சிசேரியன் செய்வதால் பெண்ணின் வயிறு தளர்வாகிறதா? 7 கேள்வி - பதில்கள்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஓம்கார் கரம்பேல்கர்
- பதவி, பிபிசி மராத்தி
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 8 நிமிடங்கள்
சிசேரியன் (அறுவை சிகிச்சை) முறையில் குழந்தை பிரசவித்த பிறகு, பல மாதங்கள் ஆன பின்னரும் தங்களது அடிவயிறு இன்னும் வீங்கியது போல் இருப்பதை பல பெண்கள் உணர்கிறார்கள்.
இதனாலேயே, "அறுவை சிகிச்சை பிரசவம் நடந்தால் நிரந்தரமாக வயிறு வீங்கியது போல தோன்றும்" என பலரும் தவறாக நம்புகிறார்கள்.
'சி-செக்ஷன் பவுச்' என்று அழைக்கப்படும் இந்த மாற்றம் குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு பேச்சுகள் அடிபட்டாலும், இதன் பின்னணியில் உள்ள உண்மை சற்று மாறுபட்டது.
நிபுணர்களின் கூற்றுப்படி, இந்த மாற்றம் அறுவை சிகிச்சையால் மட்டுமே ஏற்படுவதில்லை, கர்ப்ப காலத்தில் உடலில் ஏற்படும் மாற்றங்களினாலும் ஏற்படுகிறது.
கர்ப்ப காலத்தில், வளரும் கருவுக்கு ஏற்ப வயிற்றுத் தசைகள், தோல்கள் மற்றும் இணைப்புத் திசுக்கள் விரிவடைகின்றன. பிரசவத்திற்குப் பிறகு உடல் இயல்பு நிலைக்குத் திரும்ப நீண்ட காலம் ஆகும்.
சில பெண்களுக்குத் தசை பலவீனம், வயிற்றுத் தசைகளில் ஏற்படும் கிழிவு, தளர்ந்த தோல் அல்லது உடல் எடை அதிகரிப்பு ஆகியவற்றின் காரணமாக வயிறு மிகவும் பெரிதாகத் தெரியக்கூடும்.
எனவே, பிரசவத்திற்குப் பிறகு வயிறு உடனடியாக அதன் பழைய வடிவத்திற்குத் திரும்பாமல் இருப்பது உடலின் இயற்கை நடைமுறையின் ஒரு பகுதியாகும்.
சி-செக்ஷன் பிரசவத்திற்குப் பிறகு வயிறு வீங்கியது போல் இருப்பதற்கான சரியான காரணங்கள் என்னென்ன மற்றும் எந்தெந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்தக் கூடாது என்பதை தெரிந்து கொள்வோம்.
சிசேரியன் செய்த பிறகு 'பை' போன்ற அமைப்பு தோன்றுவது ஏன்?
பிரசவத்திற்குப் பிறகு அடிவயிறு வீங்கியது போல தெரிவதற்குப் பல காரணங்கள் இருக்கலாம்.
கர்ப்ப காலத்தில் வயிற்றுத் தசைகள் மற்றும் இணைப்புத் திசுக்களில் ஏற்படும் கடுமையான அழுத்தம் காரணமாக, சில பெண்களுக்கு 'ரெக்டஸ் அடிவயிற்றுத் தசைகளில்' (rectus abdominis muscles) இடைவெளி உருவாகலாம்.
இந்த நிலை டையாஸ்டாசிஸ் ரெக்டி என்று அழைக்கப்படுகிறது.
பிரசவத்திற்குப் பிந்தைய காலத்தில் ஏற்படும் எடை அதிகரிப்பு, தளர்ந்த சருமம், ஹார்மோன் மாற்றங்கள், உடலில் நீர் தேக்கம் மற்றும் உடல் செயல்பாடு குறைதல் ஆகியவையும் வயிற்றின் அளவைப் பாதிக்கலாம்.
அறுவை சிகிச்சை பிரசவத்திற்குப் பிறகு, காயம் குணமாகும் போது உருவாகும் திசுக்கள் அடிவயிற்றின் அருகே ஒரு சிறிய வீக்கத்தையோ அல்லது புடைப்பான தோற்றத்தையோ ஏற்படுத்தக்கூடும்.
இதனாலேயே, அறுவை சிகிச்சை காரணமாகத்தான் வயிறு வீங்கியிருப்பதாகப் பெண்கள் பெரும்பாலும் நினைக்கிறார்கள்.
ஆனால், பெரும்பாலான நேரங்களில் இந்த மாற்றம் உடலின் இயல்பான குணமடைதல் செயல்முறையின் ஒரு பகுதியாக உள்ளது.
பிரசவத்திற்குப் பிந்தைய வயிற்றுத் தசைகளின் மறுசீரமைப்பு என்பது சில வாரங்களில் முடிவடைவதில்லை. தசைகள், தோல் மற்றும் திசுக்கள் இயல்பு நிலைக்குத் திரும்ப பல மாதங்கள் ஆகலாம்.
எனவே, பொறுமையைக் கடைப்பிடிப்பதும், சத்தான உணவை உண்பதும், நிபுணர்களின் ஆலோசனைப்படி உடற்பயிற்சி செய்வதும் முக்கியம்.
இருப்பினும், உங்களுக்கு வலி, வழக்கத்திற்கு மாறான வீக்கம், காய்ச்சல் அல்லது கட்டி ஏற்பட்டால், மருத்துவரை அணுகுவது அவசியம்.

பட மூலாதாரம், Getty Images
சி-செக்ஷன் பிரசவத்தினால் தான் வயிறு வீங்கியது போல் தெரிகிறதா என்பது குறித்து மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையின் மகளிர் நல ஆலோசகரான மருத்துவர் நேஹா அபிஜித் பவாரிடம் கேட்டோம்.
இதுகுறித்துப் பேசிய அவர், "சி-செக்ஷன் பவுச்' என அழைக்கப்படும் இந்த வடிவம் தோன்றுவதற்கு முக்கியக் காரணம், கர்ப்ப காலத்தில் உடலில் ஏற்படும் மாற்றங்கள் தான். கர்ப்ப காலத்தில், அடிவயிற்றுச் சுவர் கணிசமாக விரிவடைகிறது, மேலும் வயிற்றுத் தசைகள் விலகிச் செல்லக்கூடும்.
சி-செக்ஷன் பிரசவத்திற்காகச் செய்யப்படும் கீறலும், பின்னர் உருவாகும் தழும்பும் திசுக்கள் கூடும் போது ஒரு சிறிய மடிப்பை உருவாக்கி, அடிவயிறு சற்று உயர்த்தப்பட்டது போல் தெரிய வைக்கலாம்" என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், "இருப்பினும், இந்த மாற்றத்திற்கு அறுவை சிகிச்சை மட்டுமே காரணம் அல்ல. உடலின் அமைப்பு, தோலின் நெகிழ்வுத்தன்மை, காயம் ஆறும் விதம் மற்றும் தசைகளின் வலிமை ஆகிய அனைத்துமே இதன் இறுதி தோற்றத்தைத் தீர்மானிக்கின்றன.
எனவே, வயிற்றின் அளவு அல்லது வெளியில் தெரியும் வீக்கம் ஆகியவை சி-செக்ஷன் பிரசவத்தால் மட்டுமே ஏற்படுகிறது என்று சொல்வது சரியானதல்ல" என்று தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images
சிசேரியன் செய்த பிறகு வயிறு வீங்கியது போல தோன்றுவதற்கான முக்கிய காரணங்கள் என்ன?
- அடிவயிற்றுச் சுவரில் ஏற்படும் அழுத்தம்
- மையப்பகுதி (வயிறு மற்றும் இடுப்பு) தசைகள் பலவீனமடைதல்
- ரெக்டஸ் அடிவயிற்றுத் தசைகளில் ஏற்படும் கிழிவு (டயாஸ்டாசிஸ் ரெக்டி)
- உடலில் அதிகப்படியான கொழுப்பு சேமிக்கப்படுவது
- தளர்ந்த தோல்
- உடலில் நீர் தேக்கம் மற்றும் ஹார்மோன் மாற்றங்கள்
- பிரசவத்திற்குப் பிறகு குணமடையும் காலத்தில் உடற்பயிற்சி அல்லது உடல் செயல்பாடுகள் குறைவது.
பெரும்பாலான சந்தர்ப்பங்களில், வயிறு வீங்கியது போல தோன்றுவது எந்தவொரு அறுவை சிகிச்சை சார்ந்த பிரச்னையின் அறிகுறியும் அல்ல.
மாறாக, அது உடலின் இயற்கையான குணப்படுத்தும் செயல்முறையின் ஒரு பகுதியாகவும், பிரசவத்திற்குப் பிறகான பாதிப்புகளைச் சரிசெய்வதாகவும் உள்ளது.
சிசேரியன் அறுவை சிகிச்சைக்குப் பிறகு வயிறு முழுமையாகக் குணமடைய எவ்வளவு காலம் ஆகும்?
இது குறித்துப் பேசிய மருத்துவர் நேஹா பவார், "சி-செக்ஷன் அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஆரம்பகால காயம் ஆறுவதற்கு வழக்கமாக 6 முதல் 8 வாரங்கள் ஆகும். இருப்பினும், அடிவயிற்றுச் சுவர் முழுமையாகச் சீரடைய (குணமடைய) 6 மாதங்கள் முதல் ஒரு வருடம் அல்லது அதற்கு மேல் ஆகலாம். தசைகளின் வலிமை திரும்புவது, இணைப்புத் திசுக்கள் சரி செய்யப்படுவது மற்றும் தோல் இறுக்கமடைவது ஆகியவை படிப்படியாக நடக்கும் செயல்முறைகளாகும். குணமடைவது என்பது உணவுமுறை, உடற்பயிற்சி/உடல் செயல்பாடுகள், தாய்ப்பால் அளித்தல், ஒட்டுமொத்த ஆரோக்கியம் மற்றும் எத்தனை முறை கர்ப்பம் தரித்துள்ளார்கள் போன்ற காரணிகளைப் பொறுத்தது. பெண்கள் தங்கள் உடலுக்குப் போதுமான நேரத்தைக் கொடுக்க வேண்டும். தாங்கள் குணமாக எடுத்துக்கொள்ளும் பயணத்தை மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கக் கூடாது" என்று கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
டையாஸ்டாசிஸ் ரெக்டி என்றால் என்ன?
டயாஸ்டாசிஸ் ரெக்டி என்பது கர்ப்ப காலத்தில் இணைப்புத் திசுக்கள் நீட்சியடைவதன் காரணமாக, இரண்டு 'ரெக்டஸ் அடிவயிற்றுத் தசைகள்' ஒன்றுக்கொன்று விலகிச் செல்லும் ஒரு நிலையாகும். இது பிரசவத்திற்குப் பிறகு ஏற்படும் ஒரு பொதுவான பிரச்னையாகும். இது இயல்பான பிரசவம் மற்றும் சி-செக்ஷன் பிரசவம் ஆகிய இரண்டிற்குப் பிறகும் ஏற்படலாம். ஏனெனில் இதற்கு முதன்மைக் காரணம் பிரசவ முறை அல்ல, கர்ப்பம் தான்.
மருத்துவர் நேஹா பவார் கூறுகையில், "இந்த நிலையில், பெண்களுக்கு வயிறு உப்புசம்/வீக்கம், மையப்பகுதி தசைகளின் வலிமை இழப்பு அல்லது முதுகில் அசௌகரியம் போன்ற அறிகுறிகள் ஏற்படலாம்.
பல சந்தர்ப்பங்களில், பிரசவத்திற்குப் பிந்தைய முதல் ஆண்டில் இந்தப் பிரச்னை இயல்பாகவே சரியாகிவிடும். இருப்பினும், தசைகளுக்கு இடையிலான இடைவெளி நீண்ட காலம் நீடித்தால், உடற்பயிற்சி சிகிச்சை மற்றும் நிபுணர்களின் வழிகாட்டுதலின் கீழ் முக்கிய தசைகளை வலுப்படுத்தும் குறிப்பிட்ட உடற்பயிற்சிகளைச் செய்வது பயனுள்ளதாக இருக்கும்" என்கிறார்.

பட மூலாதாரம், Getty Images
டயாஸ்டாசிஸ் ரெக்டி நிலையை வீட்டிலேயே பரிசோதிக்கவோ அல்லது கண்காணிக்கவோ முடியுமா என்று நிபுணர்களிடம் கேட்டோம். மும்பை சென்ட்ரலில் உள்ள வோக்கார்ட் மருத்துவமனையின் மகப்பேறு மற்றும் மகளிர் நல மருத்துவருமான மருத்துவர் ரிச்சா பரத்வாஜ் இந்தத் தகவலை வழங்கினார்.
மருத்துவர் ரிச்சா கூறுகையில், "பெண்கள் வீட்டிலேயே ஒரு எளிய சுய பரிசோதனையைச் செய்து கொள்ளலாம், ஆனால் அது ஒரு நிபுணரின் பரிசோதனைக்கு மாற்றாக முடியாது.
ஒரு மகளிர் நல மருத்துவர் அல்லது பெண்களின் ஆரோக்கியத்தில் சிறப்புப் பெற்ற உடற்பயிற்சி சிகிச்சை நிபுணரால் மட்டுமே தசைக் கிழிவின் அளவு மற்றும் மையப்பகுதி தசைகளின் செயல்பாட்டைத் துல்லியமாக மதிப்பிட்டு, பொருத்தமான சீரமைப்புப் பயிற்சியைப் பரிந்துரைக்க முடியும். குறிப்பாக, வயிற்றின் வீங்கிய வடிவம் நீண்ட காலம் நீடித்தாலோ, வலி இருந்தாலோ அல்லது அன்றாட நடவடிக்கைகளைப் பாதித்தாலோ ஒரு நிபுணரை அணுகுவது அவசியம்" என்று தெரிவித்தார்.
சிசேரியன் அறுவை சிகிச்சைக்கு பிறகு எப்போது உடற்பயிற்சியை தொடங்கலாம்?
சி-செக்ஷன் பிரசவத்திற்குப் பிறகு குணமாவதற்கு எந்தெந்த உடற்பயிற்சிகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும், ஆரம்பத்தில் எந்தப் பயிற்சிகளைத் தவிர்க்க வேண்டும்? என்ற கேள்வி அடிக்கடி கேட்கப்படுகிறது.
மருத்துவர் ரிச்சா பரத்வாஜ் கூறுகையில், "ஆரம்ப கட்டத்தில், லேசான மூச்சுப் பயிற்சிகள், இடுப்புத் தளப் பயிற்சிகள் , ஆழமான மையப்பகுதியைச் செயல்படுத்துதல் மற்றும் மெதுவான நடைப்பயிற்சி ஆகியவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இவை ஆறிவரும் திசுக்களுக்குக் கூடுதல் அழுத்தத்தைக் கொடுக்காமல் தசைச் செயல்பாட்டை மீட்டெடுக்க உதவுகின்றன. ஆரம்ப கட்டங்களில் தீவிர ஓட்டம், அதிக எடை தூக்குதல், கடுமையான வயிற்றுப் பயிற்சிகள், சிட்-அப்ஸ் , கிரஞ்சஸ் மற்றும் பிளாங்க்ஸ் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். இந்தப் பயிற்சிகள் அடிவயிற்றுச் சுவரில் அழுத்தத்தை அதிகப்படுத்தி, குறிப்பாக உங்களுக்கு 'டயாஸ்டாசிஸ் ரெக்டி' இருந்தால், குணமடைதல் செயல்முறையைத் தாமதப்படுத்தலாம்" என்று தெரிவிக்கிறார்.

பட மூலாதாரம், Getty Images
எந்த வகையான உடற்பயிற்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பது குறித்து பன்வேலில் உள்ள பா லென்சியா பிசியோதெரபி மையத்தின் மருத்துவர் பிரியங்கா தர்கால்கர் கூறுகையில்,"குணமாகும் தொடக்க காலத்தில், உதரவிதான மூச்சுப்பயிற்சி (வயிற்று மூச்சுப் பயிற்சிகள்), இடுப்புத் தள தசைச் செயல்பாடு, லேசான மையப்பகுதி வலுப்படுத்தும் பயிற்சிகள் மற்றும் நடைப்பயிற்சி ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். அதற்குப் பிறகு, அன்றாட நடவடிக்கைகளுக்குப் பயன்படும் வலிமைப் பயிற்சிகள் மற்றும் பைலேட்ஸ் பயிற்சிகளுக்குப் படிப்படியாக முன்னேறலாம்" என்கிறார்.
அவர் மேலும் கூறுகையில், "இருப்பினும், ஆரம்ப கட்டங்களில் அடிவயிற்றுச் சுவருக்கு அதிகப்படியான அழுத்தத்தைக் கொடுக்கும் பயிற்சிகளைத் தவிர்க்க வேண்டும். பாரம்பரிய சிட்-அப்ஸ், கிரஞ்சஸ், தீவிரமான பிளாங்க்ஸ், அதிக எடைகளைத் தூக்குதல் அல்லது கடுமையான உடற்பயிற்சிகள் போன்றவை இதில் அடங்கும். காயம் போதுமான அளவு ஆறும் வரையிலும், மையப்பகுதி தசைகளின் மீது நல்ல கட்டுப்பாடு கிடைக்கும் வரையிலும் இதுபோன்ற பயிற்சிகளைத் தவிர்க்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
இந்தக் காலகட்டத்தில் இடுப்பு பயிற்சிகளைச் செய்யலாமா?
இடுப்பு பயிற்சிகள் குறித்து மருத்துவர் பிரியங்கா தர்கால்கர் கூறுகையில், "இடுப்பு தசைகள், ஆழமான வயிற்றுத் தசைகள், உதரவிதானம் மற்றும் முதுகுத் தசைகள் ஆகியவை ஒன்றாக இணைந்தே ஒரு செயல்பாட்டு அமைப்பாகப் பணியாற்றுகின்றன. இடுப்பு தசைகளின் வலிமையையும் ஒருங்கிணைப்பையும் மேம்படுத்துவது, மையப்பகுதி தனது முந்தைய நிலைத்தன்மையையும் மீண்டும் பெற உதவுகிறது. இது வயிற்றின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது, நல்ல உடல் அமைப்பைப் பராமரிக்கிறது மற்றும் ஒட்டுமொத்த பிரசவத்திற்குப் பிறகு குணமடைய உதவுகிறது" என்று தெரிவித்தார்.
இருப்பினும், மறுசீரமைப்பின் முக்கிய கவனம் வயிற்றின் வடிவம் அல்லது தோற்றத்தை மேம்படுத்துவதில் மட்டும் இருக்கக் கூடாது. உடலின் செயல்பாட்டை மேம்படுத்துவதிலேயே இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
சிசேரியன் அறுவை சிகிச்சையினால் ஏற்படும் தழும்பு இயக்கத்தை தடுக்குமா?
சிசேரியன் அறுவை சிகிச்சைக்குப் பிறகு, பெரும்பாலான பெண்கள் உடனடியாகத் தங்களின் பழைய தோற்றத்தைப் பெற வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அவர்கள் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் தங்களின் பழைய நிலைக்குத் திரும்ப விரும்புகிறார்கள். ஆனால் அதற்கு நேரம் எடுக்கும்.
பல பெண்கள் மிக விரைவாகவே கடுமையான உடற்பயிற்சிகளைத் தொடங்குகிறார்கள், வயிற்றுப் பயிற்சிகளைத் தவறாகச் செய்கிறார்கள், தாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் கடுமையான உணவுக் கட்டுப்பாட்டைப் பின்பற்றுகிறார்கள் அல்லது சமூக வலைதளங்களில் உள்ள பிற பெண்களுடன் தங்களை ஒப்பிட்டுப் பார்க்கிறார்கள்.
சிலர் வயிற்றுப் பெல்ட்டை மட்டுமே பயன்படுத்துவதில் கவனம் செலுத்துகிறார்கள், ஆனால் மையப்பகுதித் தசைகளை வலுப்படுத்துவதைக் கண்டுகொள்வதில்லை.
பிரசவத்திற்குப் பிறகும் அறுவை சிகிச்சைக்குப் பிறகும் குணமடைவது என்பது பொறுமை, சமச்சீரான உணவு, படிப்படியாக அதிகரிக்கும் உடல் செயல்பாடு மற்றும் போதுமான ஓய்வு ஆகியவற்றைச் சார்ந்துள்ளது.
சிசேரியன் அறுவை சிகிச்சையின் போது, கீறல் போடப்பட்ட இடத்தை நிரப்ப வேண்டியது அவசியம்.

பட மூலாதாரம், Getty Images
மருத்துவர் ரிச்சா பரத்வாஜ் கூறுகையில், "தழும்புத் திசுக்கள் என்பது சி-செக்ஷன் காயம் ஆறும் செயல்முறையின் இயற்கை பகுதியாகும். சில பெண்களுக்கு இந்தத் திசுக்கள் இறுக்கமாகி, அசைவுகளைக் கட்டுப்படுத்தலாம் அல்லது சில அசைவுகளைச் செய்யும்போது நீங்கள் அழுத்தத்தையோ அசௌகரியத்தையோ உணரலாம். காயம் முழுமையாக ஆறி, உங்கள் மருத்துவர் அனுமதி அளித்த பிறகு, பயிற்சி பெற்ற உடற்பயிற்சி சிகிச்சை நிபுணரால் செய்யப்படும் 'ஸ்கார் மொபிலைசேஷன்' உத்திகள், திசுக்களின் நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்தவும், அசௌகரியத்தைக் குறைக்கவும், அசைவுகளை எளிதாக்கவும் உதவும். காயம் முழுமையாக ஆறும் வரை அதை மசாஜ் செய்யவோ அல்லது தொடவோ கூடாது" என்கிறார்.
இந்த அறுவை சிகிச்சைக்குப் பிறகு பல பெண்கள் வயிற்றுக்கு பெல்ட் அணிகிறார்கள், ஆனால் அது தொப்பைக் கொழுப்பைக் குறைக்குமா அல்லது எந்த அளவுக்கு உண்மையில் உதவும் என்று அவர்களுக்குத் தெரிவதில்லை.

பட மூலாதாரம், Getty Images
இதுகுறித்து மருத்துவர் பரத்வாஜ் கூறுகையில், "பிரசவத்திற்குப் பிந்தைய வயிற்று பெல்ட்கள் குறிப்பாக சி-செக்ஷனுக்குப் பிந்தைய முதல் சில வாரங்களில் தற்காலிக ஆதரவையும் வசதியையும் வழங்க உதவும். நடைப்பயிற்சி மேற்கொள்கையிலோ, இருமும் போதோ அல்லது அன்றாடச் செயல்பாடுகளைச் செய்யும்போது பெண்கள் கூடுதல் ஆதரவை உணர இவை உதவும்.
இருப்பினும், இந்தப் பட்டைகள் விலகிய வயிற்றுத் தசைகளை மீண்டும் இணைக்கவோ அல்லது தொப்பைக் கொழுப்பை நிரந்தரமாகக் குறைக்கவோ செய்யாது. இவற்றை மருத்துவரின் வழிகாட்டுதலின் கீழ், சரியான முறையில் மற்றும் வழக்கமான உடற்பயிற்சி மற்றும் சீரமைப்புப் பயிற்சித் திட்டத்துடன் இணைத்தே பயன்படுத்த வேண்டும். பெல்ட்களை நீண்டகாலத் தீர்வாக நம்பியிருக்கக் கூடாது" என்று தெரிவித்துள்ளார்.
சிசேரியன் அறுவை சிகிச்சை பற்றிய தவறான கருத்துகளும் பதில்களும்
கேள்வி – சிசேரியன் அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய வயிறு குறித்த என்னென்ன பொதுவான தவறான கருத்துகளை நீக்க வேண்டும்?
மருத்துவர் நேஹா பவாரின் பதில் : அறுவை சிகிச்சை பிரசவத்தால் வயிறு நிரந்தரமாக வீங்கியது போல தோன்றிவிடும் என்பது ஒரு பொதுவான தவறான கருத்தாகும். உண்மையில், கர்ப்ப காலத்தில் உடலில் ஏற்படும் மாற்றங்களே இதில் பெரும் பங்கு வகிக்கின்றன.
பிரசவத்திற்குப் பிறகு உடனடியாகக் கடுமையான உடற்பயிற்சிகளைத் தொடங்குவது குணமடையும் செயல்முறையை விரைவுபடுத்தும் என்றும் சிலர் நம்புகிறார்கள். இருப்பினும், உடற்பயிற்சியை மிக விரைவில் தொடங்குவது உண்மையில் குணமடைவதைத் தாமதப்படுத்தவே செய்யும்.
பாதுகாப்பான மற்றும் படிப்படியான சீரமைப்புப் பயிற்சியே ஆரோக்கியமான தேர்வாகும்.
கேள்வி – குடலிறக்கம், கடுமையான வலி அல்லது அசாதாரண வீக்கம் போன்ற என்னென்ன அறிகுறிகளைப் புறக்கணிக்கக் கூடாது?
மருத்துவர் நேஹா பவாரின் பதில் – உங்களுக்குத் தொடர்ச்சியான அல்லது அதிகரிக்கும் வலி, காயத்தைச் சுற்றியுள்ள பகுதி சிவப்பு நிறத்தில் மாறுதல், காய்ச்சல், துர்நாற்றம் வீசும் சீழ் வடிதல், கடுமையான வீக்கம் அல்லது காயத்திலிருந்து ரத்தப்போக்கு ஏற்பட்டால், நீங்கள் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். இருமும் போதோ அல்லது முக்கும்போதோ பெரிதாகத் தெரியும் ஒரு வீக்கம், குடலிறக்கத்தின் அறிகுறியாக இருக்கலாம்.
பெண்கள் கடுமையான வயிற்று வலி, தொடர்ச்சியான மரத்துப்போகும் உணர்வு அல்லது வலியுடன் கூடிய வீக்கத்தையும் அலட்சியப்படுத்தக் கூடாது. ஆரம்பத்திலேயே நோயைக் கண்டறிவதன் மூலம் சரியான நேரத்திற்குச் சிகிச்சையளித்து, மேலும் தீவிரமான பிரச்னைகளைத் தடுக்க இயலும்.
கேள்வி – வயிறு குணமடைவதில் உடல் எடை, ஹார்மோன்கள், தாய்ப்பால் அளித்தல் மற்றும் வயது ஆகியவை என்ன பங்கு வகிக்கின்றன?
மருத்துவர் நேஹா பவாரின் பதில் – பிரசவத்திற்குப் பிறகு குணமடைவதை பல காரணிகள் பாதிக்கின்றன. அதிக உடல் எடையுடன் இருப்பது காயங்கள் ஆற அதிக நேரம் எடுக்க வழிவகுக்கும், அதே நேரத்தில் ஹார்மோன் மாற்றங்கள் இணைப்புத் திசுக்கள் சீரடைவதைப் பாதிக்கலாம். தாய்ப்பால் அளிப்பது சில பெண்களுக்குப் படிப்படியாக எடையைக் குறைக்க உதவும், ஆனால் இதன் முடிவுகள் ஒவ்வொருவருக்கும் இடையே மாறுபடும்.
வயதாகும்போது, உங்கள் தோல் நெகிழ்வுத்தன்மையை இழக்கக்கூடும் மற்றும் தசை குணமடைவது தாமதமாகலாம், இதனால் உங்கள் வயிறு மிகவும் தெளிவாகத் தெரியக்கூடும்.
மரபியல், உணவுமுறை, தூக்கம், உடற்பயிற்சி மற்றும் முந்தைய கர்ப்பங்களும் இதில் பங்கு வகிக்கின்றன. ஒவ்வொரு பெண்ணும் குணமடையும் முறை வித்தியாசமானது. மற்றவருடன் ஒப்பிட்டு சிறப்பான முடிவுகளை எதிர்பார்ப்பது யதார்த்தமானதோ, மருத்துவ ரீதியாகவும் பொருத்தமானதோ அல்ல.

பட மூலாதாரம், Getty Images
உங்கள் வாழ்க்கை முறையில் ஏதேனும் முக்கிய மாற்றங்களைச் செய்யவோ, உணவுமுறையை மாற்றவோ, மருந்துகளை உட்கொள்ளவோ அல்லது உடற்பயிற்சியைத் தொடங்கவோ விரும்பினால், ஒரு மருத்துவர் மற்றும் தகுதியான பயிற்சியாளரின் உதவியைப் பெறுவது முக்கியம்.
உங்கள் உடலையும் அறிகுறிகளையும் மருத்துவரைக் கொண்டு சரியாகப் பரிசோதித்து, அவர்களின் ஆலோசனையுடன் மட்டுமே வாழ்க்கை முறை மாற்றங்களைச் செய்வது நல்லது. மருத்துவரை அணுகாமல் சுய மருத்துவம் செய்வது ஆபத்தானது.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு































