You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வெளிநாட்டு பயணங்களில் பிரதமர் மோதி பத்திரிகையாளர்களின் கேள்விகளை தவிர்ப்பது ஏன்?
பிரதமர் நரேந்திர மோதி தனது ஐரோப்பியப் பயணத்தின்போது பத்திரிகையாளர்களிடமிருந்து கேள்விகளை எதிர்கொள்ளாதது குறித்து சர்ச்சை எழுந்துள்ளது.
நார்வே பிரதமர் ஜோனாஸ் கார் ஸ்டோர் உடன் நடைபெற்ற கூட்டுச் செய்தியாளர் சந்திப்பின்போது, ஊடகங்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்குமாறு நார்வே பத்திரிகையாளர் ஒருவர் பிரதமர் மோதியை வலியுறுத்தினார். இருப்பினும், பிரதமர் மோதி எந்தக் கேள்விகளுக்கும் பதிலளிக்கவில்லை.
வெளிநாட்டுத் தலைவர்களிடம் கேள்விகள் கேட்பது ஐரோப்பிய நாடுகளில் ஒரு தொன்மையான மரபின் பகுதியாகும்.
நார்வேயை சேர்ந்த பத்திரிகையாளர் ஹெலா லாங், வெளியுறவு அமைச்சகத்தின் செய்தியாளர் சந்திப்பில் மனித உரிமைகள் குறித்துக் கேள்விகளை எழுப்பினார். இதற்குப் பதிலளித்த வெளியுறவு அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர், இந்தியா ஒரு நாகரிக நாடு என்று குறிப்பிட்டார்.
முன்னதாக, ஓஸ்லோவில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் பிரதமர் மோதி மற்றும் பிரதமர் ஸ்டோர் ஆகியோரின் செய்தியாளர் சந்திப்பு நிறைவடைந்த பிறகு, பத்திரிகையாளர் ஹெலா லாங் எழுந்து நின்று, "பிரதமர் மோதி, உலகின் மிகவும் சுதந்திரமான பத்திரிகையாளர்களிடமிருந்து நீங்கள் ஏன் கேள்விகளை எதிர்கொள்வதில்லை?" என்று கேள்வி எழுப்பினார்.
ஆனால், பிரதமர் மோதி இதற்கு பதிலளிக்கவில்லை.
விளக்கம் அளித்த வெளியுறவு துறை அமைச்சகம்
இந்த விவகாரம் இந்தியாவிலும் கணிசமான விவாதத்தை ஏற்படுத்தி வருகிறது. மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பிரதமரை விமர்சித்து, கேள்விகளைக் கண்டு அவர் ஏன் அஞ்சுகிறார் என்று கூறினார்.
இந்தியாவின் முன்னணி ஆங்கில நாளிதழான தி இந்துவின் பத்திரிக்கையாளரான வர்கீஸ் கே. ஜார்ஜ், தன் எக்ஸ் தளத்தில், "இந்தியாவில் இதழியல் மற்றும் ஜனநாயகம் குறித்து பல கவலைகள் இருக்கலாம். ஆனால், ஜனநாயகம் அல்லது இதழியலுக்கான உச்சபட்ச தரநிலை நார்வே என்று கருதுவது, வெவ்வேறு நாடுகளின் தனித்துவமான சூழ்நிலைகளைப் புறக்கணிப்பதாக அமையும். உயரம் மற்றும் எடையை அளவிடும் அதே அளவுகோலைக் கொண்டு ஜனநாயகத்தையும் பத்திரிகை சுதந்திரத்தையும் அளவிடலாம் என்று மேற்கத்திய நாடுகள் பெரும்பாலும் கருதுகின்றன. நார்வே பத்திரிகையாளர்களும்கூட, தங்களின் சொந்த குறுகிய கண்ணோட்டங்களுக்குள்ளேயே வாழ்ந்து வருகிறார்கள்." என பதிவிட்டுள்ளார்.
மே 17 அன்று பிரதமர் நெதர்லாந்துக்கு மேற்கொண்ட பயணத்தின்போதும், செய்தியாளர் சந்திப்பில் கேள்விகளுக்கு பதிலளிப்பதில்லை என்ற நடைமுறைக்கு உள்ளூர் செய்தியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
இதற்குப் பதிலளித்த வெளியுறவு அமைச்சகத்தின் மூத்த அதிகாரி சிபி ஜார்ஜ், "கேள்வி கேட்பவருக்குப் போதிய புரிதல் இல்லாததே, அடிப்படையில் நாம் இத்தகைய கேள்விகளை எதிர்கொள்ள நேர்வதற்குரிய காரணமாகும்," என்று கூறினார்.
ஜெர்மனி பயணம் குறித்தும் எழுப்பப்பட்ட கேள்விகள்
வெளியுறவு அமைச்சகத்தின் செய்தியாளர் சந்திப்பின்போது, இந்திய தரப்பு ஊடகங்களின் கேள்விகளை எதிர்கொள்ள வேண்டும் என்று பயணம் மேற்கொள்ளும் நாடுகளின் தலைவர்கள் கோரியுள்ளனரா என்றும், இது குறித்து அரசாங்கம் தனது கொள்கையை மறுபரிசீலனை செய்து வருகிறதா என்றும் சிபி ஜார்ஜிடம் கேட்கப்பட்டபோது, பிரதமரின் பயணம் தொடர்பான கேள்விகளுக்கு வெளியுறவு அமைச்சகமே பதிலளிக்கும் என்று அவர் பதிலளித்தார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி 2022-ஆம் ஆண்டில் ஜெர்மனிக்கு பயணம் மேற்கொண்டார். அந்த சமயத்தில், ஜெர்மனியின் சான்சிலராக ஓலாஃப் ஷோட்ஸ் இருந்தார். ஜெர்மனியில், எந்தவொரு வெளிநாட்டுத் தலைவரும் சான்சிலரை சந்தித்த பிறகு ஊடகங்களின் முன் தோன்றி, செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிப்பது வழக்கம். ஆனால், இந்தப் பயணத்தின்போது அப்படி நடைபெறவில்லை.
பின்னர், ஜெர்மன் ஒளிபரப்பு நிறுவனமான டாய்ச் வெல்லேவின் தலைமை சர்வதேச ஆசிரியர் ரிச்சர்ட் வாக்கர், பிரதமர் மோதியின் ஜெர்மனி பயணத்தின்போது இவ்விவகாரத்தை எழுப்பினார்.
2022 மே 2 அன்று, அவர் தன் எக்ஸ் பக்கத்தில், "மோதியும் ஷோட்ஸும் தற்போது பெர்லினில் பத்திரிகையாளர்கள் முன் தோன்றுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இரு அரசாங்கங்களுக்கும் இடையே பதினான்கு ஒப்பந்தங்கள் அறிவிக்கப்படவுள்ளன. இருப்பினும், இந்தியத் தரப்பின் வேண்டுகோளின் பேரில், ஒரே ஒரு கேள்வி கூட ஏற்றுக்கொள்ளப்படாது." என பதிவிட்டிருந்தார்.
பின்னர் டாய்ச் வெல்லே, "கூட்டுச் செய்தியாளர் சந்திப்பில் மோதியும் ஷோட்ஸும் செய்தியாளர்களிடமிருந்து கேள்விகளை ஏற்கவில்லை. தகவல்களின்படி, இந்த முடிவு பிரதமர் மோதியின் வேண்டுகோளின் பேரில் எடுக்கப்பட்டது." என செய்தி வெளியிட்டது.
ஜெர்மனிக்கு அவர் மேற்கொண்ட பயணத்துக்கு ஏறக்குறைய ஓராண்டுக்குப் பிறகு, ஜூன் 2023-இல் பிரதமர் மோதி அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டார். அப்போது அப்போதைய அதிபர் ஜோ பைடனுடன் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், ஊடகங்களிடமிருந்து இரண்டு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.
அமெரிக்க அதிபர் வழக்கமாக வெளிநாட்டுத் தலைவர்களுடன் நடத்தும் செய்தியாளர் சந்திப்புகளைப் போல இது அவ்வளவு வெளிப்படையானதாக இல்லாவிட்டாலும், மேற்கத்திய ஊடகங்களில் இது ஓர் அரிய நிகழ்வாகவே பார்க்கப்பட்டது.
அமெரிக்க பயணத்தின்போது கேள்விகளுக்கு பதிலளித்த மோதி
"இந்திய அதிகாரிகள் இந்த நிகழ்வுக்கு ஒரு நாள் முன்னதாகதான் ஒப்புதல் அளித்தனர். வெள்ளை மாளிகைக்கு மேற்கொள்ளப்படும் அரசுமுறைப் பயணங்களின்போது, ஊடகங்களின் கேள்விகளுக்குப் பதிலளிப்பது வழக்கமான நடைமுறையின் ஒரு பகுதி என்று அமெரிக்க அதிகாரிகள் மோதியின் ஆலோசகர்களிடம் தெரிவித்திருந்தனர்," என்று ஏபி செய்தி முகமை செய்தி வெளியிட்டது.
நரேந்திர மோதியிடம் கேட்கப்பட்ட இரண்டு கேள்விகளில், ஒன்று காலநிலை மாற்றத்தைச் சமாளிப்பது குறித்து இந்தியப் பத்திரிகையாளர் ஒருவரால் கேட்கப்பட்டது. மற்றொன்று மனித உரிமைகள் சார்ந்த கவலைகள் குறித்து அமெரிக்கப் பத்திரிகையாளர் ஒருவரால் கேட்கப்பட்டது.
மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகம் குறித்த கேள்விக்குப் பதிலளிக்கையில், நரேந்திர மோதி, "ஜனநாயகம் எங்கள் நரம்புகளில் ஓடுகிறது. எங்கள் ஜனநாயகத்தில் பாகுபாட்டுக்குச் சிறிதும் இடமில்லை," என்று கூறினார்.
பிரதமர் மோதி ஊடகங்களிடமிருந்து கேள்விகளை ஏற்றுக்கொள்வது மிகவும் வழக்கத்துக்கு மாறான ஒன்றாகக் கருதப்படுகிறது. பிரதமராகப் பொறுப்பேற்றதிலிருந்து, இந்தியாவில் அவர் நடத்திய எந்தவொரு செய்தியாளர் சந்திப்பிலும், பத்திரிகையாளர்களிடமிருந்து கேள்விகளை ஏற்றுக்கொண்டு அவர் பதிலளித்ததில்லை.
மே 2019-இல் நடைபெற்ற ஒரு செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்துகொண்டபோதிலும், எவ்விதக் கேள்விகளுக்கும் அவர் பதிலளிக்கவில்லை. அச்சமயத்தில் கேள்விகளுக்குப் பதிலளித்தவர் அமித் ஷா.
மோதி செய்தியாளர் சந்திப்புகளை நடத்தாதது ஏன்?
மே 2024-இல், இந்தியா டுடே-வுடனான ஒரு நேர்காணலின் போது, மோதியிடம் அவர் ஏன் செய்தியாளர் சந்திப்புகளை நடத்துவதில்லை என்று கேட்கப்பட்டது. அதற்கு மோதி விரிவாகப் பதிலளித்தார்.
அவர் கூறுகையில், "பெரும்பாலான நேரங்களில், அதிகாரத்தில் இருப்பவர்களாலேயே ஊடகங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இது இப்போது ஒரு கலாசாரமாகவே மாறிவிட்டது. 'நாம் பெரிதாக எதையும் செய்யத் தேவையில்லை; ஊடகங்களைப் பயன்படுத்திக்கொண்டு, நமக்குத் தோன்றியதைச் சொன்னாலே போதும், அது நாடு முழுவதும் பரவிவிடும்' என்று அவர்கள் கருதுகிறார்கள். அந்தப் பாதையை நான் பின்பற்ற விரும்பவில்லை. நான் கடுமையாக உழைக்க விரும்புகிறேன். ஏழை எளிய மக்களின் வீட்டு வாசல்களுக்கே சென்று அவர்களைச் சென்றடைய நான் விரும்புகிறேன்" என்றார்.
மேலும் கூறுகையில், "நான் ஒரு புதிய பணி கலாசாரத்தைத் தொடங்கியுள்ளேன். இந்த புதிய கலாசாரம் ஊடகங்களுக்குப் பொருத்தமானதாகத் தோன்றினால், அவை அதை அந்த வகையில் முன்வைக்கலாம்; அல்லது முன்வைக்காமலும் இருக்கலாம்" என்றார்.
இப்போது வெகுஜனத் தொடர்புக்கான ஒரே ஊடகமாக ஊடகங்கள் மட்டும் இல்லை என்றும், ஊடகங்கள் இல்லாமலே கூட மக்களுடன் நேரடியாகத் தொடர்பு கொள்வது சாத்தியம் என்றும் மோதி கூறியிருந்தார்.
இப்போது பத்திரிகையாளர்களின் அடையாளம், அவர்களின் கருத்துக்களுடன் பிணைக்கப்பட்டுள்ளது என்று மோதி கூறியிருந்தார்.
அவர் கூறுகையில், "முன்பெல்லாம், பகுப்பாய்வு செய்பவர் யார் என்பதிலோ அல்லது அவருடைய சித்தாந்தம் என்ன என்பதிலோ மக்கள் கவனம் செலுத்துவதில்லை. ஆனால், காலங்கள் மாறிவிட்டன" என்றார்.
ஆனால், நரேந்திர மோதியின் இந்த வாதம், செய்தியாளர் சந்திப்பை நடத்தாதது குறித்த கேள்விக்குப் பதிலளித்தது என்று கூற இயலாது.
இந்தியாவில் நிபுணத்துவம் பெற்ற பிரெஞ்சு அரசியல் அறிவியலாளரான கிறிஸ்டோஃப் ஜாஃப்ரெலோட், தி டிப்ளமேட் இதழிடம், "மோதி செய்தியாளர் சந்திப்புகளையோ அல்லது வெளிப்படையான விவாதங்களையோ ஏற்றுக்கொள்வதில்லை; ஏனெனில், அவரது வாதங்கள் உண்மையில் இல்லாத ஓர் இந்தியாவையே சித்தரிக்கின்றன," என்று கூறினார்.
மோதி, கவர்ச்சிகரமான பிம்பங்களாலும் கட்டுக்கதைகளாலும் நிறைந்த ஒரு வகையான கற்பனை உலகத்தை உருவாக்கியிருப்பதாக அவர் வாதிட்டார்.
சீனாவின் ஆக்கிரமிப்பு மற்றும் இந்தியாவில் நிலவும் வேலையின்மை போன்ற விவகாரங்கள் குறித்து, மோதி கேள்விகள் கேட்கப்படுவதை விரும்பமாட்டார் என்று அவர் கூறினார்.
அவரின் கூற்றுப்படி, "இதனால்தான் மோதியைப் பொறுத்தவரை, தகவல் தொடர்பு என்பது 'ஒருவழிப் பாதையாக' இருப்பது அவசியமாகிறது" என்றார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு