You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஒருவனுக்கு ஒருத்தி என்பது எந்த அளவுக்கு உண்மை ? - 'ஆத்ம துணை' பற்றி அறிவியல் கூறும் விளக்கம்
- எழுதியவர், பல்லப் கோஷ்
- பதவி, அறிவியல் செய்தியாளர்
- வாசிக்கும் நேரம்: 8 நிமிடங்கள்
காதல் ஒன்றும் சீரற்றது இல்லை என்ற கருத்து வரலாறு நெடுக மக்களை எப்போதுமே ஈர்த்துள்ளது. பண்டைய கிரேக்கத்தில், மனிதர்கள் ஒரு காலத்தில் நான்கு கைகள், நான்கு கால்கள் மற்றும் இரண்டு முகங்களைக் கொண்ட உயிரினமாக இருந்ததாகவும், ஸ்யூஸ் நம்மை இரண்டாகப் பிரித்து, ஒரு பாதி மற்றொரு பாதியைத் தேடுவதற்கு விட்டுவிட்டார் எனவும் பிளாட்டோ கற்பனை செய்தார்.
அப்போதிருந்து, ஒரு பாதியான நாம் பூமியில் சுற்றித் திரிந்து, காணாமல் போன மற்றொரு பாதியைத் தேடி வருவதாகவும் கூறினார். இது நவீனகால ஆத்ம துணை கருத்தாக்கத்திற்கான கவித்துவத்தையும், எங்கோ யாரோ ஒருவர் நமக்கு முழுமையடைந்து விட்டதைப் போன்று உணர்வைக் கொடுப்பார் என்ற நம்பிக்கையையும் கொடுக்கும் ஒரு புராணக் கதை.
இடைக்காலத்தில், ஆர்தர் மன்னரைப் பற்றிய கவிதைகளும் கதைகளும் இதேபோன்ற உணர்வை "அரச காதல்" என்று விவரித்தன. இது லான்ஸ்லாட்டின் கினிவேர் மீதான காதல் போன்ற ஒரு வலுவான, பெரும்பாலும் ரகசியமான காதலை குறிக்கிறது. இந்தக் கதைகளில், தன்னால் அவளை நேசிப்பதாக ஒருபோதும் வெளிப்படையாகச் சொல்ல முடியாவிட்டாலும்கூட, ஒரு மாவீரர் தான் நேசித்த பெண்ணுக்காக தியாகங்களைச் செய்வதன் மூலம் தனது விசுவாசத்தையும் மதிப்பையும் வெளிப்படுத்துவார்.
மறுமலர்ச்சியின்போது, ஷேக்ஸ்பியர் போன்ற எழுத்தாளர்கள் "நட்சத்திர காதலர்கள்" என்று விவரித்தனர். இவர்கள் ஒருவரையொருவர் ஆழமாக நேசித்த தம்பதிகள், ஆனால் குடும்பப் பிரச்னைகள், துரதிர்ஷ்டம் அல்லது விதியால் பிரிந்தனர். பிரபஞ்சம் அவர்களை ஒன்றிணைத்தது போலவும், ஆனால் மகிழ்ச்சியான முடிவு அவர்களுக்குக் கிடைப்பதைத் தடுத்தது போலவும் இருந்தன.
சமீப காலங்களில், ஹாலிவுட் மற்றும் காதல் புதினங்கள் நமக்கு தேவதைத் தனமான காதல் கதைகளைக் காட்டுகின்றன.
இப்படியாகப் பல வடிவங்களில் சொல்லப்படும் ஒருவனுக்கு ஒருத்தி அல்லது ஆத்ம துணை என்று அழைக்கப்படும் காதல் உறவு பற்றி சமீபத்திய அறிவியல் என்ன சொல்கிறது? பிளாட்டோ கூறியதைப் போல நம்மை முழுமையாக உணர வைக்கும் ஒரு குறிப்பிட்ட சிறப்பு வாய்ந்த ஒருவர் உண்மையில் இருக்கிறாரா?
நமக்கான ஒருவர் மீது காதல் கொள்வது எப்படி
கேம்பிரிட்ஜில் உள்ள ஆங்கிலியா ரஸ்கின் பல்கலைக்கழகத்தின் சமூக உளவியல் பேராசிரியர் விரென் சுவாமி, காதல் பற்றிய சமகால ஐரோப்பிய புரிதலை இடைக்கால ஐரோப்பாவிலும், கேம்லாட், லான்ஸ்லாட், கினிவேர் மற்றும் கண்டம் முழுவதும் பரவிய வட்ட மேசை மாவீரர்களின் (knights of the round table) வீரம் பற்றிய கதைகளிலும் கண்டறிந்துள்ளார்.
"இந்தக் கதைகள்தான் முதலில், ஒருவர் ஒரேயொரு துணையைத் தேர்வு செய்ய வேண்டும், அந்தத் துணையுடன் வாழ்நாள் முழுவதும் வாழ வேண்டும் என்ற கருத்தை முன்வைத்தன" என்று கூறிய அவர், "அதற்கு முன் ஐரோப்பாவின் பெரும்பகுதியில், ஒருவர் பலரை நேசிக்கலாம் என்ற கருத்தாக்கமே நிலவியது. அது பெரும்பாலும் பாலியலுடன் தொடர்புபடுத்தப்படவில்லை," என்றும் விவரித்தார்.
காலப்போக்கில், தொழில்மயமாக்கல் மக்களின் பழக்கமான இணைப்புகளைத் துண்டிக்கும்போது, மக்கள் தங்கள் வேளாண் சமூகங்களில் இருந்து வேரோடு பிடுங்கப்படுவதால், தனிநபர்கள் "அந்நியப்படுத்தப்படுகிறார்கள்" என்று அவர் கூறுகிறார்.
"அவர்களைக் காப்பாற்ற, வாழ்க்கையின் துயரத்தில் இருந்து அவர்களைக் காப்பாற்ற, அவர்கள் மற்றொரு நபரைத் தேடத் தொடங்குகிறார்கள்." என்பது அவரது கூற்று.
இன்றைய டேட்டிங் செயலிகள் அத்தகைய கதையை ஒரு வழிமுறையாக மாற்றுகின்றன. இதை சுவாமி "உறவு-ஷாப்பிங்" என்று அழைக்கிறார். தங்களின் ஆத்ம துணையைத் தேடுவது, அதற்கு நேர்மாறாக மாறிவிடுகிறது: "பலருக்கு, அது உண்மையிலேயே ஆன்மா இல்லாத அனுபவம்" என்கிறார் அவர்.
"ஒருவர் ஒரு துணையைத் தேடுகிறார், டேட்டிங் செயலியில் டஜன் கணக்கானவர்களை பார்த்த பிறகு, ஒரு கட்டத்திற்கு மேல் தேடுவதையே நிறுத்தி விடுகிறீர்கள்" என்று அவர் கூறுகிறார்.
உங்களுக்கான ஒருவர்
யூட்டாவின் ப்ரோவோவை தளமாகக் கொண்ட அமெரிக்க பிரிகாம் யங் பல்கலைக்கழகத்தில் திருமணம் மற்றும் குடும்ப ஆய்வுகள் பேராசிரியர் ஜேசன் கேரோல், "தனக்கான ஒருவர்" கிடைப்பதன் மீதான ஏக்கம் குறித்து அனுதாபம் கொண்டவர்.
"நாம் பற்றுகள் அடிப்படையிலான உயிரினங்கள். நாம் அந்தப் பிணைப்பை விரும்புகிறோம்" என்கிறார் அவர். ஆனால், அவரது சொற்பொழிவுகளில், தனக்கான ஒருவர் என்பதன் மீதான விருப்பத்தை விட்டுவிடாமல், ஓர் ஆத்ம துணை என்ற யோசனையைக் கைவிட வேண்டுமென்று அவர் மாணவர்களுக்கு அறிவுறுத்துகிறார்.
இதுவொரு முரண்பாடாகத் தெரியலாம், ஆனால் கேரோலுக்கு, இது விதி மற்றும் பொருத்தத்திற்கு இடையிலான வேறுபாடு.
"ஆத்ம துணை என்பது வெறுமனே கண்டுபிடிக்கப்பட்டது. இது ஏற்கெனவே, அதாவது முன்கூட்டியே உருவாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் உண்மையில் தனக்கே உரிய ஒருவர் என்பது, ஒரு தம்பதி பல ஆண்டுகளாக ஒருவருக்கொருவர் ஏற்ற வகையில் தகவமைந்து கொள்வது, மன்னிப்பு கேட்பது, எப்போதாவது சண்டையிடுவது போன்ற செயல்பாடுகளின் மூலம் செதுக்கப்படும் ஓர் உறவாகும்" என்கிறார் கேரோல்.
ஆத்ம துணை என்ற பொறி
கேரோலினின் வாதம் பல வருட ஆராய்ச்சியை அடிப்படையாகக் கொண்டது. அதை அவர் தனது 'தி சோல்மேட் டிராப்' அறிக்கையில் தொகுத்து விளக்கினார். அதில், உறவுகள் பற்றிய இரண்டு பொதுவான கருத்துகளைப் பற்றி அவர் பேசுகிறார். அதில் முதலாவது, "விதி குறித்த நம்பிக்கைகள்" என்று அழைக்கப்படுகிறது. அதாவது சரியான உறவு எளிதாகவும் இயற்கையாகவும் உணரப்பட வேண்டும் என்ற கருத்து. மற்றொன்று "வளர்ச்சி நம்பிக்கைகள்" என்று அழைக்கப்படுகிறது. அதாவது தம்பதிகள் ஒன்றாக இணைந்து செயல்பட்டு காதல் உறவை வெற்றிகரமானதாக்க முயற்சி செய்ய வேண்டும் என்ற கருத்து.
கடந்த 1990களின் பிற்பகுதியிலும் 2000களின் முற்பகுதியிலும் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் சி. ரேமண்ட் நீ தலைமையில் நடத்தப்பட்ட பரவலாக மேற்கோள் காட்டப்பட்ட தொடர் ஆய்வுகளில், உறவுகள் "நிர்ணயிக்கப்பட்டவை" என்று நம்பியவர்கள் ஒரு மோதல் ஏற்பட்ட பிறகு தங்களது உறுதிப்பாட்டைச் சந்தேகிக்க அதிக வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். அதேவேளையில், உறவு வளர்ச்சியடைவது என்பது சார்ந்த பார்வைகளைக் கொண்டவர்கள், அவர்கள் வாக்குவாதங்களை மேற்கொண்ட நாட்களில்கூட, அதிக உறுதிப்பாட்டுடன் இருப்பார்கள்.
உறவு வளர்ச்சியடைவது என்பது சார்ந்த பார்வைகளைக் கொண்டவர்கள், இன்னும் சிறப்பு வாய்ந்த ஒன்றை விரும்புகிறார்கள், அதோடு கடினமான சூழ்நிலைகளை எதிர்பார்க்கிறார்கள் என்று கேரோல் வாதிடுகிறார்.
"தங்களது உறவை மேம்படுத்திக்கொள்ள, முன்னேற்றம் மற்றும் வளர்ச்சியைப் பெற என்ன செய்ய முடியும் என்று அவர்கள் கேட்டுக் கொள்கிறார்கள்," என்கிறார் அவர்.
அவரது பார்வையில், ஆத்ம துணை என்ற நம்பிக்கை ஒரு பொறி. அது காதல் அல்ல, காதல் ஒருபோதும் கடினமானதாக இருக்கக்கூடாது என்ற எதிர்பார்ப்பு மட்டுமே. ஒரு நீண்ட உறவின் மிகவும் "ஆத்மார்த்தமான" பகுதி, ஒரு சினிமா போன்றது அல்ல. அது "ஒருவருக்கொருவர் பலங்களில் மட்டுமின்றி, சவால்கள், பலவீனங்களில் உடன் நிற்பதாகும்" என்று அவர் விளக்குகிறார்.
"அது மிகவும் புனிதமான இடம். ஒருவர் தனது துணையை அந்த இடத்தில் இருக்க அனுமதித்தால் மட்டுமே அவருக்கு அந்த விஷயங்கள் தெரியும்," என்று கூறுகிறார் கேரோல்.
கேரோலை பொறுத்தவரை, காதல் என்பது விதியாகக் கருதப்படும்போது, காதலை உண்மையில் உயிர்ப்புடன் வைத்திருக்கும் ஆடம்பரமற்ற வேலைகளைச் செய்ய மக்கள் குறைவாகவே விரும்புவார்கள். ஓர் உறவு அதன் முதல் கடுமையான சிக்கலைச் சந்திக்கும்போது, ஆத்ம காதல் பொறி அதை மிகவும் கடினமானதாக ஆக்குகிறது என்கிறார் அவர்.
"முதல்முறையாக, ஏதாவது போராட்டம் ஏற்படும்போது, உடனடி எண்ணம், 'சரி, நான் உன்னை எனது ஆத்ம காதலன் என்று நினைத்தேன். ஆனால் ஒருவேளை நீ அப்படியில்லாமல் இருக்கலாம். ஏனெனில் ஆத்ம காதலன் இத்தகைய விஷயங்களை சமாளிக்க வேண்டியதில்லை' என்பதாக இருக்கும்," என்று அவர் கூறுகிறார்.
அவரது கூற்றுப்படி, "ஒரு காதல் உறவு நீண்டகாலத்திற்குச் செல்லப் போகிறதெனில், அது ஒருபோதும் இப்படியான கீழ்நோக்கிய ஓட்டமாக இருக்கப் போவதில்லை."
காதலுக்கான தீப்பொறியா அல்லது அதிர்ச்சியா?
லண்டனை சேர்ந்த காதல் பயிற்சியாளரான விக்கி பாவிட், பெரும்பாலும் தங்கள் ஆத்ம துணையைக் கண்டுபிடித்துவிட்டதாக நினைப்பவர்களுக்கு உதவுகிறார். ஆனால், தேவதை கதை போன்ற உணர்ச்சிகளைக் கையாளுதல், மந்தநிலை மற்றும் நிலையான பதற்ற உணர்வோடு வந்த காதல் என்பனவற்றைக் கண்டறிய மட்டுமே அவர் உதவுகிறார்.
"நிறைய கெமிஸ்ட்ரியும் தீப்பொறியும் இருக்கும்போது, அது சில நேரங்களில் பழைய காயங்களைப் போன்ற பழைய ஆரோக்கியமற்ற விஷயங்களை வெளிப்படுத்துவதைப் பற்றியதாக இருக்கலாம் என்று நான் கருதுகிறேன்" என்று அவர் கூறுகிறார்.
சில நேரங்களில் அன்பாக, சில நேரங்களில் பட்டும்படாமல் என யாராவது எதிர்பாராத விதமாக நடந்துகொண்டால், அது உங்களை உற்சாகமாகவும், அவர்களை மீண்டும் பார்க்கத் தூண்டும் வகையிலும் உணர வைக்கும். ஆனால் உண்மையில், அவர்களின் கலவையான நடத்தை உங்களுக்கு மன அழுத்தத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தக்கூடும். இது அவர்களின் கவனத்தை இன்னும் அதிகமாக விரும்ப வைக்கிறது.
விதி என நாம் நினைப்பது, நம்முடைய நரம்பு மண்டலத்தில் இருந்து வரும் ஓர் இழுப்பாக இருக்கலாம் என்கிறார் பாவிட். அதாவது, முன்பு நம்மைக் காயப்படுத்திய ஒன்றை அடையாளம் கண்டு அதை சரிசெய்ய எடுக்கும் ஒரு முயற்சி. இந்த முறையை சிகிச்சையாளர்கள் ஓர் அதிர்ச்சிப் பிணைப்பு என்று அழைக்கின்றனர்.
இந்தப் பிணைப்பு காதல் போலத் தோன்றலாம். அவர்கள் சரியான பொருத்தம் என்பதால் இல்லை, மாறாக அவர்கள் பரிச்சயமானவர்கள் என்பதால் மக்கள் ஆரோக்கியமற்ற உறவுக்குள் காந்தம் போல் ஈர்க்கப்படுகிறார்கள்.
கனேடிய உளவியலாளர்கள் டொனால்ட் டட்டன், சூசன் பெயின்டர் ஆகியோரால் அடிக்கடி மேற்கோள் காட்டப்படும் ஓர் ஆய்வு, கடந்த 1993ஆம் ஆண்டு பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக் கழகத்தில் இருந்தபோது வெளியிடப்பட்டது. அதில் துஷ்பிரயோகம் செய்யும் துணையை விட்டு வெளியேறிய பிறகான சூழ்நிலையில் இருந்த 75 பெண்களைப் பின்தொடர்ந்தனர்.
பெண்கள் தங்கள் முன்னாள் துணைவர்களிடம் எவ்வளவு வலுவாகப் பற்று கொண்டுள்ளனர் என்பதை ஆய்வுக்குழு அளவிட்டு, அவர்களின் உறவுகள் எப்படி இருந்தன என்பதுடன் ஒப்பிட்டது.
தொடர்ந்து துஷ்பிரயோகம் செய்யப்பட்ட பெண்களில் அல்லாமல், மாறாக கவர்ச்சிக்கும் கொடுமைக்கும் இடையே மாறி மாறி துணையை மாற்றிய பெண்களில் வலுவான பிணைப்புகள் இருப்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.
ஆபத்து மற்றும் பாசத்தின் கலவையானது ஆரோக்கியமற்றது என்பதால் அல்ல, மாறாக அவர்களுக்குப் புறநிலைரீதியாக மோசமான உறவுகளை நோக்கி மக்கள் எவ்வாறு காந்தம் போல் ஈர்க்கப்படுகிறார்கள் என்பதை விளக்க இந்த அதிர்ச்சிப் பிணைப்பு உதவுவதாக டட்டனும் பெயின்டரும் வாதிடுகின்றனர்.
பயிற்சியில் பாவிட் வெளிப்படுத்த முயலும் வேறுபாடு இதுதான்: "நீங்கள் உணரும் கெமிஸ்ட்ரி இந்த நபர் என்னுடன் இணக்கமாக இருக்கிறாரா அல்லது அதுவொரு பழக்கமான பதற்ற உணர்வா என்பதைக் கண்டறிவதைப் பற்றியது.
என் மொழியில் கூறுவதெனில், நான் ஒருபோதும் ஆத்ம துணையைப் பற்றிப் பேசுவதில்லை. அனைவருக்கும் ஒரு நபர் இருப்பதாக நான் நம்பவில்லை. ஆனால், நாம் ஒருவருக்கு 'உரியவராக' மாறுகிறோம் என்பதை நம்புகிறேன்."
உண்மையான கெமிஸ்ட்ரி
ஆத்ம துணைவர்கள் இல்லாமல் இருக்கலாம் எனச் சொல்வது காதலே இல்லையெனச் சொல்வதைப் போலத் தோன்றினாலும், ஒருவர் மீதான ஈர்ப்பு பற்றிய அறிவியலும் இதேபோன்ற ஒன்றைத்தான் கூறுகிறது.
தம்பதிகள் ஒருவரைப் பற்றி ஒருவர் எப்படி உணர்கிறார்கள் என்பதை கருத்தடை மாத்திரைகள் சிறிதளவு மாற்றக்கூடும். இந்த மாத்திரைகள் ஒரு பெண்ணின் இயற்கையான ஹார்மோன் சுழற்சியை மாற்றுகின்றன என்று ஆய்வுகள் காட்டுகின்றன. இது மாதவிடாய் சுழற்சியின்போது ஒருவரின் மீதான ஈர்ப்பு எவ்வாறு மாறுகிறது என்பதைப் பாதிக்கலாம். இதன் காரணமாக, மாத்திரைகள் ஒரு பெண் முதலில் யாரை ஈர்க்கிறார் என்பதைக்கூட பாதிக்கக்கூடும்.
மொத்தம் 365 தம்பதிகளை உள்ளடக்கி ஒரு பெரிய ஆய்வு நடத்தப்பட்டது. அதில் பெண்கள் தங்கள் துணையைத் தேர்வு செய்யும்போது இருந்ததைப் போலவே, கருத்தடை நிலைமையில் இருந்தபோதும் அதிக பாலியல் திருப்தியை அடைந்ததாகக் கண்டறிந்துள்ளது. கருத்தடை மாத்திரையைத் தொடங்குவது அல்லது நிறுத்துவது ஒரு பெண் தனது துணையைப் பற்றி எப்படி உணர்கிறார் என்பதை மாற்றும் என்பதை இது குறிக்கிறது. இந்த மாற்றங்கள் மிகச் சிறியவை, ஆனால் சில தம்பதிகள் காலப்போக்கில் தங்கள் கெமிஸ்ட்ரி மாறிவிட்டதாக உணர்வதற்கான காரணத்தை விளக்குவதற்கு இவை உதவக்கூடும்.
ஹார்மோன்களும் மாத்திரைகளும் ஒருவரை "ஒருவருக்கு உரியவராக" உணர்வதை மாற்ற முடிந்தால், ஒருவனுக்கு ஒருத்தி என்று கூறப்படும் முன்தீர்மானிக்கப்பட்ட ஜோடிப் பொருத்தம் இருப்பதாக வாதிடுவது கடினமாகிறது.
ஒரே ஒருவர் இல்லை
உளவியல் மற்றும் உயிரியல் ரீதியாக "ஒருவருக்கு உரியவர்" பற்றிச் சிந்திக்க ஒரு வழியை வழங்குகின்றன. ஆனால், கணிதம் வேறொன்றை முன்வைக்கிறது.
டென்னஸி, நேஷ்வில்லில் உள்ள வாண்டர்பில்ட் பல்கலைக்கழகத்தின் பொருளாதார நிபுணரான முனைவர் கிரெக் லியோ, ஒரு இணக்கத்தன்மை வழிமுறையைக் கொண்டு வந்துள்ளார். ஒருவரிடம் ஒரே ஒரு "உரியவர்" இருப்பது மட்டுமல்லாமல், ஒருவரிடம் நிறைய "உரியவர்கள்" இருப்பதையும் இது கண்டறிந்துள்ளது.
பப்ளிக் எகனாமிக் தியரி இதழிலுள்ள அவரது மேட்சிங் சோல்மேட்ஸ் ஆய்வறிக்கையில், அனைவரும் கணினி உருவகப்படுத்தப்பட்ட டேட்டிங் குழுவில் உள்ளனர்.
அங்கு ஆயிரக்கணக்கான டிஜிட்டல் முறையில் உருவாக்கப்பட்ட டேட்டர்கள் ஒருவருக்கொருவர் தரவரிசைப்படுத்துகிறார்கள். அவரது வழிமுறை "முதல்-வரிசை ஆத்ம காதலர்களை" தேர்வு செய்கிறது. அதாவது, ஒரு நிலையான பொருத்தத்தில் ஒருவருக்கொருவர் தேர்வு செய்யப்படும் ஜோடிகள். பின்னர் அவர்களை நீக்கிவிட்டு, மீதமுள்ளவர்களை வைத்து மீண்டும் இயக்குகிறது. அதை வைத்து இரண்டாம்-வரிசை ஆத்ம காதலர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். அடுத்தது மேலும் பல...
அவரது உருவகப்படுத்தல்களில், ஒருவர் தமது பரஸ்பர முதல் தேர்வுகளையே தனக்கு உரியவராகக் கொண்டிருப்பது மிகவும் அரிதாக இருந்தது. ஆனால், பலருக்கும் இரண்டாவது அல்லது மூன்றாவது தேர்வுகள் பொருத்தமாக இருந்தன.
இதில் எண்களை மட்டுமே நம்புவதாகத் தெரியலாம். ஆனால் காதல் வழிமுறை 'ஒருவருக்கு உரியவர்' என்பது மட்டுமே இல்லை, பல சாத்தியமான துணைகள் இருப்பதாக நமக்கு எடுத்துக் காட்டுகிறது.
இது எண்களை மட்டுமே நம்புவதாக இருக்கலாம், ஆனால் காதல் வழிமுறை தி ஒன் மட்டுமல்ல, பல சாத்தியமான கூட்டாளர்கள் இருப்பதாக நமக்குச் சொல்கிறது.
சிறு விஷயங்களை இணைந்து உருவாக்க வேண்டும்
சரி, ஒரு தம்பதி தங்களது காதல் உறவில், ஒருவருக்கு ஒருவர் உரியவராக மாறிக்கொள்வது எப்படி?
தி ஓபன் பல்கலைக்கழகத்தின் சமூகவியல் மற்றும் நெருக்கம் தொடர்பான பேராசிரியரான ஜாக்கி கேப், 2015இல் சமூகவியல் இதழில் வெளியிட்ட தனது நீடித்த காதல் பிராஜக்ட் என்ற ஆய்வில் இதை மதிப்பிட்டார்.
இது சுமார் 5,000 பேரை ஆய்வு செய்து, பின்னர் 50 தம்பதிகளை தடயவியல், சில நேரங்களில் ஊடுருவும் விவரங்களுக்காகப் பின்தொடர்ந்து, புள்ளிவிவரங்களைச் சேகரித்து, நேர்காணல்கள் மற்றும் வீட்டில் நடந்தது என்ன என்பதற்கான "உணர்ச்சி வரைபடங்களை" பதிவு செய்து இணைத்தது.
மக்கள் தாங்கள் மகிழ்ச்சியடையக் காரணமாக இருந்தது எது என்று அவர் கேட்டபோது, அதற்குக் கிடைத்த பதில் நாடகத்தனமான காதல் வெளிப்பாடுகளோ, சுற்றுலாப் பயணங்களோ இல்லை.
"ஆச்சரியம் தரும் பரிசுகள், சிந்தனைமிக்க சைகைகள், படுக்கையில் இருந்தபடியே தேநீர் கிடைப்பது, விருந்தின்போது தனிப்பட்ட முறையில் ரகசியமாகப் புன்னகையைப் பகிர்ந்துகொள்வது" போன்ற சிறு விஷயங்களே அதிக மகிழ்ச்சியைக் கொடுத்ததாக அவருக்குப் பதில்கள் வந்துள்ளன.
பிரமாண்டமான காதல் சைகைகளைவிட, இந்த "தினசரி கவனம் மிக்க செயல்பாடுகள்" மிகவும் சக்திவாய்ந்த ஒன்றாக, உறவை பலப்படுத்துவதாக மாறியது.
தனது கணக்கெடுப்பில், 22% தாய்மார்களும், 20% குழந்தை இல்லாத பெண்களும், இரவில் பிரமாண்டமாக வெளியே செல்வது, விலையுயர்ந்த பரிசுகள் ஆகியவற்றைவிட சிறிய சைகைகளையே தங்களை மதிப்புமிக்க விஷயமாக உணர வைத்த இரண்டு விஷயங்களில் ஒன்றாகத் தேர்வு செய்தனர்.
தரவுகளின்படி, உறவு திருப்தி என்பது முதன்மையாகப் பணம் அல்லது காதல் பற்றியது இல்லை. அது "நெருக்கமான தம்பதி" மற்றும் அன்றாட வாழ்க்கையில் அதன் வெளிப்பாடு பற்றியது.
இந்த ஆய்வுக்காக அவர்களுக்கு வழங்கப்பட்ட ஓர் இளம் தம்பதியின் நாட்குறிப்பில், சுமைரா தனது துணை வீட்டிற்கு வருவது, தான் சமைத்த இரவு உணவு, ஹால்வேயில் கட்டியணைப்பது, இருவரும் ஒன்றாக மேசையில் சாப்பிடுவது ஆகியவற்றை விவரிக்கிறார்.
"இதுவே சரியானது. நாமும் உணவும் மட்டும், எனக்கு வேறு என்ன வேண்டும்?" என்று அவர் தனது ஆராய்ச்சி நாட்குறிப்பில் எழுதுகிறார்.
இது ஒரு அழகான அன்றாடக் கதை போல வாசிக்கப்படுகிறது. இருப்பினும், இந்த இனிமையின் ஊடாக பணக் கவலைகள், குடும்பக் கடமைகள், தம்பதியினர் ஒன்றாக நிர்வகிக்கக் கற்றுக் கொண்டிருக்கும் மனச்சோர்வின் பாதிப்புகள் ஆகியவை பின்னிப் பிணைந்துள்ளன என்று கேப் சுட்டிக்காட்டுகிறார்.
"இதிலுள்ள ஆத்ம துணை என்ற உணர்வு வாழ்க்கைக்கு மேலே மிதப்பதில்லை. அது தம்பதி அந்த அழுத்தங்களைச் சந்திக்கும் விதத்தால், வாழும் வாழ்க்கையால் அங்குலம் அங்குலமாக உருவாக்கப்படுகிறது," என்று அவர் விவரித்தார்.
அறிவியல் காதலை பறிப்பதில்லை
அறிவியல் காதலை பறிப்பதில்லை, மாறாக, நல்ல மற்றும் கெட்ட காலங்களில் உறவுகள் வளர்ச்சி அடைவதற்கு உதவும் என்கிறார் கேரோல்.
உறவு, இருவரின் முயற்சியால் கட்டமைக்கப்பட வேண்டும் என்பதை நாம் புரிந்துகொண்டால், சிறப்பான, தனித்துவமான உறவை விரும்புவதில் தவறேதுமில்லை என்கிறார் அவர்.
சரியான நபர் இருக்கிறார் என்று நம்புவது நல்லது, உதவிகரமாகவும் உள்ளது என்கிறார் பாவிட். ஆனால், பல வேறுபட்ட மக்களுடன் நாம் வலுவான, மகிழ்ச்சியான உறவைக் கொண்டிருக்க முடியும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். அதோடு, யாரையும் சரியான நபராக இருக்க வேண்டுமென்று நாம் எதிர்பார்க்கக் கூடாது.
ஆத்ம துணை என்பதைப் பொறுத்தவரை, அறிவியல் அதற்கு முரண்பாடான ஒன்றைக் காட்டுகிறது. தங்கள் உறவு உண்மையிலேயே, "ஒருவருக்கு ஒருவர் உரியவர்" என்ற வகையிலானது என நினைப்பவர்கள் பெரும்பாலும் விதிக்காகக் காத்திருப்பதை நிறுத்தியவர்கள். அதற்குப் பதிலாக, அவர்கள் தங்களுக்கு முன்னுள்ள முழுமையற்ற நபரைத் தேர்வு செய்து ஒன்றாக வாழ்க்கையை உருவாக்க முடிவு செய்தனர்.
கூடுதல் தகவல்கள்: ஃப்ளோரன்ஸ் ஃப்ரீமேன்
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு