You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

நேரலை, இரானுடன் போர் நிறுத்தம் நீட்டிப்பு - டிரம்ப் கூறியது என்ன?

தமிழ்நாடு, இந்தியா, இலங்கை, உலகம் மற்றும் விளையாட்டு தொடர்பான சமீபத்திய நிகழ்வுகள் பற்றிய தகவல்களை இந்த பக்கத்தில் பார்க்கலாம்.

முக்கிய சாராம்சம்

  • மத்திய கிழக்கில் அமைதி கொண்டு வர இந்தியா முயற்சிகள் எடுத்தது என இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
  • பஹல்காம் தாக்குதலில் ஓர் ஆண்டு நிறைவு பற்றி பிரதமர் மோதி, உள்துறை அமைச்சர் அமித் ஷா பதிவிட்டுள்ளனர்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. 'அனைத்திற்கும் ஒரு நேரம் இருக்கிறது' மத்திய கிழக்கின் இந்தியாவின் பங்கு பற்றி ராஜ்நாத் பதில்

    மத்திய கிழக்கில் அமைதி கொண்டு வர இந்தியா முயற்சிகள் எடுத்தது என இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

    தற்போது ஜெர்மனிக்கு பயணம் மேற்கொண்டுள்ள ராஜ்நாத் சிங்கிடம் "மத்திய கிழக்கு நெருக்கடியில் அமைதி கொண்டு வர இந்தியா எந்தப் பங்கும் வகிக்க முடியுமா?" எனக் கேள்வி கேட்கப்பட்டது.

    அதற்குப் பதிலளித்த ராஜ்நாத், இந்தியா முயற்சித்தது என்றும் அனைத்திற்கும் ஒரு நேரம் இருக்கிறது என்றும் தெரிவித்தார்.

    தொடர்ந்து பேசிய அவர், "எதிர்காலத்தில் இந்தியா இதில் ஒரு பங்கு வகிக்கலாம், அது வெற்றிகரமாகவும் முடியும். அந்தச் சாத்தியத்தை மறுக்க முடியாது. இரண்டு தரப்பும் போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என பிரதமர் கோரினார். ராஜ்ஜிய விவகாரங்களில் நமது பிரதமருக்கு சமநிலையான அணுகுமுறை இருக்கிறது," எனத் தெரிவித்தார்.

    மேலும் அவர், "இந்தியா முன்னோக்கிச் செல்வதை நீங்கள் பார்த்தால், எந்த நாட்டின் கப்பல்களும் ஹோர்மூஸ் நீரிணையைக் கடந்து வர முடியவில்லை என்பதை நீங்கள் பார்க்க முடியும். யாராவது தங்களின் 7, 8 கப்பல்களை வெளியே கொண்டு வந்தார்கள் என்றால் அது இந்தியா தான். அமெரிக்கா இந்தியாவை எதிரியாக கருதுகிறது அல்லது இரான் இந்தியாவை எதிரியாக கருதுகிறது என அர்த்தம் அல்ல. இந்தியாவுக்கு மிகவும் சமநிலையான பார்வை உள்ளது." என்றும் கூறினார்.

  2. பஹல்காம் தாக்குதல் ஓராண்டு நிறைவு - பிரதமர் மோதி, அமித் ஷா கூறியது என்ன?

    பஹல்காம் தாக்குதல் நடந்து இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது.

    பிரதமர் மோதி தன் எக்ஸ் பக்கத்தில், "கடந்த ஆண்டு இதே நாளில் பஹல்காமில் நடந்த கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்த அப்பாவி உயிர்களை நினைவுகூர்கிறோம். அவர்கள் ஒருபோதும் மறக்கப்பட மாட்டார்கள். ஒரு தேசமாக, நாம் துக்கத்திலும் உறுதியிலும் ஒன்றுபட்டுள்ளோம்" என்று தெரிவித்துள்ளார்.

    அவர் மேலும் கூறுகையில், "இந்தியா எந்த விதமான பயங்கரவாதத்துக்கும் ஒருபோதும் அடிபணியாது. பயங்கரவாதிகளின் தீய நோக்கங்கள் ஒருபோதும் வெற்றி பெறாது" என்றார்.

    பஹல்காம் தாக்குதலின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    அமித் ஷா தன் பதிவில், "இந்த நாளில், கடந்த ஆண்டு பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்த அப்பாவி உயிர்களை நாம் ஆழ்ந்த துக்கத்துடன் நினைவுகூர்கிறோம். நம் அன்புக்குரியவர்களை இழந்த துக்கமும் வலியும் ஒவ்வொரு இந்தியனின் இதயத்திலும் இன்னும் உள்ளது." என குறிப்பிட்டுள்ளார்.

    மேலும், "பயங்கரவாதம் என்பது மனிதகுலத்தின் மிகப்பெரிய எதிரி. அதை நாம் ஒன்றுபட்டுப் போராடித் தோற்கடிக்க வேண்டும். பயங்கரவாதத்துக்கும், அதற்கு ஆதரவளிப்பவர்களுக்கும் எதிரான தனது கடுமையான கொள்கையை இந்தியா தொடரும்.” என தெரிவித்துள்ளார்.

  3. வணக்கம் நேயர்களே!

    இன்று இரவு வரையிலும் நேரலைப் பக்கத்தில் சமீபத்திய நிகழ்வுகள் குறித்த தகவல்களை வழங்குவது மோகன்.

  4. டிரம்பின் போர் நிறுத்தத்தை 'பயனற்றது' என விமர்சித்த இரான் நாடாளுமன்ற சபாநாயகரின் ஆலோசகர்

    இரானிய நாடாளுமன்ற சபாநாயகரின் ஆலோசகர், போர் நிறுத்தம் தொடர்பான டிரம்பின் புதிய அறிவிப்பு குறித்து சந்தேகங்களை வெளிப்படுத்தியுள்ளார்.

    இரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃபின் ஆலோசகரான மஹ்தி மொஹம்மதி, டிரம்பின் போர் நிறுத்த நீட்டிப்பு "பயனற்றது" என்று கூறியுள்ளார்.

    "தோற்கும் தரப்பு நிபந்தனைகளை விதிக்க முடியாது. முற்றுகையைத் தொடர்வது குண்டுவீச்சிலிருந்து வேறுபட்டதல்ல, அதற்கு ராணுவ நடவடிக்கை மூலம் பதிலடி கொடுக்கப்பட வேண்டும்," என்று மஹ்தி மொஹம்மதி எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    அவர் மேலும், "திடீர் தாக்குதலுக்குத் தயாராவதற்காக டிரம்ப் போர் நிறுத்தத்தை நீட்டித்துள்ளார். இப்போது இரான் முன்முயற்சி எடுக்க வேண்டிய நேரம்," என்று குறிப்பிட்டுள்ளார்.

    அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஏப்ரல் 22 அன்று போர் நிறுத்தத்தை காலவரையின்றி நீட்டித்தார்.

    பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் மற்றும் ஃபீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர் ஆகியோர் தன்னிடம் இதைக் கோரியதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.

  5. இரானுடன் போர் நிறுத்தம் நீட்டிப்பு - டிரம்ப் கூறியது என்ன?

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இரானுடனான போர் நிறுத்தத்தை நீட்டித்துள்ளார். இருப்பினும், முற்றுகை தொடரும் என்று அவர் கூறியுள்ளார்.

    டொனால்ட் டிரம்ப் 'ட்ரூத் சோஷியல்' தளத்தில், "எதிர்பார்த்தபடியே, இரானிய அரசாங்கம் பிளவுபட்டுள்ளது. பாகிஸ்தானின் ஃபீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர் மற்றும் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் ஆகியோர், தங்கள் தலைவர்களும் பிரதிநிதிகளும் ஒரு பொதுவான முன்மொழிவை முன்வைக்கும் வரை இரான் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும் என்று கோரியுள்ளனர்," என்று எழுதினார்.

    டிரம்ப் மேலும், "எனவே, முற்றுகையைத் தொடரவும், மற்ற விஷயங்களுக்கு முழுமையாகத் தயாராக இருக்கவும் நமது இராணுவத்திற்கு நான் உத்தரவிட்டுள்ளேன். அவர்களின் முன்மொழிவு முன்வைக்கப்பட்டு, பேச்சுவார்த்தைகள் முடிவடையும் வரை, அதன் முடிவு எதுவாக இருந்தாலும், போர் நிறுத்தம் நீட்டிக்கப்படும்," என்று கூறியுள்ளார்.

    இதனைத் தொடர்ந்து, துணை அதிபர் ஜே.டி. வான்ஸின் பாகிஸ்தான் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தியது. வான்ஸ் இந்த மாதம் இரண்டாவது முறையாக இஸ்லாமாபாத்திற்குச் செல்லவிருந்தார். இரானிய அதிகாரிகளுடனான ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்காக அவர் புதன்கிழமை அங்கு வரவிருந்தார்.

  6. வணக்கம் நேயர்களே!

    இன்று (22-04-2026) பிற்பகல் வரையிலும் நேரலைப் பக்கத்தில் சமீபத்திய நிகழ்வுகள் குறித்த தகவல்களை சுருக்கமாக வழங்குவது நந்தினி வெள்ளைச்சாமி.

  7. கேரளாவில் பட்டாசு சேமிப்பு கிடங்கில் விபத்து - 13 பேர் பலி

    கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள பட்டாசு சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோதி இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் நெருங்கிய உறவினர்களுக்கு தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என பிரதமர் அலுவலகத்தின் எக்ஸ் தளப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் பலர் காயமடைந்ததாகவும் கேரள மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்ததாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

  8. 'இரான் உடன் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இல்லை என்றால் குண்டுவீச்சுக்கு வாய்ப்புள்ளது' – டிரம்ப்

    “இரான் அமைதி பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இல்லை என்றால், குண்டுவீச்சு நடத்த வேண்டிய நிலை வரும் என நான் எதிர்பார்க்கிறேன்,” என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

    புதன்கிழமை முடிவடைய உள்ள போர் நிறுத்த ஒப்பந்தத்தை நீட்டிக்க விருப்பமில்லை என்றும் அவர் சிஎன்பிசிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

    “அமெரிக்காவுடன் நடைபெறும் பேச்சுவார்த்தைக்காக, இரான் பிரதிநிதிகளை பாகிஸ்தானுக்கு அனுப்ப வேண்டிய நிலை தவிர அதற்கு வேறு வழியில்லை,” என்று டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

    “இறுதியில் அமெரிக்கா ஒரு சிறந்த ஒப்பந்தத்தைப் பெறும் என எனக்கு நம்பிக்கை உள்ளது,” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

  9. தமிழ்நாடு சட்டப் பேரவை தேர்தலுக்கான பரப்புரை நிறைவு - தேர்தல் ஆணைய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தது

  10. கரூர் விவகாரம், எடப்பாடி பழனிசாமி, திமுக, பாஜக பற்றி விஜய் பேசியது என்ன?

    ’திமுக, அதிமுக என ஒட்டுமொத்தமாக அனைவரும் ஒன்று சேர்ந்து விஜய் என்ற ஒற்றை மனிதனை எதிர்க்கிறார்கள்’ என தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

    தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலுக்கான தேர்தல் பரப்புரை இன்று ( ஏப்ரல் 21 ) மாலை 6 மணியுடன் நிறைவடையும் நிலையில் தமிழக வெற்றிகழகத்தின் இறுதிகட்ட தேர்தல் பிரசாரம் சென்னை நந்தனத்தில் நடைபெற்றது.

    தேர்தல் பரப்புரையின் போது பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய், ”கரூரில் நான் காலதாமதமாக வந்ததுதான் விபத்துக்கு காரணம் என என் மேல் பழி போடும் முதலமைச்சர், 20 ஆண்டுகளாக கரூரில் போட்டியிட்ட ஒருவரை ஏன் கோவைக்கு அனுப்ப வேண்டும்” என்று கேள்வி எழுப்பினார்.

    கரூரில் என்ன நடந்தது என மக்களுக்கு தெரியும் என்றும் அவர் தெரிவித்தார்.

    ''பிரச்னை என்றால் விஜய் வெளியே வர மாட்டார் என சொல்லும் எடப்பாடி பழனிசாமி, சேலம் மாவட்டத்தைத் தவிர தமிழகத்தின் வேறு சட்டமன்ற தொகுதிகளில் நிற்க முடியுமா” என்று அவர் கேள்வி எழுப்பினார்.

    ''சொந்த தொகுதியில் தோற்று விடுவோம் என்று தவெக சின்னத்தை திருடியவர் எடப்பாடி பழனிசாமி” என அவர் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

    பாஜகவில் உள்ள ஒரு மத்திய அமைச்சர் தன்னை வெறும் நடிகன் என்று சொன்னதை குறிப்பிட்டு பேசிய விஜய், “ நான் நடிகன் தான், ஆனால் அரசியலுக்கு வந்த பிறகு நடிக்கவில்லை, ஆனால் அரசியலில் இருந்துகொண்டே பலர் நடித்துக்கொண்டிருக்கிறார்கள்” என்றார்

    திமுக அதிமுக என ஒட்டுமொத்தமாக அனைவரும் சேர்ந்து விஜய் என்ற ஒற்றை மனிதனை எதிர்ப்பதாக தெரிவித்த அவர், ''புதுச்சேரி போல அதிக வாக்குகளை தமிழ்நாட்டிலும் பதிவு செய்து தமிழக மக்கள் இதற்கு பதிலளிக்க வேண்டும்” என்றார்.

  11. 'இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தைக்காக இரானிய குழு இஸ்லாமாபாத் செல்லவில்லை' - இரான் அரசு ஊடகம்

    அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த இரான் தரப்பிலிருந்து இதுவரை எந்தவொரு குழுவும் இஸ்லாமாபாத்திற்குச் செல்லவில்லை என்று இரான் அரசு ஊடகம் தனது டெலிகிராம் பதிவில் தெரிவித்துள்ளது.

    இரான் குழுவின் பயணம் அல்லது அதன் தேதிகள் குறித்து ஊடகங்களில் வெளியான செய்திகள் அனைத்தும் 'வதந்திகள்' என்று அந்த டெலிகிராம் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    அத்துடன், இரானிய அதிகாரிகளின் நிலைப்பாட்டையும் அந்தப் பதிவு உறுதிப்படுத்தியுள்ளது. இதில் முந்தைய பேச்சுவார்த்தைக்குழுவில் இடம்பெற்றிருந்தவரும் இரான் நாடாளுமன்ற சபாநாயகருமான முகமது பகர் காலிபாஃபும் அடங்குவார்.

    அவர் ஏற்கனவே, "அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் நடத்தப்படும் எந்தவொரு பேச்சுவார்த்தையையும் இரான் ஏற்காது," என்று குறிப்பிட்டிருந்தார்.

    மற்றொருபுறம், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது நாட்டு குழு பாகிஸ்தான் செல்லும் என்று ஏற்கனவே தெரிவித்திருந்தார்

  12. ஆயுஷ் மாத்ரே எஞ்சிய போட்டிகளில் ஆட மாட்டார் - சிஎஸ்கே

    சிஎஸ்கே அணியின் இளம் அதிரடி வீரர் ஆயுஷ் மாத்ரே ஐபிஎல்லின் எஞ்சிய ஆட்டங்களில் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக சிஎஸ்கே தனது எக்ஸ் பக்கத்தில், "ஏப்ரல் 18-ஆம் தேதி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் பேட்டிங் செய்த போது ஆயுஷ் மாத்ரேவுக்கு இடது தொடையில்(hamstring) காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக, ஆயுஷ் மத்ரே 2026-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகளில் விளையாட மாட்டார்" என்று பதிவிட்டுள்ளது.

    ஆயுஷ் மாத்ரேவின் காயம் குணமாக 6 முதல் 12 வாரங்கள் வரை ஆகலாம் என்றும், அவர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறோம் என்றும் சிஎஸ்கே குறிப்பிட்டுள்ளது.

    நடப்பு ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே அணிக்கு நிலையாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி டாப் ஆர்டரில் பலம் சேர்த்த ஆயுஷ் மாத்ரே விளையாடாதது அந்த அணிக்கு ஏற்பட்ட ஒரு பின்னடைவாக ரசிகர்கள் கருதுகின்றனர்.

  13. 'இஸ்ரேல், அமெரிக்காவை ஐஆர்ஜிசி சோர்வடைய செய்துள்ளது'

    இரானின் புரட்சிகர காவல் படையுடன் (IRGC) தொடர்புடைய ஃபார்ஸ் செய்தி நிறுவனம், இரானின் மிகப்பெரிய ராணுவத் தலைமையகத்தின் தளபதி ஒருவரின் அறிக்கையை டெலிகிராமில் பகிர்ந்துள்ளது.

    ஃபார்ஸின் கூற்றுப்படி, மேஜர் ஜெனரல் அப்துல்லாஹி, "இஸ்ரேலையும் அமெரிக்காவையும் ஐஆர்ஜிசி சோர்வடையச் செய்துள்ளது, இது அவர்களை போர் நிறுத்தத்தைக் கோர நிர்பந்திக்கிறது" என்று பாரசீக மொழியில் குறிப்பிட்டுள்ளார்.

    "குறிப்பாக ஹோர்மூஸ் நீரிணை விவகாரத்தில், கள நிலவரம் குறித்து பொய்யான கதைகளை புனைவதற்கு அமெரிக்க அதிபரை நமது படைகள் அனுமதிக்காது," என்றும் அவர் கூறினார்.

    அமெரிக்காவுடனான இரண்டாவது சுற்று அமைதிப் பேச்சுவார்த்தைக்காக இரானிய தூதுக்குழு இஸ்லாமாபாத் செல்லுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

    இரானில் அரசியல் பதற்றம் நிலவுவதாகவும், அங்கு கடும்போக்காளர்கள் ராஜீய ரீதியிலான நடவடிக்கைகளுக்கு பதிலாக மோதலைத் தேர்ந்தெடுக்க அழுத்தம் கொடுப்பதாகவும் பிபிசி தெற்காசிய செய்தியாளர் அஸாதே மோஷிரி குறிப்பிடுகிறார்.

  14. 'இன்று பாகிஸ்தானுக்கு புறப்படுகிறார் ஜே.டி. வான்ஸ்' - அமெரிக்க ஊடகங்கள் தகவல்

    அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் செவ்வாய்க்கிழமை பாகிஸ்தானுக்குப் புறப்படுவார் என்று அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

    ஜே.டி. வான்ஸ் செவ்வாய்க்கிழமை காலைக்குள் அமெரிக்காவிலிருந்து புறப்படுவார் என்று மூன்று அமெரிக்க வட்டாரங்கள் கூறியதாக, ஆக்சியோஸ் என்ற அமெரிக்க செய்தி இணையதளம் மேற்கோள் காட்டியுள்ளது.

    அமெரிக்க மற்றும் இரானிய பிரதிநிதிகளுக்கு இடையேயான இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தை புதன்கிழமை இஸ்லாமாபாத்தில் நடைபெற உள்ளது என்று சிஎன்என்-க்கு வட்டாரங்கள் தெரிவித்தன.

    அதேசமயம், இந்தப் பேச்சுவார்த்தையில் தனது பங்கேற்பு குறித்து இரான் தெளிவுபடுத்தவில்லை.

    சற்று முன்பு, வெள்ளை மாளிகை, அதிபர் டொனால்ட் டிரம்ப் அனுப்பிய ஒரு செய்தியை எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்தது.

    "டிரம்ப் நிர்வாகத்தின்போது ஒரு ஒப்பந்தம் எட்டப்பட்டால், அது இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கில் மட்டுமல்ல, ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் எல்லா இடங்களிலும் அமைதி, பாதுகாப்பு மற்றும் ஒரு பாதுகாப்பான சூழலுக்கு உத்தரவாதம் அளிக்கும்," என்று அந்தச் செய்தியில் கூறப்பட்டிருந்தது.

  15. 3 பில்லியன் டாலர் கடன்: பாகிஸ்தான் 2-வது தவணையாக 1 பில்லியன் டாலர் பெற்றது

    சௌதி அரேபியா அறிவித்த 3 பில்லியன் டாலர் கடனில், இரண்டாவது தவணையாக ஒரு பில்லியன் அமெரிக்க டாலரை பாகிஸ்தானின் மத்திய வங்கி பெற்றுள்ளது.

    பாகிஸ்தான் அரசு வங்கி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், "சௌதி அரேபியாவின் நிதியமைச்சகத்திடமிருந்து ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்கள் பெறப்பட்டுள்ளது. இந்தத் தொகை ஏப்ரல் 20, 2026 அன்று வங்கியின் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது," என்று பதிவிட்டுள்ளது.

    மேலும் அப்பதிவில், "சௌதி அரேபியாவுடன் சமீபத்தில் கையெழுத்திடப்பட்ட 3 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தின் இரண்டாவது தவணை இதுவாகும். முதல் தவணையாக 2 பில்லியன் டாலர்கள், ஏப்ரல் 15, 2026 அன்று வங்கியால் பெறப்பட்டது," என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    முன்னதாக வியாழக்கிழமை, சௌதி அரேபியாவிலிருந்து இரண்டு பில்லியன் அமெரிக்க டாலர் தொகையைப் பெற்றதை பாகிஸ்தானின் மத்திய வங்கி உறுதிப்படுத்தியிருந்தது.

    பாகிஸ்தானின் அந்நியச் செலாவணி கையிருப்பின் மீது நெருக்கடி நிலவி வரும் ஒரு காலகட்டத்தில், இத்தொகை வந்து சேர்ந்துள்ளது.

    சௌதி அரேபியா, பாகிஸ்தானுக்காக வழங்கியிருந்த 5 பில்லியன் டாலர் வைப்புத்தொகை வசதியை மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    இதுதவிர, கூடுதலாக 3 பில்லியன் டாலர்களைத் தனியாக வைப்புத்தொகையாகச் செலுத்துவதாகவும் சௌதி அரேபியா உறுதியளித்துள்ளது.

  16. அமெரிக்காவுடன் அடுத்தக்கட்ட பேச்சு குறித்து இரான் கூறுவது என்ன?

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் பேச்சுவார்த்தைகளை ஏற்கப்போவதில்லை என்று இரான் கூறியுள்ளது.

    "தடையை விதித்து, போர் நிறுத்தத்தை மீறுவதன் மூலம், டிரம்ப் தனது கற்பனையில் இந்தப் பேச்சுவார்த்தை மேசையை ஒரு சரணடைதல் மேசையாக மாற்ற அல்லது போரை நியாயப்படுத்த விரும்புகிறார்," என்று இரானிய நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    "அச்சுறுத்தல்களின் நிழலில் நாங்கள் பேச்சுவார்த்தைகளை ஏற்க மாட்டோம். கடந்த இரண்டு வாரங்களாக, போர்க்களத்தில் புதிய காய்களை நகர்த்த நாங்கள் தயாராகி வருகிறோம்," என்று காலிபாஃப் கூறினார்.

    அமெரிக்காவுடனான முதல் சுற்றுப் பேச்சுவார்த்தையில் இரானிய தூதுக்குழுவுக்கு காலிபாஃப் தலைமை தாங்கி, பாகிஸ்தானுக்கும் பயணம் மேற்கொண்டார்.

    பாகிஸ்தான் தலைநகரான இஸ்லாமாபாத்தில் இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருகின்றன. தனது தூதுக்குழு பாகிஸ்தான் செல்லும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

    ஆனால், "நாங்கள் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை," என்று இரானின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாய் கூறியிருந்தார்.

  17. 'இரான் அதிஉயர் தலைவர் நலமாக உள்ளார்' - இரான் முன்னாள் அமைச்சர்

    இரான் அதிஉயர் தலைவர் மொஜ்தபா காமனெயி "முழுமையான உடல்நலத்துடன்" இருப்பதாக அந்நாட்டின் முன்னாள் அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

    இரான் ஒளிபரப்பு நிறுவனத்தின் முன்னாள் தலைவரும், முன்னாள் சுற்றுலா அமைச்சருமான எஸத்தோல்லா ஸர்காமி, தன் எக்ஸ் தளத்தில், பாதுகாப்பு காரணங்களுக்காக காமனெயி புகைப்படங்களையோ அல்லது ஒலிப்பதிவுகளையோ தற்போது வெளியிடுவது பொருத்தமற்றது என்று "நம்பகமான வட்டாரங்கள்" கருதுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

    மொஜ்தபா காமனெயி உடல்நிலை குறித்து நீண்ட காலமாகவே கேள்வி எழுப்பி வருபவர்களைக் குறிப்பிடும் வகையில், தேவையற்ற வதந்திகளுக்குச் செவிசாய்க்க வேண்டாம் என்று ஸர்காமி பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    மார்ச் 8-ஆம் தேதி மொஜ்தபா காமனெயி அதிஉயர் தலைவராகப் பொறுப்பேற்றதிலிருந்து, அவர் இதுவரை பொதுவெளியில் உரையாற்றவில்லை; ஊடகங்களின் முன் தோன்றவில்லை; அவரது சமீபத்திய புகைப்படங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

    எனினும், கடந்த 40 நாட்களில், அவரது பெயரில் பல எழுத்துப்பூர்வ அறிக்கைகள் வெளியாகியுள்ளன. ஏப்ரல் 20-ஆம் தேதி, தனது தந்தையின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த சுன்னி மதகுருமார்களுக்கு அவர் நன்றி தெரிவித்திருந்தார்.

  18. வணக்கம் நேயர்களே!

    இன்று (21-04-2026) பிற்பகல் வரையிலும் நேரலைப் பக்கத்தில் சமீபத்திய நிகழ்வுகள் குறித்த தகவல்களை சுருக்கமாக வழங்குவது நந்தினி வெள்ளைச்சாமி.

  19. இந்திய கப்பல்கள் மீது தாக்குதல் - வெளியுறவு அமைச்சகம் கூறுவது என்ன?

    ஹோர்மூஸ் நீரிணையில் இருந்து தனது கப்பல்கள் பாதுகாப்பாகத் திரும்புவதற்காக, இந்தியா இரான் மற்றும் பிற நாடுகளுடன் தொடர்பில் இருப்பதாக இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெயஸ்வால் தெரிவித்துள்ளார்.

    ''ஹோர்மூஸ் நீரிணையில் இருந்து எங்கள் கப்பல்கள் பாதுகாப்பாகத் திரும்புவதை உறுதி செய்வதற்காக, நாங்கள் ஈரான் மற்றும் பிற நாடுகளுடன் தொடர்பில் இருக்கிறோம்," என்று ரந்தீர் ஜெயஸ்வால் கூறினார்.

    சனிக்கிழமையன்று இந்தியக் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு குறித்து அவர் கூறுகையில், "துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்த தகவல் கிடைத்தவுடனேயே, நாங்கள் இந்த விஷயத்தை வலுவாகக் கவனித்தோம். நாங்கள் இரான் தூதரை வரவழைத்து, வெளியுறவுச் செயலாளருடன் ஒரு சந்திப்பை நடத்தினோம்" என்றார்.

    ரந்தீர் ஜெயஸ்வாலின் கூற்றுப்படி, இந்தியா தனது கப்பல்களின் பாதுகாப்புக்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்ச்சியான தொடர்பில் உள்ளது

  20. அமெரிக்காவால் தடுக்கப்பட்ட இரான் கப்பல் - சீனா கூறியது என்ன?

    சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர், இரான் மற்றும் அமெரிக்கா இடையிலான அமைதி பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    சீன வெளியுறவு அமைச்சக பேச்சாளர் குவோ ஜியாகுன் செய்தியாளர் சந்திப்பில், “ ஒரு கப்பலை அமெரிக்க ராணுவம் பலவந்தமாக தடுத்தது குறித்து சீனா கவலை தெரிவிக்கிறது” என்று கூறினார் என ஏஎஃப்பி செய்தி முகமை தெரிவித்துள்ளது.

    இதற்கு முன்பு, இரானின் துறைமுகங்கள் மீதான அமெரிக்க கடற்படை முற்றுகையை சீன வெளியுறவு அமைச்சகம் “பொறுப்பற்றதும் ஆபத்தானதுமான நடவடிக்கை” என விவரித்திருந்தது.