You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பிஎஸ்ஜி மீண்டும் சாம்பியன்: பாரிசில் கால்பந்து ரசிகர்கள் கொண்டாட்டத்தில் வன்முறை - ஒரு புகைப்படத் தொகுப்பு
சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் ஆர்செனல் அணியை வீழ்த்தி பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் அணி பட்டத்தை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இதைத் தொடர்ந்து, பிரான்சில் நடந்த கால்பந்து ரசிகர்களின் கொண்டாட்டத்தில் வன்முறை வெடித்தது.
பிரான்ஸ் முழுவதும் ஆங்காங்கே கால்பந்து ரசிகர்களுக்கும் காவல்துறைக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டன. இதுதொடர்பாக, 400-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தலைநகர் பாரிஸில் பேருந்து, ரயில் மற்றும் போக்குவரத்துச் சேவைகள் முடங்கிப் போயின. நிலைமையை கட்டுக்குள் வைத்திருக்க ஆயிரக்கணக்கான காவல்துறையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
நகரின் மையப் பகுதியில் வன்முறையைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர்.
பிரான்சில் கடந்த ஆண்டு கொண்டாட்டங்களின் போதும் வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியிருந்தன. இந்த முறை அதிகாரிகள் சிறப்பான முறையில் தயாராகி இருந்ததாக பிரான்ஸ் உள்துறை அமைச்சர் லாரென்ட் நுனெஸ் தெரிவித்திருந்தார்.
பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து பாரிஸின் சாம்ப்ஸ்-எலிசிஸ் பகுதியில் ரசிகர்கள் திரண்டனர்.
நகரில் எடுக்கப்பட்ட காணொளிகளில், சாலைகளில் உள்ள எலெக்ட்ரிக் வாகனங்கள் தீயிட்டு எரிக்கப்படுவதையும் கடைகளின் முன் பக்கத்தில் உள்ள கண்ணாடிகள் உடைக்கப்படுவதையும் பார்க்க முடிகிறது.
முன்னதாக, பிரன்சஸ் பார்க் மைதானத்தில் பிரமாண்ட திரையில் கால்பந்து போட்டியைக் காண ரசிகர்கள் திரண்ட போது காவல்துறையினருடன் கைகலப்பு ஏற்பட்டது.
இந்த மோதலில் 6 வானகங்கள், இரு கடைகள் மற்றும் ஒரு பேருந்து நிழற்குடை சேதமடைந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பிரான்ஸ் முழுவதும் சுமார் 416 பேரும், பாரிஸில் மட்டும் சுமார் 280 பேரும் கைது செய்யப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த மோதலில் 7 காவல்துறை அதிகாரிகள் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு