ஆஸ்திரேலியாவிடம் தோல்வி: இந்தியாவின் அரையிறுதி கனவு தகர்ந்தது எப்படி?

ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு இந்தியா முன்னேற, கேப்டன் ஹர்மன்பிரீத் கவுரின் சிறப்பான ஆட்டமும் உதவவில்லை.

பட மூலாதாரம், PA

படக்குறிப்பு, ஆஸ்திரேலியா தனது குரூப் ஏ போட்டிகள் ஐந்திலும் வெற்றி பெற்று, 10 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறியது.
    • எழுதியவர், மனோஜ் சதுர்வேதி
    • பதவி, மூத்த விளையாட்டுச் செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரில் கேப்டன் ஹர்மன்பிரீத் சிறப்பாக ஆடியும் இந்திய அணியால் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேற முடியவில்லை.

இந்திய அணியை முறியடிப்பதில் ஆஸ்திரேலிய அணிக்கு எலிஸ் பெர்ரி முக்கியப் பங்கு வகித்தார். எலிஸ் பெர்ரி அதிரடியாக பேட்டிங் செய்தார். அவரது ஆட்டம் ஆஸ்திரேலிய அணியை ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ததுடன், அவருக்கு ஆட்ட நாயகி விருதையும் தேடித்தந்தது.

68 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய ஆஸ்திரேலியா, பின்னர் 19 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 170 ரன்கள் என்ற இலக்கை எட்டியது.

கடந்த ஆண்டு ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில், பெரிய ஸ்கோர் எடுத்த போதிலும் ஆஸ்திரேலியா தோல்வியடைந்திருந்தது. இந்த முறை, டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிராக தங்களது மிகப்பெரிய இலக்கை எட்டி, அந்தத் தோல்விக்கு பழிதீர்த்துக் கொண்டது ஆஸ்திரேலியா.

ஏ பிரிவில் ஆஸ்திரேலியா தனது 5 போட்டிகளிலும் வெற்றி பெற்று, 10 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறியது. இந்த பிரிவில் இருந்து அரையிறுதிக்கு முன்னேறிய இரண்டாவது அணி தென்னாப்பிரிக்கா ஆகும்.

சரியான நேரத்தில் ஜொலித்த எல்லிஸ் பெர்ரி

எல்லிஸ் பெர்ரி

பட மூலாதாரம், Dan Istitene/Getty Images

படக்குறிப்பு, எல்லிஸ் பெர்ரி 38 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலியா வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார்.

எலிஸ் பெர்ரி நீண்ட காலமாக ஆஸ்திரேலியாவுக்காக விளையாடி வருகிறார்.

இந்த உலகக் கோப்பைக்கு முன்பு வரை, டி20 உலகக் கோப்பையில் அவர் ஒரு அரைசதம் கூட அடித்ததில்லை. இந்த உலகக் கோப்பையில் அடுத்தடுத்து இரண்டு அரைசதங்கள் அடித்து அவர் தனது திறமையை நிரூபித்துள்ளார்.

ஜார்ஜியா வால், பெத் மூனி மற்றும் லிட்ச்ஃபீல்ட் ஆகியோரை தொடக்கத்திலேயே இழந்ததால், ஆஸ்திரேலியா நெருக்கடியில் இருப்பது போல் தோன்றியது.

இக்கட்டான சூழ்நிலையில், எலிஸ் பெர்ரியும் ஆஷ்லி கார்ட்னரும் இணைந்து சிறப்பான பார்ட்னர்ஷிப்பை கட்டமைத்து விக்கெட் வீழ்ச்சியை தடுத்து நிறுத்தினர்.

13-வது ஓவருக்குப் பறிகு ரன் ரேட்டை அதிகரிக்கும் முயற்சியை அவர்கள் தொடங்கினர். அடுத்த மூன்று ஓவர்களில் 40 ரன்கள் குவித்து, ஆட்டத்தின் போக்கை தங்களுக்கு சாதகமாக மாற்றினர்.

எலிஸ் பெர்ரி மற்றும் கார்ட்னர் ஜோடி நான்காவது விக்கெட்டுக்கு 100 ரன்கள் சேர்த்தது.

இந்தியாவுக்கு எதிரான சிறப்பான வெற்றி

எல்லிஸ் பெர்ரி

பட மூலாதாரம், Alex Davidson-ICC/ICC via Getty Images

படக்குறிப்பு, எல்லிஸ் பெர்ரி ஆட்டத்தின் சிறந்த வீராங்கனையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

"எங்களுக்கு ஒரு நல்ல நாள் அமைந்தது. இந்தியாவுக்கு எதிராக எப்போதுமே கடுமையான போட்டி இருக்கும், எனவே இந்த வெற்றியை மிகவும் சிறப்பானதாக உணர்கிறேன். இந்திய அணியின் இன்னிங்ஸைப் பார்த்த பிறகு, விக்கெட் நன்றாக இருந்தது என்பதை நாங்கள் அறிந்திருந்தோம். நாங்கள் ஒரு நல்ல பார்ட்னர்ஷிப்பை உருவாக்க வேண்டியிருந்தது. கார்ட்னரிடமிருந்து எனக்கு சிறந்த ஆதரவு கிடைத்தது.

ஒவ்வொரு ஓவரின் முதல் இரண்டு பந்துகளையும் குறிவைக்க திட்டமிட்டோம். நாங்கள் சீரான இடைவெளியில் பவுண்டரிகளை அடித்துக் கொண்டே இருந்தோம். இந்தத் தொடர் இதுவரை எங்களுக்கு நன்றாக அமைந்துள்ளது. அடுத்த இரண்டு போட்டிகளும் சிறப்பாக அமையும் என்றும், நாங்கள் வெற்றியுடன் வீடு திரும்புவோம் என்றும் நம்புகிறோம்"என்று ஆட்டநாயகி எலிஸ் பெர்ரி கூறினார்.

பெர்ரி மற்றும் கார்ட்னர் ஜோடி 59 பந்துகளில் சதம் அடித்தது. இந்த பார்ட்னர்ஷிப் ஆஸ்திரேலியாவுக்கு நெருக்கடியை குறைத்தது மட்டுமின்றி, ஆட்டத்தை அந்த அணியின் கட்டுப்பாட்டிற்குள்ளும் கொண்டு வந்தது.

ஜெமிமா தடுமாற்றம்

ஜெமிமா ரோட்ரிக்ஸ்

பட மூலாதாரம், Alex Davidson-ICC/ICC via Getty Images

படக்குறிப்பு, ஜெமிமா ரோட்ரிக்ஸ் 28 பந்துகளில் 34 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

ஜெமிமா ரோட்ரிக்ஸ் இந்தியாவுக்காக பல வெற்றிகரமான இன்னிங்ஸ்களை விளையாடியுள்ளார்.

ஆனால் நேற்று அவருக்குச் சாதகமான நாளாக அமையவில்லை. அவர் அதிரடியாக ரன் குவிக்க முயற்சி செய்தபோதிலும், அவரால் வேகமாக ரன் சேர்க்க முடியவில்லை. அதிர்ஷ்டம் கைகொடுத்ததால் அவரால் களத்தில் நிலைத்து நிற்க முடிந்தது.

ஆரம்பத்தில் ஒருமுறை நடுவர் எல்பிடபிள்யூ முறையில் அவுட் தந்தாலும், ரிவ்யூ செய்ததில் முடிவு அவருக்குச் சாதகமாக அமைந்தது. பின்னர், அவருக்கு ஒரு கேட்ச்சையும் எதிரணியினர் தவறவிட்டனர். ஆனாலும், அவரது ஆட்டம் ஆஸ்திரேலியாவுக்கு பெரிய அளவில் அச்சுறுத்தலாக அமையவில்லை.

18-வது ஓவர் முடிவில் ஜெமிமா 28 பந்துகளில் 34 ரன்கள் எடுத்திருந்தார். கேப்டன் ஹர்மன்பிரீத் அவரை திரும்ப அழைத்து, ரிச்சா கோஷை பேட்டிங் செய்ய அனுப்பினார். இந்த முடிவு மிகவும் தாமதமாக எடுக்கப்பட்டதால், இந்தியாவால் அதன் முழு பலனையும் பெற முடியாமல் போனது.

16 ஓவர்கள் முடிந்த உடனேயே ரிச்சாவை அனுப்பியிருந்தால் இந்திய அணி கூடுதல் பலன் பெற்றிருக்கக் கூடும்.

ஜெமிமா ஒரு அற்புதமான வீராங்கனை. ஆனால் இந்த வடிவிலான போட்டியில் அவரை மூன்றாவது வரிசையில் களமிறக்குவது சரியாகத் தோன்றவில்லை. இந்த இடத்தில் இன்னும் வேகமாக அதிரடியாக ஆடக்கூடிய ஒரு வீராங்கனையை களம் இறக்கியிருந்தால் அது சிறப்பாக இருந்திருக்கும்.

ஹர்மன்பிரீத்தின் சிறப்பான ஆட்டமும் உதவவில்லை

ஹர்மன்பிரீத் கவுர்

பட மூலாதாரம், PA

படக்குறிப்பு, ஹர்மன்பிரீத் கவுர் அதிரடியாக அரைசதம் அடித்தார்.

ஒவ்வொரு வீரரும் ஒரு குறிப்பிட்ட அணிக்கு எதிரான தங்களது சிறந்த செயல்பாடுகளுக்காக அறியப்படுகிறார்கள். விராட் கோலி பெரும்பாலும் பாகிஸ்தானுக்கு எதிராக தனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

அதேபோல், ஹர்மன்பிரீத் கவுர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டுள்ளார்.

2017 ஐசிசி உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அவர் ஆட்டமிழக்காமல் எடுத்த 171 ரன்கள் மறக்க முடியாதது.

அதேபோல், கடந்த ஆண்டு நடைபெற்ற ஐசிசி உலகக் கோப்பையின் அரையிறுதிப் போட்டியில் அவர் 88 பந்துகளில் 89 ரன்கள் எடுத்து, இந்தியாவை வெற்றியை நோக்கி அழைத்துச் செய்தார்.

ஜெமிமாவின் மெதுவான பேட்டிங் காரணமாக இந்தியா 150 அல்லது 155 ரன்களுக்குள் சுருங்கிவிடும் என்று தோன்றியபோது, கடைசி ஓவரில் ஹர்மன்பிரீத் தொடர்ந்து மூன்று சிக்ஸர்களை விளாசினார்.

அவரது பேட்டிங் இந்தியாவை 170 ரன்களுக்கு கொண்டு சென்றது.

இருப்பினும், இந்த முறை, 27 பந்துகளில் அவர் எடுத்த 56 ரன்கள் கொண்ட அதிரடி ஆட்டத்தால் இந்தியாவின் வெற்றியை உறுதி செய்ய முடியாமல் போனது.

பலவீனமான பந்துவீச்சு

இந்திய பந்துவீச்சாளர்களால் அவர்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

பட மூலாதாரம், PA

படக்குறிப்பு, ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலியா 3 விக்கெட் இழப்பிற்கு 68 ரன்கள் எடுத்திருந்தது,

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கிற்காக இந்த உலகக் கோப்பையில் வர்ணனை செய்து கொண்டிருந்த கிரண் மோர், போட்டிக்குப் பிறகு கூறுகையில், "பேட்ஸ்மேன்கள் ஒரு நல்ல ஸ்கோரை எடுத்திருந்தனர், ஆனால் நம்முடைய பந்துவீச்சாளர்களால் எதிரணியின் விக்கெட்டுகளை வீழ்த்தவும் முடியவில்லை, ரன் ரேட்டைக் கட்டுப்படுத்தவும் முடியவில்லை. இதற்கு ஒரு காரணம் அணியில் தொடர்ந்து செய்யப்படும் மாற்றங்கள் ஆகும். இது பந்துவீச்சாளர்களின் நம்பிக்கையை பாதிக்கிறது" என்றார்.

"இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் குறைந்த அளவில் விக்கெட்டுகளை வீழ்த்தியதும் அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. இந்தியா ஒரு சவாலான ஸ்கோரை எடுத்திருந்தது.

ஆனால் ஸ்மிருதி மந்தனாவின் 37 பந்துகளில் 38 ரன்கள் என்பது இந்த வடிவிலான போட்டிக்கு ஏற்ற பேட்டிங் அல்ல. ரன் சேர்க்கும் பொறுப்பை ஷஃபாலி வர்மா மீது மட்டுமே சுமத்தியது சரியாக இல்லை. இரண்டு பக்கமும் ரன்கள் எடுத்திருந்தால், இந்தியா இன்னும் 15 முதல் 20 ரன்கள் கூடுதலாக எடுத்திருக்கலாம். இந்த ரன்கள் ஆட்டத்தின் முடிவை மாற்றியிருக்கக் கூடும்" என்று கூறினார்.

தீப்தி அபார பந்துவீச்சு

தீப்தி ஷர்மா

பட மூலாதாரம், Sameera Peiris/Getty Images

படக்குறிப்பு, தீப்தி ஷர்மா மூன்று வடிவங்களிலும் சேர்த்து மொத்தம் 356 விக்கெட்டுகளைக் கைப்பற்றி, உலக சாதனை படைத்துள்ளார்.

தீப்தி ஷர்மா சிறப்பாக பந்து வீசினாலும் இந்தியாவை வெற்றி பெற செய்ய இயலவில்லை , ஆனால் அவர் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டினார்.

சர்வதேச கிரிக்கெட்டில் மூன்று வடிங்களிலும் சேர்த்து 356 விக்கெட்டுகளை வீழ்த்தி, இந்தியாவின் மிகவும் வெற்றிகரமான பந்துவீச்சாளர் என்ற சாதனையை அவர் படைத்தார்.

ஜுலன் கோஸ்வாமியின் 355 விக்கெட்டுகள் என்ற சாதனையை அவர் முறியடித்தார்.

தீப்தி ஷர்மா ஆறு டெஸ்ட் போட்டிகளில் 22 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவர் 124 ஒருநாள் போட்டிகளில் 166 விக்கெட்டுகளையும், 149 டி20 போட்டிகளில் 168 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

ஒரு உலகக் கோப்பைத் தொடரில் 200 ரன்கள் மற்றும் 20 விக்கெட்டுகளை எடுத்த ஒரே வீராங்கனை இவர்தான். கடந்த ஆண்டு நடைபெற்ற ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் அவர் இந்த சாதனையை நிகழ்த்தினார்.

சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் தீப்தி மற்றும் ஜூலனுக்கு அடுத்தபடியாக எலிஸ் பெர்ரி 336 விக்கெட்டுகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

அவரைத் தொடர்ந்து ஷ்ரைவர் ப்ரண்ட் 335 விக்கெட்டுகளுடனும், சோஃபி எக்லெஸ்டோன் 333 விக்கெட்டுகளுடனும், ஷப்னிம் இஸ்மாயில் 323 விக்கெட்டுகளுடனும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

தனது சாதனை முறியடிக்கப்பட்டது குறித்து, போட்டியின் போது வர்ணனை செய்து கொண்டிருந்த ஜூலன் கோஸ்வாமி கூறுகையில், "நான் மிகச் சிறு வயதிலிருந்தே தீப்தி விளையாடுவதைப் பார்த்து வருகிறேன்.அவர் எனது சாதனையை முறியடித்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்" என்றார்.

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு