ஹோர்மூஸ் நீரிணையை மீண்டும் மூடியது இரான் - அமெரிக்கா கூறுவது என்ன?

பட மூலாதாரம், Getty Images
இரான் புரட்சிகர காவல்படையின் கடற்படைப் பிரிவு வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்றில், "ஹோர்மூஸ் நீரிணை மூடப்படுகிறது" என அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிவிப்பில் லெபனானில் இஸ்ரேலின் தாக்குதல்களை சுட்டிக்காட்டியுள்ள இரான் ராணுவம், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தொடர்ச்சியாக போர் நிறுத்த ஒப்பந்தங்களை மீறிவருவதாக குற்றம் சாட்டியுள்ளது.
நீரிணையை நோக்கி வரும் கப்பல்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை ஒன்றில்,"ஹோர்மூஸ் நீரிணையை நெருங்க வேண்டாம். மீறினால் உங்களின் பாதுகாப்பு சமசரம் செய்துகொள்ளப்படும்" என கூறப்பட்டுள்ளது.
வான்ஸ் கூறுவது என்ன?
இரானின் கூற்றிலிருந்து முரண்பட்டாலும், ஹோர்மூஸ் நீரிணை முழுமையாகத் திறந்தே இருப்பதாக அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் ஃபாக்ஸ் நியூஸிடம் தெரிவித்தார்.
"இரானியர்கள் ஹோர்மூஸ் நீரிணையை மூடுவதற்கான எந்தவொரு ஆதாரத்தையும் நாங்கள் காணவில்லை," என்று வான்ஸ் கூறினார்.
"உண்மையில், நேற்று ஹோர்மூஸ் நீரிணை வழியாக 16 மில்லியன் பீப்பாய் எண்ணெய் வெளியே கொண்டுவரப்பட்டது," என்று கூறிய வான்ஸ், "எனவே, அந்த கப்பல்கள் நகர்வதை நீங்கள் பார்க்க முடிகிறது," என்றும் குறிப்பிட்டார்.
நாளை பேச்சுவார்த்தை
அமெரிக்க மற்றும் இரானியப் பிரதிநிதிகள் கலந்துகொள்ளும் பேச்சுவார்த்தைகள், ஜூன் 21 அன்று சுவிட்சர்லாந்தின் பர்கன்ஸ்டாக் நகரில் நடைபெறும் என பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஹோர்மூஸ் நீரிணையை மூடுவதாக ஈரானிய இராணுவம் அறிவித்ததைத் தொடர்ந்து எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையின்படி, பாகிஸ்தான் மற்றும் கத்தார் நாட்டினரும் இதில் கலந்துகொள்வார்கள் என்றும், பாகிஸ்தான் மத்தியஸ்தராக இந்தச் செயல்முறைக்கு உதவும் என்றும் கூறப்பட்டுள்ளது.
14 அம்ச புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் "எட்டப்பட்ட புரிதல்களை முன்னெடுத்துச் செல்வதே" இந்தப் பேச்சுவார்த்தைகளின் நோக்கம் என்றும் அது மேலும் கூறுகிறது.
துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் கலந்துகொள்ளவிருந்த சுவிட்சர்லாந்து பேச்சுவார்த்தைகள், இந்த வாரத் தொடக்கத்தில் ஒத்திவைக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வந்துள்ளது. பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகள் "எளிமையானதாகவோ அல்லது கணிக்கக்கூடியதாகவோ" இல்லை என்று வெள்ளை மாளிகை கூறியிருந்தது.
வெள்ளை மாளிகை தனது அறிக்கையை வெளியிடுவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு, லெபனானில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் காரணமாக பேச்சுவார்த்தைகள் இடைநிறுத்தப்பட்டதாக ஹெஸ்போலாவுடன் தொடர்புடைய லெபனான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
பேச்சுவார்த்தை குறித்து இரான் கூறுவது என்ன?
சுவிட்சர்லாந்தில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தைகளில் தங்கள் நாடு பங்கேற்பதன் நோக்கம், "எதிர் தரப்பு தனது கடமைகளை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்துவதே" ஆகும் என்று இரானின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாய் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க மற்றும் இரான் பிரதிநிதிகள் பங்கேற்கும் பேச்சுவார்த்தைகள் சுவிட்சர்லாந்தின் பர்கென்ஸ்டாக் (Bürgenstock) நகரில் நாளை நடைபெறும் என்று மத்தியஸ்த நாடான பாகிஸ்தான் முன்னதாகத் தெரிவித்திருந்தது.
இந்த வாரத் தொடக்கத்தில் கையெழுத்தான அமெரிக்கா-இரான் இடையிலான 14 அம்ச ஒப்பந்தத்தைக் குறிப்பிட்டுப் பேசிய பாகாய், "அந்த ஒப்பந்தத்தின் 1, 4, 5, 10 மற்றும் 11-வது பத்திகளில் குறிப்பிடப்பட்டுள்ள கடமைகள் செயல்படுத்தப்படத் தொடங்கி, தொடர்ந்து நிறைவேற்றப்படும்போது மட்டுமே இறுதி ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகள் தொடங்கும்" என்று கூறினார்.
தற்போதைய சூழல் அவ்வாறு இல்லை என்று கூறிய அவர், வரவிருக்கும் பேச்சுவார்த்தைகளில் அமெரிக்கா தனது கடமைகளை நிறைவேற்ற வேண்டும் என்று ஈரான் "வலியுறுத்தும்" என்றும் தெரிவித்தார்.
லெபனானில் என்ன நடக்கிறது?
இஸ்ரேலுக்கும் ஹெஸ்போலாவுக்கும் இடையே புதிய போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு 24 மணி நேரத்திற்குள், தெற்கு லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதல்களில் குறைந்தது 20 பேர் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து ஹோர்மூஸ் நீரிணை மூடப்படுவதாக இரான் அறிவித்துள்ளது.
தொடர்ச்சியான மோதல்கள், அமெரிக்காவிற்கும் இரானுக்கும் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவரும் ஒப்பந்தத்தைப் பாதிக்கும் என்ற கவலைகளைத் தொடர்ந்து, இஸ்ரேலும் ஹெஸ்போலாவும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக ஒரு அமெரிக்க அதிகாரி நேற்று தெரிவித்தார்.
போர் நிறுத்தம் அமலில் உள்ளதை இஸ்ரேலிய இராணுவம் உறுதிப்படுத்தியது, ஆனால் பின்னர் ஒரு செய்தித் தொடர்பாளர், தங்கள் படைகள் "உடனடி அச்சுறுத்தல்களை அகற்றும் பணியைத் தொடரும்" (லெபனானில்) என்று கூறினார்.
வெள்ளிக்கிழமை பிற்பகல் அமெரிக்க அதிகாரிகளால் அறிவிக்கப்பட்ட போர் நிறுத்தத்தை தாங்கள் அங்கீகரிக்கவில்லை என்றும், லெபனானுக்குள் சுதந்திரமாக செயல்படுவதற்கான இஸ்ரேலிய நோக்கத்தை நிராகரிப்பதாகவும் ஒரு ஹெஸ்போலா அதிகாரி பிபிசியிடம் தெரிவித்தார்.
இன்று முன்னதாக, லெபனானில் உள்ள நபாத்தியா மாவட்டத்தில் 16 பேரும், அண்டை மாவட்டமான சைடாவில் ஏழு பேரும் கொல்லப்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அப்பகுதியில் இஸ்ரேலியப் படைகள் மீது ஹெஸ்போலா குழு 50-க்கும் மேற்பட்ட எறிகணைகளை வீசியதைத் தொடர்ந்து, "டஜன் கணக்கான" ஹெஸ்போலா இலக்குகளைத் தாக்கியதாக இஸ்ரேலிய இராணுவம் கூறியது.
இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளும் (IDF) ஹெஸ்போலாவும் இன்று பரஸ்பரம் போர் நிறுத்தத்தை மீறியதாக ஒருவரையொருவர் குற்றம் சாட்டியுள்ளன.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












