கணவன் சிதையில் மனைவியை உயிரோடு எரிக்கும் 'உடன்கட்டை' ஏறும் வழக்கத்தை தடுத்த ஆங்கிலேயர்

பட மூலாதாரம், Kean Collection
- எழுதியவர், சௌதிக் பிஸ்வாஸ்
- பதவி, பிபிசி செய்தியாளர்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாக இருந்த லார்ட் வில்லியம் பென்டிங், 1829 டிசம்பரில் சதி நடைமுறையைத் தடை செய்தார். இருப்பினும், பின்னர் அந்தச் சட்டம் தளர்த்தப்பட்டது.
1829 டிசம்பர் மாதத்தில், பிரிட்டிஷ் ஆட்சியின் கீழிருந்த இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலான லார்ட் வில்லியம் பெண்டிங்க், சதி நடைமுறைக்கு தடை விதித்தார். சதி என்பது ஒரு 'பண்டைய இந்து பழக்கம்' ஆகும். இதன்படி, கணவன் இறந்ததும், அவருடைய மனைவி கணவனின் சடலத்தை எரிக்கும் சிதையில் உயிரோடு விழுந்து இறந்து விடுவார்.
அந்தக் காலத்தில் வங்காளத்தின் கவர்னர் ஜெனரலாக இருந்த பெண்டிங், 49 மூத்த ராணுவ அதிகாரிகள் மற்றும் ஐந்து நீதிபதிகளுடன் கலந்தாலோசித்தார். "பிரிட்டிஷ் ஆட்சியின் மீதான கறையைப் போக்க" இதுவே சரியான தருணம் என அவர் கருதினார். அவரது கருத்துப்படி, சதி நடைமுறையானது "மனித இயல்புக்கு முரணான மற்றும் அருவருக்கத்தக்க" ஒன்றாக இருந்ததுடன், பல இந்துகளையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்தது. இது ஒரு "சட்டவிரோதமான மற்றும் கொடூரமான" நடைமுறையாகக் கருதப்பட்டது.
இந்துப் பெண் கணவனை இழந்த நிலையில், கணவரின் சிதையிலேயே அந்தப் பெண்ணையும் உயிரோடு எரிக்கும் கொடூரத்திற்கு (அது அப்பெண்ணின் தன்னிச்சையான முடிவாக இருந்தாலும் கூட) துணையாக நிற்போரும் தூண்டுதலாக இருப்போரும் 'கொலைக் குற்றவாளிகளாகவே' கருதப்படுவர் என சதி ஒழிப்புச் சட்டம் திட்டவட்டமாகக் கூறியது."
அத்துடன், மயக்க நிலையிலோ அல்லது தன் சுயபுத்தியுடன் முடிவெடுக்க முடியாத நிலையிலோ உள்ள ஒரு கைம்பெண்ணை, சிதையில் ஏற்றி எரிப்பதற்குத் துணைநிற்கும் அல்லது உடந்தையாக இருக்கும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிப்பதற்கான சட்டரீதியான அதிகாரத்தையும் இச்சட்டப்பிரிவு நீதிமன்றங்களுக்கு வழங்கியது.
சதி எனப்படும் உடன்கட்டை நடைமுறையை வேரோடு ஒழிப்பதற்காக, அதற்கு எதிராகப் போராடி வந்த முன்னணி இந்திய சீர்திருத்தவாதிகள் பரிந்துரைத்த மெதுவான சீர்திருத்த நடவடிக்கைகளை விட, பெண்டிங்கின் சட்டம் மிகவும் கடுமையானதாக இருந்தது.
சதி ஒழிப்புச் சட்டம் இயற்றப்பட்ட பிறகு, ராஜா ராம் மோகன் ராய் தலைமையில் 300 முக்கிய இந்துக்கள், "பெண்களை திட்டமிட்டுக் கொலை செய்பவர்கள் என்ற கறையிலிருந்து தங்களை எப்போதும் காப்பாற்றியதற்காக" பெண்டிங்கிற்கு நன்றி தெரிவித்தனர்.
ஆனால், பழமைவாத இந்துக்கள் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்டிங்கிடம் மனு அளித்தனர். அறிஞர்களையும் சாஸ்திரங்களையும் மேற்கோள் காட்டி, சதி முறை என்பது "மதத்தின் கீழ் ஒரு கட்டாயக் கடமை அல்ல" என்ற பெண்டிங்கின் வாதத்தை அவர்கள் எதிர்த்தனர். இருந்தபோதிலும், பெண்டிங் தனது முடிவிலிருந்து பின்வாங்கவில்லை.
மனுதாரர்கள் பிரிட்டிஷ் காலனிகளின் இறுதி முறையீட்டு அமைப்பான 'ப்ரிவி கவுன்சிலை' நாடினர். 1832-இல், சதி நடைமுறையானது "சமூகத்திற்கு எதிரான ஒரு பெரும் குற்றம்" என்று கூறி, அச்சட்டத்தை அந்தக் கவுன்சில் உறுதிப்படுத்தியது.
'பழமைவாதக் கருத்துகளுக்கு இடம் அளிக்கப்படவில்லை'

பட மூலாதாரம், Science & Society Picture Library/Getty Images
இந்தியாவில் சாதி குறித்த சட்ட வரலாற்றை ஆராயும் "காஸ்ட் பிரைடு" என்ற புத்தகத்தை எழுதிய மனோஜ் மித்தா, "1829-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட அந்தச் சட்டத்தின் துணிச்சலான மற்றும் உறுதியான போக்கு, 190 ஆண்டுகால பிரிட்டிஷ் ஆட்சியில், பழமைவாத உணர்வுகளுக்குச் சிறிதும் இடமளிக்காமல் சமூகச் சட்டம் ஒன்று இயற்றப்பட்டதற்கு அநேகமாக ஒரேயொரு உதாரணமாக இருக்கலாம்." என்று குறிப்பிட்டுள்ளார்.
மித்தா மேலும் எழுதுகையில், "இந்திய மக்களை உள்ளிருந்து சீரழித்துக் கொண்டிருந்த இந்த ஒரு உள்நாட்டு வழக்கத்தைக் குற்றமாக அறிவித்ததன் மூலம், பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் ஒரு தார்மீக வெற்றியை அடைந்தனர்." என்று கூறுகிறார்.
ஆனால் 1837-இல், இந்தியத் தண்டனைச் சட்டத்தை வரைவு செய்த மற்றொரு பிரிட்டிஷ் அதிகாரி தாமஸ் மெக்காலே, பென்டிங்கின் சட்டத்தை நீர்த்துப்போகச் செய்துவிட்டார்.
மெக்காலேயின் விளக்கத்தின்படி, ஒரு நபர் சம்பந்தப்பட்ட கைம்பெண்ணின் தூண்டுதலின் பேரில் தான் சிதையை மூட்டினேன் என்று ஆதாரத்துடன் வாதிட்டால், அவருக்குக் குறைந்தபட்ச தண்டனை வழங்கி விடுவிக்க முடியும். "தீவிரமான மதக் கடமை உணர்வு மற்றும் சில சமயங்களில் மிகுந்த கௌரவ உணர்வு" காரணமாகப் பெண்கள் தங்களைத் தாங்களே உயிருடன் எரித்துக் கொள்ளக்கூடும் என்று அவர் ஒரு வரைவுக் குறிப்பில் எழுதியிருந்தார்.
சதி பழக்கத்தின் மீதான மெக்காலேயின் இந்த "மனிதாபிமான அணுகுமுறை" பல தசாப்தங்களுக்குப் பிறகு பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்குச் சாதகமாக அமைந்தது என்பதை மித்தா கண்டறிந்தார்.
1857-ஆம் ஆண்டு சிப்பாய் கலகத்திற்குப் பிறகு அந்தச் சட்ட வரைவு மீண்டும் பரிசீலிக்கப்பட்டதாக அவர் குறிப்பிடுகிறார். அந்த நேரத்தில், துப்பாக்கிக் தோட்டாக்களில் தங்கள் மதங்களில் தடை செய்யப்பட்ட விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக எழுந்த சந்தேகத்தைத் தொடர்ந்து, இந்து மற்றும் முஸ்லிம் வீரர்கள் பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனத்திற்கு எதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.
அப்போது, அந்தக் கிளர்ச்சியில் முக்கியப் பங்காற்றிய உயர்சாதி இந்துக்களைச் சமாதானப்படுத்தும் காலனித்துவ உத்தியின் ஒரு பகுதியாகவே, மெக்காலேவால் மென்மையாக்கப்பட்ட அந்தச் சட்டம் அதிகாரப்பூர்வ சட்டப் புத்தகத்தில் சேர்க்கப்பட்டது.
'சதி எனும் குற்றம், கொலை என்பதிலிருந்து தற்கொலைக்குத் தூண்டுதல் என்ற நிலைக்குக் குறைக்கப்பட்டது'

பட மூலாதாரம், Getty Images
1862ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டத்திருத்தம், சதி ஒழிப்புச் சட்டத்தின் இரு முக்கியத் தண்டனை விதிகளை அடியோடு ரத்து செய்தது. உடன்கட்டை ஏறுதலைக் 'குற்றவியல் கொலைக்கு' இணையானதாகக் கருதி தண்டிக்கும் முதல் விதியும், கொடூரமான வழக்குகளில் 'மரண தண்டனை' விதிக்கும் மாற்று விதியும் நீக்கப்பட்டன.
இந்தச் சட்டத் தளர்வானது, பாதிக்கப்பட்ட பெண் தன் கணவரின் இறுதிச்சடங்கின் போது சுயவிருப்பத்துடன்தான் உயிரைத் துறந்தார் என்றும், எனவே இது கொலை அல்ல, தற்கொலைதான் என்றும் குற்றம்சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் வாதிட வழிவகுத்தது.
சதி ஒழிப்புச் சட்டத்தில் கொண்டுவரப்பட்ட இந்தத் தளர்வானது, அன்றைய சமூகச் சீர்திருத்தச் சட்டங்களுக்கு எதிராக நிலவிவந்த 'ஆழ்ந்த அதிருப்தியின் எதிரொலியே' என்று மித்தா குறிப்பிடுகிறார். சதி முறையைச் சட்டவிரோதமாக்கிய சட்டம், சாதி நீக்கம் செய்யப்பட்ட மற்றும் மதம் மாறிய இந்துக்களுக்குக் குடும்பச் சொத்தில் வாரிசுரிமை வழங்கிய 1850-ஆம் ஆண்டுச் சட்டம், மற்றும் கைம்பெண்கள் மறுமணத்தை அனுமதித்த 1856-ஆம் ஆண்டுச் சட்டம் ஆகியவற்றுக்கு எதிராகப் புகைந்துகொண்டிருந்த சமூக ஆத்திரத்தின் விளைவாகவே பிரிட்டிஷார் இந்தத் தளர்வை மேற்கொண்டதாக அவர் எழுதுகிறார்.
இருப்பினும், இந்த மென்மையான சட்டத்திற்கு ஒப்புதல் அளித்ததற்கான உடனடி காரணம் "உயர்சாதி இந்து சிப்பாய்களிடையே வெடித்த சீற்றமே" ஆகும். துப்பாக்கித் தோட்டாக்களில் பசுவின் கொழுப்பு தடவப்பட்டதாக வந்த செய்திகள் அவர்களின் கோபத்தை மேலும் தூண்டியிருந்தன.
1829 மற்றும் 1862 க்கு இடையில், உடன்கட்டை ஏறுதல் என்னும் குற்றம் 'கொலை' என்ற நிலையிலிருந்து 'தற்கொலைக்குத் தூண்டுதல்' என்பதாக மாற்றப்பட்டது. மித்தா குறிப்பிடுகிறார், "1829 முதல் உடன்கட்டை ஏறும் வழக்கம் குறைந்துவிட்ட போதிலும், இந்தியாவின் சில குறிப்பிட்ட பகுதிகளில், குறிப்பாக உயர்சாதியினரிடையே, சதி முறையானது பெருமை மற்றும் மரியாதைக்குரிய ஒன்றாகவே பார்க்கப்பட்டு வந்தது."
ஒரு விசித்திரமான திருப்பமாக, இந்திய தேசிய காங்கிரஸில் இணைந்து பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுதலை பெறுவதற்கான போராட்டத்தில் முக்கியப் பங்கு வகித்த வழக்கறிஞரும் அரசியல்வாதியுமான மோதிலால் நேரு, 1913 ஆம் ஆண்டு உத்தரபிரதேசத்தில் உடன்கட்டை ஏறியது தொடர்பான வழக்கு ஒன்றில் உயர்சாதியைச் சேர்ந்த ஆறு ஆண்களுக்காக நீதிமன்றத்தில் வாதாடினார்.

பட மூலாதாரம், Getty Images
கைம்பெண்ணின் அசைக்க முடியாத பக்தி உணர்வால், "சிதை தானாகவே அற்புதம் போல் பற்றிக்கொண்டது" என்பதே நீதிமன்றத்தில் அந்த ஆண்களின் வாதமாக இருந்தது. ஆனால், இந்த 'தெய்வீகத் தலையீடு' என்ற கட்டுக்கதையை அடியோடு நிராகரித்த நீதிபதிகள், உண்மையை மூடிமறைக்க முயன்ற குற்றத்திற்காக அவர்களைக் கடுமையாகச் சாடினர். தற்கொலைக்குத் தூண்டிய குற்றத்திற்காக அவர்கள் அனைவருக்கும் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், இருவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை உறுதி செய்யப்பட்டது.
இதற்கிடையே, ஏழு தசாப்தங்களுக்கும் மேலான கால ஓட்டத்திற்குப் பிறகு, சதி ஒழிப்பு வரலாற்றில் ஒரு முக்கியத் திருப்புமுனை ஏற்பட்டது. 1987 ஆம் ஆண்டில், மோதிலால் நேருவின் கொள்ளுப் பேரனான ராஜீவ் காந்தியின் தலைமையிலான மத்திய அரசு, புதிய சட்டம் ஒன்றைக் கொண்டு வந்தது. சதி நடைமுறையை பெருமைப்படுத்துவதை முதன்முறையாகக் குற்றமாக அறிவித்து, இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கும் வகையில் அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டம் இயற்றப்பட்டது.
இப்புதிய சட்டத்தின்படி, சதி நடைமுறையை ஆதரிப்போருக்கும், அதனை நியாயப்படுத்திப் பரப்புரை செய்வோருக்கும் ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்க வழிவகை செய்யப்பட்டது. அதுமட்டுமன்றி, உடன்கட்டை ஏறுதலை மீண்டும் 'கொலை' என்ற பிரிவின் கீழ் கொண்டு வந்த இச்சட்டம், அதற்குக் காரணமானவர்களுக்கு 'மரண தண்டனை' விதிக்கும் கடுமையான விதியையும் மறுஅறிமுகம் செய்தது.
ராஜஸ்தான் மாநிலத்தின் ஒரு கிராமத்தில், ரூப் கன்வர் என்ற இளம் பெண், சதி என்ற பெயரில் உயிரோடு எரிக்கப்பட்ட கொடூரச் சம்பவத்தைத் தொடர்ந்தே, ராஜீவ் காந்தி அரசு இந்த அதிரடி சட்ட நடவடிக்கையை மேற்கொண்டது. இந்தியாவில் அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்ட 'கடைசி சதிச் சம்பவம்' இதுவாகும். 1947-ல் இந்தியா சுதந்திரம் அடைந்ததற்குப் பிறகு, பதிவான 41-வது சதி வழக்கு இதுவென மித்தா சுட்டிக்காட்டுகிறார்.
வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தச் சட்டத்தின் முகப்புரை, பெண்டிங்கின் அன்றைய விதியிலிருந்தே எடுத்தாளப்பட்டிருந்தது. "இது தற்செயலாக நிகழ்ந்திருந்தாலும், காலனித்துவப் பிடியிலிருந்து விடுபட்ட ஒரு சுதந்திர நாடு, தனது முன்னாள் ஆட்சியாளருக்குச் செலுத்திய அஞ்சலியாகவே இது அமைந்தது" என்று மித்தா விவரிக்கிறார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































