'போராடும் மாணவர்கள் சிறையில் அடைக்கப்படுகிறார்கள், ஜாமீன் மறுக்கப்படுகிறது' - நீதிபதி கூறியது என்ன?

பட மூலாதாரம், NLIU Bhopal
உச்சநீதிமன்ற நீதிபதி உஜ்ஜல் புயான், இந்தியாவில் மாறுபட்ட கருத்துகளுக்கான இடம் தொடர்ந்து சுருங்கி வருவதாக சனிக்கிழமை தெரிவித்துள்ளார்.
"தங்களது உரிமைகளுக்காக போராடும் மாணவர்கள் கைது செய்யப்படுகிறார்கள். அவர்களுக்கு ஜாமீன் மறுக்கப்படுகிறது. ஜாமீன் வழங்கப்பட்டால்கூட, அவர்களின் சுதந்திரத்தை கடுமையாகக் கட்டுப்படுத்தும் நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன," என்று அவர் கூறினார்.
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் காக்ரோச் ஜனதா கட்சி (சிஜேபி) முன்னெடுத்த நீண்டகால போராட்டத்துக்குப் பிறகு, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்த நிலையில் நீதிபதி புயானின் இந்தக் கருத்து வெளியாகியுள்ளது. இதையடுத்து டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்று வந்த போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
ஒரு மாதத்துக்கும் மேலாக நீடித்த இந்தப் போராட்டத்தின் போது, ஜூலை 20 அன்று நாடாளுமன்றத்தை நோக்கி நடைபெற்ற பேரணியில் வன்முறை வெடித்தது. இதில் பல போராட்டக்காரர்களும் சில காவல்துறையினரும் காயமடைந்தனர்.
நீதிபதி புயானின் கருத்து சமூக ஊடகங்களில் பரவலான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் மாறுபட்ட கருத்துகளை வெளிப்படுத்தும் குரல்கள் ஒடுக்கப்படுகின்றன என்ற குற்றச்சாட்டுகளுக்கு அவரது கருத்து ஆதாரமாக இருப்பதாக சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
கருத்து வேறுபாட்டை வெளிப்படுத்துவதற்கான சட்டபூர்வமான வழிகள்கூட தற்போது குற்றமாக்கப்படுகின்றன என்று நீதிபதி புயான் கூறினார்.
கங்கை நதியின் நடுவே படகில் இஃப்தார் நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்த சில இளைஞர்களுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டதையும் அவர் கேள்விக்குள்ளாக்கினார்.
போபாலில் உள்ள தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நீதிபதி ஜி.பி. சிங் ஐந்தாவது நினைவு சொற்பொழிவில் கலந்து கொண்டு உரையாற்றியபோது அவர் இந்தக் கருத்துகளை தெரிவித்தார்.
"இந்திய பல்கலைக்கழகங்கள் மாணவர்கள் விமர்சன ரீதியாக சிந்திக்கவும், சமூக மற்றும் அரசியல் பிரச்னைகள் குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ளவும் உதவும் இடங்களாக இருக்க வேண்டும். அதற்குப் பதிலாக அவர்கள் தண்டனை நடவடிக்கைகளுக்கு உள்ளாக்கப்படக் கூடாது," என்று நீதிபதி உஜ்ஜல் புயான் வலியுறுத்தினார்.
நீதிபதி புயான் என்ன கூறினார்?
லைவ் லா இணையதளத்தின் தகவலின்படி, கருத்துகளை வெளிப்படுத்துவதும் அமைதியான முறையில் போராட்டம் நடத்துவதும் குடிமக்களின் அடிப்படை உரிமை என்று நீதிபதி உஜ்ஜல் புயான் கூறினார்.
"விவாதமும் கருத்து வேறுபாடும் ஜனநாயகத்தின் உயிர்நாடி. ஆனால் துரதிர்ஷ்டவசமாக, தற்போது சட்டபூர்வமான செயல்பாடுகள்கூட குற்றமாக்கப்படுகின்றன. சுற்றுச்சூழல் சீரழிவு என்பது உண்மையான பிரச்னை. அதைப் பற்றி வேதனை தெரிவிப்பவர்கள் குற்றவாளிகளைப் போல துரத்தப்படுகிறார்கள்.
கல்வி வளாகங்களில் போராட்டம் நடத்தும் மாணவர்கள் கைது செய்யப்படுகிறார்கள். அவர்களுக்கு 30, 40 நாட்கள் வரை ஜாமீன் மறுக்கப்படுகிறது. அவர்கள் இடைநீக்கம் செய்யப்படுகிறார்கள். பின்னர் நீதிமன்றத்தை நாட வேண்டிய சூழல் ஏற்படுகிறது. அதற்கும் காலதாமதம் ஆகிறது," என்று அவர் கூறினார்.
"சிக்கன் பிரியாணி சாப்பிடுவது குற்றமல்ல என்பது எனக்கு உறுதியாகத் தெரியும். கங்கை நதியில் சிக்கன் சாப்பிடக்கூடாது என்று எந்தச் சட்டமும் இல்லை. ஆனால் அந்தக் காரணத்திற்காக அவர்கள் கைது செய்யப்பட்டு மூன்று மாதங்கள் சிறையில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது," என்று அவர் கூறினார்.
"இத்தகைய செயலுக்காக கைது செய்து, மூன்று மாதங்கள் ஜாமீன் மறுப்பது நியாயமா? இந்தக் கேள்வியை நான் என்னிடமே கேட்டுக்கொள்கிறேன். குடிமக்கள் இதைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். மக்கள் இதை கவனித்துக்கொண்டிருக்கிறார்கள்," என்றும் அவர் தெரிவித்தார்.
ஜாமீன் வழங்கும் விவகாரத்தில் நீதிமன்றங்களின் அணுகுமுறையையும் நீதிபதி புயான் கேள்விக்குள்ளாக்கினார்.
"தற்போது, ஜாமீன் வழங்கும்போது நீதிமன்றங்கள் விதிக்கும் நிபந்தனைகள், ஒரு நபரின் கருத்து தெரிவிக்கும் சுதந்திரத்தையே நடைமுறையில் கட்டுப்படுத்தும் வகையில் உள்ளன," என்று அவர் கூறினார்.
"ஒரு அமைச்சர் தெரிவித்த கருத்தை விமர்சித்து ஃபேஸ்புக்கில் பதிவு எழுதியதற்காக ஒருவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படுகிறது. பின்னர் அவர் முன்ஜாமீன் கோர வேண்டிய நிலை ஏற்படுகிறது. ஜாமீன் வழங்கப்பட்டாலும், நீதிமன்றம் என்ன செய்கிறது? தப்பிச் செல்ல வாய்ப்பே இல்லாத ஒருவரிடம் கடவுச்சீட்டை ஒப்படைக்கச் சொல்கிறது. அதோடு, ஃபேஸ்புக்கில் எதையும் பதிவிடக் கூடாது என்றும் நிபந்தனை விதிக்கப்படுகிறது," என்று அவர் கூறினார்.
டெல்லி கலவர வழக்கில் தொடர்புடைய குல்ஃபிஷா பாத்திமா வழக்கையும் நீதிபதி புயான் சுட்டிக்காட்டினார்.
அந்த வழக்கில் உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியபோது கடுமையான நிபந்தனைகள் விதித்திருந்தது.
"நீண்டகாலம் சிறையில் இருந்த அந்த இளம் மாணவர் செயற்பாட்டாளர்களின் வழக்கைப் பாருங்கள். ஜாமீன் வழங்கப்பட்டது. ஆனால் கடவுச்சீட்டை ஒப்படைக்கச் சொன்னதுடன், நேரடியாகவோ மெய்நிகர் முறையிலோ எந்தப் பொதுக் கூட்டத்திலும் பங்கேற்கவோ உரையாற்றவோ கூடாது என்று நிபந்தனை விதிக்கப்பட்டது," என்று அவர் கூறினார்.
"இத்தகைய கட்டுப்பாடுகள் அவர்களின் அடிப்படை உரிமைகளையும் தனிநபர் சுதந்திரத்தையும் கடுமையாக பாதிக்கின்றன. இவ்வாறான உத்தரவுகள் அல்லது நிபந்தனைகள் மூலம், 'இத்தகைய பொதுச் செயல்பாடுகளில் ஈடுபட வேண்டாம்' என்ற செய்தியை நீதிமன்றமே மறைமுகமாக தெரிவிக்கிறதா என்று மக்கள் கேட்பது நியாயமானதே," என்றும் நீதிபதி உஜ்ஜல் புயான் தெரிவித்தார்.
மும்பை உயர் நீதிமன்றம் குறித்து என்ன சொன்னார்?
நீதிபதி உஜ்ஜல் புயான், காஸாவில் இஸ்ரேலின் நடவடிக்கைகளுக்கு எதிராக பாலத்தீன மக்களுக்கு ஆதரவாக பேரணி நடத்த விரும்பியவர்களுக்கு அனுமதி வழங்க மறுத்த மும்பை உயர் நீதிமன்றத்தையும் விமர்சித்தார்.
பாலத்தீன மக்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) தாக்கல் செய்த மனுவை மும்பை உயர் நீதிமன்றம் நிராகரித்திருந்தது.
அப்போது நீதிமன்றம், "நமது நாடு பல்வேறு பிரச்னைகளை எதிர்கொண்டு வருகிறது. இத்தகைய விஷயங்களை நாம் விரும்பவில்லை. நீங்கள் தொலைநோக்கு பார்வை இல்லாமல் செயல்படுகிறீர்கள். காஸா, பாலத்தீனம் குறித்து பேசுகிறீர்கள். உங்கள் நாட்டுக்காக ஏதாவது செய்யலாமே? தேசபக்தராக இருங்கள். காஸா, பாலத்தீனம் குறித்து பேசுவது தேசபக்தி அல்ல. உங்கள் நாட்டின் பிரச்னைகள் குறித்து பேசுங்கள். அதை செயலிலும் காட்டுங்கள்" என்று கூறியிருந்தது.
இந்த உத்தரவு தனக்கு மிகவும் வியப்பை ஏற்படுத்தியதாக நீதிபதி புயான் தெரிவித்தார்.
"மும்பையின் சிவாஜி பூங்காவில் காஸா மக்களுக்கு ஆதரவாக சிலர் ஆர்ப்பாட்டம் நடத்த விரும்பினர். அரசு அதற்கு அனுமதி மறுத்தது. அதையடுத்து அவர்கள் மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அப்போது நீதிபதி, 'இந்தியாவில் பிரச்னைகள் இல்லையா? இவ்வளவு தொலைவில் உள்ள விஷயத்திற்காக ஏன் போராட்டம் நடத்த வேண்டும்?' என்று கேட்டார். இந்தியா பாலத்தீனத்தை அங்கீகரித்துள்ளது. ஒடிசா உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியான முரளிதர், காஸாவில் நடைபெற்ற வன்முறைகளை விசாரிக்க ஐக்கிய நாடுகள் சபையால் நியமிக்கப்பட்டார்.
அந்த விசாரணை அறிக்கை ஐக்கிய நாடுகள் சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டு தற்போது பொதுமக்கள் பார்வைக்கும் கிடைக்கிறது. அதில் குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வன்முறைகள் விரிவாக பதிவு செய்யப்பட்டுள்ளன," என்று அவர் குறிப்பிட்டார்.
அரசின் மூன்று அதிகார அமைப்புகளின் சுதந்திரம் மற்றும் அதிகாரப் பிரிவினையின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய நீதிபதி புயான், ஓய்வுபெற்ற நீதிபதிகள் அரசியலில் இணைவது அடிப்படையில் தவறானது என்றும், அது அதிகாரப் பிரிவினை கொள்கைக்கு எதிரானது என்றும் கூறினார்.
சமூக ஊடகங்களில் என்ன எதிர்வினை?

நீதிபதி உஜ்ஜல் புயானின் இந்தக் கருத்து சமூக ஊடகங்களில் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது. பலரும் இதுகுறித்து தங்களது கருத்துகளைப் பகிர்ந்துள்ளனர்.
டெல்லி பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் உதவி பேராசிரியரான அஃப்தாப் ஆலம், நீதிபதி புயானின் கருத்தைப் பகிர்ந்து எக்ஸ் தளத்தில், "இந்தியாவில் கருத்து வேறுபாட்டுக்கான இடம் சுருங்கிக்கொண்டே வருவதாக நீதிபதி புயான் வருத்தம் தெரிவித்துள்ளார்," என்று பதிவிட்டார்.
எழுத்தாளர் தேபாசிஷ் ராய் செளத்ரி, "இன்றைய காலத்தில் நடைபெறும் நினைவு சொற்பொழிவுகளில் நீதிபதிகள் பேசும் விஷயங்கள், அவர்கள் தீர்ப்புகளில் எழுத விரும்பினாலும் எழுத முடியாத கருத்துகளாகவே தோன்றுகின்றன. ஓய்வுக்குப் பிறகும் தங்களுக்குக் கிடைக்கும் வாய்ப்புகளையும் வாழ்க்கை முறையையும் இழக்க விரும்பாததால் அவற்றை தீர்ப்புகளில் பதிவு செய்ய முடியாமல் போகிறது," என்று குறிப்பிட்டார்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு































