் மூலம், ஒவ்வோர் உறுப்பு நாடும் எவ்வளவு எண்ணெய் உற்பத்தி செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானிக்கிறது. எண்ணெய் விநியோகத்தைக் கட்டுப்படுத்துவதும், உலகளாவிய எண்ணெய் விலைகளில் செல்வாக்கு செலுத்துவதும் இதன் நோக்கமாகும்.
ஒபெக்-இல் இருந்து விலகுவதன் மூலம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இனி அது உற்பத்தி செய்யக்கூடிய எண்ணெயின் அளவு குறித்த இந்த வரம்புகளைப் பின்பற்ற வேண்டியதில்லை. அது ஒபெக்+ கூட்டணியில் இருந்தும் விலகும். 2016இல் உருவாக்கப்பட்ட இந்தப் பெரிய குழுவில், அனைத்து ஒபெக் உறுப்பு நாடுகளுடன் கூடுதலாக 10 எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளும் இடம்பெற்றன.
எக்ஸ் பக்கத்தில் பகிரப்பட்ட ஓர் அறிக்கையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் எரிசக்தி அமைச்சகம் இந்த முடிவுகான காரணத்தை விளக்கியுள்ளது. அதில், "தேசிய நலன்களின் தேவைகளைக் கருத்தில் கொண்டு", "அரேபிய வளைகுடா மற்றும் ஹோர்மூஸ் நீரிணையில் ஏற்படும் இடையூறுகளால் புவிசார் அரசியல் ஏற்றத்தாழ்வுகள் குறுகிய காலத்தில் தொடரும் நிலையில்", சந்தைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான நாட்டின் "உறுதிப்பாட்டின்" காரணமாகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.
மேலும் அந்த அறிக்கை, "இந்த முடிவு, ஐக்கிய அரபு எமிரேட்ஸின் நீண்டகால மூலோபாய மற்றும் பொருளாதார தொலைநோக்குப் பார்வையுடனும், உள்நாட்டு எரிசக்தி உற்பத்தியில் முதலீட்டை விரைவுபடுத்துவது உள்பட அதன் எரிசக்தித் துறையின் பரிணாம வளர்ச்சியுடனும் ஒத்துப்போகிறது. அதே நேரத்தில், உலகளாவிய எரிசக்தி சந்தைகளின் எதிர்காலத்தை எதிர்நோக்கி, ஒரு பொறுப்பான மற்றும் நம்பகமான உற்பத்தியாளராகத் தனது பங்குக்கான உறுதிப்பாட்டை இது வலுப்படுத்துகிறது," என்று கூறுகிறது.
எளிதாகச் சொன்னால், புவிசார் அரசியல் பதற்றம் அதிகரிக்கும் நிலையில், தனது எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கவும் சந்தை தேவைக்கு விரைவாக பதிலளிக்கவும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிக சுதந்திரம் வேண்டுமென விரும்புகிறது.
அமெரிக்கா, இரான், இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு இடையிலான தற்போதைய மோதல் உலகளாவிய எண்ணெய் வர்த்தகத்தைச் சீர்குலைத்துள்ள சூழலில் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் இந்த முடிவு வந்துள்ளது. மேலும், ஒபெக்கின் முக்கியத் தலைமையாகக் கருதப்படும் சௌதி அரேபியாவுக்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்து வரும் காலகட்டத்தில் இது நிகழ்கிறது.

பட மூலாதாரம், Getty Images
இது இந்தியாவை எப்படி பாதிக்கும்?
அதிகளவு எரிசக்தி தேவைப்படும் இந்தியாவை போன்ற ஒரு நாட்டிற்கு, பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பில் இருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வெளியேறும் முடிவு "ஒரு நல்ல செய்தியாக இருக்கலாம், இருப்பினும் அதை இப்போதே உறுதியாகக் கூறுவது மிகவும் முன்கூட்டியே கணிப்பதாக இருக்கும்," என்று அப்சர்வர் ரிசர்ச் ஃபவுண்டேஷனின் வியூக ஆய்வுகள் திட்டத்தின் துணை இயக்குநர் விவேக் மிஸ்ரா கூறுகிறார்.
பிபிசியிடம் பேசிய அவர், "ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இந்தியாவின் ஒரு வலுவான கூட்டாளி. அது தனது கச்சா எண்ணெய் உற்பத்தியை ஒரு நாளைக்கு 5-6 மில்லியன் பீப்பாய்களாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது கச்சா எண்ணெய் நுகர்வோராகவும் வியூகக் கூட்டாளிகளாகவும் இருக்கும் இந்தியாவுக்கு ஒரு நல்ல செய்தியாகவே அமையும்," என்றார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஒபெக்கில் இருந்து வெளியேறுவது இந்தியாவுக்குச் சாதகமான விளைவை ஏற்படுத்தக்கூடும் என நிபுணர்கள் கூறுகின்றனர். இந்தியா இறக்குமதி செய்யும் எண்ணெயை பெருமளவில் சார்ந்துள்ளதே இதற்கு முக்கியக் காரணம்.
பிப்ரவரி 2026 நிலவரப்படி, இந்தியா தனக்குத் தேவையான கச்சா எண்ணெயில் கிட்டத்தட்ட 91 சதவிகிதத்தை இறக்குமதி செய்து வந்தது. இதில், சுமார் 54% எண்ணெய் இறக்குமதி மத்திய கிழக்கு பிராந்திய நாடுகளில் இருந்து வந்தது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நீண்ட காலமாக இந்தியாவின் கச்சா எண்ணெய் வழங்கும் முக்கிய நாடுகளில் ஒன்றாக இருந்து வருகிறது. இந்தியாவின் மொத்த கச்சா எண்ணெய் இறக்குமதியில் சுமார் 10 சதவிகிதத்தை அது வழங்குகிறது.
புது டெல்லியில் உள்ள மத்திய கிழக்கு நிறுவனத்தின் புகழ்பெற்ற ஆய்வாளரான மீனா சிங் ராய், இதை விரிவாக விளக்கினார். "ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இந்தியாவின் மூலோபாய கூட்டாளி. மேலும், அவர்கள் ஒபெக்கின் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்குக் கட்டுப்படாமல் இருப்பதால், தங்கள் சொந்த உற்பத்தியை அதிகரித்தால், கூடுதல் எண்ணெயை வழங்குவதற்கான சுதந்திரம் அவர்களுக்கு இருக்கும்," என்றார்.
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் இரான் சம்பந்தப்பட்ட தற்போதைய மோதல் முடிவுக்கு வந்த பிறகு, எதிர்காலத்திற்கான ஐக்கிய அரபு எமிரேட்ஸின் முன்தயாரிப்பின் ஒரு பகுதியாக இந்த முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
"ஐக்கிய அரபு எமிரேட்ஸ், தேவை அதிகரிக்கும்போது தனது வாய்ப்புகளைத் திறந்தே வைத்திருக்க விரும்புகிறது. அந்தத் தேவை முக்கியமாக சீனா, ஜப்பான், கொரியா மற்றும் இந்தியாவில் இருந்து வருகிறது," என்று அவர் கூறினார்.
எளிதாகக் கூறுவதெனில், ஒபெக்கில் இருந்து வெளியேறிய பிறகு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிக எண்ணெயை சுதந்திரமாக உற்பத்தி செய்தால், அதிகளவு எண்ணெய் தேவைப்படும் இந்தியா போன்ற நாடுகள், சிறந்த விநியோகம் மற்றும் நிலையான விலைகள் மூலமாகப் பயனடையக்கூடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஹோர்மூஸ் நீரிணை மூடப்பட்டிருக்கும் வரை, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் 'எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பில்' இருந்து விலகுவதால் எந்த உடனடித் தாக்கமும் ஏற்படாது என்று விவேக் மிஸ்ரா தெரிவித்தார்.
அதன் கிழக்குக் கடற்கரையில் அமைந்துள்ள ஃபுஜைரா துறைமுகம்கூட, மில்லியன் கணக்கான பீப்பாய் எண்ணெயை ஏற்றுமதி செய்வதற்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளுடன் முழுமையாகத் தயாராகவில்லை என்று அவர் விளக்கினார்.
ஹோர்மூஸ் நீரிணை என்பது மிகவும் குறுகிய கடல் வழிப்பாதையாகும், இருப்பினும் உலகளாவிய எண்ணெய் வர்த்தகத்திற்கு இது மிகவும் இன்றியமையாததாகத் திகழ்கிறது. இது வளைகுடாப் பகுதியையும் அரபிக் கடலையும் இணைக்கிறது. கடல் வழியாகக் கொண்டு செல்லப்படும் உலகின் மொத்த எண்ணெயில் சுமார் 25 சதவிகிதமும், உலகளாவிய திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு ஏற்றுமதியில் சுமார் 20 சதவிகிதமும் இந்தப் பாதை வழியாகவே கடந்து செல்கின்றன.
இரானின் அதிஉயர் தலைவர் அயதுல்லா அலி காமனெயி கொல்லப்பட்டதாகக் கூறப்படும் தெஹ்ரான் மீதான அமெரிக்க தாக்குதல்களுக்குப் பிறகு, பிப்ரவரி 28ஆம் தேதி முதல் இந்தப் பாதை இரானால் மூடப்பட்டது. இதன் காரணமாக, உலகளாவிய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வர்த்தகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த முக்கியமான கடல் வழிப்பாதை மூடப்பட்டிருப்பதன் விளைவாக, இந்தியாவுக்கான எல்.பி.ஜி மற்றும் எல்.என்.ஜி விநியோகம் கடுமையான பின்னடைவைச் சந்தித்துள்ளது.
கிளைமேட் டிரெண்ட்ஸ் அமைப்பின் நிறுவனரான ஆர்த்தி கோஸ்லா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஒபெக்கில் இருந்து விலகுவது எண்ணெய் விலைகளைக் குறைக்க உதவக்கூடும் என்று கருத்து தெரிவித்தார்.
"ஐக்கிய அரபு எமிரேட்ஸுடன் விரிவான வர்த்தகக் கூட்டாண்மையைக் கொண்டுள்ள இந்தியாவுக்கு, இந்த அமைப்புசார் மாற்றம் குறுகிய கால அளவில் ஒரு நிவாரணமாக அமையும். சீரான விநியோக ஓட்டம் மற்றும் குறுகிய காலத்தில் எண்ணெய் விலைகள் தணிவது ஆகியவற்றின் மூலம் இந்தியா பெறும் நன்மைகளுக்கு அப்பால், தற்போதைய சூழலில் நாட்டின் எரிசக்திப் பாதுகாப்புக்கும் இதுவொரு நிவாரணத்தை வழங்கும்," என்று அவர் கூறினார்.
சுருக்கமாகக் கூறுவதெனில், கடல் வழிப்பாதை மூடப்பட்டு இருப்பதால் உடனடியாக எந்தப் பலனும் கிடைக்காமல் போகலாம் என்றாலும், வரும் மாதங்களில் இந்தியாவுக்கு மிகவும் நிலையான எண்ணெய் விநியோகம் மற்றும் சாத்தியக்கூறுகளின் அடிப்படையில் குறைந்த விலைகள் வாயிலாகப் பலன் கிடைக்கக்கூடும். இது இந்தியாவின் எரிசக்தித் தேவைகளைப் பூர்த்தி செய்யப் பெரிதும் உதவும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

பட மூலாதாரம், Getty Images
ஒபெக் & ஒபெக்+ அமைப்புகளின் வரலாறு
பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பு (OPEC) என்பது எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளைக் கொண்ட ஒரு நிரந்தர சர்வதேச அமைப்பாகும். இதன் தலைமையகம் வியன்னாவில் உள்ளது. உறுப்பு நாடுகளின் எண்ணெய் கொள்கைகளை ஒன்றிணைத்து, விநியோகத்தைக் கட்டுப்படுத்துவதன் மூலம் உலகளாவிய எண்ணெய் சந்தைகளை நிலையாக வைத்திருப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.
ஒபெக் அமைப்பு, இரான், இராக், குவைத், சௌதி அரேபியா, வெனிசுவேலா ஆகிய ஐந்து நாடுகளால் 1960ஆம் ஆண்டு செப்டம்பரில் பாக்தாத்தில் உருவாக்கப்பட்டது. காலப்போக்கில், மேலும் பல நாடுகள் இதில் இணைந்தன, மேலும் இது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்பட 12 உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பாக மாறியது. இந்த நாடுகள் இணைந்து உலகின் கச்சா எண்ணெயில் சுமார் 35 சதவிகிதத்தை உற்பத்தி செய்கின்றன.
அவற்றுள், உலகின் இரண்டாவது பெரிய எண்ணெய் உற்பத்தியாளரான சௌதி அரேபியா, இந்தக் கூட்டமைப்பின் முக்கியத் தலைமையாகக் கருதப்படுகிறது.
பல ஆண்டுகளாக, ஒபெக் தனது உறுப்பு நாடுகள் எவ்வளவு எண்ணெய் உற்பத்தி செய்கின்றன என்பதைக் கட்டுப்படுத்துவதன் மூலம் உலகளாவிய எண்ணெய் விலைகளில் செல்வாக்கு செலுத்தி வருகிறது. ஒவ்வொரு நாட்டிற்கும் வரம்புகள் அல்லது ஒதுக்கீடுகளை நிர்ணயிப்பதன் மூலம் அது இதைச் செய்கிறது. உற்பத்தி குறைக்கப்பட்டால், விலைகள் பொதுவாக உயரும். உற்பத்தி அதிகரித்தால், விலைகள் குறையக்கூடும்.
ஒபெக் முதலில் எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளின், குறிப்பாக மத்திய கிழக்கின் நலன்களைப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்டது. அந்தக் காலகட்டத்தில், உலகளாவிய எண்ணெய் சந்தையானது "ஏழு சகோதரிகள்" என்று அழைக்கப்பட்ட சக்திவாய்ந்த மேற்கத்திய நிறுவனங்களால் கட்டுப்படுத்தப்பட்டது. இதில் எக்ஸான், ஷெல், மொபில், டெக்சாகோ, பிரிட்டிஷ் பெட்ரோலியம், ஸ்டாண்டர்ட் ஆயில் ஆஃப் கலிஃபோர்னியா மற்றும் கல்ஃப் போன்ற நிறுவனங்கள் அடங்கும்.
கடந்த 2016இல் ஒபெக்+ என்றழைக்கப்படும் ஒரு பெரிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. இதில் ஒபெக் நாடுகளுடன் ரஷ்யா, பஹ்ரைன் போன்ற மேலும் பத்து நாடுகள் அடங்கும். அமெரிக்காவின் ஷெல் எண்ணெய் பெருக்கத்தால் உலகளாவிய எண்ணெய் விலைகள் வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் 1967இல் ஒபெக்கில் இணைந்தது. அப்போது அது அபுதாபி எமிரேட்ஸ் என்று அழைக்கப்பட்டது. 1971இல் அந்நாடு அதிகாரபூர்வமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸாக ஆன பிறகும், அது உறுப்பினராகத் தொடர்ந்தது.
ஒபெக் கூட்டமைப்பில் இருந்து வெளியேறிய முதல் நாடு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அல்ல. முன்னதாக, கத்தார், இந்தோனீசியா, ஈக்வடார், அங்கோலா, காபோன் போன்ற நாடுகளும் இதிலிருந்து வெளியேறியுள்ளன.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இந்தக் கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவதற்கு முன்பு, ஒபெக்கில் நான்காவது பெரிய எண்ணெய் உற்பத்தியாளராக இருந்தது. 2024இல் அது ஒரு நாளைக்கு சுமார் 2.92 மில்லியன் பீப்பாய் எண்ணெயை உற்பத்தி செய்து கொண்டிருந்தது.
குறிப்பாக உற்பத்தி வரம்புகள் தொடர்பாக, ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கும் ஒபெக் தலைமைக்கும் இடையே சில காலமாக பதற்றம் நிலவி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தனது எண்ணெய் உற்பத்தித் திறனை அதிகரிக்க பெருமளவில் முதலீடு செய்துள்ளது. ஆனால் ஒபெக் விதிகள் அதற்கு ஒதுக்கப்பட்ட அளவைவிட அதிகமாக உற்பத்தி செய்ய அனுமதிக்கவில்லை.
பொருளாதார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் இணைந்து செயல்படும் ஆறு அரபு நாடுகளின் குழுவான வளைகுடா ஒத்துழைப்பு மன்றத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸும் சௌதி அரேபியாவும் அங்கம் வகித்தாலும், இந்த வெளியேறும் முடிவு அவற்றுக்கு இடையே வளர்ந்து வரும் கருத்து வேறுபாடுகளைக் காட்டுகிறது.
இந்த நிலைமையை விளக்கிய மீனா சிங் ராய், "வளைகுடா ஒத்துழைப்பு மன்றம் ஒருபோதும் ஒன்றுபட்ட சக்தியாக இருந்தது இல்லை. சௌதியும் ஐக்கிய அரபு எமிரேட்ஸும் இந்தப் பிராந்தியத்தில் இரண்டு பெரிய சக்திகளாக இருப்பதால், ஒத்துழைப்பும் இருக்கும், போட்டியும் இருக்கும். ஆனால் அவர்களால் தங்கள் நிலவியலை மாற்றிக்கொள்ள முடியாது," என்று கூறினார்.
சுருக்கமாகக் கூறுவதெனில், இந்த நாடுகள் இணைந்து செயல்பட்டாலும், அவை ஒன்றுக்கொன்று போட்டியிடுகின்றன, அவற்றின் உறவு எப்போதும் சுமூகமாக இருப்பதில்லை என்கிறார் அவர்.
எளிமையாகச் சொன்னால், இந்த நாடுகள் இணைந்து செயல்பட்டாலும், அவை ஒன்றுக்கொன்று போட்டியிடுகின்றன, மேலும் அவற்றின் உறவு எப்போதும் சுமூகமாக இருப்பதில்லை.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































