'விஜய் இங்கு வர வேண்டாம்' - கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் கூறுவது என்ன?

'கர்நாடகா வர வேண்டாம்' - விஜய் வருகையை டி.கே. சிவக்குமார் தவிர்க்க முயல்வது ஏன்?

பட மூலாதாரம், Getty Images

பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

(இந்தச் செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்படுகிறது)

தமிழ்நாட்டுக்கு காவிரியில் இருந்து அடுத்த 15 நாட்களுக்கு தினசரி 3,500 கன அடி வீதம் 4 டி.எம்.சி தண்ணீர் திறக்க வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், மாநிலத்தின் நீர் இருப்பு மற்றும் ஆணையத்தின் உத்தரவு குறித்து கர்நாடக முதலைமைச்சர் டிகே சிவக்குமார் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றது.

காவிரி நதிநீர் மற்றும் மேகேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் ஜோசப் விஜய் ஆகஸ்ட் 3ஆம் தேதி கர்நாடகாவுக்கு பயணம் மேற்கொள்வதாக திட்டமிடப்பட்டு இருந்தது. அவருடன் 13 பேர் கொண்ட குழு கர்நாடகா செல்ல இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின.

ஆனால், கர்நாடகாவில் துறை சார்ந்த அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அம்மாநில முதலமைச்சர் டி .கே சிவக்குமார், "நட்பான ஒரு சூழலில் நாம் சந்திக்க வேண்டும் என்று நான் தமிழக முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளேன். இந்த நீதிமன்ற வழக்குகள் முடியட்டும், நதிநீர் தொடர்பான மாநிலத்தில் நிலவும் சூழ்நிலைகள் சீராகட்டும், இந்த நாட்டின் சட்டத்தை நாம் மதிக்க வேண்டும். இப்போது இருப்பதைவிட இன்னும் இணக்கமான சூழலில் நாம் சந்திப்போம்" என்று தெரிவித்துள்ளார்.

மறுபுறம், இரு மாநில முதலமைச்சர்கள் இடையே இப்படியொரு சந்திப்பு திட்டமிடப்பட்டு இருப்பதாக, தமிழ்நாடு அரசுத் தரப்பில் இருந்து இதுவரை எவ்வித அதிகாரபூர்வ அறிவிப்பும் வரவில்லை.

தமிழ்நாடு முதலமைச்சரின் கர்நாடகா பயணம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய டி.கே. சிவக்குமார் "விஜய் நேரில் வந்து பல்வேறு விவகாரங்கள் குறித்து எங்களுடன் ஆலோசிக்க விரும்புவதாக முதலமைச்சர் அலுவலகம் எங்கள் தலைமைச் செயலாளரைத் தொடர்புகொண்டு தெரிவித்தது. அந்தக் கோரிக்கையை நாங்கள் ஏற்றுக் கொண்டு, இரு மாநில முதலமைச்சர்கள் இடையிலான சந்திப்பை ஆகஸ்ட் 3ஆம் தேதிக்கு நிர்ணயித்தோம்" என்று கூறியுள்ளார்.

ஆனால், "காவிரி நீர் தொடர்பாக தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவுக்குப் பிறகு, தற்போது நிலவும் சூழல் இந்தச் சந்திப்புக்கு ஏற்றதாக இல்லை என்று தான் கருதுவதாகவும், எனவே தமிழ்நாடு முதலமைச்சர் தனது வருகையைச் சில காலத்திற்கு ஒத்தி வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்வதாகவும்" அவர் குறிப்பிட்டார்.

டி.கே. சிவக்குமார், "இந்தச் சந்திப்பு நட்புறவான, அமைதியான மற்றும் சுமூகமான சூழலில் நடைபெற வேண்டும் என்பதே எனது விருப்பம். கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய இரு மாநிலங்களும் பயனடைய வேண்டும். இரு மாநிலங்களுக்கும் இடையில் எந்தவிதமான மனக் கசப்பும் ஏற்படக்கூடாது. நீர் கிடைப்பது பெரும்பாலும் மழையைப் பொறுத்தே உள்ளது. காவிரி நீர் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே தெளிவான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைப் பின்பற்ற வேண்டிய கடமை கர்நாடகாவுக்கு உள்ளது. அந்த உத்தரவை மீற வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கில்லை" என்று தெரிவித்தார்.

டி.கே. சிவக்குமார், ஜோசப் விஜய் சந்திப்பு தள்ளிப் போகிறதா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, காவிரி நதி (கோப்புப் படம்)
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

மேகேதாட்டு அணை தொடர்பாகப் பேசும்போது, நீர் மேலாண்மையைப் பொருத்தவரை கர்நாடகாவைவிட தமிழ்நாட்டிற்கே அது அதிகமாகப் பயனளிக்கும் என்று தான் நம்புவதாகக் குறிப்பிட்ட கர்நாடகா முதலமைச்சர் "கர்நாடகாவுக்கு கிடைக்கக்கூடிய கூடுதல் நன்மை பெரும்பாலும் மின்சார உற்பத்திதான்" என்று கூறினார்.

அதே நேரத்தில், "அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கு முன் கர்நாடகாவின் அரசியல் கட்சிகளுக்கும் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கும் தகவல் தெரிவிப்பது எனது கடமை. அரசியல் ரீதியாக எங்களுக்கு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், கர்நாடகாவின் பரந்த நலன் சார்ந்த விவகாரங்களில் அவர்கள் அரசுக்கு ஆதரவாகவும் ஒத்துழைப்பாகவும் இருந்து வருகின்றனர்" என்றும் குறிப்பிட்டார்.

ஆகையால், அவர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தி, அனைத்துக் கட்சிகளின் கருத்துகளையும் நம்பிக்கையையும் பெறவிருப்பதாகக் கூறிய டி.கே. சிவக்குமார், அதுவரை தமிழ்நாடு முதலமைச்சர் இந்தச் சந்திப்பை ஒத்தி வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்வதாகக் குறிப்பிட்டார். அத்துடன், சூழல் அமைதியாகவும் பதற்றமின்றியும் சுமூகமாகவும் இருக்கும் நேரத்தில் நாம் சந்தித்து, இரு மாநிலங்களின் நலன்கள் குறித்த விவகாரங்களில் பேசி தீர்வு காணலாம் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு