அரசு ஒதுக்கீட்டில் 461 இடங்கள் குறையுமா? தனியார் மருத்துவ கல்லூரி விவகாரத்தில் திமுக மீதான அமைச்சர் குற்றச்சாட்டின் பின்னணி

திமுக, தவெக, மருத்துவ இடங்கள், தனியார் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், யூஜிசி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப் படம்
    • எழுதியவர், மோகன்
    • பதவி, பிபிசி தமிழ்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

தமிழ்நாட்டைச் சேர்ந்த மூன்று தனியார் மருத்துவ கல்லூரிகள் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களாக மாறுவதால் அரசு ஒதுக்கீட்டின் கீழ் வரும் 400-க்கும் மேற்பட்ட இளங்கலை மருத்துவ இடங்கள் பறிபோவதாகச் சர்ச்சை எழுந்துள்ளது.

முந்தைய திமுக அரசால் தான் இந்தச் சூழ்நிலை உருவாகியிருப்பதாக தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்தக் குற்றச்சாட்டுகளை மறுக்கும் திமுகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் "அரசு இடங்கள் பறிபோகக் கூடாது என்பது தான் திமுக அரசின் நிலைப்பாடாக இருந்தது. அதனால் தான் தடையில்லா சான்று கேட்ட எந்த ஒரு விண்ணப்பத்திற்கும் திமுக ஆட்சிக் காலத்தில் அனுமதி வழங்கப்படவில்லை" என்கிறார்.

அரசு ஒதுக்கீட்டு மருத்துவ இடங்கள் குறைவதால் மருத்துவம் படிக்க விரும்பும் ஏழை, எளிய, நடுத்தர வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு எந்த வகையில் இழப்பு ஏற்படும்? கல்வியாளர்கள் என்ன சொல்கிறார்கள்?

சர்ச்சை தொடங்கியது எப்போது?

தேசிய மருத்துவ ஆணையத்தின் இணையதளத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மூன்று கல்வி நிறுவனங்கள் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களாக அங்கீகரிக்கப்பட்டதாக அறிவிப்பு வெளியானது.

இது தொடர்பாக கே. அண்ணாமலை, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் எதிர்வினையாற்றி உள்ள நிலையில் சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜும் இந்த விவகாரம் தொடர்பாக பேசியுள்ளார்.

அமைச்சரின் குற்றச்சாட்டு என்ன?

திமுக, தவெக, மருத்துவ இடங்கள், தனியார் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள்

பட மூலாதாரம், X/Arunraaj

படக்குறிப்பு, முதலமைச்சர் விஜய் உடன் சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ்

இது தொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் பேசிய அருண்ராஜ், "யூஜிசி விதிப்படி 60 நாட்களுக்குள் பதிலளிக்கவில்லை என்றால் தடையில்லா சான்று வழங்கப்பட்டதாக அர்த்தம். ஆனால் இது தெரிந்தும் கடந்த ஆட்சியில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை." என்று குற்றம் சாட்டியிருந்தார்.

அமைச்சரின் கூற்றுப்படி, இதனால் 461 இடங்கள் மாநில ஒதுக்கீட்டிலிருந்து வெளியே செல்கிறது. இதனால் 7.5% அரசு பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டின் கீழ் 35 இடங்களும் பறிபோகும் நிலை உள்ளது.

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

மேலும் பேசிய அருண்ராஜ், "நிகர்நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்து பெற்ற கல்லூரிகளில் தனலட்சுமி ஶ்ரீனிவாசன் மருத்துவக் கல்லூரி, ஶ்ரீனிவாசன் மருத்துவக் கல்லூரி இரண்டு கல்லூரிகள் தனியார் பல்கலைக்கழக சட்டத்தின் கீழ் வருவதால் அவர்கள் நேரடியாக விண்ணப்பித்தனர். ஓசூரில் புனித பீட்டர்ஸ் மருத்துவக் கல்லூரிக்கும் நிகர்நிலை பல்கலைக்கழக அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு எதிராக தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்துள்ளது. அந்தஸ்து அந்த மேல்முறையீட்டின் தீர்ப்புக்கு உட்பட்டதாக இருக்கும்.

அவை போக கற்பக விநாயகா மருத்துவக் கல்லூரி ஜூன் 2023-இல் விண்ணப்பித்திருக்கிறார்கள். ஆனால் அப்போதைய திமுக அரசுக்கு மூன்று மாதம் கழித்து என்ஓசி கொடுத்திருக்கிறார்கள். அதற்கு இரண்டு மாதங்கள் கழித்து அந்த என்ஓசியை திரும்பவும் பெற்றிருக்கிறார்கள். அந்தக் கல்லூரி நிர்வாகம் நீதிமன்றம் சென்றபோது 60 நாட்களில் தடையில்லா சான்று கொடுக்கப்படாததால் அது தாமாகவே வழங்கப்பட்டதாக அர்த்தம் என்று தீர்ப்பளித்தது. முந்தைய திமுக அரசு அதனை எதிர்த்து மேல்முறையீடும் செய்யவில்லை. அதற்கும் எதிராக நீதிமன்றம் செல்ல இருக்கிறோம்." என்று தெரிவித்தார்.

இந்த நான்கு கல்லூரிகள் போக மேலும் இரண்டு கல்லூரிகளும் விண்ணப்பித்திருந்ததாகவும் அந்த விண்ணப்பங்களுக்கும் 60 நாட்களுக்குள் பதில் அளிக்கப்படவில்லை என்றும் அருண்ராஜ் கூறினார்.

யூஜிசி விதிகள் சொல்வது என்ன?

திமுக, தவெக, மருத்துவ இடங்கள், தனியார் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், யூஜிசி

பட மூலாதாரம், Sonu Mehta/Hindustan Times via Getty Images

ஒரு கல்வி நிறுவனம் நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக அங்கீகரிக்கப்படுவதற்கான வழிமுறைகளை பல்கலைக்கழக மானியக் குழுவின் (யூஜிசி) நிகர்நிலைப் பல்கலைக்கழகத்திற்கான விதிகள் விளக்குகின்றன.

அதன்படி, அங்கீகாரம் பெற விரும்பும் கல்லூரிகள் அதற்காக யூஜிசியின் இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். அத்துடன் தேவையான ஆவணங்களையும் இணைக்க வேண்டும்.

அந்தக் கல்லூரிகள் எந்தப் பல்கலைக்கழகத்திற்குக் கீழ் வருகின்றனவோ, அங்கிருந்து பெறப்படும் தடையில்லா சான்றும் அந்த ஆவணங்களில் முக்கியமான ஒன்றாக உள்ளது.

நிகர்நிலைப் பல்கலைக்கழக விதிகள் பிரிவு 6 (2) (ஏ)-இன் படி, ஒரு கல்வி நிறுவனம் பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் சார்பு கல்லூரியாக இருந்தால் தடையில்லா சான்று பெற பல்கலைக்கழகத்திடம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பம் பெறப்பட்டு 60 நாட்களுக்குள் தடையில்லா சான்று வழங்கப்படவில்லை என்றால் அந்த சான்றிதழ் வழங்கப்பட்டு விட்டதாகவே கருதப்படும் என்றும் அந்த விதிகளில் கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மருத்துவ மாணவர் சேர்க்கை எவ்வாறு நடைபெறுகிறது?

தமிழ்நாட்டில் அரசு மருத்துவக் கல்லூரிகள், தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் உள்ளன.

அரசு மருத்துவ கல்லூரிகளில் 15% இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டிற்குச் சென்றுவிடும். தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 50% இடங்கள் மாநில அரசு ஒதுக்கீட்டின் கீழ் வரும்.

இதுகுறித்துப் பேசிய ஓய்வுபெற்ற பொது சுகாதாரத் துறை இயக்குநர் குழந்தைசாமி, "அரசு கல்லூரி இடங்களில் கட்டணம் குறைவாக இருக்கும். தனியார் கல்லூரி அரசு ஒதுக்கீட்டு இடங்களில் கட்டணம் சற்று அதிகமாக இருக்கும். தனியார் கல்லூரி நிர்வாக இடங்களில் (Management Quota) கட்டணம் அதை விட கூடுதலாக இருக்கும். நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் அதை விடவும் கட்டணம் கூடுதலாக இருக்கும்." எனத் தெரிவித்தார்.

அரசியல் தலைவர்கள் கூறுவது என்ன?

திமுக, தவெக, மருத்துவ இடங்கள், தனியார் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள்

பட மூலாதாரம், Annamalai/Anbumani

இந்தச் செய்தியை மேற்கோள்காட்டி எக்ஸ் தளத்தில் பதிவிட்ட கே.அண்ணாமலை, "முந்தைய திமுக அரசு, 60 நாள் காலக்கெடு முடியும் வரை திட்டமிட்டு கண்டுகொள்ளாமல் இருந்ததா என்ற முக்கியமான கேள்வி எழுகிறது. இந்த விவகாரத்தில் முழுமையான விசாரணை நடத்தி, தவறுக்கு காரணமானவர்கள் யார் என்பதை வெளிப்படையாகக் கண்டறிந்து, அவர்கள் எந்தப் பொறுப்பில் இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்று அதில் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், "தடையில்லா சான்று இல்லாமலேயே தனியார் கல்லூரிகளுக்கு நிகர்நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்து வழங்கப்பட்டிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது." எனத் தெரிவித்திருந்தார்.

மேலும் தனது பதிவில், "தனியார் மருத்துவக் கல்லூரிகள் காலப்போக்கில் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களாக மாறுவது இயல்பானது தான் என்பதால், அதனால் ஏற்படும் மாணவர் சேர்க்கை இடங்களை ஈடுகட்டும் வகையில் புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்குவது, ஏற்கனவே செயல்பட்டு வரும் மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் இடங்களை உருவாக்குவது போன்றவை தமிழக அரசின் கடமை ஆகும்.

இதுவரை மருத்துவக் கல்லூரிகள் இல்லாத ஆறு மாவட்டங்களிலும் தலா 150 இடங்களைக் கொண்ட புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளை தொடங்கவும், 100 எம்.பி.பி.எஸ் இடங்களை மட்டுமே கொண்டுள்ள 16 அரசு மருத்துவக் கல்லூரிகளில் தலா 50 இடங்களை கூடுதலாக உருவாக்கவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்." என்றார்.

திமுகவின் பதில் என்ன?

திமுக, தவெக, மருத்துவ இடங்கள், தனியார் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள்

பட மூலாதாரம், Constantine Ravindran

படக்குறிப்பு, திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

ஆனால் இந்தக் குற்றச்சாட்டை மறுக்கிறார் திமுக நாடாளுமன்ற உறுப்பினரான கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்.

இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய அவர், "திமுக அரசு எந்தக் கல்லூரிக்கும் தடையில்லா சான்று வழங்கவில்லை. ஒரு சந்தர்ப்பத்தில் வழங்கிய சான்றும் திரும்பப் பெறப்பட்டது. அரசு இடங்கள் பறிபோகக் கூடாது என்பது தான் திமுக அரசின் நிலைப்பாடாக இருந்தது. அதனால் தான் எந்த விண்ணப்பத்திற்கும் அனுமதி வழங்கப்படவில்லை.

திமுக அரசு வேண்டுமென்றே செய்தது போல அமைச்சர் கூறுவது தவறானது. 60 நாட்களில் சான்று கொடுக்கவில்லையென்றாலும் கொடுக்கப்பட்டதாகக் கருதப்படும் என்று விதியை அமைச்சர் மேற்கோள் காட்டுகிறார். யூஜிசி விதிகள் அவ்வாறு இருக்கிறதென்றால் அதற்கு ஒன்றிய அரசைத் தான் அவர்கள் கேட்க வேண்டும்." எனத் தெரிவித்தார்.

கல்வியாளர்கள் கூறுவது என்ன?

திமுக, தவெக, மருத்துவ இடங்கள், தனியார் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள்
படக்குறிப்பு, கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி.

குறுகிய கால நோக்கில் பார்க்கும்போது இது நிச்சயம் ஒரு பின்னடைவு தான் என்கிறார் கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி.

இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய அவ்ர், "தற்போது அரசு மருத்துவக் கல்லூரிகளில் 100 இடங்களை அதிகரித்துக் கொள்ள அனுமதி கிடைத்துள்ளது. அரசாங்கம் இத்தகைய இடங்களை மேலும் அதிகரிக்க வேண்டும். அதன் மூலம் இந்த இழப்புகளை ஈடு செய்ய முடியும். மருத்துவக் கல்விக்காக ஆகும் செலவுகள் அதிகரிக்கின்றன. அதனால் தனியார் கல்லூரிகள் அவர்கள் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களாக மாறவே விரும்புகின்றன. நேரடி அரசு இடங்களை அதிகரிக்கும்போது தனியார் கல்லூரிகளைச் சார்ந்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது." என்று தெரிவித்தார்.

அடுத்து அரசு என்ன செய்ய உள்ளது?

அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் தொடர்பான கேள்விக்குப் பதிலளித்து பேசிய அமைச்சர் அருண்ராஜ், " சட்ட ரீதியான நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசித்து வருகிறோம். மறுபுறம் ஒன்றிய அரசிடமும், ஒன்றிய கல்வி அமைச்சகத்திடமும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் தொடர்பான விதிகளை தளர்த்துவது பற்றியும் முறையிடுவோம்." என்றார்.

இந்த கல்லூரிகளைத் தொடர்ந்து மற்ற தனியார் கல்லூரிகளும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களாக மாற விண்ணப்பிப்பார்களா என்கிற கேள்விக்குப் பதிலளித்த அவர், "தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்திற்கு தற்போது துணைவேந்தர் இல்லை. அதற்கும் வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தற்போது ஒரு நிர்வாகக் குழு தான் நிர்வகித்து வருகிறது. இனிமேல் எந்தக் கல்லூரி விண்ணப்பித்தாலும் 60 நாட்களுக்கு உள்ளாக எந்த விதமான சட்ட சிக்கல்களுக்கும் இடம் கொடுக்காமல் விரைந்து பதில் அளிப்பதற்கான வழிகாட்டுதல்களை வழங்கியிருக்கிறோம்."

'எந்த விண்ணப்பமும் தற்போது நிலுவையில் இல்லை'

தமிழ்நாடு எம்ஜிஅர் பல்கலைக்கழகத்திற்கு தற்போது துணைவேந்தர் இல்லை. பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்தை பார்த்துக்கொள்ள குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தடையில்லா சான்று கோரி எந்த விண்ணப்பமும் தற்போது பல்கலைக்கழகத்தில் நிலுவையில் இல்லை என நிர்வாகக் குழு உறுப்பினரும் பேராசிரியருமான புஷ்பகலா பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் பேசுகையில், "கடந்த காலங்களில் வந்த தடையில்லா சான்று விண்ணப்பங்கள் தொடர்பான அனைத்து தகவல்களையும் அரசாங்கத்திடம் கொடுத்துவிட்டோம். அவர்கள் மேல்முறையீடு செய்ய இருக்கிறார்கள். அடுத்தகட்ட சட்டப்பூர்வ நடவடிக்கைகளை அரசாங்கம் தான் முடிவு செய்ய வேண்டும்." என்றார்.

கடந்த 6 - 8 மாதங்களில் பெறப்பட்ட அனைத்து விண்ணப்பங்களும் தடையில்லா சான்று வழங்க முடியாது என ஆட்சேபனை தெரிவித்து பதில் அளிக்கப்பட்டு விட்டதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.

"தற்போது வழக்குகள் நடைபெற்று வரும் விண்ணப்பங்கள் எல்லாம் நீண்ட காலம் முன்னர் பெறப்பட்டவை. கடந்த சில மாதங்களில் மருத்துவக் கல்லூரிகள் மட்டுமல்லாமல் செவிலியர் கல்லூரிகள் கூட தடையில்லா சான்று பெற விண்ணப்பித்திருந்தன. ஆனால் சமீபத்தில் பெறப்பட்ட அனைத்து விண்ணப்பங்களும் குறிக்கப்பட்ட 60 நாட்களுக்கு உள்ளாகவே பதிலளிக்கப்பட்டுவிட்டது. தற்போது பல்கலைக்கழகத்தில் எந்த விண்ணப்பமும் நிலுவையில் இல்லை," என்றார்.

இந்த நிலையில் சமீபத்தில் விண்ணப்பித்த தனியார் கல்லூரிகளுக்கு தடையில்லா சான்று நிராகரிக்கப்பட்டுள்ள சூழலில் அந்தக் கல்லூரிகளால் தற்போது நிகர்நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்துக்கு விண்ணப்பிக்க முடியுமா என்கிற கேள்வி எழுந்தது.

சார்பு பல்கலைக்கழகம் தடையில்லா சான்று வழங்க மறுத்தால் என்ன நடக்கும் என்பது பற்றி யூஜிசி விதிகளிலும் குறிப்பிடப்படவில்லை.

என்ஓசி மறுக்கப்பட்டாலும் தனியார் கல்லூரிகள் நீதிமன்றத்தை நாடுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது என்கிறார் குழந்தைசாமி.

தனியார் கல்லூரிகள் மட்டுமல்லாமல் தனியார் பல்கலைக்கழக விதிகளின் கீழ் வரும் கல்வி நிறுவனங்களும் மாநில அரசாங்கத்திடம் தடையில்லா சான்று பெறும் வகையில் விதிகளை திருத்த மத்திய அரசிடம் கோரிக்கை வைக்க இருப்பதாக சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு