நேரலை, தமிழ்த்தாய் வாழ்த்து: பதவியேற்ற முதல் நாளே இந்திய கம்யூ. கேள்வி

தமிழ்நாடு முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் இன்று பதவியேற்றார். இதுகுறித்த சமீபத்திய தகவல்கள், புகைப்படங்கள், காணொளிகள், செய்தியாளர்களின் பகுப்பாய்வுகளை இந்த பக்கத்தில் பார்க்கலாம்.

முக்கிய சாராம்சம்

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. திருச்சி கிழக்கு தொகுதி - விஜய் ராஜிநாமா

    விஜய், திருச்சி கிழக்கு

    பட மூலாதாரம், TNDIPR

    படக்குறிப்பு, திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் ராஜிநாமா செய்தார்.

    தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்றுள்ள விஜய், திருச்சி கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

    சட்டப்பேரவைத் தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்ட விஜய் இரண்டிலும் வென்றார்.

    சட்டப்படி, நாடாளுமன்றம் அல்லது சட்டப்பேரவையில் ஒருவர் இரண்டு தொகுதியை பிரதிநிதித்துவம் செய்ய முடியாது. அதன் அடிப்படையில் இரு தொகுதிககளில் வெற்றி பெற்றவர்கள் ஒரு தொகுதியை ராஜிநாமா செய்வது அவசியம்.

    பதவியேற்பு நிகழ்ச்சி இன்று முடிந்துள்ள நிலையில் திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை விஜய் ராஜிநாமா செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கான கடிதத்தை அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன் மற்றும் வெங்கடரமணன் ஆகியோர் சட்டப்பேரவை முதன்மைச் செயலாளர் சீனிவாசனைச் சந்தித்து நேரில் வழங்கினார்கள். ஆகவே, பெரம்பூர் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராக மட்டுமே விஜய் தொடர்வார்.

    தேர்தல் ஆணையம் திருச்சி கிழக்குத் தொகுதி காலியானதாக முறைப்படி அறிவித்து 6 மாதங்களுக்குள் இடைத்தேர்தலை நடத்தும்.

  2. 500 யூனிட்டுக்கு மேல் 100 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் தொடரும் - தமிழ்நாடு அரசு

    விஜய், தமிழ்நாடு, மின்சாரம்

    பட மூலாதாரம், TNDIPR

    தமிழ்நாடு முதலமைச்சராக விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து மூன்று முக்கியமான கோப்புகளில் கையெழுத்திட்டார். 500 யூனிட் வரை மின்சார பயன்பாடு கொண்ட வீடுகளுக்கு 200 யூனிட் வரை கட்டணம் கிடையாது என்பது அவற்றில் ஒன்று.

    இந்தச் சூழலில் 500 யூனிட்டுக்கு மேல் 100 யூனிட் இலவசம் என்ற சலுகை தொடருமா என்பது போன்ற கேள்விகள் சமூக ஊடகங்களில் முன்வைக்கப்பட்டன.

    தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணை அதற்கு பதிலளிக்கும் வகையில் உள்ளது. அதன்படி, 500 யூனிட்டுக்கு மேல் மின்சார பயன்பாடு கொண்ட வீடுகளுக்கு ஏற்கெனவே உள்ள 100 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் தொடரும். இந்தத் திட்டம் இன்று (மே 10) முதலே அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தத் திட்டத்திற்கு கூடுதலாக ரூ.1,730 கோடி செலவாகும் என்றும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  3. முதல்வராக விஜய்க்கு உடனடியாக இருக்கும் சவால்கள் என்ன? - பத்திரிகையாளர் சித்தார்த் பிரபாகரன் பதில்

    முதலமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவை இன்று பதவியேற்றுள்ள நிலையில் அவர் முன் உள்ள சவால்கள் பற்றி பத்திரிகையாளர் சித்தார்த் பிரபாகரன் பேசியுள்ளார்.

    காணொளிக் குறிப்பு, முதல்வராக விஜய்க்கு உடனடியாக இருக்கும் சவால்கள் என்ன? - சித்தார்த் பிரபாகரன் பதில்
  4. தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: பதவியேற்ற முதல் நாளே இந்திய கம்யூனிஸ்ட் கேள்வி

    தமிழ்நாடு, விஜய், வந்தே மாதரம்,

    பட மூலாதாரம், TNDIPR

    படக்குறிப்பு, பதிவியேற்பு நிகழ்ச்சியில் வந்தேச மாதரம் மற்றும் தேசிய கீதத்தை தொடர்ந்து மூன்றாவது தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டிருந்தது.

    தமிழ்நாடு முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் பதவியேற்ற விழாவில் வந்தேச மாதரம் மற்றும் தேசிய கீதத்தை தொடர்ந்து மூன்றாவது தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டிருந்தது.

    இந்தச் சூழலில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலிடம் பெறுவதை தமிழக வெற்றிக் கழகம் உறுதி செய்ய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் வீரபாண்டியன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாம் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ள அந்த அறிக்கையில், "ஆளுநர் மாளிகை உத்தரவுப்படி, தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்த பதவி ஏற்பு விழா நிகழ்ச்சி நிரலில் 'வந்தே மாதரம்' பாடலுக்கு முதலிடம் வழங்கி, தமிழை மூன்றாம் நிலைக்குத் தள்ளியது மரபு மீறிய செயலாகும்." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் அந்த அறிக்கையில், "வந்தேமாதரம், நாட்டுப் பண் முதல் இரு நிலைகளுக்கு உயர்த்தப்பட்டிருக்கிறது. இது தமிழ்நாடு அரசு இதுவரை அரசு விழாக்களில் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், நிறைவில் தேசிய கீதமும் பாடுவது, நாட்டின் விடுதலைக்கு பிறகு இதுவரை கடைப்பிடித்து வரும் மரபாகும்." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    "வந்தேமாதரம்" ஒரு குறிப்பிட்ட கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டதும் ஒரு மதச்சார்புடையதுமான அப்பாடல் என்பதால் தேசிய கீதமாக இருக்க முடியாது என விடுதலை இயக்கக் காலத்திலேயே தீர்மானிக்கப்பட்டுள்ளது." என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த தவறுக்கு காரணமானவர்கள் யார் என்பதை தமிழ்நாடு அரசு பொதுமக்களுக்கு விளக்க வேண்டும் என சிபிஐ கேட்டுக் கொண்டுள்ளது.

    "தமிழக வெற்றிக் கழகம் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் பெறுவதை உறுதி செய்ய வேண்டும். இந்தத் தவறு தொடருவதை அனுமதிக்கக் கூடாது. சட்டப் பேரவைக் கூட்டத்திலும், அனைத்து அரசு நிகழ்வுகள் விழாக்களிலும் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதையும், நிறைவாக நாட்டுப் பண் இசைப்பதையும் உறுதி செய்ய வேண்டும்."

  5. பரந்தூர் திட்டத்தை எதிர்த்த விஜயிடம் ஏகனாபுரம் மக்கள் எதிர்பார்ப்பது என்ன?

    பரந்தூரில் பேசிய விஜய்
    படக்குறிப்பு, பரந்தூரில் பேசிய விஜய்

    பரந்தூர் விமான நிலையத் திட்டம் வேறு இடத்துக்கு மாற்றப்படும் என, அப்பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட ஏகனாபுரம் கிராமத்தை சேர்ந்த இளங்கோ என்பவர் தெரிவித்துள்ளார்.

    பிபிசி தமிழிடம் பேசிய இளங்கோ, “இந்த திட்டம் நீர்நிலைகளில் அமைக்கப்படுகின்றது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்படுவர். ஏகனாபுரம் சுற்றுவட்டார கிராமங்களில் இதற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. விஜய் முதன்முதலில் இங்கு வந்து பேசினார். இப்போது முதலமைச்சர் ஆகியுள்ளார். எனவே, இந்த திட்டம் வேறு இடத்துக்கு மாற்றப்படும் என முழுமையாக நம்புகிறோம். இத்திட்டத்தை நீர்நிலைகள் பாதிக்கப்படாத, மக்கள் பாதிப்பில்லாத வேறு இடத்துக்கு மாற்றப்பட வேண்டும்” என அவர் வலியுறுத்தினார்.

    விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு 2024ம் ஆண்டு, அக்டோபர் 27ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற்றபோது, பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை கைவிட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து, கடந்தாண்டு ஜனவரி மாதம் பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை சந்தித்துப் பேசினார்.

    மக்கள் மத்தியில் பேசிய விஜய், "என்னுடைய கள அரசியல் பயணம், உங்களின் ஆசீர்வாதத்தோடு இங்கிருந்துதான் தொடங்குகிறது. தவெக-வின் முதல் மாநில மாநாட்டில் கட்சியின் கொள்கைகளை எல்லாம் எடுத்துக் கூறினேன். அதில் ஒன்றுதான் இயற்கை வளப்பாதுகாப்பு." என்றார்.

    "நான் வளர்ச்சிக்கு எதிரானவன் எல்லாம் கிடையாது. விமான நிலையமே வரக்கூடாது என்றெல்லாம் நான் சொல்லவில்லை. இந்த இடத்தில் வரக்கூடாது என்றுதான் கூறுகிறேன். இதை நான் சொல்லவில்லை என்றால், நான் வளர்ச்சிக்கு எதிரானவன் என்று கூறிவிடுவார்கள்." என்று கூறியிருந்தார்.

    “வளர்ச்சி தான் மக்களின் முன்னேற்றம். ஆனால் வளர்ச்சி என்ற பெயரில் நடக்கும் அழிவு மக்களை ரொம்பவே பாதிக்கும். நானும், தவெக-வினரும், சட்டத்துக்குட்பட்டு எல்லா வழிகளிலும் உங்களுடன் உறுதியாக நிற்போம்" என்று மக்கள் மத்தியில் பேசியிருந்தார் விஜய்.

    அதே கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியனும் இத்திட்டம் வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என நம்பிக்கை தெரிவித்தார்.

  6. விஜய் vs ஸ்டாலின்: நிதிநிலைமை குறித்து கூறியது என்ன?

    விஜய், மு.க.ஸ்டாலின்
  7. தற்காலிக சபாநாயகராக சோழவந்தான் கருப்பையா நியமனம்

    தற்காலிக சபாநாயகராக சோழவந்தான் கருப்பையா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் சோழவந்தான் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்றவராவார்.

    கருப்பையா அதிமுக எம்எல்ஏவாக ஏற்கனவே பதவி வகித்துள்ளார்.

    இவர் நாளை (மே 11) புதிய எம்எல்ஏக்களுக்கு பதவிப் பிரமாணம் செய்துவைப்பார்.

  8. முதலமைச்சரின் தனி செயலாளர்கள் நியமனம்

    செந்தில்குமார் ஐஏஎஸ்
    படக்குறிப்பு, செந்தில்குமார் ஐஏஎஸ்
    லட்சுமி பிரியா ஐஏஎஸ்
    படக்குறிப்பு, லட்சுமி பிரியா ஐஏஎஸ்

    செந்தில்குமார் ஐஏஎஸ், லட்சுமி பிரியா ஐஏஎஸ் ஆகியோர் முதலமைச்சரின் தனி செயலாளர்களாக நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

  9. "நான் தேவதூதன் அல்ல" - விஜய்

    விஜய்

    பட மூலாதாரம், DIPR

    முதலமைச்சராக பதவியேற்றதும் விழா மேடையிலேயே பேசிய விஜய், "நான் தேவதூதன் அல்ல, நானும் சாதாரண மனிதன் தான். பொய்யான வாக்குறுதிகளை அளித்து நான் ஏமாற்றமாட்டேன். இத்தனை கோடி மக்கள் என்னுடன் இருக்கும்போது என்ன நடந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது." என்று தெரிவித்தார்.

  10. ஆனந்த் முதல் கீர்த்தனா வரை - விஜய் அமைச்சரவை

    காணொளிக் குறிப்பு, ஆனந்த் முதல் கீர்த்தனா வரை - விஜய் அமைச்சரவை

    விஜய் தலைமையில் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், செங்கோட்டையன், வெங்கடரமணன், நிர்மல்குமார், ராஜ்மோகன், பிரபு, கீர்த்தனா ஆகிய 9 பேர் அமைச்சர்களாகியுள்ளனர்.

  11. விஜய் பதவியேற்பு விழாவில் திரிஷா உள்ளிட்டோர் பங்கேற்பு: கேமராவில் உறைந்த சுவாரஸ்ய தருணங்கள்

    பதவியேற்பு விழா முடிவில் ராகுல் காந்தியுடன் முதலமைச்சர் விஜய் செல்ஃபி எடுத்துக் கொண்டார்.

    பட மூலாதாரம், DIPR

    படக்குறிப்பு, பதவியேற்பு விழா முடிவில் ராகுல் காந்தியுடன் முதலமைச்சர் விஜய் செல்ஃபி எடுத்துக் கொண்டார்.

    தமிழ்நாடு முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் பதவியேற்றார். தமிழக பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், ஞாயிற்றுக்கிழமை விஜய்க்கு பதவிப் பிரமாணமும் ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.

    சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் காலை சுமார் 10 மணியளவில் விஜய் பதவியேற்றார். பின்னர் தவெகவைச் சேர்ந்த 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

    என். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, கே.ஜி. அருண்ராஜ், கே.ஏ. செங்கோட்டையன், பி. வெங்கடரமணன், சி.டி.ஆர். நிர்மல்குமார், ஏ. ராஜமோகன், டி.கே. பிரபு, எஸ். கீர்த்தனா ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

  12. கோப்புகளில் கையெழுத்திட்ட முதலமைச்சர் விஜய்

    காணொளிக் குறிப்பு, கோப்புகளில் கையெழுத்திட்ட முதலமைச்சர் விஜய்

    தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்ற விஜய் தலைமைச் செயலகம் வந்து அரசுக் கோப்புகளில் கையெழுத்திட்டார்.

  13. “எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீர்கள்” - மு.க.ஸ்டாலின் விமர்சனம்

    மு.க.ஸ்டாலின்

    பட மூலாதாரம், @mkstalin/X

    “எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீர்கள்” என, முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் விஜயை விமர்சித்துள்ளார்.

    “தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு அவர்களுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    பதவியேற்றதும் தாங்கள் கையெழுத்திட்டுள்ள அறிவிப்புகளையும் வரவேற்கிறேன்.

    எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீங்க. அதெல்லாம் இருக்கு. மக்களுக்குக் கொடுக்க மனசும், ஆட்சித் திறமையும்தான் வேணும்.” என்றார்.

    மேலும், ஐந்து ஆண்டுகளாக, கோவிட், வெள்ளம் போன்ற பல பிரச்னைகளையும் “ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஓரவஞ்சனையையும்” சமாளித்துதான் தங்கள் அரசு எண்ணற்ற மக்கள்நலத் திட்டங்களை நிறைவேற்றியதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    விஜய்

    “'ரூபாய் 10 லட்சம் கோடி கடனை வைத்துவிட்டு, கஜானாவைத் துடைத்து விட்டுச் சென்றுள்ளது கடந்த அரசு' என்ற குற்றச்சாட்டை முதல் உரையிலேயே சொல்லி இருக்கீங்களே… அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே தமிழ்நாட்டின் கடன் அளவு இருக்கிறது.

    தமிழ்நாடு அரசின் நிதிநிலை பற்றி கடந்த பிப்ரவரி மாத பட்ஜெட்லயே தெளிவா நாங்க சொல்லிட்டோம். அது உங்களுக்குத் தெரியாதா? அதுக்குப் பிறகுதான நீங்க பல வாக்குறுதிகளை மக்களுக்குக் கொடுத்தீங்க? உங்களுக்கு வாக்களித்த மக்களை மீண்டும் ஏமாற்றி திசைதிருப்பாதீங்க!” என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    “நடைமுறைக்கு சாத்தியமானதை மட்டுமே வாக்குறுதிகளாக அளிக்கிறேன்” எனக் கூறி ஆட்சிக்கு வந்துள்ள நீங்கள், இப்போதுதான் அரசு நிர்வாகத்துக்குள் அடியெடுத்து வைக்கிறீர்கள் என்றும், கூடிய விரைவில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றலாம் எனும் நுணுக்கங்களையும் தங்களைப் போலவே நீங்களும் நிச்சயம் கற்றுக்கொள்வீர்கள் என தான் நம்புவதாகவும் “வாக்களித்த மக்களோடு, நானும் அதையே எதிர்பார்க்கிறேன்” என்றும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    “தங்களின் ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணம் தொடர மீண்டும் எனது வாழ்த்துகள்” என அவர் தெரிவித்துள்ளார்.

  14. விஜய்க்கு பிரதமர் மோதி வாழ்த்து

    விஜய்க்கு பிரதமர் மோதி வாழ்த்து

    பட மூலாதாரம், Getty Images

    பிரதமர் மோதி தன் எக்ஸ் பக்கத்தில், "தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்றுள்ள திரு சி. ஜோசப் விஜய் அவர்களுக்கு வாழ்த்துகள். அவரது பதவிக்காலம் சிறப்பானதாக அமைய நல்வாழ்த்துகள். மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த மத்திய அரசு தமிழ்நாடு அரசுடன் இணைந்து தொடர்ந்து பணியாற்றும்." என தெரிவித்துள்ளார்.

  15. தலைமை செயலகம் வந்த விஜய்க்கு மரியாதை

    காணொளிக் குறிப்பு, தலைமை செயலகம் வந்த விஜய்க்கு மரியாதை
  16. தலைமை செயலகத்தில் விஜய்

    விஜய்

    பட மூலாதாரம், TN DIPR

    முதலமைச்சராக பதவியேற்ற பின் விஜய் தற்போது பாதுகாப்பு வாகன அணிவகுப்புடன் தலைமைச் செயலகம் சென்றார். அங்கு முக்கிய கோப்புகளில் முதலமைச்சர் விஜய் கையெழுத்திட்டார். பின்னர், உயரதிகாரிகள் அவருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

  17. பதவியேற்ற அமைச்சர்கள் - புகைப்படத் தொகுப்பு

    என். ஆனந்த்

    பட மூலாதாரம், TN DIPR

    படக்குறிப்பு, என். ஆனந்த்
    ஆதவ் அர்ஜுனா

    பட மூலாதாரம், TN DIPR

    படக்குறிப்பு, ஆதவ் அர்ஜுனா
    அருண் ராஜ்

    பட மூலாதாரம், TN DIPR

    படக்குறிப்பு, அருண் ராஜ்
    கே.ஏ.செங்கோட்டையன்

    பட மூலாதாரம், TN DIPR

    படக்குறிப்பு, கே.ஏ.செங்கோட்டையன்
    வெங்கடரமணன்

    பட மூலாதாரம், TN DIPR

    படக்குறிப்பு, வெங்கடரமணன்
    நிர்மல்குமார்

    பட மூலாதாரம், TN DIPR

    படக்குறிப்பு, நிர்மல்குமார்
    ராஜ்மோகன்

    பட மூலாதாரம், TN DIPR

    படக்குறிப்பு, ராஜ்மோகன்
    பிரபு

    பட மூலாதாரம், TN DIPR

    படக்குறிப்பு, பிரபு
    கீர்த்தனா

    பட மூலாதாரம், TN DIPR

    படக்குறிப்பு, கீர்த்தனா
  18. தலைமைச் செயலகம் செல்லும் விஜய்

    முதலமைச்சராக பதவியேற்ற பின் விஜய் தற்போது பாதுகாப்பு வாகன அணிவகுப்புடன் தலைமைச் செயலகம் செல்கிறார்.

  19. கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி இரு குழந்தைகளை இழந்த பெற்றோர் கூறியது என்ன?

    கரூர் கூட்ட நெரிசல்
    படக்குறிப்பு, பெருமாள் - செல்வராணி (அமர்ந்திருப்பவர்)

    மக்கள் மாற்றத்தை விரும்பி விஜயைத் தேர்ந்தெடுத்துள்ளனர் என, கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி இரு குழந்தைகளை இழந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.

    தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், கடந்தாண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி சனிக்கிழமை கரூர் வேலுசாமிபுரத்தில் பரப்புரை மேற்கொண்ட போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அதில் 11 குழந்தைகள் உள்பட 41 பேர் உயிரிழந்தனர்.

    இதில்,14 வயது மகள் கோகிலா, 11 வயது மகள் பழனியம்மாள் ஆகியோரை இழந்த பெருமாள்–செல்வராணி தம்பதி, விஜய் பதவியேற்பு விழாவை தங்களின் இல்லத்தில் குடும்பத்தினருடன் தொலைக்காட்சியில் பார்த்தனர்.

    பிபிசி தமிழிடம் பேசிய பெருமாள், “‘நாங்கள் எங்களின் 2 குழந்தைகளை இழந்த வேதனையில் இருந்தாலும் தற்போது விஜய் வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சியாகவுள்ளது. மக்கள் மாற்றத்தை விரும்பி அவரைத் தேர்ந்தெடுத்துள்ளனர். நிச்சயமாக அவர் மாற்றத்தை ஏற்படுத்துவார் என்று நம்புகிறோம்.’’ என்றார்.

    கரூர் கூட்ட நெரிசல்
    படக்குறிப்பு, பழனியம்மாள் (இடது), கோகிலா (வலது)

    கடந்தாண்டு அக்டோபர் மாதம் பிபிசி தமிழிடம் பேசிய செல்வராணி, "விஜய் இந்தப் பகுதிக்கு வருகிறார் என செய்தி வந்ததிலிருந்தே அங்கு போயாக வேண்டுமென குழந்தைகள் அடம்பிடித்தார்கள். அவர் வரும் இடம் தூரமாக இருந்தால் போக முடியாது என்றேன். ஆனால், அருகிலிருக்கும் வேலுசாமிபுரத்திற்கு வருகிறார் என்றவுடன், அது வீட்டுக்குப் பக்கம்தான் என்பதால் கண்டிப்பாக போகவேண்டும் என்றார்கள்.

    எவ்வளவோ சொன்னேன். கேட்கவில்லை. போயே ஆகனும் என்றார்கள். கடைசியில் கூட்டிட்டு போய் பறிகொடுத்ததுதான் மிச்சம். விஜய் வண்டி வந்ததுதான் தெரியும். நாங்கள் அவரைப் பார்க்கவேயில்லை. அவர் பேசியதையும் கேட்கவில்லை. கால் மணி நேரத்தில் எல்லாம் நடந்து முடிந்தது.

    என் கணவர் போக வேண்டாம் என்றுதான் சொன்னார். இவர்களுடைய பிடிவாதத்தால்தான் கூட்டிப்போனேன். கூட்டிப்போகமால் இருந்திருந்தால் என் பிள்ளைகள் எங்கேயும் போயிருக்காது. அங்கே போயிருக்கவே கூடாது. போகாமல் இருந்திருந்தால் இந்நேரம் விளையாடிக் கொண்டிருந்திருப்பார்கள்" என்று கூறியிருந்தார்.

  20. ஆதரவு வழங்கிய கட்சி தலைவர்களுக்கு விஜய் நன்றி

    விஜய்

    பட மூலாதாரம், TN DIPR

    தொடர்ந்து பேசிய விஜய், “மக்கள் நலன்களை மட்டுமே லட்சியமாக கொண்ட நம் அரசுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் சகோதரர் ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால், தமிழ்நாடு தலைவர் செல்வப்பெருந்தகை, பிரவீண் சக்ரவர்த்தி உள்ளிட்டோருக்கு நன்றி” என்றார்.

    மேலும், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட தவெக அரசுக்கு ஆதரவு வழங்கிய கட்சிகளின் தலைவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.