காணொளி: பஞ்சாபில் சிட்டுக்குருவிகளின் புகலிடமாக திகழும் வீடு - அவற்றை குழந்தையாக பாவிக்கும் பெண்
பஞ்சாப் மாநிலம் மோகாவில் உள்ள நிதாவாலா கிராமத்தை சேர்ந்த ஹர்ப்ரீத் கௌரின் வீடு, சிட்டுக்குருவிகளின் புகலிடமாக விளங்குகிறது. சிட்டுக்குருவிகள் அம்மாநிலத்தில் வேகமாக மறைந்துவரும் பறவைகளாக உள்ளன.
தன்னுடைய வீடு மற்றும் கிராமத்தில் நூற்றுக்கணக்கான சிட்டுக்குருவிகள் தற்போது வாழ்வதாக ஹர்ப்ரீத் கூறுகிறார். அந்த சிட்டுக்குருவிகளை தாமே கவனித்துக்கொள்கிறார் ஹர்ப்ரீத்.
அந்த சிட்டுக்குருவிகளை அழைக்க தனித்துவமான முறை ஒன்றையும் அவர் கையாள்கிறார்.
இந்த பறவைகளை ஹர்ப்ரீத் தன் மகள்களாக பாவிக்கிறார்.
உடல்நிலை சரியில்லாதபோது, இந்த பறவைகள் அவருக்கு மனரீதியான பலத்தை வழங்கி, நேர்மறையான எண்ணத்துடன் இருக்க உதவுவதாக கூறுகிறார்.
"என் வீட்டில் குறைந்தது 175 பெட்டிகள் உள்ளன. இந்த பெட்டிகளில் சுமார் 200-250 சிட்டுக்குருவிகள் வாழ்கின்றன. கிராமத்தில் உள்ள பல சிட்டுக்குருவிகளும் இங்கு விளையாடுவதற்காகவும் உணவுக்காகவும் வருகின்றன. காலையில் முதல் வேலையாக நான் செய்வது, பறவைகளுக்கு சுத்தமான நீர் கிடைக்க வேண்டும் என்பதுதான். களிமண் பானைகளை கழுவிய பிறகு, அவற்றில் குளிர்ந்த நீரை நிரப்பி பறவைகளுக்கு வைப்பேன். கோடை காலத்தில் தினை மற்றும் பாசுமதி அரிசியையும் குளிர்காலத்தில் கோதுமை மற்றும் கம்பு தானியங்களையும் வழங்குவேன். தானியங்களை வீட்டில் இப்படி பரப்பிவிடுவேன்." என்று அவர் கூறுகிறார்.
மத்திய சுற்றுச்சூழல், காடுகள் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் 2025ம் ஆண்டு அறிக்கையின்படி, இந்தியாவில் பறவைகளின் எண்ணிக்கை பல்வேறு காரணங்களால் ஆபத்தான அளவில் குறைந்துள்ளது.
வேகமான நகரமயமாக்கல், நவீன கட்டடங்களில் கூடு கட்டுவதற்கான இடங்களுக்கு பற்றாக்குறை, பூச்சிகளின் எண்ணிக்கை குறைவது மற்றும் விவசாயத்தில் பூச்சிக்கொல்லிகளின் பரவலான பயன்பாடு ஆகியவை பறவைகளுக்கான உணவு ஆதாரங்கள் மற்றும் வாழ்விடங்களை குறிப்பிடத்தக்க விதத்தில் பாதித்துள்ளன.
பறவைகளுக்கு உணவு மற்றும் சுத்தமான நீரை வழங்குவது அவற்றின் நலன் மற்றும் வாழ்வுக்கு முக்கியமானது என நம்புகிறார் ஹர்ப்ரீத்.
செய்தியாளர்: நவ்ஜோத் கவுர்
ஒளிப்பதிவு & படத்தொகுப்பு: மயங்க் மோங்கியா
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



